கரைந்தேன் மெல்ல தொலைந்தேனே அத்தியாயம் -4
கரைந்தேன் மெல்ல தொலைந்தேனே அத்தியாயம் -4
மருத்துவரை சந்திப்பதற்காக இருவரும் வெளியே காத்திருந்தனர்.பாவை அப்படி பேசியதில் அவன் எந்தவிதமான உணர்ச்சியையும் காட்டாமல் இருந்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
Advertisement
பாவையை விட்டு இரண்டு இருக்கைகள் தள்ளி அமர்ந்தபடி ஹீன் கைப்பேசியில் மூழ்கியிருந்தான்.இவர்களின் முறை வர செவிலியர் பாவையின் பெயரைச் சொல்லி அழைக்க இருவருமாக உள்ளே சென்றனர்.
கொரிய மருத்துவரிடம் இவன் முதலில் பேசி விட இரண்டாவதாக பாவையிடம் ஆங்கிலத்தில் பேசினார்.அதில் அவள் ஒற்றைத் தாயாக தனித்த பெற்றோராகவே தன்னைப் பற்றிச் சொன்னாள்.
Advertisement
Advertisement
எல்லாவற்றையும் சரிபார்த்த மருத்துவர் ஹீனிடம் “நீங்க பாவையின் கார்டியனா?” என்றதும் “இல்லை என்னுடைய அம்மா” என்று அவருடைய விவரங்களைச் சொன்னான்.
கடைசியாக ஒரு வாரத்தில் திரும்ப வந்து சில ஆய்வுகளை மேற்கொள்ளச் சொன்னவர் ஹீனிடம் “பாவை இப்போ நல்லா இருக்காங்க ஆனால் ஹார்மோன் மாற்றத்தால் மனம் ஒழுங்கா இருக்காது.மூட் ஸ்விங்கிங் ஏற்படும் அதனால் அடிக்கடி கோபம்,டென்ஷன் எல்லாம் ஆகும்.கொஞ்சம் ரிலாக்ஸ் ஆயிட்டா சரியாயிடும்”என்று தற்போதுள்ள நிலைமையைச் சொன்னார்.
Advertisement
ஹீன் எல்லாவற்றிருக்கும் சரியென்பது போல் தலையசைத்தான்.மேலும் வாந்தி, மயக்கம் சரி ஆகுவதற்கான மருந்துகளை தந்தார்.
எல்லாம் முடிந்து இருவரும் வெளியே வர ஹீன் பாவையை காத்திருக்கச் சொல்லி விட்டு காரில் அவளை ஏற்றிக் கொண்டு சென்றான்.
இருவரிடமும் பலத்த அமைதியே நிலவியது.அவள் செல்ல வேண்டிய கடைக்குச் செல்லும் போது காரை விட்டு வெளியே வரும் பொழுது பாவைக்கு குளிர ஆரம்பித்தது.அதைக் கவனித்த ஹுன் ஏற்கனவே பாவை கொடுத்த கோர்ட்டை அவன் போட்டுவிட்டு நீளம் சிறிதாக தான் அணிந்திருந்த கோர்ட்டை தனியாக கழற்றி வைத்திருந்தான்.
அதை எடுத்து பாவையின் கையில் கொடுத்தான்.அதைப் பார்த்தவள் “இல்லை எனக்கு வேண்டாம்” என்றாள்.
அவனோ அவளை ஒரு பார்வை பார்த்தவன் அந்த கோர்ட்டை எடுத்து அவள் தோளின் மேல் போட்டவன் “பாவை என் மேல உள்ள கோபத்தை காட்டுறேன்னு உங்களை வருத்திக்காதீங்க எனக்கு அதெல்லாம் பிடிக்காது” என்று அவள் பதிலை எதிர்பார்க்காமல் முன்னால் வேகமாக நடந்தான்.
பாவையால் ஹீனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மெதுவாக நடந்தாள்.பின்னால் திரும்பி
பார்த்தவன் அவன் செய்த செயல் நினைவுக்கு வந்தது.கர்ப்பமாக இருப்பதால் அவளால் வேகமாக நடக்க முடியாமல் இருப்பதை புரிந்தவன் திரும்பி வந்து அவளுக்கு அருகில் மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.
