Skip to content
Post Views: 5,903
“இங்க பாருங்கண்ணா நீங்க ரொம்ப வருஷமா வெளியூர்லயே இருந்துடீங்க அதனால உங்களுக்கு இதெல்லாம் பெருசா தெரியல இங்க அப்படிலாம் இருக்க முடியாது அவளுக்குச் சொல்லிப் புரியவைங்க”.
Advertisement
“அந்தப் பொம்பளையை தேடி போய்ப் பேச வேண்டிய அவசியம் என்ன நாங்க இங்கேயே இருக்குறவங்க நாங்க சொன்னா அதுல கரணம் இருக்கும்னு புரியவேண்டாம்மா, இன்னும் சின்னப் பிள்ளை இல்லையே பாப்பா நீ” என்றார் செல்வராஜ் சக்திப்ரியாவிடம்.
Advertisement
Advertisement
அவள் ஒன்றும் பேசாமல் விரல்களில் நகப்பூச்சுகளை ஆராய்ந்துகொண்டிருந்தாள் “அந்தப் பயல பாத்துருக்கீங்களா நெஞ்சை நிமுத்திகிட்டுதான் போவான் அப்பன் பேரே தெரியாது இதுல இவனுக்கு…” என்றவர் முடிக்கும்முன் “சித்தப்பா” என்று குரலை உயர்த்தியிருந்தாள் சக்திப்ரியா.
Advertisement
“ஒரு பிள்ளை அப்பா பேர் தெரியாம இருக்குன்னா அதுக்கு காரணம் அந்தப் பிள்ளை பிறக்கக் காரணமா இருந்த ஆணும் பொண்ணும் இங்க அவரோட அம்மாவும் பாதிக்கப்பட்டவங்க ஒரு பொண்ணுக்கு அநியாயம் நடந்திருக்கு அதை யாருமே பேசமாட்டறீங்க”.
“இப்படியொரு கேவலமான காரியத்தைச் செஞ்சிட்டு ஒளிஞ்சுட்டு இருக்குற அந்த ஈனப்பிறவியை விட்டுட்டு பாதிக்கப்பட்ட ஒரு தாயையும் அவங்க மகனையும் இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் இப்படி குத்திட்டே இருப்பீங்க பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் குடுக்குற உங்ககிட்ட இதை நான் எதிர்பார்க்கல”.
“உங்க மக அவங்க முன்னாடியே அவங்க முறை இல்லாம வந்தவங்க அப்படின்னு சொல்லுறா இந்த வார்த்தையை அவளுக்கு யார் பழக்கப்படுத்தினது இதைத்தான் அடுத்த தலைமுறைக்குக் கத்துக்குடுக்குறோமா சித்தப்பா” என்றவளுக்கு குரல் தடுமாறியது விழிகள் கலங்கி கைகள் நடுங்க அவள் நின்றிருந்த கோலம் பெற்றவர்கள் மனதை என்னமோ செய்தது.
இது பாதிக்கப்பட்டவர் என்று அந்தத் தாயின் மீது உள்ள பரிதாபமா இல்லை அவரின் மகனின் மீதா? மகளின் அருகில் சென்று அவள் தலை வருடினார் மகேந்திரன்.
“ரிலாக்ஸ்டாமா ஏன்… ஒன்னும் இல்ல” என்றவர் திரும்பி மனைவி பூர்ணிமாவை பார்க்க அவர் சென்று மகளுக்குக் குடிக்க சில்லென்று நீர் கொண்டுவந்தார் தந்தை நீட்டிய நீரை வாங்கி பருகியவள் “சாரிப்பா” என்றாள் மெல்ல.
“விடு” என்று மகேந்திரன் சொல்ல “சாரி சித்தப்பா” என்றாள் செல்வராஜிடமும்.
அவர் கொஞ்சம் அதிர்ச்சியில் தான் நின்றிருந்தார் சித்தி வனஜாவும் நிம்மியும் கூட இமைக்கவும் மறந்து நின்றனர்.
“பிரியாமா இட்ஸ் ஓகே” என்ற மகேந்திரன் “பாரு சொல்ல மறந்துட்டேன் கடைல லைட்டிங் ஒர்க் முடிஞ்சிடுச்சு நீ சொன்ன மாதிரியே வால் பெயின்டிங் மிரர் எல்லாமே செஞ்சாச்சு நாளைக்கு போய் நல்லா பாத்துடு உனக்குத் திருப்தின்னா ரெண்டு நாள்ல பொருள் எல்லாம் இறக்கிடலாம்”.
“கடை திறப்புக்கு இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்கு, அப்புறம் ஏஜென்சில இருந்து கூப்பிட்டிருந்தாங்க உனக்குப் பத்து பேரோட தகவல் அனுப்பியிருக்காங்களாம் நேர்ல கூப்பிட்டு என்ன டெஸ்ட் வைக்கணுமோ வெச்சு ஆள் செலக்ட் பண்ணிக்கோ இப்போ போய்த் தூங்கு ரொம்ப அலைச்சலாடா டயர்டா இருக்க” என்றார்.
