“சரி சரி போதும். இதுவரைக்கும் போனது போகட்டும். இனி அடுத்து என்ன செய்யப் போறீங்கன்னு இனியன் கேட்டான், அந்த கேள்வி உங்க எல்லோருக்குமே இருக்கும்னு எனக்குத் தெரியும்.” என்றவன் குறிப்பாய் ரமேஷை அழுத்தமாய் பார்த்துவைத்தான்.
“ஆறுவருடம் எதுவுமே செய்யாமல் ஸ்டில்லா இருந்தது மட்டுமில்லாமல் அதற்கு முன்பும் எனக்கு பெரிதாக அனுபவம் கிடையாது. கொஞ்ச நாள் தான் வேலை செய்தேன் சோ உடனே மருத்துவம் பார்க்கவெல்லாம் போய்விட முடியாது. அதுவரை இங்கேயே ஏதாவது கல்லூரியில் முயற்சி செய்யலாம்னு இருக்கேன்.” என்க, இனியன் முந்திக்கொண்டு,
“குடும்பத்தில் இன்னொரு லெக்சரரா? நடக்கட்டும் நடக்கட்டும்.”
“ஏதோவொரு முறையில் இந்த துறையில் இருக்கணும்னு ஆசை. சொல்லப்போனால் நான் ஒருவன் மருத்துவனாய் இருப்பதைவிட பல மருத்துவர்களை உருவாக்குவதும் இந்த துறைக்கு நான் செய்யும் தொண்டு தான்…” என்று இதயன் தன் எண்ணத்தை பகிர்ந்துகொண்டு மாமனாரை தன்வசமாக்கிவிட்டான் என்றே சொல்ல வேண்டும்.
“நல்ல யோசனைடா… நான் அடுத்த முறை வரும்போதே உன்னுடைய சான்றிதழ் எல்லாம் எடுத்துட்டு வந்துறேன்.” இதயன் இயல்புநிலைக்கு திரும்புவது இன்பனுக்கு நெகிழ்வாய் இருக்க, அவனை தோளோடு அணைத்துக் கொண்டான் இதயன்.
“போதும் போதும் இன்னைக்கே எல்லாவற்றையும் பேசிடனும்னு நினைக்காம வேற வேலையைப் பாருங்க. நைட் சீக்கிரம் தூங்கணும்.” என்று சிவகாமி அனைவரையும் விரட்ட, இரவு சீக்கிரம் தூங்கச் சொன்னதற்கான காரணம் தம்பதியர்களுக்கு இரவு நெருங்கவும் தான் புரிந்தது.
“மிஸஸ் சீனியர் மேடம், இதில் நான் தான் சீனியர். நான் சொல்றதை அச்சுபிசகாமல் கேட்டுக்கணும். அப்புறம் நாளைக்கு காலையிலேயே என்னிடம் வந்து நைட் என்ன நடந்ததுன்னு அட்டன்ஸ் போட்டுடனும்.” என்று இனியாவை கேலி பேசிக் கொண்டே அவள் தலையில் பூ வைத்துவிட்டாள் யுக்தா.
“இதெல்லாம் எதுக்குடி இப்போ? இந்த வீடே சின்னது, இதில் தான் எல்லோரும் அட்ஜஸ்ட் செய்து தங்கணும். இப்படி நெருக்கடியா இருக்கும் போது இதெல்லாம் தேவையா?” என்று சிணுங்கினாள் இனியா.
“இதெல்லாம் பெரியவங்க பார்த்து முடிவு செய்தது பேபி. அதில் நாம தலையிட முடியாது. அதோடு நான் தான் இருக்கேனே நான் எல்லோருக்கும் ஸ்பேஸ் ஆர்கனைஸ் பண்ணி எல்லாத்தையும் பார்த்துக்குறேன். இது உனக்கான நாள், இதை என்ஜாய் பண்ணு.” என்று இனியாவுக்கு மிதமாய் ஒப்பனை செய்து அவளறைக்கு அனுப்பி வைத்தாள் யுக்தா.
