அத்தியாயம் 15(1)
நாட்கள் அதன்போக்கில் செல்ல, இன்றோடு யாழினி இறந்து ஒரு வருடம் முடிகிறது. அன்றைய தினம் யாழினியின் முதலாம் ஆண்டு நினைவு தினம். நெற்றில் இருந்தே வீட்டில் அனைவரும் ஒரு நிலையில் இல்லை. அவரவர் நினைவுகளில் உழன்றுக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒரு வகையில் இழப்பு என்றால், ஈருடல் ஓர் உயிராக வாழ்ந்த கௌதமிற்கு, வார்த்தைகளில் சொல்ல முடியாத பேரிழப்பு. சேகர், ஜெய், கெளதம் மூவரும், நேற்று முழுவதும் அறைக்குள்ளேயே அடைந்து கிடக்க, சற்று முன்பு தான் ஆண்கள் மூவரும் யாழினிக்கு திதி பூஜைகள் செய்து முடித்துவிட்டு வந்திருந்தனர். சேகர் ஹாலில் உட்கார்ந்திருக்க, ஜெய் அவனது அறையில் தலைக்குக் கைகளை முட்டுக் கொடுத்துக்கொண்டு விட்டதைப் பார்த்தவாறு கட்டிலில் படுத்திருக்க, இங்கே கெளதமோ பால்கனியில் அமர்ந்திருந்தான்.
நேரம் நன்பகலை கடந்திருந்தது. நேற்றில் இருந்து மிருதுளா உட்பட, யாரும் சாப்பிடவில்லை,. அவளும் சென்று சாப்பிட வருமாறு அழைத்துப் பார்த்தாள், யாருக்குமே விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டனர். தேஜாவிற்கு மட்டும் அன்னை வீட்டில் இருந்து உணவு வாங்கி வந்து, சாப்பிட வைத்தாள். சித்ரா கூட இவளை சாப்பிட சொன்னார், ஆனால் அவளோ, “வேண்டாம் ம்மா. அவர் அங்க மனசு கஷ்டத்தில இருக்கும்போது எனக்கு எப்படிச் சாப்பாடு உள்ள இறங்கும்.” என்று கூறி மறுத்துவிட்டாள். சித்ராவிற்கு மிருதுளாவின் இந்த வார்த்தைகளைக் கேட்கையில் ஒரு புறம் சின்ன வருத்தம் என்றாலும், மறுபுறம் தன் மகளின் மன மாற்றம் மகிழ்ச்சியைக் கொடுத்தது. கூடிய சீக்கிரம் குடியும் குடித்தனுமாக அவர்கள் மாற வேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.
அடுத்து இரவையும் தாண்டி நேரம் சென்று கொண்டிருக்க, அனைவரையும் சாப்பிடாமல் உறங்கவிட மிருதுளாவிற்கு மனம் இல்லை. துக்கம் இருக்கும் தான். அதற்காக இரண்டு நாட்களாகச் சாப்பிடாமல் இருப்பது, என்ன பயனை தரப்போகிறது. யாழினி, கூட அனைவரும் சாப்பிடாமல் இருப்பதை நிச்சயம் விரும்பமாட்டார் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். அவரின் இடத்தில் தான் இருப்பதால், கட்டயாபடுத்தியேனும் இவர்களைச் சாப்பிட வைக்க வேண்டும் என்று நினைத்தவள், நேரே சேகரிடம் சென்று, பேசி பேசி ஒரு வழியாகச் சம்மதிக்க வைத்தவள், அடுத்து ஜெய் அறைக்குச் சென்றவள், “ஜெய், சாப்பிட வாங்க. நேத்துல இருந்து யாரும் சாப்பிடல. உடம்பு என்னாகுறது. நாளைக்கு ஆபீஸ் போகணும்.” என்று சொல்ல, அவனோ, “இல்லை அண்ணி. பசியில்லை.” என்று மறுத்துவிட, “உங்க யாழினி அண்ணி வந்து கூப்பிட்டாலும் வேண்டாம் தான் சொல்லுவீங்களா ஜெய்?! இல்லை என்னை நீங்க அவங்க இடத்தில நினைக்காததால வேண்டாம் சொல்றீங்களா?” என்று கேட்க, அவளின் கேள்வியில், “என்ன அண்ணி?!!” என்று அதிர்ந்தவன், “அப்படிலாம் இல்லை அண்ணி. யாழினி அண்ணி எனக்கு எப்படியோ அதே மாதிரி தான் நீங்களும்.” என்று கூற, “பின்ன