கள்வன் – 23
இதயனின் புன்முறுவல் மனதிற்கு இதமளிக்க, அந்த கதகதப்பை மனதில் உணர்ந்தபடியே இதழ்களுக்குள் ஏதோவொரு பாட்டை மெல்லசைப்புடன் முணுமுணுத்துக் கொண்டே கணினியில் தன் விழிகளை பதித்திருந்தாள் இனியா. பாரம் கூடியிருந்த மனது அந்த பாரத்தையே மறந்திருக்க, அவளை விசித்திரமாய் பார்த்துக் கொண்டிருந்த யுக்தா அவள் தோள் தட்டினாள்.
“என்ன இன்னைக்கு மேடம் ஒரு தினுசா இருக்கீங்க?”
மனம் அழுத்தமின்றி லேசாக இருக்க அந்த நேரம் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் இனியா தோள்களை குலுக்கிக் கொள்ள, யுக்தாவும் அமைதியாகி விட்டாள். ஓரிரு நிமிடங்கள் கழித்தே யுக்தாவின் அமைதி இனியாவை யோசனையில் ஆழ்த்த தாமதியாமல் அவள் புறம் திரும்பி,
“என்னடி ரெண்டு மூன்று நாளாக அமைதியாக இருக்க? என்னாச்சு?”
“ஆனாலும் இவ்வளவு சீக்கிரம் கேட்டிருக்க கூடாது பேபி…” அலட்சியம் தொனித்த அவள் ஒலியில் வருத்தமும் இணைந்தே வந்து விழுந்தது.
இனியா அதை இனம்கண்டாலும் புறந்தள்ளிவிட்டு கேள்விகளை அடுக்கி யுக்தாவை அவசரப் படுத்தினாள், “சும்மா விளையாடாத யுக்தா. என்னன்னு ஒழுங்கா சொல்லு… நான் இன்னும் டீபக் செய்து ரிப்போர்ட் வேற பண்ணனும். காலையில் போட்ட லீவால் நிறைய ஒர்க் பெண்டிங்கில் இருக்கு.”
“எல்லோருக்கும் ஒவ்வொரு அவசரம். நீ உன் வேலையைப் பாரு இனியா.”
மீண்டும் அவள் குரலில் வெளிப்பட்ட பேதத்தை முன்னது போல் புறந்தள்ள முடியவில்லை இனியாவால்.
“என்ன தான் பிரச்சனை உனக்கு? நல்லாத் தானே இருந்த? கல்யாண பெண்ணா ஆனந்தமா இந்த நேரத்தை செலவழிப்ப, என்னையெல்லாம் உன் கண்ணுக்கே தெரியாதுன்னு பார்த்தால் நீ வயலின் வாசிச்சிட்டு இருக்க?”
“என்னை தான் யார் கண்ணுக்கும் தெரியல பேபி.” என்று யுக்தா வருந்திக் கூற,
“சுத்தல்ல விடாம என்னனு சொல்லு யுக்தா. உன்னை யாரு இப்போ மறந்தானு நீ இப்படி முகத்தை பக்கத்து கட்டடத்திற்கு நீட்டி முழக்கி வச்சிருக்க?”
“காலையில நீ ஏன் ஆபிஸ்க்கு வரல பேபி?” இனியாவின் கேள்விக்கு பதில் அளியாமல் எதிர்கேள்வி கேட்டு தீர்க்கமாக அவளை பார்த்து வைத்தாள்.
“இது என்ன கேள்வி. நான் தான் அவர் விஷயமா அலைஞ்சிட்டு இருக்கேனு தெரியும்ல…” என்றவள் உடனே நாக்கை கடித்துக் கொண்டாள். அவள் தான் இரண்டு மூன்று நாட்களாக இதே யோசனையில் அவளிடம் சரியாக பேசவில்லையே.