பதட்டம் மேலெழும்ப இனியாவின் நெற்றியில் வியர்வை மொட்டுக்கள் அரும்பியது. இதுவரை ஒருவித அழுத்தத்தில் சென்றுகொண்டிருந்த திருமண வாழ்க்கை ஒருநிலைக்கு வந்து நிறைவு பெற காத்திருந்தது.
“கூல் இனியா,” அவளின் பதட்டம் தனிக்கவென மென்மையாய் அவள் கரம் பற்றி வருடினான் இதயன்.
“படபடப்பா இருக்கு,” என்று அவள் இதழ்கள் மெல்ல அசைந்தது.
“இன்னைக்கு தான் என்கூட முதல் முறை தங்குற மாதிரி இவ்வளவு ரெஸ்ட்லெஸ் ஆகுற?”
“எதுவும் தெரியாத மாதிரி கேட்காதீங்க.” என்று முறைத்தாள் அவள்.
“உன்னை கொஞ்சம் இயல்பாக்கலாம்னு பார்த்தேன். ஓகே லெட்ஸ் லீவ் திஸ்.” என்று கையை மேலே உயர்த்தியவன், முன்னறிவிப்பின்றி அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான். இறுகியதொரு பிணைப்பாய் அது மாற, இதுவரை உணராத காதலின் மறுபக்கத்தில் மெல்ல மூழ்கத் துவங்கினர்.
[the_ad id=”6605″]
“எந்த அயர்ச்சியும், அழுத்தமும் இல்லாமல் நிதானமா நம்மோட அன்பை உணரணும் என்று தானே இத்தனை நாள் காத்திருந்தோம்.” என்றவன் பிடிப்பு இன்னுமே இறுக, அவளது கரங்கள் தானாய் மேலுயர்ந்து அவனது முதுகை இறுக தழுவிக் கொண்டது.
“சில நேரம் இதெல்லாம் உண்மைதான் என்று நம்ப முடியல…” அன்பின் அணைப்பு அவள் அகத்தினை திறந்துவிட, ஆழ்மனதில் இருக்கும் ஆசைகளும் குழப்பங்களும் ஒவ்வொன்றாய் வெளிவரத் துவங்கியது.
“இது எல்லாமே மெய் தாண்டி என் காந்தக்கண்ணழகி.” என்று தணிந்த குரலில் செல்லம் கொஞ்சியவன் அணைப்பை மெல்ல தளர்த்தி அவள் கண்களிலேயே அந்நாளின் முதல் முத்தத்தை பதித்தான்.
அவன் பிணைப்பை தளர்த்தினாலும் அவனை விடாது தன் பிடியில் பிடித்திருந்தவள், “இந்த பாட்டை காப்பி அடிப்பது எல்லாம் பிராடுத்தனம்.” என்று சிணுங்கினாள்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. உன்னைப் பார்த்ததும் எனக்கு இதுதான் தோணுச்சு. இது தான் கருத்திலும் பதிந்துச்சு. நீ பேசும் போது உன் கண்ணும் பேசும், நீ சிரிக்கும் போது உன் கண்ணும் சிரிக்கும், இப்போது கூட உன் கண்ணு காதல் பேசுது என் காந்தக்கண்ணழகி.” என்று மீண்டுமொரு நெடிய ஈரமுத்ததை அவள் இருவிழிகளிலும் பதித்து அதில் வெளிப்படும் காந்தத்தில் ஈர்க்கப்பட்டு நாசியோடு நாசி உரச, அவனின் கன்னத்தை ஏந்தியவள் அவனை நிமிர்ந்து பார்த்து,
“உங்க கண்ணு தான் காந்தக்கண். எனக்குள் புகுந்து, என்னோடு கலந்து அப்படியே என்னை இழுத்துடுச்சு உங்க பக்கம். நீங்க பேசவில்லை என்றாலும் உங்க கண்ணு என்கிட்ட பேசிட்டே தான் இருந்தது, அதுதான் உங்களை சட்டென புரிஞ்சிக்கிட்டேன்.” என்று அவள் அகம் திறக்க, அவளை மேலும் பேச ஊக்குவித்தான் அவன்.
