“நேரம் போயிட்டே இருக்கு.. இந்த பொண்ணு இன்னும் அலங்காரம் பண்ணாம என்ன பண்ணிட்டு இருக்கு?” பிரேமா கேட்க,
“நீ வா! போய் சொல்லிட்டு வந்துடலாம்” என்று பிரேமாவும் மல்லிகாவும் அஞ்சலி இருந்த அறைக்கு வரும் பொழுது அஞ்சலியின் நண்பர்கள் கூட வெளியே தான் நின்றிருந்தனர்.
“எதும் பிரச்சனையா இருக்குமோ பிரேமா?” மனதில் தோன்றியதை மல்லிகா கேட்க,
“அதெல்லாம் ஒன்னும் இருக்காது க்கா!” என்று கதவை தட்டினார் பிரேமா.
குணசீலனுக்கு மகள் சொல்வதை ஏற்று கொள்ள முடியவில்லை. மகளுக்காக என்றாலுமே தன்னால் போய் உன் தம்பி மகனுக்கு என்று பால நாதனிடம் எப்படி கேட்க? அதுவும் மிரட்டி தான் இவ்வளவு தூரம் கொண்டு வந்துருக்கிறோம்.. ” என்ற பல எண்ணத்தில் அவர் அசையாமல் நிற்க,
இனி எதுவானாலும் சரி! மகளால் இவ்வளவு தூரம் வந்த பின் இனி என்ன இருக்கிறது மரியாதை எதிர்பார்க்க? என்று நினைத்த காஞ்சனா கண்ணீரை துடைத்துக் கொண்டு கதவை திறக்க, கண்ணீரை சுமந்து நின்ற விழிகளுடன் அழுது வீங்கிய கண்களைக் கண்டதும் பட்டென்று நெஞ்சம் அடித்துக் கொண்டது இரு அன்னைகளுக்கும்.
உள்ளே சென்றதும் காதவடைத்த பிரேமா “இன்னும் கிளம்பலையா அண்ணி? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? அஞ்சலி! என்னம்மா இன்னும் கிளம்பாம இருக்குற?” என்று பிரேமா கேட்க,
அஞ்சலி நின்ற தோரணையை தான் கவனித்துக் கொண்டிருந்தார் மல்லிகா. எதுவோ நடந்திருக்கிறது, நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடிந்தது.
“சொல்லுங்க அண்ணி! எதாவது பிரச்சனையா? மாமா எதாவது சொல்லிட்டாரா?” என பிரேமா தான் கேட்க,
“ஆண்ட்டி! சூர்யாவை கொஞ்சம் வர சொல்றிங்களா?” என்றாள் அஞ்சலி.
“சூர்யா? எதுக்கு?” மல்லிகா கேட்க,
“ப்ளீஸ் ஆண்ட்டி! ஒரு ஹெல்ப்!” என்று அவள் கேட்ட விதம் உதவி கேட்டது போல எல்லாம் இல்லை. வெறும் வாய் வார்த்தை என்று அங்கிருப்பவர்களுக்கு புரிந்தாலும் பிரேமா மொபைலில் சூர்யாவிற்கு அழைக்க, அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கேவலுடன் ஒரு ஓரமாய் ஓடினார் காஞ்சனா.
“சூர்யா! உடனே அஞ்சலி ரூம்க்கு வா!” என்று கூறி பிரேமா வைத்தவர் காஞ்சனா அருகே செல்ல, குணசீலனை கூர்மையாய் பார்த்தபடி நின்றார் மல்லிகா.
அவர் தலை நிமிரவே இல்லை. மனைவி கூறிய அர்த்தம் வெகு தாமதமாய் புரிந்தாலும் மகளை சட்டென்று கோபம் கொள்ளவும் முடியாமல் நின்றார்.
“அண்ணி! என்னனு சொல்லுங்க.. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்” என பிரேமா கேட்க, காஞ்சனாவிற்கு மகள் மேல் கோபம், ஆத்திரம் கடந்து இப்படி நிற்க வைத்து விட்டாளே என்ற எண்ணமுமாய் மயங்கி சரிந்தார்.
