Skip to content
Post Views: 4,103
நரேந்திரன் மனதில் புழுக்கம். சில விஷயங்கள் தான் நினைப்பது போல் நடக்காமல் போனால் ஏற்படும் தோல்வியின் வலியை அவன் இப்போது அனுபவித்துக் கொண்டிருந்தான். அப்பா சொன்ன ‘சென்னை வந்து இங்கே தங்குவது பற்றி அவன் கனவில் கூட நினைத்துப்பார்க்க விரும்பவில்லை.அப்படி இருக்கும்பொழுது சாம்பசிவம் சொல்வதை ஏற்க முடியாமல் தவித்த்த்தான்.
“இல்லேப்பா..கொஞ்ச வருஷம் அங்கேயே இருக்கலாம்னு யோசனை செய்யுறேன். அவளுக்கும் பெங்களூரு பிறந்து வளர்ந்த இடம். எனக்கும் அங்கே தான் பிடிச்சிருக்கு.” அவன் சொன்னதை கேட்ட சாம்பசிவம் முகம் கோவத்தை எடுத்துக் கொண்டது.
Advertisement
“அப்படின்னா,அவங்க வீட்டோட மாப்பிள்ளையா போகப் போறேன்னு சொல்லு. ஆரம்பம் முதலே உன்னோட பொறுப்பு இல்லாததனதுன்னாலே எனக்கும் உங்கம்மாவுக்கும் மனக் கிலேசம் தானே மிச்சம். என்னிக்காவது எங்களை புரிஞ்சு நடக்க முயற்சியாவது செஞ்சிருக்கியா? அந்த பொண்ணு சாரு எங்ககிட்ட நல்லவ மாதிரி தலையை ஆட்டினா..உன்கிட்ட இதைப்பத்தி பேசுறதா. பேசினாளா இல்லே,உன்ன அங்கேயே தங்கவைக்கும் முயற்சியா?”
அப்பாவின் கேள்விக்கு பதில் சொல்வதை தவிர்த்தவன் ,”நீங்க ஏன் எனக்கு தெரியாம அவங்க வீட்டுக்குப் போகணும்? சரி..போனீங்க. அதுக்குப்பிறகும் என்கிட்ட பேச வேண்டியதை நீங்க தானே பேசணும்? அதுக்கு சாரு என்ன மீடியேட்டர் ..அண்ட் இன்னிக்கு வரைக்கும் அவளுக்கு இதை பத்தி என்கிட்ட பேச தயக்கம்னு எனக்குத் தெரியும். அவளால இப்படி சென்னை போகலாம்னு என்கிட்ட சொல்ல முடியாது.நா இந்த சூழ்நிலையை எவ்வளவு வெறுக்கறேன்னு அவளுக்குத் தெரியும். .“
Advertisement
Advertisement
மகனது பேச்சில் கண்மணியும் அதிர்ந்துதான் போனாள் .அவள் மனதில் மகனுக்கு திருமணமும் ஆகி விட்டால் என்றுமே இங்கே மனது என தோன்றவே,அடுத்த ஆயுதம் எடுக்க தயாரானாள்.
“பாரு நரேன், உன்னோட ஆசை,காதல்னு சொல்லிட்டு வந்த பிறகும் எங்க விருப்பத்தை உன்மேலே திணிக்காம நீ லவ் பண்ற பொண்ணையே கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்கிட்டோம்.வேறே எதையும் யோசிக்காம முற்போக்கா யோசிக்கிறோம் .பட் ,நீயும் எங்களுக்காக இங்கே உன்னோட குடும்பத்தோட வந்து இருக்கத்தான் வேணும். அப்பா இங்கே ஆஃபீஸ் வச்சிருக்காரு. அதை பார்த்துக்க வேண்டிய பொறுப்பும், வளர்க்க வேண்டிய கடமையும் உனக்கு இருக்கு. உன்னை கல்யாணம் செஞ்சுக்கற பொண்ணுக்கும் இருக்கு. மனசுல வச்சிக்கோ. நீ இதுக்கு சம்மதிச்சா உன் கல்யாணத்தை நாங்க ஏற்பாடு செய்வோம் .இல்லேன்னா,சாருவோட அப்பவே இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாருன்னு எங்களுக்கு தெரியும்.அப்பாவோட இஷ்டம் இல்லாமே அந்த பொண்ணு உன்னோட வரவும் மாட்டா.” இதை சொல்லும் பொழுது நிச்சயம் கண்மணியின் குரலில் லேசான கர்வம்,மகன் நல்ல பெண்ணைத்தான் தெரிவு செய்துள்ளான் என்ற திருப்தி எட்டிப் பார்த்தது. இதை சாம்பசிவமும்,நரேனும் கவனிக்கத் தவறினாலும், திருமகள் கவனிக்கத் தவறவில்லை. அவள் புருவங்கள் லேசாக சுருங்க,முகம் ஒவ்வாமையில் கூம்பியது. சாருவுடன் பழகும் முன்னரே அவளை பிடிக்காது போனது.
