“அக்கா உங்களை மாமா கூப்பிடுறாங்க..” பிரேமா வந்து மல்லிகாவிடம் கூற,
“என்னவாம் அந்த மனுசனுக்கு? அதான் இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணம் நடக்க போகுது இல்ல? இவ்வளவு நாள் பேசாதவருக்கு இப்ப என்ன வேணுமாம்?” என்று மல்லிகா கேட்க,
“பழசை எல்லாம் விடுங்க க்கா.. நீங்க சொல்ற மாதிரி கல்யாணமே முடிய போகுது.. இனி பேசாம இருந்து மட்டும் என்ன பண்ண? போய் என்னனு கேட்டுட்டு வாங்க” என்றார் பிரேமா.
“அதானே? நினைச்சதை சாதிச்சுட்டாரே!” என்ற மல்லிகாவிற்கு கணவன் மேல் அவ்வளவு கோபம் இருந்தது.
“சரி அப்ப ஐயர்கிட்ட நில்லு.. அவர் கேட்குறதை எடுத்து குடு.. நான் வந்துடுறேன்” என்றார்.
“அதுக்கு நான் சூர்யா இல்லைனா நிவியை பார்க்க சொல்லிடுறேன்.. மேல இருக்காங்க மாமா..நீங்க போங்க” என்றார் பிரேமா.
“ஏன்? நீ பக்கத்துல நின்னு பார்க்க மாட்டியா?” என்றவர் பின்,
“அடுத்தவங்க என்னவும் நினைச்சிட்டு போகட்டும்.. எனக்கு அப்புறம் இந்த வீட்டுல நீ தான் என்னைக்கும்.. போ! போய் அவர்கிட்ட என்ன வேணும்னு கேட்டு பார்த்துக்கோ” என்று கூறி செல்ல, அப்போதும் தயங்கிய பிரேமா நிவியை அழைத்து நிற்க வைத்தார்.
“சொல்லுங்க!” என்று மல்லிகா கேட்க,
“என்னத்த சொல்ல? எங்க அவனை? எப்பவும் தேடிகிட்டே இருக்கணுமா நான்? மண்டபத்துக்கு வந்த அப்புறம் மாப்பிள்ளை வெளில போக கூடாதுன்னு உனக்கு தெரியாது?” பால நாதன் கேட்கவும் அமைதியாய் என்றாலும் ஆழ்ந்த பார்வையால் அவரைப் பார்த்தபடி நின்றார் மல்லிகா.
“அவன் என் புள்ள! சொன்னா சொன்னதை செய்வான்.. பயந்து ஓடுறவன் இல்ல.. அடுத்தவங்க விருப்பதுக்காக அவன் அவன் வாழ்க்கையையே கொடுக்க போறான்.. ஒரு ரெண்டு மணி நேரம் வெளில போறதுல என்ன வந்துட போகுது? அப்படி ஒன்னும் நீங்க அவனை தேட வேண்டாம்” என்று நேராய் கணவன் முகத்தை பார்த்து கூற, இதை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை பால நாதன்.
“மல்லிகா! என்ன பேசுற நீ?” எதிர்த்து பேசியதும் இல்லாமல் நான் பேசியதில் என்ன தவறு என்பதை போல மல்லிகா நிற்கவும் பால நாதன் கோபம் கொள்ள,
“என்ன பேசுறேன்? எதுவும் பேசலையே.. நிறைய பேச இருக்கு.. இந்த கல்யாணம் எதுக்கு? என் மகனை நீங்க என்ன பண்ணுறீங்க? இப்படி நிறைய இருக்கு பேச, கேட்கனு.. நான் எதுவும் கேட்கலையே!” என்று கூறவும் பால நாதன் திடுக்கிட்டார்.