ஏன் வேண்டாம் சொல்றீங்க. நீங்க தான சொல்லி இருக்கீங்க, மனசு கஷ்டம்ன்னு சாப்பிடாம இருக்கிறதும், சாப்பாட வேஸ்ட் பண்றது யாழினி அண்ணிக்கு பிடிக்காதுன்னு. இதோ இப்போ சாப்பிடாம இருக்கிறதை பார்த்தா அவங்களுக்குக் கஷ்டமா இருக்காதா ஜெய். உங்களைக் கேட்க அவங்க இல்லைன்றதால இப்படிலாம் செய்றீங்களா? இல்லை அவங்க கஷ்டபட்டாலும் பரவா இல்லை. நீங்க சாப்பிட வேண்டாம்னு நினைக்குறீங்களா?! அப்படிதான்னா, தாராளமா இருங்க. சாப்பிட வேண்டாம்.” என்று சொல்லிவிட்டு அவள் நகரபோக, “அண்ணி!” என்று அவளை அழைத்தை ஜெய், “சாப்பாடு செஞ்சுருக்கீங்களா? இல்லை ஹோட்டெல்ல போய் வாங்கிட்டு வரவா?” என்று கேட்க, அவன் கேள்வியில் நெகிழ்ந்தவள், மனம் நிறைந்த புன்னகையுடன், “செஞ்சுட்டேன் ஜெய்.” என்று பதில் சொல்ல, “கொஞ்சம் தயிர் சாதம் மட்டும் எடுத்து வைங்க அண்ணி. நான் போய் ரெப்ரெஷ் செஞ்சுட்டு வரேன்.” என்று கூறிவிட்டுச் சென்றான்.
மற்ற இருவருக்கும், சாதம் எடுத்து வைத்து, அவர்களைச் சாப்பிட சொல்லிவிட்டு, கௌதமை தேடி அறைக்கு வந்தாள் மிருதுளா. கையில் யாழினியின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு அதையே பார்த்து கொண்டிருந்தவனின் கண்கள் கலங்கி இருந்ததை, அவனின் கண்களில் தெரிந்த பளபளப்பபே சொல்லாமல் சொன்னது. மெல்ல உள்ளே சென்றவள், கௌதமை சாப்பிட அழைக்க, “வேண்டாம் ம்மா. பசிக்கல. நீங்க எல்லோரும் சாப்பிடுங்க.” என்றவன், “பாப்பா சாப்பிட்டாளா?” என்று கேட்க, மிருதுளாவோ, “நீங்க வராம சாப்பிட மாட்டேங்குறா.” என்றாள்.
அவனோ பதிலுக்கு, “என்ன ரிது!! எனக்குத் தான் பசிக்கல சொல்லிட்டேன்ல. அப்புறம் அவளைச் சாப்பிட வைக்க வேண்டியது தான.” என்று வருத்தப்பட, அந்த நேரம் தேஜா தன் தந்தையைத் தேடி அறைக்குள் வர, அவளைப் பார்த்ததும், போட்டோவை கீழே வைத்துவிட்டு அவளைத் தூக்கி மடியில் உட்கார வைத்தவன், “அம்முகுட்டி, பசிக்கலையா உங்களுக்கு? சாப்பிடலையா?” என்று குழந்தையிடம் கேட்க, குழந்தைக்கு என்ன புரிந்ததோ, ‘இல்லை’ என்பது போலத் தலை அசைத்தவள், “பப்பா ப்பா ..” என்று குழற, அவளின் உதடுகள் ‘அப்பா’ என்ற வார்த்தையைச் சொல்ல முயற்சித்துக் கொண்டிருந்தது. அவளின் பிஞ்சு கைகளோ, தன் கையில் உள்ள பிஸ்கட்டை கௌதமின் வாயின் அருகில் கொண்டு சென்று அவனுக்கு ஊட்டிவிட, ‘ஆஆஆஅ!!’ என்று சைகை செய்து அவனை வாயை திறக்க சொன்னாள் அவனின் அன்பு மகள்.
பெரிய மனுஷியாய் தனக்கு ஊட்டிவிட முயற்சித்த, அந்தப் பிஞ்சு கரத்தின் உள்ளங்கையில் இதழ் பதித்தவன் அப்படியே தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு, அவளின் கன்னத்திலும் இதழ் பதிக்க, யாழினியின் நினைவில் அவன் உதடுகள் துடிக்க, குழந்தையை நெஞ்சோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டவன் சத்தமில்லாமல் அழ, அதில் பதறிய மிருதுளா, அவன் அருகில் சென்றவள், “அழாதீங்க ப்ளீஸ்.” என்று ஆறுதலாக அவன் தோள் தொட, தன்னைக் கட்டுபடுத்திக்கொள்ள முடியாதவன், மிருதுளாவின் வயிற்றில் முகம் புதைத்து அழுது கரைந்தான்.
