… 14. கடற்கரையில்! காதல் அலை…
அலைகள் கரையைத் தொட்டுக்கொண்டிருக்க, யாழினியின் கூந்தலோ காற்றின் அசைவுகளால் அவள் நெற்றியை வருடிக் கொண்டிருந்தது. அவளது துப்பட்டாவோ இனியனின் மேல் தொட்டும் தொடாமலும் தென்றலுடன் அசைந்துக் கொண்டிருந்தது.
இனியனுக்கு யாழினியிடம் பிடித்ததே! இந்த நேர்த்தியான ஆடையுடன், கலைந்தும் கலையாமலும் இருக்கும் கூந்தல் விரிப்பு.. ஆடம்பரம் இல்லா எளிமை. இவையெல்லாம் தாண்டி ஒன்று உண்டு ஆம், யாழினியின் எண்ணங்கள்…. யாழினியின் ஒவ்வொரு செய்கையும் நல் எண்ணத்தின் தொடக்கம் என்பதை இனியன் உணர்ந்திருந்தான்.
பரந்து விரிந்த மணல் பரப்பு…
சுற்றிலும் கடல் நீர்…
இனிய தென்றலும், அலையும் இசைக்கும் மாலை நேரம்..
“இன்னும் 2 தினங்கள் கருத்தரங்கம் முடித்துவிட்டு நான் தஞ்சாவூருக்கு வந்துவிடுவேன்”
“இல்ல, என்னைப் பற்றி எல்லாம் தெரியும்னு சொன்னிங்க”
“ம்ம்.. தெரியும்” என்று யாழினியின் கண்களை உற்றுநோக்கலானான்.
“நான் இயற்பியல் படித்தது பற்றி உங்களுக்கு…” என்று இனியனிடம் யாழினி சொல்லிமுடிப்பதற்குள்,
“தமிழ் யாழினி!.. உன் வாழ்வில் என்றும் இசைக்கும் இனிய இசையாய் இந்த இனியன் இருப்பேன்….”
என்று மலர்க்கொத்துடன் தன் காதலை வெளிப்படுத்தினான் இனியன்…
நகரும் நேரத்தில் நகராஆ நொடிகளுடன், கலையாத மௌனங்களுடன் நகரத் தயாரானாள் யாழினி. மணற்பரப்பை நோக்கி நடக்க தயாரான யாழினியின் கரங்களை தன் கரத்துடன் இணைக்கத்தயாரான இனியன், மலர்க்கொத்தை அவள் கரங்களுள் புதைத்திருந்தான்.
முதல் ஸ்பரிசம்… அவள் விரல் நுனிகள் அவன் கைகளில் பட்ட நிமிடம்…. அலைகள் கரைகளைத் தொட்டுக்கொண்டிருந்த போது, நுரைகள் வெட்கத்தால் கலைந்து சென்றுக் கொண்டிருந்தன. இனியனும் யாழினியின் முதல் ஸ்பரிசத்தால் நுரைபோல் கரைந்துக்கொண்டிருந்தான்.
அலைகள் ஒலியாக சங்கினுள் ஆர்ப்பரிப்பதைப்போல் யாழினியின் மனதை இனியன் ஓயாத கடல் அலை போல் ஆர்ப்பரித்திருந்தான்.
“நான் கொஞ்சம் யோசிக்கனும்….” என்று தன் கையில் இருந்த மலர்க்கொத்தை மேலும் மென்மையாக்க தன் கரங்களால் வருடிக்கொண்டிருந்தாள் யாழினி.
“நல்லா யோசிங்க… இந்த ஆழிக்கு இடையில் உங்கள் அம்பகத்தின் குளம் நன்றாக எனக்கு தென்படுகிறது. ஆனா, யாழினிக்கு இசையாய் இந்த இனியன் இருப்பேன். அதையும் மறக்காம இருங்க” என்று மேலும் உரையை இசைக்க தொடங்கியவனிடம்,
நான் “தஞ்சாவூர் செல்ல வேண்டும்” என்றுக் கூறி நகரத் தயாரானாள் யாழினி.
“தமிழ் யாழினி…” என்ற இனியனின் அழைப்பிற்கு… சற்றுத் திரும்பி தன் தோளில் வருடிய தம்மிலத்தை திருப்பிப்போட்டு நயனபுன்னகையை உதிர்த்துச் சென்றாள் யாழினி. இனியனின் மனதும் உதிர்ந்து தான் போயிருந்தது.
கடற்கரையில் இனியனது மனது காதலால் உதிர்ந்திருந்தாலும் யாழினி கரங்களுள் அவன் துளிர்க்கவிட்ட மலர்க்கொத்தானது ஜன்னலோரப்பேருந்தின் காற்றில் அதன் மலர் மொழியுடன் மௌன மொழியிட்டுக்கொண்டிருந்தது.