Advertisement
அம்மாவின் பேச்சில் நிதர்சனம் தாக்க, மொட்டைமாடியில் தஞ்சம் புகுந்தான் நரேந்திரன்.அவன் பேசவேண்டும் என்று வந்த விஷயம் என்ன..நடப்பவை என்ன?இப்போதும் அவர்கள் பேசுவதில் மகன் மீதான பாசம் என்று எதுவும் இல்லை என்றுதான் அவன் நம்புகிறான்.
வெகுநேரம் தூங்காமல் இருந்தவன் ,மறுநாள் காலையிலேயே தந்து அறையிலிருந்து தயாராகி வந்தவன், கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யுங்க என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான். கண்மணியின் ‘காபி குடிச்சிட்டு கிளம்புடா‘ எனும் குரலை கேட்க அவன் அங்கே நிற்கவில்லை. அவன் கோவம் அவர்களுக்கும் புரிகிறது. வயது வேறு இருவருக்கும் ஆகவும் மகனது அருகாமை வெகுவாகத் தேவை படுகிறது. அவனை கொஞ்சிப் பழக்கம் இல்லை.மகனிடம் கெஞ்ச விருப்பம் இல்லை. அவனை இங்கே வரவழைக்க வேறு வழியும் தெரியவில்லை.
சாருவின் தயக்கம் ஏன் என்று புரிந்தவனுக்கு வருத்தமாக இருந்தது. அவளை சென்னைக்கு கூட்டிப்போய் குடும்பம் நடத்தவேண்டும் என்ற எண்ணமே அவனுக்குள் கஷ்டமாக இருந்தது.அவளது அம்மாவின் எதிர்பார்ப்பு நன்றாக அவனுக்கு தெரியும்.நேரே அலுவலகத்திற்குள் நுழைந்தவனுக்கு சாருவிடம் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. அவளை பார்த்தவன்,” அக்டோபர் கடைசி வாரம்,இல்லே நவம்பர் முதல் வாரம் நம்ம கல்யாணம் வச்சுக்கலாம்னு அப்பா சொல்றாரு.
இன்னும் மூணு மாசம்தான் இருக்கு. உன்கிட்ட ஏதோ கேட்டாராம். நீ ரெண்டு மாசமா எதுவும் சொல்லலையாம்.நிஜமாவே இன்னும் காதலிக்கிறீங்களான்னு கேட்டாரு.அவர் கேட்டதுக்கு நா ஓகே சொல்லிட்டேன். கல்யாணம் உனக்கு ஓகேய் தானே?”
அவனது கேள்வியில் விக்கித்துப் போனவள், ம்ம்ஹும்..எனக்கு சம்மதம் தான்.அப்பாகிட்ட பேச சொல்லுங்க..“என்றுவிட்டாள் .
“அப்போ சென்னைக்கு நிரந்தரமா வர உனக்கு இஷ்டமா சாரு ?”
அவனது கேள்வியில் புன்னகை செய்தவள், ” நிச்சயமா வரேன் நரேன். இங்கேந்து கார்ல போனா மாக்ஸிமம் பைவ் ஹௌர்ஸ். ஒண்ணும் பெரிய தூரம் இல்லே. நீங்க எங்க போனாலும் வருவேன்.உங்களுக்காக மட்டும். அண்ட் உங்க பேரன்ட்ஸ் பார்த்தா பயம் வரல. நல்ல விதமாதான் தெரியுறாங்க.நிச்சயம் உங்க விஷயத்துல நிறைய தப்புகள் செஞ்சிருக்காங்க. பட் அப்படியே விடவும் முடியாதுதானே!நாம கொஞ்ச வருஷம் அவங்களோட இருந்து ட்ரை பண்ணி பாப்போம்.சரியா வந்தா அப்படியே இருப்போம்.இல்லேன்னா வேற ஆப்ஷன் நம்மகிட்ட இருக்குதானே?”