தவறை உடனே முன்வந்து சரி செய்யும் விதமாய், “சாரிடி, நான் ஏதோ ஒரு யோசனையில் சொல்ல மறந்துட்டேன். டாக்டர் அஜய்கிட்ட தான் அவரை கூட்டிட்டு போய் காண்பித்து வந்தோம்டி. ரொம்ப திடமா இருந்தேன் எல்லாம் சரியாகிடும்னு. ஆனால் அஜய் நம்பிக்கையாக எதுவும் சொல்லவில்லை. மேற்படி என்ன செய்வதுனு புரியல,” என்று வருத்தத்துடன் மொழிந்து முடித்தாள்.
“நீ ஏன் இதெல்லாம் செய்கிறாய் பேபி?” திரும்பத் திரும்ப சொல்லும் கிளி போல மீண்டும் அதே கேள்வியை கடுப்புடன் முன்வைத்தாள் யுக்தா.
முன்னர் எப்படியோ, நேற்றிலிருந்து தான் மறைத்திருந்த திரை விலகி அவள் மனம் அவளுக்கே புரிந்துவிட்டதே… அதனால் மெய்யை மறைக்க விரும்பாது தைரியமாய், “எனக்கு அவரை பிடிச்சிருக்கு.”
“பிடிச்சிருக்குனா எப்படி?”
“எப்படின்னா? பிடிச்சிருக்கு அவ்வளவு தான்…”
[the_ad id=”6605″]
“இந்த காதல் எல்லாம் விட்டுட்டு வீட்டில் பார்க்குற மாப்பிளையை லவ் பண்ண கத்துகிட்டு ஒழுங்கா வாழுகிற வழியைப் பார் பேபி. க்ரஷ், பிடிச்சிருக்கு அப்படி இப்படினு சொல்லிக்கிட்டு வீணா மனசை கெடுத்துகிட்டு பின்னால் வருந்தாத இனியா.” தன் வருத்தத்தை மறந்து இனியா தவறான பாதையில் சென்றுவிடக் கூடாது என்ற அக்கறையில் கூற,
“பிடிச்சிருக்குனு தான் சொன்னேன். லவ் பண்றேனு சொன்னேனா?” என்று இனியா சட்டென்று கேட்க, ‘ஞே’ என்று விழித்தாள் யுக்தா.
“என்ன உளறல் இது? காதலிக்கல ஆனால் பிடிச்சிருக்குனா எதற்கு இதெல்லாம் செய்திட்டு இருக்க?” கண்டிப்புடன் யுக்தா கேள்வி எழுப்ப,
“கண்டவுடன் காதல் என்கிற கூற்றில் எனக்கு உடன்பாடு இல்லை தான். ஆனால் கண்டவுடன் ஏற்படும் ஒரு பிடித்தம், ஈர்ப்பு காதலாக மாற வாய்ப்பிருக்குனு இப்போ நம்புறேன். எனக்குள் இருக்கும் பிடித்தம் காதலாக இருக்குமா என்ற என்னுடைய தேடலுக்கான விடை அவரிடம் தான் இருக்கு. அதற்கு முதலில் அவர் குணமாகணும். என் கூட பழகணும், பேசணும்னு அப்படினு எக்கச்சக்க ஆசை இருக்கு. குழப்பம் இருந்தாலும் அவரை பிடிச்சிருக்கு அப்படீங்குற மெய்யில் எனக்கு எந்த குழப்பமும் இல்லை, நான் தெளிவா இருக்கேன்.” உணர்வுபூர்வமான உள்ளத்து எண்ணங்கள் உள்ளபடியே வார்த்தைகளாய் வர, அதை சற்றும் விரும்பவில்லை யுக்தா.