அவனின் துக்கத்தில் இவளுக்கும் கண்கள் கலங்கியது. இருந்தும் அவனைத் தேற்றும் பொருட்டு, பார்வதி எப்பொழுதும் சொல்லும் விஷயத்தை அவனிடம் தற்பொழுது பகிர்ந்துகொண்டாள். “ஆச்சி அடிக்கடி ஒன்னு சொல்வாங்க. உயிருக்கு மேலா நம்ம மேல பாசம் வச்சிருக்கிறவங்க நம்மளை விட்டு எங்கையும் போக மாட்டாங்க. வாழும்போது நாம தான் உலகம்ன்னு நினைச்சு வாழ்ந்தவங்களால, நம்மளை விட்டு நிச்சயம் போகவும் முடியாது. இறந்தாலும் அவங்க நம்மளை சுத்திதான் இருப்பாங்க. நம்மளோட நல்லது கெட்டது எல்லாத்தையும் கூட இருந்து பார்த்துட்டு தான் இருப்பாங்க. நாம சந்தோஷபடும்போது அவங்களும் சந்தோஷபடுவாங்க. நாம கஷ்டப்படும்போது அவங்களும் கஷ்டமா இருக்கும். நாம அழும்போது அவங்களுக்கும் அழுகையா வரும். ஆனா இதெல்லாம் நம்மளுக்குத் தெரியாது. அவங்களை நம்மால பார்க்க முடியாட்டியும், உணர முடியும். அதை நம்ம மனசு நிச்சயம் உணரும். நாம ரொம்பச் சந்தோஷமா இருக்கும்போதும் சரி, துக்கதில இருக்கும்போதும் சரி, நிச்சயம் நமக்கு மனசுக்கு நெருக்கமானவங்க நம்ம கனவுல வருவாங்க. அவங்க சொல்ல நினைக்கிறதை நமக்கு எதாவது ஒரு வழில தெரியபடுத்துவாங்க. வாழும்போது நம்மளை எப்படிப் பார்த்துகிட்டாங்களோ அதே போல, இறந்த பின்னாடியும் நமக்குச் செய்யணும்னு நினைப்பாங்க. அப்படிதான் யாழினியும், உங்ககூட உங்க பக்கத்தில தான் இருக்காங்க. நீங்க இப்படி அழறதை பார்க்கும்போது அவங்களும் அழுதுட்டு தான் இருப்பாங்க. நீங்க அழறதை பார்த்தும் தன்னால் எதுவும் செய்ய முடியலையேன்னு வருத்தப்படுவாங்க. எனக்குத் தெரியும் அவங்க இல்லாதது உங்களுக்குப் பெரிய இழப்பு தான். ஆனா இப்படி அழறதுனால அவங்க திரும்பி வந்துடுவாங்கன்னா தாரளாம அழலாம். ஆனா அப்படி நடக்கப் போறதில்லை. இப்படி நீங்க கஷ்டப்பட்டு அவங்களையும் நிம்மதி இல்லாம ஆக்கனுமா? நமக்கு எப்படிப், பிடிச்சவங்க அழறதை பார்க்க பிடிக்காதோ, அப்படிதான் அவங்களுக்கும் மனசு துடிக்கும். நீங்க அவங்க மேல வச்சுருக்கிற பாசம் உண்மைனா, அவங்களைக் கஷ்டபடுத்த வேண்டாம்னு நினைச்சீங்கன்னா அழாதீங்க ப்ளீஸ்.” என்று சொல்லி முடித்தவள், அவன் முதுகையே வெறித்துக் கொன்டிருக்க, மெல்ல மெல்ல கௌதமின் அழுகை குறைவதை மிருதுளாவால் உணர முடிந்தது.
மிருதுளாவின் பேச்சில், யாழினி தன்னை நினைத்து வருத்தப்படக் கூடும் என்பதைப் புரிந்துகொண்டவன், சில நிமிடங்கள் கழித்துத் தன்னைச் சமன் செய்துகொள்ள, அப்பொழுதுதான், தான் இருக்கும் நிலை புரிய அவசரமாக மிருதுளாவிடம் இருந்து விலகியவன் அவள் முகல் பார்க்காமல், “சாரி” என்று சங்கடத்துடன் சொல்ல, “இப்போ எதுக்குச் சாரி சொல்றீங்க. தப்பா செஞ்சீங்க! உங்க மனசு கஷ்டத்தைத் தான என்கிட்டே வெளிப்படுத்துனீங்க. என்கிட்டே ஷேர் செய்யாம வேற யார்கிட்ட ஷேர் செய்ய முடியும்?! அப்படிதான் நான் நினைச்சிட்டு இருக்கேன்.” என்று சொன்னவள் ஒரு நொடி அமைதிக்கு பிறகு, “அப்படியே நீங்க தப்பே செஞ்சாலும், கவலைபடாதீங்க. நான் அந்தச் சுந்தரி அளவுக்கு மோசம் இல்லை.” என்று சொல்லவும், கெளதம் புரியாமல் முழிக்க, அவனது மொபைலை எடுத்து அவன் எப்பொழுது பார்த்து ரசிக்கும், அறைக்குள் வடிவேலு கோவை சரளாவிடம் அடிவாங்கும் காட்சியை ஓடவிட்டவள், “இவங்க பேரு தான் சுந்தரி.” என்று சொல்ல, கெளதமோ தன்னை மறந்து சட்டென்று சிரித்துவிட்டான்.