“இப்பவும் நான் எதுவும் பேசுறதா இல்ல.. என் மகன் வாழ்க்கை அந்த ஆண்டவனை நம்பி தான் இங்கே வரை வந்திருக்கு.. அதை பத்தி இனி என்ன பேச நான்..” என்றவர்,
“ஆனா நாம இந்த வயசுக்கு அப்புறம் அனுபவிக்க நிறைய இருக்கு.. அதை எல்லாம் அனுபவிச்சு தானே ஆகணும்? உங்களை கட்டிக்கிட்ட பாவத்துக்கு.. என் புள்ளைக்கு பண்ணின பாவத்துக்குன்னு நானும் அனுபவிச்சு தானே ஆகணும” என்ற மல்லிகாவின் குரல் மெதுவாய் என்றாலும் கரகரத்து வர,
‘இவளுக்கு என்ன தெரியும்? தெரிந்து விட்டதா? தெரிந்து பேசுகிறாளா இல்லை தெரியாமல் புலம்புகிறாளா?’ என தனக்குள் நினைத்தபடி மல்லிகாவிற்கு எதிரே நின்றார் பால நாதன்.
“பெரிம்மா!” என்று சூர்யா வர, கண்ணீரை உள்ளிழுத்து தன்னை சமன்செய்தார் மல்லிகா.
அப்போதுமே மனைவிக்கு தெரிந்து விட்டதோ என்ற பயம் எல்லாம் இல்லை.. பார்த்து கொள்ளலாம் என்ற எண்ணம் தான்.
“அஞ்சலி! இங்க பாரு.. என் பொறுமையை ரொம்ப சோதிக்குற.. இந்த ஆளு கூட சேர்ந்து உன் மேல நீயே மண்ணை அள்ளி போட்டுக்காத.
நீ யோசிக்குற.. திருந்திருவன்னு நினச்சேன்.. இவ்வளவு கேவலமா உன் புத்தி போகும்னு தெரிஞ்சிருந்தா உன்ன எல்லாம் பொறக்கும் போதே கொன்னுருப்பேன்”
தன் கோபத்தை எல்லாம் வார்த்தைகளில் கொட்டிக் கொண்டு காஞ்சனா நிற்க, எதற்கும் செவி சாய்க்காமல் மணமகள் அறையில் அமர்ந்திருந்த அஞ்சலி இன்னும் மனப்பெண்ணாய் தயாராகாமல் அமர்ந்திருந்தாள்.
அதே அறையில் ஒரு ஓரமாய் நின்றிருந்தார் குணசீலன்.. கதவை உள்ளே தாழ்பாளிட்டுக் கொண்டு மகளிடம் கெஞ்ச ஆரம்பித்த காஞ்சனா சில நிமிடங்களிலேயே கோபமாய் பேசியும் பார்த்துவிட்டார்.
“எனக்கு என் லைஃப் முக்கியம்.. நீங்க என்ன வேணா சொல்லிக்கோங்க.. என்னால ஜெய்யை கல்யாணம் பண்ணிக்க முடியாது..” சொன்னதையே அவள் சொல்லிக் கொண்டு இருக்க,
“அறைஞ்சு பல்லை கழட்டிடுவேன்.. என்ன டி சொல்லிட்டு இருக்க.. நீ வேணும்னதும் நாங்க போய் பேசணும்.. வேண்டாம்னதும் சரினு தலையாட்டணுமா? வெளில போய் பாரு..ஊரே திரண்டுருக்கு.. மாப்பிள்ளை ரெடியாகியாச்சு.. இப்போ சொல்ற.. நேத்து வரை உனக்கு நேரம் இருந்துதே டி” என்ற காஞ்சனா,
“அப்ப சொல்லி இருந்தா கூட உனக்கு குடுத்து வச்சது அவ்வளவு தான்னு ஜெய் வாழ்க்கை நல்லாருக்கட்டும் அவங்க வீட்டுல இருக்கவங்க கால்ல விழுந்தாச்சும் நிப்பாட்டி இருப்பேனே!” என்று அழ,
“அதனால தான் மா நான் சொல்லல” என்றாள் நிதானமாய் அஞ்சலி.
