ஜான்வியுடனான பெங்களூரு வாழ்க்கை ஒருவிதமாக நம் சாகேத்துக்கு பழக்கமாக ஆரம்பித்தது. இருவரும் மனதாலும் சரி உடலாலும் சரி ,இன்னமும் இணையவில்லை. ஏதோ ஒன்று சாகேத்தை தடுக்க ஜான்வியும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. எவ்வளவு தூரம் செல்கிறது பார்ப்போம் என்ற எண்ணம் அவளுக்குள்.
ஜான்வியின் சந்தேகம் ,இன்னமும் தான் காதலிப்பதாக சொல்லியிருந்த பெண்ணின் நினைவுகளிலிருந்து வெளியே வர முடியாதுதான் தன்னை தவிர்க்கிறானோ என்றும்.அதிலிருந்து வெளியே வருவதற்கும் தன்னுடன் இரவுகளை பகிர்ந்து கொள்வதற்கும் என்ன சம்மந்தம் என்றுதான் அவளுக்குப் புரியவில்லை. உடல் தேவை அவளது பொறுமையை வெகுவாக சோதித்தது, கூடவே ,வெறும் நண்பனைப்போல பழகுவதையும் கூட சாகேத்துக்கு பிரம்ம பிரயர்த்தனமாக இருக்க ,தன்னால் முடிந்த அளவுக்கு சோஷியல் டிஸ்டன்ஸ் தன் மனைவியிடம் கடைப்பிடித்தால்.
ஓரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல், ஜான்வி வெடித்தாள் .“வாட் தி ஹெல் .கல்யாணமாகியும் ப்ரம்மச்சாரியா இருக்கணும்னு நீ முடிவு செஞ்சிருந்தா,அதை முதலிலேயே என்கிட்ட சொல்லியிருந்திருக்கணும் சாகேத்.அப்படி சொல்லியிருந்தா நா ,கொஞ்சமென்ன ரொம்பவே யோசிச்சிருப்பேன். என்னவோ பெரிய இவன் மாதிரி பெங்களூர் வந்த பிறகு வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்னு டயலாக் அடிச்சே.இன்னும்நீ பெங்களூரு வந்து சேரலியா ..?”
அவளது உணர்வுகள் புரிந்தது.அதனாலேயே வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தான்.அவனுக்குத்தான் புரியவில்லை. இதென்ன சோதனை.திருமண வாழ்வில் இதெல்லாம் சகஜம் தானே!தான் எதற்காக இப்படி நடந்து கொள்கிறோம் என்று வெகுவாகக் குழம்பினான்.ஜான்வியிடம் ஏனோ அவனது நுண்ணிய உணர்வுகள் எழும்பவில்லை.அவளை விட்டு தொலைவில் நிற்பது பிடித்திருக்கிறது . திருமணம் முடித்து புது பெண்டாட்டியிடம் உணர்வுகள் எழவில்லை என்று சொன்னால் அவன் பெற்றவர்களே அவனிடம் துடைப்பத்தை எடுத்துக்கொண்டு அடிக்க வந்துவிடுவார்கள்.
மனைவியிடம் பதில் சொல்ல முடியாமல் தவித்தவன்,தனக்குத்தான் ஏதாவது குறை இருக்கக் கூடுமோ!என்று தகுந்த மருத்துவரைப் பார்க்க முடிவுசெய்தான் . தனது அணுகுமுறை தவறு என்று அவனுக்கும் தானே புரிகிறது. இவனை முழுவதுமாக ஆராய்ந்த மருத்துவர் இவனது உடலில் எந்த குறைபாடுகளும் இல்லை என்று சொல்லிவிட்டு இவன் உணவு பழக்கங்களில் சில மாறுதல்கள்,த்யானத் பயிற்சி என்று சில வழி முறைகளை சொல்லி அனுப்பி வைத்தார். அவரது இன்னொரு கூற்று,”ரெண்டு பேரும் தனியா எங்கயாவது போயிட்டு வாங்க.ஆஃபீஸ் ஸ்ட்ரெஸ் கூட ரீசனா இருக்கலாம்” என்று முடித்துக்கொண்டார்.