“காதல் வேறு வாழ்க்கை வேறு இனியா. நீ இரண்டிலுமே விளையாடிட்டு இருக்க. அதில் உன்னோட உள்ளத்தை வேறு மையமாக வைத்து தாயம் உருட்டுற மாதிரி உருட்ட தயாராக இருக்க. இதெல்லாம் என்றைக்குமே நல்லதில் சென்று முடிகிற மாதிரி தெரியல…” முன்னர் ஒருநாள் இன்பனுடன் இருக்கும் போது இனியாவை கொண்டு இதயனை சரி செய்துவிடலாம் என்று தோன்றிய சுயநல எண்ணம் அவனுடன் ஊடல் வந்தவுடன் பின்னுக்கு சென்று இனியாவின் வாழ்க்கையே முதன்மையாய் பட, அவளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு யுக்தா எடுத்துரைக்க அது அவளுக்கே எதிராய் திரும்பியது.
“நான் உன் காதலையோ உனக்கு காதல் வந்த முறையையோ என்றுமே விமர்சித்தது இல்லை யுக்தா.” திரும்பத் திரும்ப யுக்தா ஒரே செய்தியை வெவ்வேறு விதமாய் கூற, இனியாவின் மையல் கொண்ட மனது முரண்டியது.
மிக இயல்பாய் ஆரம்பித்த ஒரு உரையாடல் மெல்ல சூடு பிடிக்க, இனியாவின் ஒலியிலும் அந்த சூடு மெல்லப் பரவத் துவங்கியது. அந்த தீயை உணர்ந்து சூடுபட்டவளோ சட்டென்று அந்த அனலில் துள்ளிக் குதித்தாள்.
“என்னுடைய காதல் ஒன்றும் உன்னை மாதிரி பார்த்தவுடன் பரிமாறிக்கொண்ட சிறு முறுவலில் வந்ததில்லை இனியா. பல நாள் பார்த்து, குணத்தை படித்து பிடித்து வந்தது. அதையும் உன்னுடையதையும் முடிச்சிட்டு ஒப்பிடாதே.” என்று யுக்தா கறாராக கூற சுள்ளென்று ஏறியது அந்த அனல் களம்.
“நான் ஒப்பிடவில்லை. ஒப்பிடணும் என்கிற அவசியமும் எனக்கு இல்லை. நான் முன்னர் சொல்லியதுதான் எந்த உறவையும் ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு ஒன்றை முதன்மைபடுத்தி இன்னொன்றை தாழ்த்த முடியாது. எல்லோருக்கும் அவரவர் உறவுகள், நெஞ்சத்து நெகிழ்வுகள் உயர்வு தான். அதில் நானும் விதிவிலக்கல்ல. பெற்றவர்கள் பார்த்து செய்யும் திருமணத்தில் மிஞ்சிப்போனால் பத்து நிமிடம் மட்டுமே பார்த்து பிடித்து திருமணம் முடித்து மகிழ்ச்சியாய் வாழ்பவர்கள் பலர். அதே போலத் தான் இதுவும். இதற்கு மேல் நீ இதை பற்றி பேச வேண்டும் என்று நினைத்ததால்… லெட்ஸ் ஸ்டே அவே யுக்தா…” கோபத்தில் வார்த்தைகள் தடித்து உறவை சடுதியில் அறுக்க முயல, யுக்தா தன் வார்த்தைகளால் அறுத்தே விட்டாள்.
“ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது எழுந்து நடமாடி பேசகூட முடியவில்லை என்றாலும் எனக்கு நெருக்கமா இருந்தவர்களை எவ்வித அலட்டலுமின்றி அறுக்கும் அளவிற்கு செய்துவிட்டார்.” மொழியிலும், வதனத்திலும் கடினம் ஏறிக்கொள்ள பிரித்துணர இயலா வெறுப்பு ஒன்று இதயனின் மேல் வந்து ஒட்டிக்கொண்டது.
“அவர் என்ன செய்தார்? நீ அதிகமாக பேசியதற்கு அவரை குறை சொல்லாதே.” என்று வரிந்து கட்டிக்கொண்டு வந்தாள் இனியா.