“எங்கேயோ போகின்ற மேகம் இருக்குது… என் பேரை உன் பேரைச் சொல்லி அழைக்குது….” என்று பேருந்தில் இசையமைத்துக் கொண்டிருந்தார் ஹாரிஸ்.
சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு பேருந்து பயணம் மேற்கொண்ட பத்து நிமிடத்திலே மனதானது சுழற்காற்றின் மையம் போல் வெறுமையாகத் தோன்றியது யாழினிக்கு. தன் மனதின் வெற்றிடத்தை மலர்க்கொத்தைக் கண்டு மென்மையாக்கிக் கொண்டிருந்தாள்.
மலர்க்கொத்தினுள் இருந்த சிவப்பு நிற ரோஜா இதழில் பட்டுக்கொண்டிருந்த ஊதா வண்ணத்தாளானது சட்டென்று யாழினியின் கண்களுக்கு இடையில் மின்னிக்கொண்டிருந்தது.
“உன்னிடம் என் பத்திலக்க எண்”
“உன் எண்ணுக்காக என் எண்ணம்… “
தொலைவில் சென்றாலும்… அலைபேசியில் ஒலிக்கும் உன் எண் என்னிடம்”
– உன் இனி…!
!… இனி உன் கையில்…
என்ற ஊதா வண்ணத்தாளை அவள் விழிப்புன்னகையுடன் தன் பையில் பத்திரப்படுத்திக்கொண்டாள்.
தன் பையிலிருந்து அலைபேசியை எடுத்தவள் சிறிதும் தயங்காமல் இனியனின் எண்ணை தன் எண்ணத்திலிருந்து செலுத்திக்கொண்டிருந்தாள் என்பதை அந்த பொத்தான் வைத்த அலைபேசியின் திரைக் காட்டிக்கொண்டிருந்தது.
—
“நீ வந்ததும் மழை வந்தது நெஞ்செங்கும் ஆனந்தம்…
நீ பேசினால் என் சோலையில் எங்கெங்கும் பூவாசம்…”
என்ற வைரமுத்து வரிகள் கடற்கரை சாலையோர தேநீர்க் கடையில் அந்தி மாலைக்கு அழகு சேர்த்துக்கொண்டிருந்தது.
“என்ன மச்சான், யாழினி போன் பண்ணுவானு நினைக்கிறீயா?” என்று அலைபேசியில் அலாதி நம்பிக்கையைப் பற்றி உரையாடிக்கொண்டிருந்தான் புகழ்.
“தெரில டா புகழ். ஆனா, தமிழ் யாழினி கூட இருந்த இந்த 30 நிமிடம் என்னமோ நிஜவாழ்க்கை யை விட்டு வெளில வந்து ஒரு கற்பனை உலகத்துல இருக்க மாறி தோனுச்சு”…
“கற்பனை னா? நீ தலையங்கம் எழுதுவனு நான் நினைக்குறேனே அது மாதிரியா?”
என்று எப்படியாவது இனியனை மறுபடியும் தலையங்கம் எழுத வைக்க வேண்டும் என்று தன் கற்பனை உரையாடலை இனியனது காதல் கற்பனை நொடிகள் இடையே உருவாக்கிக்கொண்டிருந்தான் புகழ்.
“டேய்! புகழ், இப்போ எதுக்கு மறுபடியும் தலையங்கத்தைப் பற்றி….”
“இனிய நண்பனே! இனியா, நீ தலையங்கம் எழுதுன்னா எனக்கென்ன? எழுதவில்லைனா எனக்கென்ன?..
உன் காதல் தலையங்கம் எப்படி இருக்குன்னு பார்ப்போம். யாழினி போன் பண்ணுவாங்க. அப்படி இல்லையென்றாலும் நீ இரண்டு நாள்-ல இங்க தஞ்சாவூருக்கு வந்தோன்ன பேசிக்கலாம். இப்ப போய் கருத்தரங்கத்திற்கு தேவையானதைசெய்” என்று தனது அழைப்பைத் துண்டித்திருந்தான் புகழ்.
கடற்கரையில் இருந்து தான் தங்கியிருந்த அறை நோக்கி வந்தவன் அவனது அறையை திறக்க முற்பட்டபொழுது….
“மேகமாய் நானும் மாறேனோ…
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ…
சூரியன் போலவே……………..” என்று இனியனது அலைபேசி அழைப்புஒலி இசைக்கத்தொடங்கியது.
இந்த நொடியில் தன் அறைக்கதவையும் திறந்திருந்தான் இனியன்.
(அறையை சாவிக்கொண்டு திறந்திருக்கும் இனியனின் காதல் அறையும் தமிழ் யாழினியின் இசைக்காதலால் திறக்குமா? காண்போம் அடுத்த அத்தியாயத்தில்)
– இசைக்கும்