ஒரு தீர்மானத்திற்கும் வர முடியாமல் தயங்கி நின்றான் சாகேத். வெளியே எங்கும் தேன்நிலவிற்கு செல்வதற்கு தனது மனைவிக்கு பிடிக்கவில்லை என்பது அறிந்தவனால் எப்படி மருத்துவரின் ஆலோசனை இது என்று சொல்லி அவளுக்குப் புரியவைக்க முடியும்? என்னவென்று சொல்ல முடியும்..எதற்காக மருத்துவரை சந்திக்கப் போனாய் என்று நிச்சயம் ஹ=ஜான்வி கேட்கக் கூடும்.அதற்கு பதில் சொல்லும் மனது அவனுக்கு இல்லை.
சிலவிஷயங்கள் ,அதிலும் அந்தரங்கமான விஷயங்களை யாரோடும் பகிர்ந்துக் கொள்ள முடியாதே!மனைவி..அவளிடம் கணவனுக்கு ஒளித்து செய்ய நிச்சயம் எதுவும் இல்லைதான்.ஆனால் அதற்க்கு மனம் முதலில் ஒன்றாக வேண்டும்.இல்லாவிட்டால் கல்யாண வாழ்க்கை தோற்றுப்போகும். இந்த பயம் சாகேத்தின் மனதை உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது.
மாலையில் வீட்டுக்குபோகவே இஷ்டம் இல்லை ஜான்விக்கு. அவளது எதிர்பார்ப்புகள் பூஜ்ய நிலையை தாண்டி மேலே செல்லவில்லை எனும் பொழுது வீட்டில் என்ன இருக்கிறது? விரும்பி திருமணம் செய்துக் கொண்டவளுக்கு கணவனின் ஒதுக்கம் வெகுவாக பாதித்தது. இது போன்ற ஒரு வாழ்க்கையை அவள் எதிர்பார்த்து திருமணம் செய்துக்கொள்ளவில்லை.
அவளது காதல் தோற்றுப்போனதோ… இன்னும் அவளால் விடையை அறிந்து கொள்ளமுடியவில்லை.
பார்ப்பதற்கு தான் எப்படி இருக்கிறோம் என்று தன்னைப் பற்றி அறியாதவள் இல்லை ஜான்வி. வினிதனுடன் இருந்த பொழுதுகளில் அவன் அவளை எவ்வளவு ஆராதித்தான் . அவனையே திருமணம் முடித்திருந்தால்இந்நேரம் காதலில் மூழ்கிக் கொண்டிருந்திருப்பாள் .
ஏதோ கிடைத்தற்கு அறிய பொக்கிஷமென்று ,என்றோ கலோரி காலத்தில் காதல் என்றுஎவ்வளவு முட்டாள்தனமான முடிவு இந்தத் திருமண உறவு? ஜான்வியின் மனம் எப்படியெல்லாமோ தாறுமாறாக யோசனை செய்தது. இப்போதெல்லாம் அவள் முகத்தில் இருக்கும் ஒளி காணாமல் போய் விட்டதோ?
அவள் எண்ணம் இப்படிப் போவது தவறாக இருக்கலாம். ஆனால் அவளிடமிருந்து தள்ளி நிற்க விரும்பும் அவளது ஆருயிர் கணவனை எப்படி புகழ்வது?அவள் இவ்வாறெல்லாம் யோசிப்பதற்கு அவனும் கூட காரணம். காலம் மாறிவிட்டது.திருமணம் செய்துக்கொள்ள விரும்பும் பெண்க சொற்பமான நிலையில் சாகேத் இப்படி இருப்பது சரியா?