“நீ சொல்வதை எல்லாம் கேட்கும் போது எனக்கொரு பாட்டு தான் நியாபகம் வருது… அதை அப்புறம் பேசலாம்… எனக்கு சரியானதும் இதெல்லாம் செய்யணும்னு பெரிய லிஸ்டே வச்சிருக்கியே… அதெல்லாம் இப்போ ஒவ்வொன்றாக சொல்லு.”
இருவருக்கும் இயல்புநிலை திரும்ப அவளது ஆசையும் கணவன் மனைவிக்கான இயல்புநிலைக்கு இழுத்துச் சென்றது.
“பெரிய லிஸ்ட் எல்லாம் இல்லை… நீங்க எழுந்து வந்து நிமிர்ந்து நிற்கும் போது உங்க கண்ணோடு கண் பார்க்கணும், உங்க கை பிடித்து, தோள் சாய்ந்து நடக்கணும், நிறைய நிறைய பேசணும்…” என்று தன் விருப்பை உயர்த்திக்கொண்டே போக, அவளது தாடையை பிடித்து நேராய் நிறுத்தி அவள் இமைகளுக்குள் புக முனைய,
“பனைமரம் மாதிரி இப்படி வளர்ந்தா நான் எக்கி எக்கி தான் உங்களை பார்க்கணும்.” என்று அதற்கும் சிணுங்கினாள் அவள்.
அவளது சிணுங்கலை ரசித்தவன் அவள் இடையில் கரம்கோர்த்து அவளை மெல்லத் தூக்கி தன் பாதம் மீது நிறுத்தினான் இதயன்.
“நீங்க தூக்கப் போறீங்கனு நினைச்சேன்…” எதிர்பார்ப்பு எகிறியிருக்க அது நிறைவேறாத கடுப்பு இனியாவிடத்தில் …
“நீ என்ன சின்ன பாப்பாவா நினைச்ச உடனே டக்கு உன்னை தூக்குறதுக்கு?”
“என் அப்பாவுக்கு நான் பாப்பா தான்…” எங்கோ துவங்கி எங்கோ சென்றது அவர்களது பேச்சுக்கள்.
“அப்போ போய் அவர் மடியில உட்கார்ந்துக்க, அதுக்கு முன்ன… நான் தூக்குறதுக்கு ஒரு பாப்பாவை பெத்து குடுத்துட்டு போ…” என்று அவளை தள்ளிக்கொண்டு சென்றவன் மையலுடன் மெத்தையில் சரிய, அவளையும் தன்னுடனே சரித்துக்கொண்டு, அனுமதி வேண்டுபவனாய் அவளது கண்களைக் காண,
“நானா மாட்டேன் என்று சொல்லையே …” அவளது குரலும், கரங்களும் அவனைக் கட்டிப்போட, மையில் கொண்ட மனதை அணைப்போடவா முடியும்…
நீண்டதொரு காத்திருப்பிற்கு பின் இருமனங்களும் ஒன்றாகிட, ஈருடல் ஓருயிர் தூரத்தை குறைத்து, காதலை நீட்டிட, இதழ் இணைந்து சங்கமம் நிகழ்த்த களவாண்டவனும், களவாடப்பட்டவளும் தேன் குடித்த வண்டாய் இருவருக்குள்ளேயே ரீங்காரமிட்டு சுற்றிக்கொண்டிருக்க…
[the_ad id=”6605″]
மாதங்கள் சில இனிமையாய் சென்றது கேரளாவிலேயே… அந்த நாள் வரும் வரை…
“இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டீங்களா? ஒரு செம்ம ஹாப்பி நியூஸ்… இந்த ஆபீஸிலில் கஞ்சூஸ் மாதிரி லீவ் கேட்டால் கொடுக்கவே மாட்டாங்க. ஆனால் இப்போ அவங்களே வீட்டிலிருந்து வேலை செய்யுங்கன்னு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க… உங்களுக்கும் இனி லீவ் தான். நாம் ரெண்டுபேரும் வீட்டிலேயே நல்லா டைம் ஸ்பென்ட் செய்யலாம்.”