விஷயம் வெளியில் இன்னும் தெரியவில்லை. ஆனாலும் அலங்காரம் செய்ய வந்தவர்கள், நண்பர்கள், பெண்ணைப் பார்க்க என வந்த உறவினர்கள் எல்லாம் அஞ்சலி அறைக்கு வெளியே வெகு நேரமாய் காத்திருந்து தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டிருக்க, சூர்யா வந்து கதவைத் தட்டினான் ஜெய்யுடன்.
பிரேமா தான் வந்து கதவை திறந்துவிட, சுற்றி நின்றவர்களை பார்த்தபடி உள்ளே சென்றனர் ஜெய்யும் சூர்யாவும்.
“என்னம்மா?” என்னவோ என்ற சிந்தனை மட்டுமே இருவருக்கும்.
மல்லிகா காஞ்சனாவின் முகத்தில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருக்க, பிரேமா சமாதானம் செய்து கொண்டிருக்க, சூர்யா வரவுள் அமர்ந்திருந்த அஞ்சலி எழுந்து நின்றாள்.
“அஞ்சலி! இப்பவாச்சு சொல்லு.. என்ன பிரச்சனை?” என்று கேட்டார் பிரேமா.
“ஆண்ட்டி! அம்மா தேவை இல்லாம பிரஷர் எடுத்துக்குறாங்க.. ஒன்னுமே இல்லாத சின்ன விஷயத்துக்கு ஏன் இவ்வளவு எமோஷனல் ஆகுறாங்கன்னு எனக்கு தெரியல” என்றாள் அப்போதும் எதுவும் நடக்காததாய்.
கண்ணீல் நீரோடு அதைக் கண்ட காஞ்சனாவிற்கு இதற்கு மேல் மகள் திருந்துவாள் என்று நம்ப முடியாமல் போக, எழுந்து வந்தவர் ஜெய் காலில் விழும் முன் பதறி தூரம் சென்று விட்டான் அவன்.
“காஞ்சனா!” என அப்போது தான் வாயை திறக்கவே செய்தார் குணசீலன்.
“ம்மா! என்ன பண்றீங்க நீங்க?” அஞ்சலியும் கோபமாய் கேட்க,
“எல்லாரும் மன்னிச்சுடுங்க! ஜெய்! என் பொண்ணுக்கு உனக்கு மனைவியா வர்ற தகுதி இல்ல.. இந்த கல்யாணம் நடக்காது” என வந்த அழுகையை அடக்கியவர்,
“நாங்க கிளம்புறோம்!” என்று கூற,
“அதை நீங்க முடிவு பண்ணாதீங்க ம்மா.. யாருக்கு தகுதி இல்ல” என்ற அஞ்சலிக்கு இப்பொழுதும் அவள் மேலான மரியாதை மட்டுமே முக்கியமாய் தெரிந்தது.
“ம்மா! இங்க என்ன தான் நடந்துட்டு இருக்கு?” என்றான் ஜெய் மல்லிகா அருகில் வந்து.
“எங்களுக்கே ஒன்னும் புரியல டா” என்ற பிரேமா,
“என்னனு சொன்னா தானே தெரியும்?” என்று கேட்க,
“ஒரு ப்ரோப்லமும் இல்ல ஆண்ட்டி.. நான் சொன்னதே வேற.. அம்மா தான் தேவை இல்லாமல் சீன் கிரியேட் பண்றாங்க” என்றாள்.