“நான் உள்ளதை தான் சொல்கிறேன். உன்னுடனும் சரி இன்பனுடனும் சரி சச்சரவுகள் வர முழுக்காரணம் அவர் மட்டும் தான்.” இனியாவும், இன்பனும் இதயனை முன்னிறுத்தி அவனுக்கு முன்னுரிமை அளித்து தன்னை தள்ளி நிறுத்துவது போன்றதொரு மாயை அவளுள் புகுந்துகொள்ள அது ஆட்டுவித்த திசையில் வார்த்தைகளை வீசினாள் யுக்தா.
“உன்னோட தேவையற்ற கற்பனைக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது யுக்தா.”
“உன்னோட நலம் மட்டுமே பேணும் என்னை விட நேற்று பார்த்து பழகியிராத ஒருவர் முக்கியமாகி விட்டார், அப்படித்தானே?” மொழி சன்னமாய் ஒலிப்பினும் வார்த்தைகளில் இருந்த அழுத்தம் அவளின் வருத்தத்தை தூக்கிக் காட்டியது.
“என்னால் திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்க முடியாது யுக்தா. உனக்கான இடம் அதன் இடத்தில சரியாத்தான் இருக்கு. நீ தேவையில்லாமல் என் மேலும் இன்பன் மேலும் கோபப்பட்டு உன்னோட இடத்தை கெடுத்துக்காத அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும்.” என்று கறாராக சொல்லிவிட்டு இனியா தன் கணினி புறம் திரும்பிக்கொண்டாள்.
நலம் வேண்டிய நட்பு சடுதியில் விலகிவிட, இன்னுமே வெறுப்பு கூடியது யுக்தாவினுள். அவ்வப்போது அவள் அன்னை ஓதும் இதயன் வெறுப்பு பிரச்சாரமும் அவளை அசைத்துப் பார்க்கத் துவங்கியது. அதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாய் இப்போது இனியா நட்பையே முறித்துவிட, இன்பனும் அவளை பொருட்டாக மதிக்காமல் ஊடலை சரிசெய்ய எவ்வித முயற்சியும் எடுக்காமல் அண்ணன் அண்ணன் என்று இதயன் நலன் மட்டுமே வேண்டி, அவளை விட்டுவிட, அது திருமண சமயத்தில் கசப்பை கொடுத்தது.
தங்கள் வாழ்விற்கு அச்சாரமிடும் முன்னமே இதயனின் முக்கியத்துவத்தை விளக்கி இன்பன் சம்மதம் வாங்கியிருப்பினும், யுக்தாவும் அனைத்திற்கும் சம்மதித்து நிதர்சனம் உணர்ந்து இந்த உறவில் இணைந்திருப்பினும் கிடைக்குமா கிடைக்காதா என்றிருந்த காதல் கைக்கூடியதில் ஆசை அதிகரித்து அடுத்த கட்டத்தை எட்ட எதிர்பார்த்திருந்தது. அது நியாயமான ஆசை என்றாலும் சூழ்நிலை சதி செய்துவிட, இக்கட்டான நிலை உருவாகி மனம் தடம் புரள, கசப்பு மட்டுமே எஞ்சியிருந்தது.
சூழ்நிலைகள் மாற, எண்ணங்களும் மாறியிருந்தது.
[the_ad id=”6605″]
மறுபுறம் இது எதிலுமே நேரடியாக சம்மந்தப்படாமல் அவனின் இருப்போ, பங்களிப்போ இன்றி அவனை முன்னிறுத்தி, அவனின் நலனை முதன்மையாக்கி, உறவுகள் வெட்டுப்பட்டுவிட அது எதுவும் தெரியாமல் இனியாவின் இனிய நினைவுகளில் தொலைந்திருந்தான் அவளின் கள்வன்.
◆◆◆
“இனியா இங்க வந்து இந்த சப்பாத்தியை கல்லுல போட்டு எடுடி.” கீதாவின் ஏவல் கூடத்தை எட்ட, அது செவியில் விழுந்தாலும் கருத்தில் பதியவில்லை இனியாவிற்கு.