அன்று மாலை அலுவலகம் முடித்து அவள் வீடு வருவதற்கு முன்னரே தன் கல்லூரியிலிருந்து வந்திருந்தான் இதயன். அவனிடம் ஆவலாய் ஓடிவந்து தான் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சலுகையை பற்றி ஒப்பித்துக் கொண்டிருந்தாள் இனியா. அவளுக்கு நேர்மாறாய் ஏதோ யோசனையில் இருந்தான் இதயன்.
அதை கணித்தவள் அவனருகில் அமர்ந்து அவன் முழங்கையினுள் தன்னுடையதை கோர்த்துக்கொண்டு, “என்னாச்சு? ஏன் சோகமா இருக்கீங்க?”
“நான் ஒரு முடிவு செய்திருக்கேன் இனியா. இதுதான் சரியா வரும்னு நம்புறேன். நீ தான் எனக்கு துணையாக இருக்கணும்.” என்று பீடிகை வைத்து அவள் கரத்தை பற்றிக்கொண்டு இதயன் பேச, அவனது தீவிரத்தில் அவளது ஆவல் ஓடி, அவளிடத்திலும் தீவிரம் குடிகொண்டது.
“உனக்கு இது சாதாரண விடுப்பா தெரியுது ஆனால் எனக்கு பலருடைய கதறல் தான் கேட்குது. இது ஒரு இக்கட்டான சூழ்நிலை இனியா. நமக்கு இதெல்லாம் வராதுன்னு குருட்டுத்தனமாய் நம்பலாம் ஆனால் நிதர்சனம் வேற… இத்தனை நாள் பாடம் நடத்திட்டு இருந்துட்டேன், ஆனால் இப்போ நான் திரும்பவும் சிகிச்சை கொடுக்கும் மருத்துவனா மாற விரும்புறேன். இந்த கொரானா கிருமியிடமிருந்து மக்களை மீட்டெடுக்க மருத்துவனா என்னுடைய பங்கும் இருக்கணும்னு ஆசைப்படுறேன். நிறைய பேர் இந்த கிருமியிடம் மாட்டி தங்களின் உயிரை இழக்குறாங்க. அவங்களுக்கு என்னால முடிந்ததை செய்யணும்… என்னால பல உயிர் காப்பாற்றப்பட்டதா தான் இருக்கனும். அரசு மருத்துவமனையில் மருத்துவர் இடங்களை நிரப்புவதற்கான அவசர அறிவிப்பை வெளியிட்டு இருக்காங்க, அதில் அப்பளை செய்யணும் உன்னோட சம்மதத்துடன்…” என்று இதயன் தன் யோசனையை தெரிவிக்க, பீதியாகினாள் இனியா.
அவளும் செய்தித்தாளை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறாள். நாள்தோறும் பாதிப்போரும், இறப்போரும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மற்ற நாடுகளில் சூறாவளியாய் அடித்துக் கொண்டிருக்கும் இந்த கொரோனா புயல் தற்போது இந்தியாவிலும் வந்திறங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதற்கும் பூட்டு போட்டாகிவிட்டது. அந்த விடுப்பை கொண்டாட்டமாய் இதுவரை பார்த்திருக்க இப்போது இதயன் களப்பணிக்கு செல்கிறேன் என்று சொல்லவும் உலகம் எதிர்கொண்டிருக்கும் இன்னல் புரிந்தது.
“நீ பயப்படாத இனியா… நான் பாதுகாப்பா இருப்பேன். அதேபோல நீயும் பாதுகாப்பா இருக்கனும். நல்ல சத்துள்ள சரிவிகித ஆகாரம் எடுத்துக்கொண்டாலே அந்த கிருமியிடம் போராடும் வலிமை நமக்கு வந்துவிடும்.