சாரு சொல்வதில் மனம் முழுதும் தெளியவில்லை அவனுக்கு.ஆனாலும்,அவள் தன்னுடன் இருப்பதே மனதுள் சந்தோஷத்தை கொடுக்கும் என்று தீர்மானம் செய்தவன், “அப்பா உங்க வீட்டுல பேசறதா சொல்லியிருக்காரு நம்மோட கல்யாண பர்சைஸ் எல்லாம் இங்கேயே முடிக்கலாம். உனக்கு முகூர்த்த புடவை நா தான் எடுப்பேன்.என்னோட பேரன்ட்ஸ் இல்லே.“என்றான். அவன் பிடிவாதம் பிடித்தவளுக்கு அவனது வலி புரியாமல் இல்லை. வேறெதுவும் செய்ய முடியாது பெருமூச்சு அவளிடமிருந்து வெளிப்பட்டது.
மாலை சாகேத்திடம் தனது திருமண விஷயம் சொன்னவன்,தங்கைக்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதையும் தயங்கியவாறே சொல்லிவிட்டான். சாகேத்தின் முகத்தில் உணர்வுகள் துடைத்து வைக்கப்பட்டிருந்தது. அவன் மனதில் என்ன ஓடுகிறது என்று நரேந்திரனால் படிக்க முடியவில்லை. சாகேத் தனது லேப்டாப் சகிதம் வேலை செய்ய உட்கார்ந்து விட்டான்.
ராஜம் அன்று காலையில்தான் அழைத்திருந்தாள் .இந்த வார இறுதியில் பெண் பார்க்கவென வரமுடியுமா ..என்று . ஏற்கனவே,திருமணம் என்பதில் அதிக விருப்பம் இன்றி இருந்தவனுக்குள் திருமகளுக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது என்ற செய்தியும் அடி மனம் வரை சேர்ந்து தாக்கியதில் மௌனமாக அதை கடக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தான்.
ஜான்வியுடன் தான் திருமணம் என்பதுதான் விதியோ? நரேந்திரனுக்கு ஜான்வியின் விவரம் தெரிவித்திருந்தான் சாகேத். இப்போது..இப்போதென்ன?” நீ ஜான்வியோட கல்யாணம் செஞ்சுக்கிட்டு நல்லபடியா வாழ முயற்சி பண்ணுடா மாப்ள.எங்க திருவுக்கு உன்னோட கல்யாணம் செஞ்சுக்க கொடுப்பினை இல்லே. உங்க ரெண்டுபேரோட வழியும் வேறேன்னு ஆயாச்சு.இனி அதை பத்தி நினைக்காதே!என்ற நரேந்திரன் அறியாத காதல் வலியா ?
அந்த வார கடைசியில் ஜான்வியை பெங்களூரிலேயே சந்தித்து பேசிக்கொள்கிறேன் என்றுவிட்டான் சாகேத். ராஜத்திற்கு இதில் லேசான வருத்தம்தான். அதை வெளியே சொல்லவில்லை.மகன் இவ்வளவு தூரம் இறங்கி வந்தது பெரிய விஷயமாக ராஜத்திற்கு தோன்றியது. இந்தக் காலத்தில் நல்ல குடும்ப பின்னணியும்,படிப்பும் இருக்கும் பிள்ளைகளுக்கு கூட திருமணம் என்று வந்துவிட்டால் ஏமாற்றம்தான் அதிகம்.
ஆண்பிள்ளைகளின் எண்ணிக்கைக்கு பெண்கள் இல்லாததுவும் ஒரு காரணம். சாய்ஸ் அதிகமாகி விட்டது என்று மனதில் நினைத்துக்கொண்டாள் ராஜம். இந்த பெண் இவனுக்கு சம்மதம் சொல்லிவிட்டாள் சரி,மகன் அவளை பார்த்து பேசி, எதுவும் சொதப்பாமல் இருக்கவேண்டுமே! என்றெல்லாம் பிரார்த்தனைகள் ஓடியது.