“அப்படி என்ன டி ஜெய் பண்ணிட்டான்.. உன் அப்பா பண்ணின தப்பை சொல்லி காட்டினது அவ்வளவு பெரிய குத்தமா? மனமேடை வந்த பின்னால பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டுன்னா அந்த பையனை தான் டி எல்லாரும் குறை சொல்லுவாங்க” என அழுத்தவர்,
“அது தானே உனக்கு வேணும்? அதுக்காக தானே அவனை இங்க வர கொண்டு வந்திருக்க?” என ஆத்திரமாய் கேட்க, குணசீலன் வாயே திறக்கவில்லை.
“நீயெல்லாம் ஒரு பொண்ணு.. உன்னை போய் பெத்தேன் பாரு!” என்று கதற,
“நீங்க அழுது எதுவும் ஆக போறது இல்லை ம்மா!” என்று சத்தமாய் கூறிய அஞ்சலி,
“நீங்களா நினைக்குறதுக்கு எல்லாம் நான் பொறுப்பாக முடியாது.. அந்த ஜெய் எப்படி போனா எனக்கு என்ன? அழகா இருந்தான்.. அவனை புடிச்சிருந்தது.. கல்யாணம் பண்ணிக்கணும் நினைச்சேன்.. எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்குற ஆசை தானே?” என்று கூற,
‘இவள் நான் பெற்ற பெண்ணா?’ எனும் ஆதங்கம் மேலோங்கியது காஞ்சனாவிற்கு.
“ஆனா அவன் கேரக்டர் எனக்கு ஒத்து வராதுன்னு இப்ப தானே தெரியுது? நான் என்ன செய்வேன்?” என்றவள்,
“நான் மண்டபத்துல வந்த பின்னாடி இதை சொல்றது ஜெய்யை பழி வாங்க ஒன்னும் இல்ல..” என்று கூறவும் காஞ்சனாவோடு குணசீலனும் அவளைப் பார்க்க,
“என்ன டி சொன்ன?” என்ற காஞ்சனா எழுந்து வந்த வேகத்தில் அஞ்சலி சுதாரிக்கும் முன் மாற்றி மாற்றி இரண்டு கன்னத்திலும் அறைய, இரண்டு அடிகளுக்குள் ஓடி வந்து தடுத்து விட்டார் குணசீலன்.
“என்ன டி பண்ணுற? அறிவில்ல உனக்கு? உன்னை எல்லாம்..” என காஞ்சனாவை அடிக்க குணசீலன் கை ஓங்கி இருந்தவர் காஞ்சனாவின் பார்வையில் அப்படியே நின்றுவிட்டார்.
“அப்பாவும் மகளும் பண்ற இந்த அசிங்கத்தை எல்லாம் பாக்குறதுக்கு நான் செத்து போகலாம்.. அடிங்க.. அடிச்சு கொல்லுங்க” என்று அவர் கத்த, கதவை யாரோ தட்டும் சத்தம்.
அஞ்சலியும் கன்னத்தில் கைவைத்த வண்ணம் நிற்க, காஞ்சனாவிற்கு மனதெல்லாம் அடித்துக் கொண்டது.
குணசீலன் கதவை கொஞ்சமாய் திறந்த போது அங்கே நிவி நின்றிருந்தாள்.
“மாமா! அம்மா பூ குடுத்து விட்டாங்க அண்ணிக்கு” என்று சிரித்த முகமாய் கூற,
“சரி குடு மா!” என்றதும்,
“இல்ல! இவங்க.. அண்ணிக்கு மேக்கப் போட வந்தவங்க.. ரொம்ப நேரமா வெளில நிக்கிறாங்க போல.. அதான் அம்மா அண்ணி கிளம்பியாச்சான்னு பார்த்துட்டு வர சொன்னாங்க.. இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்குதாம்” என்றாள் நிவி.
“ஒரு அஞ்சு நிமிஷம்! நான் என் பொண்ணுகிட்ட பேசிட்டு வந்துடறேன்.. அடுத்து அவங்க வேலையைப் பார்க்கட்டும்” என்ற குணசீலன் தடுமாறி பேசியவர், கதவையும் முழுதாய் திறக்காமல் இருக்க,
“ஓஹ்! சரி மாமா!” என்ற நிவி பார்லரில் இருந்து வந்திருந்தவர்களிடம் கூறிவிட்டு அஞ்சலி இருந்த அறையை திரும்பிப் பார்த்தபடி தன் அன்னையிடம் சென்றாள்.