என்னென்னவோ யோசனைகளுடன் வீடு வந்து சேர்ந்தவளை வரவேற்றது சாகேத்தின் புன்னகை முகம் தான். கணவனின் புன்னகையை ரசிக்கும் நிலையில் இல்லை ஜான்வி.அவனது சிரிப்பை உணர்வுகள் அற்று பார்த்துக்கொண்டிருந்தவளின் பாவம் சாகேத்துக்கு புரியவில்லை. சீக்கிரமே வீடு வந்து சேர்ந்திருந்தவன் இரவுக்கான உணவையும் தயாரித்து வைத்திருந்தான்.
ஜான்வி தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வந்தவள் கணவனுடன் அதிகம் எதுவும் பேசாமல் உணவை சுவைப்பதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள்.மறந்தும் அங்கே அமர்ந்திருக்கும் இன்னொரு ஜீவனை அவள் பார்க்கவில்லை. மனைவியையே பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு பேச்சை எப்படித் தொடங்குவது எண்டு புரியவில்லை. எப்படியாவது பகர்ந்துதானே ஆகவேண்டும்?
அவள் சாப்பிட்டு முடிக்கும்வரை அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் இன்னும் சாப்பிடவே தொடங்கவில்லை என்பதை ஓரப் பார்வையில் அறிந்து கொண்டவள்,அவன் ஏதோ பேசுவதற்க்கு தயங்கி இருப்பதுவும் புரியாமல் இல்லை.
ஆனால் அதற்காக என்னவென்று பேச்சைத் தொடங்கஅவள் தயாரில்லை என்பதுடன்,சொல்ல வேண்டியதை அவன்தானே சொல்லவேண்டும்.
வெகுவாகத் தயங்கி யோசித்தவன், மனைவியிடம் “நாம சின்னதா ஒரு பிரேக் எடுத்துட்டு எங்கயாச்சும் போயிட்டு வருவோமா ஜானு.எனக்கு கண்டிப்பா கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கணும் போல இருக்கு”
கணவன் என்ன சொல்கிறான் என்று புரிந்தவளின் ஒற்றைப் புருவம் கேள்வியாகத் தானாகவே மேலேறி,அவனிடம் விடைக்கான முனைந்தது. அவனால் என்னவென்று சொல்ல முடியும்! கொஞ்சநேரம் மெளனமாக நேரத்தை கடத்தியவன் நிதானமான குரலில், “நம்ம கல்யாண வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோக நினைக்கிறேன். அதுக்கு மத்த வேலைகள்லேந்து கொஞ்சம் தூர நிக்கணும் .ஒன் வீக்காவது வெளியே போலாமா..
அவன் ‘தான்‘என்ற கர்வம் காட்டிப் பேசியிருந்தால் நிச்சயம் அவள் மறுத்திருப்பாள்.அவன் குரலில் இலகுத் தன்மையைவிட நிச்சயம் அடுத்த அடி எடுத்துவைக்கும் எண்ணம் இருந்தது. அதனாலேயே அவள் அதற்க்கு ஒப்புக்கொண்டாள் .
“ஹும் ,சரி. நாலீவுக்கு ஆபீஸ் ல லீவுக்கு அப்ளை பண்றேன்.எப்போன்னு சொன்னேன்னா வசதி “என்று முடித்துக் கொண்டாள் .அதற்கு மேல் பேசுவதற்கு அவளுக்கு அவனிடம் எதுவுமில்லை. சாகேத்திடம் ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.நிலைமையை சீர் செய்யத்தான் நினைக்கிறான். ஆரம்பத்திலேயே சாதாரணமாக வாழ்க்கையை தொடங்கியிருந்தால் இப்போது நிலைமை இவ்வளவு தீவிரமாகி இருக்காது.
திருமணம் என்று உறவுக்குள் காலெடுத்து வைத்துவிட்டு பின்வாங்கினால் எவ்வளவு தவறு.மனைவியாக அவளது உணர்வுகள் அவனுக்கு புரிகிறது. அதனாலேயே தவறுகளை சரிசெய்ய முயற்சி செய்கிறான்.