அவனின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் கவனித்து விட்டு அதை கண்டுக்கொள்ளாமல் நடந்தாள் பாவை. அருகில் உள்ள கடையில் இருந்து இரண்டு சூடான காபியை வாங்கி ஒன்றை அவளிடம் நீட்டினான்.
ஏற்கனவே காப்பிக் கொட்டையின் வாசம் மூக்கைத் துளைத்திருக்க ஹீன் கொடுத்ததும் மகிழ்ச்சியாக ஆவலாய் வாங்கிக் கொண்டவள் ஒரு மிடறு பருகவும் கண்களை மூடி இரசித்தவள் “ம்ம்…கெண்ட்ச்சவா – ம்ம்… செமையா இருக்கு”என்று அவள் உணர்ந்துச் சொல்லவும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
மெதுவாக “யூங்ஸோஜிவிங் ஹுன் நேகா கவின்பின் யூங்கில் ஹிஸ்ஸோ –
என்னை மன்னிச்சிடுங்க ஹீன் நான் கொஞ்சம் அதிகமா நடந்துக்கிட்டேன்” என்றாள்.
அதற்கு புன்னகை ஒன்றை பதிலாக தந்தவன் “இட்ஸ் ஓகே பாவை நீங்களும் நானும் ஒரு நல்ல ப்ரெண்ட்ஸ்ஸா இருக்கலாமே” என்றதற்கு சரியென்று புன்னகைத்துக் கொண்டே ஒத்துக் கொண்டாள்.
அதற்குப் பிறகு இருவரிடமும் அங்கே பேச நிறைய விஷயங்கள் இருந்தன.ஹீன் கொரியாவைப் பற்றிச் சொல்லச் சொல்ல அவள் கேட்டுக் கொண்டே வந்தாள்.
கொரியப் பெண்கள் திருமணத்தைக் கண்டாலே பயந்து ஒதுங்கி விடுங்கின்றனர்.இளைஞர்களின் நிலைமையும் அப்படித் தான் இருக்கிறது.திருமணம்,குழந்தை பேறு போன்றவற்றை பெரிய சுமையாகவே கருதுகின்றார்கள்.அப்படிப்பட்ட இடத்தில் வயிற்றில் பிள்ளையோடு வேலையில் சேருவதற்காக பாவை வந்திருப்பது வியப்பாக இருப்பதாக அவன் சொன்னான்.
அதைக் கேட்டுச் சிரித்தவளோ புன்னகை ஒன்றை பதிலாக தந்து விட்டு “சூழ்நிலை மனிதனை எந்த நிலையில் இருந்து மாற்றி அவனை வாழ வைக்கும்” என்று புரியா பதிலைத் தந்தாள்.
அவளுக்கு தேவையான பொருட்களை எல்லாம் ஹீனிடமும் விருப்பத்தைக் கேட்டு தனக்கு பொறுத்தமான உடைகளையும் வாங்கிக் கொண்டாள்.
அவனுக்காக அஜ்ஜீமா மற்றும் ஏராவிற்காகவும் பரிசுப் பொருட்களாக குளிர்காலத்தில் உதவும் உடைகளை ஹுனின் உதவியோடு வாங்கினாள்.
பாவைக்கு பசிக்கும் பொழுது அவளுக்கு பிடித்த அதிக காரமில்லாத உணவுகளை வாங்கிக் கொடுத்தான்.வாங்கிய பொருட்களின் பையை அவள் வைத்திருக்க அதை விடாப்பிடியாக பிடித்து அவளிடம் இருந்து வாங்கிக் கொண்டு நடந்தான்.
எத்தனையோ நாட்களுக்குப் பிறகு பாவையின் முகத்தில் நிறைவான புன்னகை ததும்ப அவளுடைய மனம் நிறைந்திருந்தது.
இருவருமாக வீட்டிற்கு காரில் திரும்பி வந்துக் கொண்டிருந்தனர்.இன்றைய நாளின் அதிகப்படியான சுற்றலினால் கொஞ்சம் அசதியாக இருக்க அப்படியே இருக்கையில் தூங்கிப் போனாள் பாவை.
அசந்த தூக்கத்தில் அவளுடைய தலை சாய்வதைக் கண்டவன் காரை ஓரமாக நிறுத்தி விட்டு தன் கையால் அவளுடைய தலையைப் பிடித்து இருந்தான்.