அந்த வார ஞாயிற்று கிழமையில் மாலையில் ஜீவா கார்டனில் ஜான்வியும், சாகேத்தும் சந்தித்துப் பேசினார்கள். ஜான்வி நிறைய பேசினாள் .இவன் அமைதியாக அவள் பேசியதை கேட்டுக்கொண்டிருந்தான். அவள் மறந்தும் விநீதனுடன் தங்கியிருப்பதை சொல்லவில்லை.
ஆரம்பமே பொய்யில் அல்லது உண்மையை மறைப்பதில் ஆரம்பிக்கப்போகும் உறவு. இது வழி எங்கிலும் இப்படியே தொடருமானால் என்னவாகும் நிலைமை என்று நான் வெகுவாக யோசிக்கிறேன். நிறைய மர்மங்கள் கொண்டது வாழ்க்கை.மர்மங்கள் அவிழும்பொழுது உண்டாகும் அதிர்ச்சி?
ஜான்வி அங்கே அமர்ந்துகொண்டு ,அவன் எதிரேயே தனது அப்பாவிடம் தனது முடிவை சொல்லிவிட்டாள்.சாகித் தனது அப்பாவுக்கு போன் செய்து திருமணத்தில் தனது ஒப்புதலை சொல்ல தை மாதத்தில் திருமணம் வைக்கலாம் என்று இரு வீட்டாரும் சேர்ந்து முடிவு செய்தார்கள். திருவின் திருமணம் கூட தை மாதம் தானே!
ஜான்வி அன்றைக்குப் பிறகு அதிகமாக சாகேத்துக்கு அழைத்துப் பேசினாள் . இருவரும் நேரில் சந்திக்க அதிகம் உடன்பாடு காண்பிக்கவில்லை. வினீத் இவளது இந்த முடிவில் அதிகமாக ஆச்சர்யம் கொண்டான்.இவ்வளவு சீக்கிரம் எப்படி இந்தப் பெண் மாறினாள் என்று அவனுக்கு. அவள் தெளிவாகவே சொன்னாள் “நா அதிகமா விரும்பின ஆளு சாகேத்.அப்போ வேணாம்னு சொன்னான் தான் .இப்போ ஓகே சொல்லிட்டானே..அப்புறம் அவனை கல்யாணம் செஞ்சுக்க என்ன தடை?
அவள் சொல்வதில் விநீதனுக்கு உடன்பாடு இல்லைதான் .ஆனால் மறுத்து எதுவும் பேசவில்லை. அவனது சொந்த வீட்டுக்கு தனது பொருட்களை ஷிப்ட் செய்துக்கொண்டான். அலுவலகம் தவிர இருவரும் வேறெங்கும் சந்திக்கவில்லை. அவ்வுறவு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.(?)
திட்டமிட்டபடிக்கே நரேந்திரன் மல்லேஸ்வரத்தில் இருக்கும் கோவில் அர்ச்சகரிடம் நல்லநாள் குறித்துத் தரக் கேட்டு ,அந்த தினத்தில் சாருவை அழைத்து சென்று தனது சம்பள பணத்தில் சாருவுக்கு முகூர்த்தப் புடவை, தாலி ஐந்து சவரனில், கைகளுக்கு ஐந்து பவுனில் வளையல் என்று வாங்கினான். சாருவின் மனம் முழுவதும் சந்தோஷம்.
சாம்பசிவம் முகூர்த்தப் புடவை வாங்கவேண்டும் என்று சொன்னபொழுது, “எல்லாமே வாங்கியாச்சு .நா கல்யாணத்துக்கு ஒருநாள் முன்னாடி வரேன்.” என்று முடித்துவிட்டான். சாம்பசிவத்திற்கு முகத்தில் அறை வாங்கியது போன்ற உணர்வு. தோளுக்கு மேலே வளர்ந்துவிட்ட பிள்ளை. ஒன்றும் சொல்ல இயலவில்லை. சாம்பசிவம்-கண்மணி இருவருமாக மகனிடம் நெருக்கம் காண்பிக்க வேண்டிய சமயங்களில் அவனை விட்டார்கள். இப்போது யாரை சொல்ல முடியும்?