நோர்த் கரலினாவில் கணவனின் பிரம்மாண்ட வீட்டுக்குள் நுழைந்த திருமகளுக்கு சந்தோஷம் ,ஆச்சர்யம் கர்வம் என்று கலவையான உணர்வுக் கலவைகள். இவ்வளவு பெரிய வீட்டில் தானும் தனது கணவனும் வசிக்கப் போகிறோமா!என்று .
உள்ளே சென்று தனது லக்கேஜுகளை வைத்துவிட்டு வந்தவனுக்கு அவளது விழி விரிந்த பார்வை லேசாக முறுவலை வரவழைத்தது. வெளியே காண்பித்துக்கொள்ளாமல் “என்னே திரு அப்படியே நின்னுட்டு திருத்திருன்னு முழிச்சிட்டு நிக்கிறே..உள்ளே போய் உன்னோட லாஃகெஜஸ் எல்லாத்தையும் வச்சிட்டு வா. நிதானமா பிறகு அடுக்கிக்கலாம். உன்னோட ரூம் எதுன்னு டிசைட் பண்ணி சொல்றேன்.“என்றவனை ஆராய்ச்சி பார்வை பார்த்து வைத்தாள் திரு. அவள் மனதோ கணவன் – மனைவி இருவரும் ஒரே அறையில் தானே தங்குவார்கள்.சென்னையில் இருக்கும் பொழுது கூட அப்படித்தானே இருந்தோம்.பிறகு இங்கு வந்த பிறகு மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்று ஓடியது.
வாய் விட்டு கேட்டாள் இல்லை.அவள் மனம் கேட்கும் கேள்வி அவனுக்கும் கூட கேட்காமல் இல்லை. ஆனால்அவளாக தானே வந்து கேட்கட்டும்.அப்புறமாக சொல்லிக் கொள்கிறேன் என்று அமைதியாக இருந்தான். அவனது கைகள் கட்டிக்கொண்டு நின்றிருந்த தோரணை பெண்ணவளை அவனை ரசிக்கவும் வைத்தது. அவளது கன்னங்கள் லேசாக பிங்க் நிறத்திற்கு மாறியது. அங்குள்ள குளிரா,இல்லை கணவன் மீதான ரசிப்பா என்றெல்லாம் சொல்ல முடியவில்லை.
நேராக கீழே அவளுக்கென்று கெஸ்ட் ரூமைக் காட்டியவன் கப் போர்டுல உன்னோட திங்க்ஸ் வச்சிட்டு கிட்சேனுக்கு வந்திடு..என்றுவிட்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டான். இந்திய நேரத்திற்கும்,இங்கே உள்ள நேரத்திற்கான வித்தியாசம் லேசாக அவனைப் படுத்தியது. பெண்ணுக்கும் கூட அதே நிலைதான். ஆனால்,அவனாக இன்னும் எதுவும் சொல்லவில்லை.கொஞ்ச நேரமாவது தூங்க வேண்டும் என்று அவளது உடல் கெஞ்சியது.
தனது பொருட்களை கணவன் சொன்னபடிக்கு வைத்துவிட்டு வந்தவள் நேரே தனது கணவனின் அறை நோக்கி சென்றாள் . கதவு லேசாக சாற்றியும் திறந்துமாக இருக்க லேசாக கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்று பார்த்தவளுக்கு ஆச்சர்யமாகப் போயிற்று. நிவாஸ் தூங்கியிருந்தான். இப்போது என்ன செய்வது என்றும் புரியாமல்,கணவனது அருகில் இருந்த தலையணையில்தலை வைத்துப் படுத்தவள் தானும் தூங்கிப் போனாள் .