அப்படி பிடித்து இருக்கையில் பெண்ணவளின் மென் கன்னங்கள் அவனின் உள்ளங்கைகளில் அழுந்தி இருந்தது.சட்டென்று இதயம் வேறு வேகமாக துடிக்க ஆரம்பித்தது.என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே பிடித்து இருந்தான்.
நேரம் சில நிமிடங்களை வேகமாக கடக்க சின்ன சிணுங்களில் தலையை நிமிர்த்திட அங்கே ஹூன் இருந்த நிலைமையைப் பார்த்து புரியாத பார்வை பார்த்தாள் பாவை.
அவனோ எதுவும் பதில் சொல்லாமல் “வீடு வந்திடுச்சு” என்றான்.
அவளோ “ஓ…” என்று கண்களை தேய்த்துக் கொள்ள நேராக வீட்டு வாசலில் போய் காரை நிறுத்தினான்.அவள் இறங்கிச் செல்லவும் அதுவரை அழுத்திப் பிடித்திருந்த மூச்சை சீராக விட்டவன் தன் நெஞ்சை அழுத்திப் பிடித்தவன் ‘இதென்ன வித்தியாசமான பீலிங்கா இருக்கு இரண்டு மூணு பெண்களோடு டேட்டிங் போய் வராத இந்த படபடப்பு இப்போ ஏற்கனவே குழந்தையை வயிற்றில் வைத்திருக்கும் இந்த பெண்ணின் மீதா? அதுவும் சந்தித்து இரண்டு நாட்கள் கூட முழுதாக நிறைவு பெறாத பொழுதா?’ என்று யோசித்து காரினுள் உட்கார்ந்துக் கொண்டிருக்கும் பொழுது காரின் ஜன்னல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு யோசனையை விட்டு விலகி வந்தவன் நிமிரிந்துப் பார்க்க அங்கே அஜ்ஜீமாவும் பாவையும் நின்றுக் கொண்டிருந்தனர்.
ஹுன் காரின் ஜன்னல் கதவை திறக்கவும் அஜ்ஜீமா “ஹுன் எல்லா பொருட்களையும் எடுக்கனும் கதவை திற” என்றார்.
ஹுன் “ஒம்மா நான் எடுத்து வரேன் நீங்க உள்ளே போங்க” என்று இருவரையும் அனுப்பி வைத்தான்.
இனிமேல் பாவையிடம் கொஞ்சம் விலகியே இருக்க முடிவெடுத்தான் ஹூன்.
அஜ்ஜீமாவிடம் அவருக்கும் ஏரா மற்றும் ஹுனுக்கு வாங்கிய பொருட்களை கொடுத்து விட்டு தன் வீட்டில் போய் அடைந்துக் கொண்டாள்.
மறுநாள்…
காலையில் கொஞ்சம் பொங்கலும் சாம்பாரும் செய்தவள் மதிய உணவிற்கும் சேர்த்தே செய்து விட்டாள்.கொஞ்சம் அதிகமாக செய்து அஜ்ஜீமாவிடம் கொடுத்தாள்.அவர் அவளைப் பார்க்க அவளோ சிரித்துக் கொண்டே பொங்கல் சாப்பிடும் முறையைப் பற்றி விளக்கிச் சொன்னாள்.
அதை செய்து ஒரு வாய் சாப்பிட்டவர் “ஹ்ம் ஜோகா பாபை இகி நோஹி நாளா இம்சிகியா – ம்ம்… நல்லா இருக்கு பாவை இந்த உங்க நாட்டு உணவா?” என்றதற்கு “இயூங் அஜ்ஜீமா -ஆமாம் அத்தை” என்றாள்.
அவரிடம் கொடுத்து விட்டு அலுவலகம் செல்லுவதற்கு தயாரானாள்.தூங்கி எழுந்து வந்த ஹுன் மேசையின் மேல் இருந்த பாத்திரங்களை திறந்து பார்த்தவன் உணவு வித்தியாசமாக இருப்பதைப் பார்த்து அம்மாவை அழைத்து கேட்டான்.
அவர் பாவை கொடுத்ததையும் அதை சாப்பிடும் முறையையும் சொல்ல சிறிதாக எடுத்து சாப்பிட்டு பார்த்தவன் அதன் ருசியில் “டல்கோமன் மாஸ் இஸ்ஸாயோ- செம டேஸ்டாக இருக்கு” என்று வாய்விட்டு சொன்னவன் முழுவதையும் அவனே சாப்பிட்டு முடித்தான்.