“ஹ்ம்ம் எஸ்ப்பா” என்றவள் “குட் நைட்” என்று பொதுவாக அனைவருக்கும் சொல்லிக்கொண்டு நிம்மியை முறைத்துக்கொண்டு அவள் அறை நோக்கிச் சென்றாள்.
ஒரு பஞ்சாயத்து நடக்கும் என்று தெரியும் அதையெல்லாம் அவள் தந்தை மகேந்திரன் அசால்ட்டாகத் தூக்கி அடித்துவிடுவார் சித்தப்பாவின் மீது மிகுந்த கோபம்தான் நிம்மியின் மேலும் குறையாத கோபமே.
வந்ததும் வீட்டில் அனைத்தையும் சொல்ல வேண்டிய அவசியம் என்ன இத்தனையை சொன்னவள் தான் சிவபாலனை டாவடிப்பதாகச் சொன்னதை மட்டும் மறைத்துவிட்டாள், டாவடிப்பது நான் இவள் ஏன் பயப்படுகிறாள் என்று எண்ணிக்கொண்டு கட்டிலில் விழக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தாள் நிர்மலா.
“உனக்கு என்ன பைத்தியமா ஏன் இப்படி பண்ண அப்பா ரொம்ப கோபமா இருக்கார் அவங்களுக்கு ஏதாவது சந்தேகம் வரப்போவுது” என்றாள் நிம்மி.
“என்ன சந்தேகம்” என்றாள் சக்திப்ரியா எழுந்து அமர்ந்து.
“ஹ்ம்ம் அந்த அர்னால்டு கூடச் சேர்த்துவெச்சு” என்றாள்.
“சந்தேகமெல்லாம் வேண்டாம் கண்பார்ம் தான் ஐயாம் இன் லவ் …சிவபாலனை காதலிக்கிறேன் நிம்மி” என்றாள் ஆழ்ந்த குரலில்.
“பைத்தியம் பைத்தியம் உனக்கு முழு பைத்தியம் முத்தி போன பைத்தியம்” என்றாள் நிம்மி பல்லைக் கடித்துக்கொண்டு.
“ரொம்ப சந்தோசம் நீ கதவைச் சாத்திட்டு வெளில போ எனக்குத் தூங்கணும் நாளைக்கு நிறைய வேலை இருக்கு” என்றவள் அப்படியே கட்டிலில் விழுந்தாள்.
செல்வராஜின் முகம் கோபத்தில் சிவந்து கிடந்தது அண்ணன் மகளாகப் போய்விட்டாள் இல்லையென்றால் நடப்பதே வேறு, பூர்ணிமாவுக்கு கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது அவரிடம் மகள் அப்படி பேசியதில் என்றாலும் செல்வராஜ் பேசிய வார்த்தைகள் மிகவும் நாகரீகமற்றவை என்று தோன்றியது அவருக்கு.
மகள் பேசியது தவறென்றால் அவளைப் பேசவைத்த இவர் தானே முதலில் தவறுச் செய்தவர் என்று எண்ணிக்கொண்டார்.
“ஒக்காரு செல்வா” என்றார் மகேந்திரன்.
“நான் போறேண்ணா நான் தூக்கி வளத்த பிள்ளை என்னையவே எப்படி பேசுது” என்றார் குறையாத கோபத்தோடு.
“அதேதான் நானும் சொல்றேன் பிள்ளைங்க முன்னாடி என்ன பேச்சு பேசுற செல்வா நீ இன்னுமாடா இந்த மாதிரி விஷயங்களைப் பிடிச்சிக்கிட்டு தொங்குறீங்க, என் பொண்ணு கேட்டதுல என்ன தப்பு”.
“உண்மையிலேயே தப்பு செஞ்சவனை எவனாவது ஒரு வார்த்தை பேசுறீங்களா பாதிக்கப்பட்ட அந்த அம்மாவையும் பிள்ளையையும் எப்படி கேவலப்படுத்துறீங்க, இப்போ நானே சொல்றேன் இனிமே அவங்களை பத்தி இந்த மாதிரிப் பேச்சு வரக் கூடாது உன் வாயில” என்றார் மகேந்திரன் கண்டனமாக.
அண்ணனை முறைத்து பார்த்த செல்வராஜ் “கொஞ்சம் கவனி நம்மவிட்டு பிள்ளையை” என்று கூறிவிட்டு மனைவியோடும் மகளோடும் சென்றுவிட.