அன்று ஜெய் வந்து கோபமாய் பேசிவிட்டு சென்ற பின் அஞ்சலி வீட்டுப் பக்கம் அவன் செல்லவே இல்லை.
சுதந்திரம் என்ற வார்த்தைக்கு அஞ்சலி அவளுக்கென்று சில எண்ணங்கள் கொடுத்து அதற்கு வடிவமாய் உருவம் கொடுக்க நினைத்தவளுக்கு ஜெய் அழகனாய் தெரிந்தவன் அவன் செயல்கள் சுத்தமாய் பிடிக்காமல் போனது.
அது அவன் தவறு அல்ல.. அஞ்சலியும் அஞ்சலி தந்தையும் நடந்து கொள்ளும் விதம் என்று எடுத்து கூற தான் யாரும் இல்லை. அப்படி கூறிய காஞ்சனாவை அவள் கண்டு கொள்ளவும் இல்லை.
யோசித்து பர்த்தவளுக்கு இந்த திருமணத்தை நிறுத்தி விடுவதே சரி என்று தோன்ற,
கூடவே இரண்டு நாட்களில் பத்திரிக்கை வைக்க வந்த சூர்யா அஞ்சலி அன்னையிடம் சிரித்து பேசி என இலகுவாய் அந்த வீட்டில் அமர்ந்திருந்ததைக் கண்டவளுக்கு தான் அந்த எண்ணம் தோன்றியது.
அன்று ஜெய் அஞ்சலியுடன் காரில் வரும் பொழுதும் நண்பர்களுடன் போனில் அவன் விளையாட்டாய் பேசியது என நினைத்து மொத்தமாய் கணக்கிட்டவள் அன்னை தந்தை என யாரிடமும் எதுவும் கூறவில்லை.
ஜெய் தன்னிடம் மட்டும் தான் இப்படி நடந்து கொள்கிறான் என்றோ தனக்கு மட்டும் பிடித்தால் போதும் என்று நினைத்தது தவறு என்றோ அவள் உணர்ந்தந்திருந்தால் அவள் தன் முடிவுகளை எளிதாய் மாற்றி இருக்க முடியும்.. ஜெய் ஒருவனுக்காக மாறி இருக்கவும் முடியும்.
அவள் எண்ணம் முழுதும் தான், தனக்கு என்றே இருக்க, தனக்கு வேண்டிய சுதந்திரம், தனக்கு வேண்டியது தன் கணவனாய் வெளியில் அறிமுகப்படுத்தும் அவன் அழகானவன் என்பதை மட்டுமே அவள் எண்ணி இருக்க, தன் வாழ்க்கையை நினைக்க மறந்து போனாள்.
மண்டபத்தில் வைத்து பேசிக் கொள்ளலாம் என எளிதாய் எண்ணி விட்டாள்.. அதனால் ஏற்படப்போகும் எந்த ஒரு விபரீதமும் எனக்கு பெரிதல்ல என்ற எண்ணம் அவளை இன்னும் எங்கே கொண்டு செல்லும் என்ற தெளிவு இல்லாமல் இருப்பவளை காலம் எவ்வாறு தான் தண்டிக்க உள்ளதோ!.
“உன்னால ஜெய்யை கல்யாணம் பண்ணிக்க முடியுமா முடியாதா?” என்று காஞ்சனா முடிவாய் கேட்க,
நிவி சென்று அன்னையிடம் நடந்ததை கூற, சில நிமிடங்கள் பொறுத்து பிரேமாவுடன் மல்லிகாவும் அடுத்த ஐந்து நிமிடத்தில் அஞ்சலி அறை வாசலில் நின்றனர் இன்னும் குணசீலன் வெளிவராத காரணத்தில்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் “எனக்கு சம்மதம்!” என்று கூறிய சூர்யா அருகில் சென்று “லூசா டா நீ? ” என நின்றிருந்தான் ஜெய்..