“ஏய் உன்னை தான் அம்மா கூப்பிடுறாங்க. போய் என்னனு கேளு.” ஏதோ
சிந்தனையில் இருப்பவளை எதிரே அலைபேசியில் விழியை பதித்திருந்த இனியன் உந்த, அதையும் காதில் வாங்காமல் தன் யோசனையில் ஆழ்ந்திருந்தாள் மங்கையவள்.
“இனியா…” கீதாவின் அதட்டல் அவளை நெருங்கினாலும் அது அவளை அசைக்கவில்லை.
“ஏய் இனியா… உன்னை தான்டி கூப்பிட்டிட்டு இருக்கேன். காது கேக்காத மாதிரி இருக்க?” கீதாவின் அரட்டலில் காரம் ஏற யோசனையில் மூழ்கியிருக்கும் இனியாவை குழப்பத்துடன் நோக்கினார் ரமேஷ்.
“பாப்பா அம்மா கூப்புடுறா பாரு…” ரமேஷ் ஒருபுறம் அவளை உலுக்க, பதறி நனவுலகம் வந்தவள் சுற்றிமுற்றி மூவரையும் பார்க்க, தந்தை மனதிலும், தம்பி உள்ளத்திலும் வெவ்வேறு சிந்தனைகள்.
அஜய்யை பார்க்கச் சென்றாளே அதனின் தாக்கமோ? அவன் ஏதும் சொல்லியிருப்பானோ? அதைத் தான் யோசிக்கிறாளா? நாம் கேட்போமா? வேண்டாம் அவளாகவே ஒரு முடிவெடுத்து நம்மிடம் வரட்டும், என்ற திசையில் ரமேஷின் உள்ளம் செல்ல, சில தினங்களாகவே அவளை நோட்டமிட்டுக் கொண்டிருக்கும் இனியனின் மனமோ ரமேஷின் சிந்தைக்கு நேரெதிராய் சென்று கொண்டிருந்தது.
“என்னடி திருட்டு முழி முழிக்கிற? நான் சப்பாத்தி தேய்க்கிறேன் நீ வந்து கல்லுல போட்டு எடு.” என்றுவிட்டு உள்ளே செல்ல முயல,
“போமா… என்னால முடியாது. இதோ இந்த தடியன் சும்மா பப்ஜி தான் விளையாடிட்டு இருக்கான் அவனை செய்யச் சொல்லு.” என்று இனியா சோம்பலுடன் கழன்று கொள்ள,
“ஏய்! அதெல்லாம் நான் ஏன் செய்யணும்? அதுதான் நீ இருக்கியே… நீ போய் செய்.” என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வந்தான் இனியன்.
அவனுக்கு சற்றும் குறையாது வெகுண்டெழுந்தவள், “ஏன்? ஏன்? நீ செஞ்சா என்ன? நான் தான் செய்யணும்னு சட்டம் எதுவும் இருக்கா என்ன? போடா… போய் பொறுப்பான புள்ளையா நாளைக்கு உன் வீட்டுக்காரிக்கு உதவி பண்ண என்னென்ன தெரிஞ்சிக்கணுமோ அதெல்லாம் கத்துக்கோ… நாளைக்கு அவ வந்து அம்மா அக்கானு ரெண்டு பெண்கள் இருந்தும் ஒன்னும் சொல்லிக் கொடுக்காம வளர்த்துட்டாங்கனு எங்களை குறை சொல்ற மாதிரி நடந்துக்காத…” என்றவள் விழி யதார்த்தமாக கீதாவின் மேல் விழ, அவரின் நெற்றிக்கண் திறப்பில் கப்பென்று வாயை மூடிக் கொண்டாள்.
“இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லைடி. உன் வீட்டுக்காரனுக்கு சமைச்சி போட நீ முதலில் கத்துக்கோ. அப்புறம் உன் தம்பி கதையை பார்த்துக்கலாம்.” என்ற கீதாவின் வார்த்தைகளில் இனியன் குஷியாகி இனியாவை பார்த்து நாக்கை துருத்த, “நீ ஒழுங்கு மரியாதையா இந்த பப்ஜியை மூட்டைகட்டி வச்சிட்டு லாப்ட் மேல சாமான் இருக்குற பெட்டியை எடுத்துக் கொடு. அதில் புது ஹாட்பாக்ஸ் இருக்கு, அது வேணும்.” என்று அவனுக்கும் குட்டு வைத்தார்.
“அம்மா… அதெல்லாம் அப்பா எடுத்துத் தருவார்… இப்போ பாதியில் இதை விட்டுட்டு வரமுடியாது.” என்று இனியன் விடாப்பிடியாய் சிணுங்கினான்.
“அப்பாக்கு இரத்த அழுத்தம் இருக்குடா… மேல ஏறி கனமான பொருளை தூக்குனா அழுத்தம் ஏறிடும். ஒழுங்கா போய் எடுத்துக் கொடு.” கீதாவை முந்திக்கொண்டு இனியா சொல்ல, மனதில் அவளை கருவிக்கொண்டே எழுந்தான் இனியன்.
“அவன் எழுந்துட்டான்… நீ இன்னும் அசையாம உட்கார்ந்திருக்க. ஒழுங்கா வா…” கீதா பிடிவாதமாய் இனியாவை அழைக்க, முகத்தை சுழித்த மகள் தந்தையை பாவமாய் பார்த்தாள்.
“இப்போ தானே பாப்பா வேலையிலிருந்து வந்தாள்… கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும். நீ என்ன செய்யணும்னு சொல்லு நான் செய்றேன்.” மகளை காப்பாற்ற தானே எழுந்து கொள்ள அவரையும் வைதார் கீதா.
“நாளைக்கு அவள் வீட்டுல போய் நீங்க தான் எல்லாம் செய்து கொடுக்க போறீங்களா? பேசாம உங்க வேலையை மட்டும் பாருங்க.” கணவரை அடக்கியவர் மகள் புறம் பார்வையை திருப்பி, “ஏய் இவ்வளவு நேரம் என்னென்ன காரணம் சொல்லி அவனை விரட்டிட்டு இருந்தியோ அது உனக்கும் பொருந்தும். அதனால இந்த பாசாங்கு செய்வதையெல்லாம் நிறுத்திவிட்டு ஒழுங்கா வந்து கொஞ்ச கொஞ்சமா வேலையெல்லாம் கத்துக்கோ…”
“போமா… அங்கே வந்து வேலை செய்தால் வியர்க்கும்.”
“நல்லா வியர்க்கும்… அம்மா அது வேணும், இது வேணும்னு கட்டளையிடும் போது எனக்கும் வியர்க்கும்னு தெரியலையா? ஆனாலும் உனக்கு வியர்க்குதுனு நாளைபின்னே எல்லோரையும் பட்டினி போட்டிருவ போலிருக்கு?…” கீதாவும் மல்லுக்கு நிற்க,
“ப்ச்… அந்த அளவு கொடுமைக்காரி இல்லை நான். என் மாமியார் எல்லாம் செய்திடுவாங்க…”
“ஆமா ஆமா இப்போவே உன்னை தாங்க உன் மாமியார் இங்க வீட்டு வாசலில் காத்திருக்காங்க பாரு… என் நேரத்தை முழுங்காம ஒழுங்கா வா…”
[the_ad id=”6605″]
“நீ ஒத்துக்கிட்டாலும் இல்லைனாலும் என் மாமியார் என்னை எப்படி தாங்குறாங்கனு மட்டும் பாரு…” என்று இனியா விளையாட்டாய் சொல்லிவிட்டு கீதாவுடன் அடுப்பறை செல்ல, அவளின் பதிலில் வீட்டு கொல்லைப்புறம் நோக்கி சென்றுகொண்டிருந்த இனியன் சட்டென்று நடையை நிறுத்தி அவளை யோசனையுடன் பார்த்துவிட்டு சென்றான்.