புதிதாக நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. நம் முன்னோர்கள் சொல்லித்தந்த பழக்கங்களை தொடர்ந்தாலே போதும். வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டு வந்தால் முகம், கை கால் கழுவிவிட்டு தானே வீட்டிற்குள் நுழைவோம் அதைத்தான் இப்போ நாம செய்யணும். இந்த துரித உணவை எல்லாம் கொஞ்ச நாளிற்கு மூட்டை கட்டிவைத்துவிட்டு வீட்டிலே தயாரித்த உணவுகளில் எதிர்ப்புசக்தியை தூண்டும் காய்கறிகளை சேர்த்துக்கொண்டாலே போதும். நாம இங்கே மருத்துவமனையில் மூலிகை சூப் எல்லாம் குடித்தோமே அதே உணவை தொடர்ந்தாலே போதும்.” அவனும் அவள் பயப்படாத வகையில் சமாதானம் செய்ய முயல, அவனுக்கும் தெரிந்திருந்தது இனியாவுக்கு தன்னை அனுப்புவது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்காது என்பது… இப்போது தான் ஒரு கண்டத்தை தாண்டி வந்து இயல்பான வாழ்க்கையை வாழத் துவங்கியிருக்கின்றனர் அப்படியிருக்கும் போது உயிர்க்கொல்லி நோயை எதிர்த்து போராட முதல்நிலை ஊழியனாய் முன்னே நிற்கப் போகிறேன் என்று சொன்னால் அவளும் என்னதான் செய்வாள் பாவம்… ஆறே மாதங்கள் தான் ஆகிறது அவர்கள் திருமணம் முடிந்து… சேர்ந்து வாழத் துவங்கி மூன்றே மாதங்கள் தான் கடந்திருக்க, அவனுக்கும் இந்த நிலை சிரமமானதாகவே இருந்தது…
[the_ad id=”6605″]
“அஜய் போன்றோரின் எண்ணம் போல உயிரின் மதிப்பைவிட பணத்தின் மதிப்பு தான் பெரிது என்ற நினைப்பை முறியடித்து உயிர் தான் அனைத்தையும்விடப் பெரியது என்ற உண்மையை ஆணியடித்தாற்போல நிரூபிக்கும் தருணம் இது இனியா. ஒரு மருத்துவனா எந்நேரமா இருந்தாலும் ஆபத்தில் இருக்கும் உயிரை காப்பது தான் அவனுடைய வேலை, அந்த வேலையை நான் செய்ய உன்னுடைய ஆதரவு ரொம்ப முக்கியம்…” பொறுமை அவனிடத்தில் பறந்து கொண்டிருக்க, தீர்க்கமாய் அவனை பார்த்தவள்,
“ஒரு போர்வீரன் தன் நாட்டை, தன் நாட்டு மக்களை காக்க அவன் குடும்பத்தில் கெஞ்சிக் கொண்டிருந்தால் பல குடும்பங்கள் அழிந்துவிடும். இப்போ நீங்க செய்யுறது அதே மாதிரி தான் இருக்கு. உங்களால் பல உயிர்கள் காக்கப்படுத்துனா அதை தடுக்கும் அளவுக்கு சுயநலக்காரியல்ல நான்… ஆனால் உங்களுக்காக எப்போதும் காத்திட்டு இருப்பேன் நான்…”
“இந்த நோயாளியை திரும்பவும் மருத்துவனா மாற்றியது நீதான் இனியா… உனக்காக கண்டிப்பா நான் நலமுடன் திரும்ப வருவேன்…” என்று அவள் நெற்றியில் இதழ் பதிக்க…
கண்ணுக்கு தெரியாத கிருமியை எதிர்த்து போராடி அழிக்கும் பல களப்பணியாளர்களிள் அவனும் ஒருவனாய்… ஒரு மருத்துவனாய்… தன் மக்கள் காக்க… தன் உயிரை பணையம் வைத்து… தன் சுகத்தை உதறித்தள்ளி… பொதுநலனே தன்நலன் என வீரனடையிட்டு செல்பவர்கள் அனைவரும் போர் வீரனுக்கு சமமே…
*^*^*