மூன்று மணிநேரம் நல்ல ஆழந்த தூக்கம் இருவருக்கும். முதலில் எழுந்தவன் நிவாஸ்தான் . தனது அருகே மனைவி படுத்திருப்பதை பார்த்து ஏதோ யோசித்தவன் தானே எழுந்து குளியலறை சென்று சுத்தப் படுத்திக்கொண்டு வந்தவன், திருவை தட்டி எழுப்பினான்.அவளால் கண்ணைக்கூட திறக்க முடியவில்லை. கைத்தாங்கலாகஅவளை அழைத்து சென்று விருந்தினர் அறையில் உள்ள படுக்கையில் படுக்க வைத்தவன் உணவுக்கு ஆன்லைனில்ஆர்டர் செய்துவிட்டு தனது மடிக்கணினியில் அமர்ந்துவிட்டான் .
அவனுக்காக காத்திருக்கும் நூற்றுக்கணக்கான மெயில்களுக்குபடித்து பார்த்து பதில் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதேஉணவு வந்துவிட்டது.திரும்பவும் திருவின் அறைக்குள் நுழைந்தவன் அவளையும் எழுப்பிவிட்டு நிதானமாக அவளை முகம் கழுவ வைத்து உணவும் சாப்பிட வைத்தான். அவளது நிலை புரிந்தவனாக சாப்பிட்டவுடன் மீண்டும் அவளை அறைக்குள் சென்று படுக்க வைத்தான்.
இங்கே பழக்கமாக நிச்சயம் நேரம் எடுக்கும்.அதுவரை எது சொல்லியும் பிரயோஜனம் இல்லை என்று அவனுக்குத் தெரியும்.அவனுக்கு இவையெல்லாம் பழகி விட்டது.சிலநேரம் இன்னொரு மாகாணத்திற்கு வேலை நிமித்தமாக செல்லும் பொழுதும் ,வெளிநாடுகளுக்கு செல்லும்பொழுதும் நேர வித்தியாசம் அவனைத் தடுமாறச் செய்யும்.ஆனாலும்,வேறு வழியே இல்லாமல் வேலை செய்யவேண்டும். ஆரம்பத்தில் கஷ்டமாகவும் எரிச்சலாகவும் இருந்ததுதான்.
ஆனால் ,முதல் முறையாக அதற்கான சம்பளம் தனது வங்கிக்கணக்கிற்கு வந்தபொழுது , கர்வமாய் உணர்ந்த தருணம்..அவனுக்கு அந்தப் பணமும், வேலைக்காக கிடைக்கும் மரியாதையும் அவனை எந்நேரமும் ஓடுவதற்கும் வேலை செய்வதற்கும் பழக வைத்தது.
இவ்வளவு காலமாக அப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறான். இங்கே வந்து படிப்பதற்கும், நிலையாகக் காலை ஊன்றுவதற்கும் நிறைய கஷ்டங்களை சந்தித்து இருக்கிறான்.அவையெல்லாம் மிகப் பழைய கதை.அதைப் பற்றியெல்லாம் சிந்திக்கக் கூட அவனுக்கு நேரமில்லை.அத்துடன் இஷ்டமும் இல்லை. எப்படியோ ‘தான்‘என்ற எண்ணம் வந்துவிட்டிருந்தது.
கொஞ்சநேரம் வேலை பார்த்தவன் அடுக்களைக்குள் சென்று தேவையான பொருட்கள் என்னவென தனது டேபில் குறித்துக்கொண்டான். மூன்று மாதங்களாக அவன் இங்கே இல்லையே. நாளை திரு எழுந்தவுடன் கொஞ்சம் சுத்தப் படுத்த சொல்லவேண்டும் என்று யோசித்தவாறே,சிறியதாக திருவின் படுக்கை அருகே ஒரு குறிப்பு எழுதி வைத்தவன்தனது கார் தரிப்பிடம் நோக்கி சென்றான்.வீடு ஆடோலோக் போட்டவன் கிளம்பும் நேரம் அவனது நண்பனிடமிருந்து அலைபேசி அழைப்பு.பிளுடூத்தில் பேசிவிட்டவன் காரை இந்தியன் குரோசேரி நோக்கி செலுத்த ஆரம்பித்தான்.
அவனது நண்பன் நிரூபன் என்று நான் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? எனில் திருவின் நிலை?