“என்னங்க இப்படி சொல்றாரு” என்றார் பூர்ணிமா கவலையோடு.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல நீ பாப்பாகிட்ட ஒன்னும் கேக்காத பாத்துக்கலாம்” என்றார் அவர்.
கட்டிலில் விழிமூடி கிடந்தவள் மனமெங்கும் அவன் மட்டுமே எதையும் வெளிக்காட்டா முகபாவனையோடு உடல் இறுக நிற்பவனின் தோற்றம் மட்டுமே, விழியோரம் நீர் கசிந்தது அவளுக்கு எத்தனை வருட மனப்புழுக்கம் எத்தனை அவமானம் உள்ளுக்குள் என்ன என்ன எண்ணங்கள் எல்லாம் சுமந்துகொண்டிருப்பான்.
அவனுடைய சுமையை இறக்கிவைக்க அவனுக்கென்று யாரும் இல்லாமல் போனார்களே, கேட்ட இவளுக்கே அதன் கணம் தாங்கவில்லையே அவன் எப்படி சுமக்கிறான், அவனை மடிசாய்த்துக்கொள்ள அவள் உள்ளம் துடித்தது உனக்கு நான் இருக்கிறேன் என்று அவனைத் தன்னோடு புதைத்துக்கொள்ள ஏங்கியது இதயம்.
ரங்கசாமி உறங்கியிருக்க கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த அன்புக்கரசிக்கு மகனின் நினைவே கூடவே “சிவாவோட சக்தி” என்றவள் குரல் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது, பழைய நினைவுகள் வேறு மனதில் அலை அடித்தது.
பவுனுத்தாயி துரைசாமி தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவர் மேகலா பத்து வருடம் கடந்து பிறந்தான் ஒரே மகன் சுந்தரேசன், மகன் பிறந்த மருவருடமே துரைசாமி காலமாகிவிட்டார் இருக்கும் சொத்துக்களை காப்பாற்றவே பெரும் பாடுபட்டார் பவுனுத்தாயி.
மேகலாவுக்கு பதினேழு வயதானபோது சொந்தத்திலேயே கொஞ்சம் வசதி குறைவான ரங்கசாமியை வீட்டோடு மாப்பிள்ளையாக மாற்றிக்கொண்டார், பெரிதாக நிர்வாகம் எல்லாம் ரங்கசாமிக்கும் தெரியவில்லை தனக்கு தெரிந்தவரைப் பார்த்துக்கொண்டார்.
ரங்கசாமி மேகலா தம்பதியருக்கு முதலில் கவிதாவும் அதே பத்து வருடங்கள் கடந்து கதிரேசனும் பிறந்தனர், அப்பொழுதே பவுனுதாயை பயம் பிடித்து ஆட்டியது தனக்கு நடந்ததே மகளுக்கும் நடக்கிறது வாழ்வும் தன்னைப் போல ஆகிவிடுமா என்ற கலக்கம் சூழ ஜோசியம் பார்த்துப் பூஜை பரிகாரம் வேண்டுதல் என்று நடத்தினார்.
என்றாலும் ஏதோ சாபம் போல அந்த வீட்டில் மரணங்கள் நிகழ்ந்தது தன்னுடைய வாழ்வுதான் பாதியிலே முடிந்துவிட்டது மகளாவது கண்ணுக்கு நிறைவாக வாழ வேண்டும் என்று நித்தமும் பவுனுத்தாயி வேண்டிநிற்க இந்த முறை மருமகனை விட்டு விட்டு அவரின் மகளைக் காலம் எடுத்துக்கொண்டது.
தளர்ந்து போனார் பவுத்தாயி மனைவியைப் பறிகொடுத்த ரங்கசாமியும் எதிலும் நாட்டம் இல்லாமல் ஒடுங்கிவிட பொறுப்புகள் சுந்தரேசனின் வசம் சென்றது வெறும் பதினெட்டு வயது அவருக்கு அப்பொழுது அவர்கள் தொழிலும் வாழ்வும் சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது அனைத்தையும் காப்பாற்ற சுந்தரேசன் போராடிக்கொண்டிருந்தார்.
கடன் வாங்கி சரிக்கட்டினாலும் வட்டிக்கே முக்கால் வாசி பணம் செலவானது அனைத்தையும் விற்றுவிட்டு கடனை அடைத்துவிட்டு ஏதாவது மீதமானால் அதில் சிறிதாகக் கடை போட்டு அமர்ந்துவிடலாமா என்றெல்லாம் கூட யோசித்து பார்த்தாயிற்று.
ஒரு வழியும் புலப்படவில்லை அப்படி இருக்கையில்தான் ஒரத்தநாட்டில் இருக்கும் நண்பன் ஒருவன் ஒரு விஷயம் சொன்னான், செங்கமலம் பாட்டி அவர் பேத்தி அன்புக்கரசிக்கு மாப்பிளை பார்ப்பதாக.
error: Content is protected !!