இதற்கிடையில் அஜ்ஜீமாவும் பாவையும் அவளுடைய புது அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.முதலில் க்வாலிஜா -மேலாளர் சந்திக்கச் சென்றனர்.அஜ்ஜீமா அந்த நிறுவனத்தில் கணக்காளராக உள்ளார்.
பாவை ஆட்டோமொபைல்ஸில் மேற்படிப்பு படித்திருப்பதோடு ஏற்கனவே வேலைப் பார்த்திருப்பதால் தற்சமயம் கோப்புக்களைச் சரிபார்ப்பதோடு அதற்கான ஆலோசனைகளுக்கான பிரிவில் வேலைக் கொடுக்கப்பட்டது.
ஏற்கனவே சேகர் அங்கிள் நிறுவனத்தாரிடம் பேசியிருந்ததோடு தமிழ்நாட்டில் அந்த துறையில் அவள் வேலைப்பார்த்ததினால் இந்த வேலை வழங்கப்பட்டது.மேலும் பாவை கருவுற்று இருப்பதால் இந்த வேலை குழந்தைப் பேறு நேரத்தில் வீட்டில் இருந்தபடி வேலை செய்வதற்கு ஏற்றப்படிக் கொடுக்கப்பட்டது.
இந்த வசதி எல்லாம் முப்பதைந்து வருஷமாக சேகர் அந்த நிறுவனத்தில் வேலைப் பார்த்ததோடு அந்த நிறுவனத்திற்காக அவர் கொடுத்த உழைப்பின் பலனாக கொடுக்கப்பட்டது.
அதோடு பாவையின் தந்தை வங்கியில் முக்கிய பொறுப்பில் இருந்ததால் இவர்களுக்கு தேவையான நிறுவனத்தின் வங்கி வரவுசெலவுக் கணக்குகளை சேகரின் நண்பராக இருப்பதால் பார்த்துக் கொடுத்து இருந்தார்.அதனாலும் பாவைக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது.இந்த விஷயங்கள் எல்லாம் தன் பெற்றோரின் இறப்பிற்கு பின் தெரிந்த செய்திகள்.
இந்தியாவில் இருந்து வந்த ஒரு இளம்பெண்ணிற்கு இந்த ஒரு சவுகரியமான வேலை கிடைத்தது அங்கிருந்த யாருக்கும் பிடிக்கவில்லை.முக்கியமான பொறுப்பில் இருந்தவர்களுக்கு அவள் சிபாரிசு வந்ததில் பிடிக்கவில்லை.ஆனால் பாவை சிபாரிசை விட முதுநிலையில் முதன்மையாக தேர்ச்சி பெற்றதும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தது.
அங்கிருந்த பெண்களும் ,ஆண்களும் பாவையிடம் தங்களை அறிமுகத்தோடு நிறுத்திக் கொண்டனர்.
அவளைப் பற்றியும் அவளுடைய வயிற்றில் உள்ள குழந்தையைப் பற்றி கிசுகிசுப்பு தான் பேசினார்கள்.பாவை நடந்ததை பற்றி எதுவும் பெரிதாக எண்ணிக்கொள்வில்லை.
இந்த சூழ்நிலையை எப்படியும் கையாள வேண்டிய நிலைமை வரும் என்று அறிந்துக் கொண்டவள் முன்னேற்பாடாக தன்னை தயார் படுத்தியே வந்தாள்.
எதைப் பற்றியும் யோசிக்காமல் தன் வேலையை செய்து முடித்தாள்.மாலையில் அஜ்ஜீமாவிடம் பேருந்தில் பயணம் செய்வதற்காக வழியைக் கேட்டாள்.ஆனால் அதற்கு அவர் தன்னுடன் காரிலேயே அழைத்துச் செல்ல முற்பட முற்றிலுமாக மறுத்தவள் அவரோடு பேருந்தில் சென்றாள்.
களைப்பின் மிகுதியினால் வந்தவள் மெத்தையில் சாய்ந்து தூங்கிப் போனாள்.அடுத்தடுத்த நாட்கள் இப்படியே ஓடியது.
வீட்டிற்கு வந்தும் நிறுவனத்தில் உள்ள வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டது.வார இறுதி நாட்களில் மருத்துவர் சொன்ன பரிசோதனைகளை மேற்க் கொள்ள முடிவெடுத்து இருந்தாள் பாவை.