அவன் சென்னைக்கு வந்துவிடுவதாக சொன்னதே பெரியது .அதுவும் சாருவின் குண இயல்பால் தாம் என்பது புரிந்தவர்கள் மகனது செய்கைகளை விமர்சனம் செய்யவில்லை. தங்கள் சார்பாக இருவருக்கும் வைரத்தில் சிலவற்றை வாங்கினார்கள். இவற்றை பார்த்துக்கொண்டிருந்த திருமகளின் மனது சொல்லொணா வேதனைக் கொண்டது. அண்ணனுக்கு செய்வதில் அவளுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை.சாருவுக்கு செய்வதில் தான் அவளுக்கு பிரச்சனை. என்ன செய்வது..வாய் விட்டு எதையும் சொல்ல முடியாதே!
சாரு இன்னும் திருமணம் செய்துக்கொண்டு வரவில்லை. இன்னும் அங்கேதான் இருக்கிறாள்.அதற்கு முன்னாலேயே அப்பாவும் அம்மாவும் இவ்வளவு தூரம் அவளுக்காக பார்க்கும் பொழுது,இங்கேயே வந்துவிட்டால்..என்று எல்லாம் அவளது எண்ணம் பயணம் செய்தது.பல வருஷங்களாக நரேந்திரன் இங்கே வீட்டில் இல்லை. இப்போது என்ன இவையெல்லாம் என்று திருவுக்குள் புகைச்சல். அத்துடன் நரேந்திரன் காதல் எனும் பெயரில் சாருவை தாங்கும்பொழுது ,தனக்கு நிச்சயிக்கப் பட்ட மனிதர் இதுவரை என்னிடம் அதிகம் பேசியது கூட இல்லையே..என்றே யோசித்து ஏங்கினாள்.அவளது உணர்வுகள் வெகு கலவையாக இருந்தது.
தனது கல்யாணம் ஏன் இவ்வளவு தள்ளி வைக்கப்பட்டது என்று ஏங்கினாள்.அவளால் இங்கே ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது என்று அடம் பிடித்தது. ஆனால் அவள் செய்வதற்க்கு என்ன இருக்கிறது? ம்ஹும்..எவ்வளவோ இருக்கிறதுதான். ஏதாவது கோர்ஸ் சேர்ந்து அங்கே போனதும் வேலை கிடைக்க தகுதியை வளர்த்துக் கொண்டிருக்கலாம். கொஞ்சம் அழுத்தமாக கேட்டால் மறுக்கும் பெற்றோர் இல்லை அவளது அப்பாவும் அம்மாவும்.
அதை பற்றியெல்லாம் யோசிக்க கொஞ்சம் அறிவு வேண்டுமோ? எனக்கு அடிக்கடி தோன்றுவது,இவளிடம் என்ன சிறப்பு என்று சாகேத் இவளுக்காக உருகுகிறான் என்று. காதலுக்கு கண் மட்டுமல்ல, அறிவும் மட்டுதான் என்று எனக்கு நானே மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.
இனி, மூன்று திருமணங்களும்,அதன் தொடர்பான நிகழ்வுகளும் நம்மை அடுத்த கட்டத்தை நோக்கி மெதுவே அழைத்துச் செல்லும். நரேந்திரன் தனது திருமணத்திற்கு நான்கு நாட்கள் முன்னரே வந்துவிட்டான். ‘பந்தக்கால் நட வேண்டும் ,சடங்குகள் இருக்கிறது ‘என்று கண்மணி தெளிவாக சொல்லிவிட்டாள் . சந்தோஷமாகவே கிளம்பி வந்தான் நரேந்திரன். பெங்களூருவில் சாருவின் வீட்டிலும் திருமண ஏற்பாடுகள் களை கட்டியது .மெஹந்தி இட்டுக்கொள்ள சாரு அமர்ந்திருந்தாள்.அதை நரேந்திரன் சென்னையிலிருந்து வீடியோ காலில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். இதோ நாளை மாலை அவர்கள் சென்னை வந்துவிடுவார்கள்.
error: Content is protected !!