சிலபல திட்டுகளை வாங்கி, பல சப்பாத்திக்களை கருகவிட்டு ஒருவழியாய் இரவு உணவு தயாராகி மேசைக்கு வர, முதல் ஆளாய் உண்ண அமர்ந்தார் ரமேஷ்.
“இந்த தீஞ்ச சப்பாத்தியை சாப்பிட எவ்வளவு ஆர்வம்பா உனக்கு?” கேலி இழையோட இனியனும் அமர, வேண்டுமென்றே நிறைய இடத்தில் கருகிய சப்பாத்தியை இனியன் தட்டில் அடுக்கினாள் இனியா.
“உன் முகம் போலவே இருக்கு நீ செய்த சப்பாத்தியும்,” வாய் அடங்காமல் இனியன் வார்த்தைகள் விட்டு ஓரிரு கொட்டுகளை பரிசாக தமக்கையிடம் வாங்கிய பிறகே முகத்தை சுழித்துக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.
“நாளை பின்னே இவள கட்டிக்கொடுத்த பிறகு அவள் வீட்டை எட்டிப் பார்த்துட கூடாதுங்க… இவள் வேலை செய்யுற அழகுக்கு நம்மள காய்ச்சி எடுத்துருவாங்க,” விளையாட்டாய் சொல்வது ஒருநாள் உண்மையாகப் போவதை அறியாமல் அத்தாய் கேலியில் இறங்க, இனியன் சத்தமின்றி சிரித்தான்.
“அதெல்லாம் இல்லை… நம்ம பாப்பாவை வேலை செய்யவிடாமா எப்படி அவளோட புகுந்த வீட்டில் தாங்கப் போறாங்கன்னு பாரு…” ரமேஷ் ஒன்றை நினைத்து சொல்ல,
“அப்படி சொல்லுங்கப்பா… அவங்க தான் என்னை எதுவும் சொல்லிடுவாங்களா இல்லை நான் தான் கேட்டிட்டு இருந்திருவேனா? மேடம் சொல்றது தான் அங்க சட்டமாக இருக்கப் போகிறது.” என்று இல்லாத காலரை தூக்கிவிடாத குறையாய் இனியா தம்பட்டம் அடிக்க, இனியனின் கூர்பார்வை அவளை கிழித்துக் கொண்டிருந்தது.
“அப்பாவும் பெண்ணும் இல்லாத மாப்பிள்ளையும், மாமியாரை பத்தியும் பேசிட்டு இருக்கீங்க… கற்பனை கோட்டை கட்டாமல் சீக்கிரம் சாப்பிட்டு இடத்தை காலி செய்யுங்க… நான் எல்லாத்தையும் சுத்தம் செய்துவிட்டு தான் படுக்கணும்…” என்று கீதா உட்புக, அதன் பிறகு அமைதியாய் கடந்தது உணவு வேளை.
எல்லாம் முடிந்து உண்ட களைப்பில் இளைப்பாறும் நோக்குடன் இனியா மஞ்சத்தில் சாய, இறுகிய முகத்துடன் உள்ளே நுழைந்தான் இனியன்.
“தூங்காம இங்க என்னடா செய்திட்டு இருக்க?” அவனின் பாவனையில் துணுக்குற்று இனியா எழுந்தமர்ந்தாள்.
“நீ என்ன முடிவில் இருக்கேனு தெரிஞ்சிக்க வந்தேன்.” என்றான் சம்பந்தமில்லாது.
நெற்றியில் சிந்தனை ரேகைகள் பரவ அவனை நோக்கியவள், “என்னது?”
“எனக்கு எல்லாம் தெரியும்கா…”
*^*^*