அவன் சிரிப்பதை பார்த்து, இவள் முகம் புன்னகைக்க, மனமோ நிம்மதி அடைந்தது. தேஜாவோ தந்தை எதற்குச் சிரிக்கிறார் என்று தெரியாமல், அவளும் சேர்ந்துகொண்டு சிரிக்க, குழந்தையின் சிரிப்பில் மயங்கியவன், அவளின் கன்னத்தில் ஆழமாக முத்தமிட்டு, “என்னைக் கிண்டல் செஞ்சதும், குட்டிமாக்குச் சிரிப்பை பாரு.” சொல்ல, குழந்தையோ அதற்கும் குலுங்கி குலுங்கி சிரித்தது. அவர்கள் சிரித்து முடித்ததும், மிருதுளாவோ, “பாப்பாக்கு பசிக்கும் சாப்பாடு எடுத்துட்டு வரவா?!” என்று அவனையும் சேர்த்து கேட்க, அவள் பக்கம் திரும்பியவன், புன்னகையுடன் சரி என்பது போலத் தலை ஆட்டவும், சிட்டாக அந்த இடத்தை விட்டு சென்றவள் இருவருக்கும் சேர்த்துச் சாதம் பிசைந்து எடுத்து வந்தாள்.
குழந்தைக்கு ஒரு வாய் ஊட்டியவள், அவனை நோக்கியும் கையை நீட்ட, அவனோ தானே சாப்பிட்டுக் கொள்வதாகச் சொல்ல, “வேண்டாம். நீங்க ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க. நானே ஊட்டிவிடுறேன்.” என்றவள், அவன் மறுக்க மறுக்க அவனுக்கும் குழந்தைக்கும் மாறி மாறி ஊட்டிவிட்டு, அவர்களைச் சாப்பிட வைத்த பின்பே ஓய்ந்தாள். இந்தக் காட்சியைப் பார்த்த சேகர், ஜெய் இருவருக்கும் மனம் நிறைந்துபோனது. இனி கௌதமை நினைத்துக் கவலைபட வேண்டாம், மிருதுளா அவனைப் பார்த்துக்கொள்வாள் என்ற திருப்தி ஏற்பட்டது.
வழக்கம் போல இரவு வெகு நேரம் கழித்தே உறங்க வந்த கெளதம், கட்டிலில் நடுவில் தேஜா படுத்திருக்க, அவளின் நெஞ்சில் கைவைத்துக்கொண்டு அருகில் படுத்திருக்கும் மிருதுளாவின் முகத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். இரவு அவள் சொன்ன அனைத்தும் மீண்டும் அவன் காதுகளில் ஒலிக்க, “உண்மை தான் ரிது. யாழினி எங்கையும் போகல. என்கூடத் தான் இருக்கா. இதோ, என் பக்கத்தில் தான் படுத்து இருக்கா. என் எல்லா நல்லது கெட்டதுலையும் இதுவரை யாழினியா கூட இருந்தா. இனிமேலும் மிருதுளாவா இருக்கப் போறா. தேங்க்ஸ் ரிது மா. நீ எனக்கு மனைவியா கிடைக்க நான் ரொம்பக் கொடுத்து வச்சுருக்கேன். உலகத்தில இருக்கிற நல்லவங்க எல்லாம் எனக்குச் சொந்தங்களா கிடைச்சு இருக்காங்க.” என்று கூறியவன், அவளைப் பார்த்துக்கொண்டே கண்ணுறங்கி போனான்.
இது நடந்து மாதங்கள் அதன் போக்கில் சென்றுகொண்டிருக்க, இதுநாள் வரை ஜெய் தன்னிடம் பேச வரும்பொழுதெல்லாம் எப்படியோ அவனைத் தவிர்த்துக் கொண்டிருந்த ஆரா, அன்று அவனிடம் வசமாக மாட்டினாள்.