“சரி என்னனு சொல்லு” என்றதும்,
“வேண்டாம்! நீ வாயை திறந்த..” என்று கோபமாய் காஞ்சனா கூற,
“நீங்க இருங்க அண்ணி!” என்று அவர் கைகளைப் பிடித்துக் கொண்ட பிரேமா,
“நீ சொல்லு அஞ்சலி” என்றதும்,
“எனக்கு ஜெய் வேண்டாம்… சூர்யாவை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்ன்னு சொன்னேன்.. இதுல தப்பென்ன இருக்கு? கல்யாணம் பண்ணிக்க போற நான் எனக்கு வர்ற ஹஸ்பண்ட் பத்தி கொஞ்சமாவது நினச்சு பார்க்கணும் இல்ல? கல்யாணத்துக்கு அப்புறம் அழுது என்ன யூஸ்? இதை சொன்னா புரிஞ்சிக்காம செண்டிமெண்ட் டயலாக் விடறாங்க” என்று கூறி அன்னையை அஞ்சலி முறைக்க,
அனைவரின் பார்வையும் அஞ்சலி மேல் தான்.. ஒவ்வொருவரின் பார்வையிலும் ஒவ்வொரு விதம்,
‘நீயெல்லாம் பெண்ணா? என்ன பெண் இவள்? எவ்வளவு சாதாரணமாய் கூறுகிறாள்? எப்படி இப்படி பேச முடிந்தது?’ என்று பார்த்திருக்க,
“இவளுக்கு பைத்தியம் முத்தினது எனக்கு தெரியாது.. என்னை மன்னிச்சுடுங்க.. நான் அவளை அழைச்சுட்டு போயிடுறேன்” என்று அனைவரின் முன்பும் காஞ்சனா கையெடுத்து கும்பிட,
அவரை தடுக்க கூட முடியாத அதிர்ச்சி அனைவர்க்கும்.
ஜெய் அதிலும் அவள் முகத்தை இரு நொடிகளுக்கு மேல் பார்திருக்க கூட மாட்டான்.. அவள் பேச்சு அவ்வளவு கோபத்தை கொடுத்திருக்க, காஞ்சனாவின் நிலை அறிந்து அமைதியாய் நின்றான் என்றால் மல்லிகாவிற்கு இதில் ஒன்றும் அவ்வளவு வருத்தம் இல்லை.. ஆனால் சூர்யாவை அவள் கேட்ட விதத்தில் அதிர்ச்சியில் நின்றார்.
“எனக்கு யாரும் எதுவும் சொல்ல வேண்டாம்.. உங்க யார் முடிவும் முக்கியம் இல்ல.. சூர்யா சொல்லட்டும்.. சூர்யா! நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.. உன் அண்ணனுக்கு பார்த்த பொண்ணுன்ற தாட்ஸ் எல்லாம் விட்ரு.. உன் அண்ணா ஒன்னும் அவ்வளவு ஒர்த் இல்ல.. ஈவேன் நாங்க மீட் பண்ணப்ப நீயும் எங்க கூட தானே இருந்த? சோ! வேற என்ன?” என்றவள் உனக்கு விருப்பமா என்றே கேட்கவில்லை.
“என்ன பேசற நீ?” என்ற மல்லிகா,
“ஜெய் வேண்டாம்னா அது உன் விருப்பம்.. சரி! சூர்யாவுக்கு அம்மா பிரேமா இருக்கும் போது நீ இப்படி பேசலாம்? உன் அம்மா அழுதது ஏன்னு இப்ப தான் எங்களுக்கு புரியவே செய்யுது” என்று கூற,
“ஆண்ட்டி! வேண்டாம்னு சொல்ல இருக்குற ரைட்ஸ் வேணும்னு கேட்கவும் இருக்கு..” திமிராய் கூறுவதாய் தான் தெரிந்தது அங்கிருந்தவர்வளுக்கு.
“அது ரெண்டு பேருக்குமே வேணும் அஞ்சலி.. என் பையன் சரினு சொல்லாம நீ முடிவு பண்ண கூடாது” அவள் பேசியது போலவே பேச நினைத்தாலும் பெரியவர்களுக்கு காஞ்சனா நிலை முன் அப்படி பேச வரவில்லை.
“அதான் நான் இப்ப சூர்யாகிட்ட பேசிட்டேனே?” என்றவள் அப்போதும் சம்மதத்தை கேட்காமல் போக,
“சித்தி! கிளம்பலாம்” என்று ஜெய் கூறவும்,
“எனக்கு சம்மதம்” என்றிருந்தான் சூர்யா.
அவனருகில் கிட்டத்தட்ட பாய்ந்த ஜெய் “லூசா டா நீ?” என்று கேட்க,
“ப்ச்! ண்ணா ஏன் இவ்வளவு டென்ஷன்?” என்று கேட்க,
“சூர்யா!” என்று கண்டிப்பாய் மல்லிகா அழைக்க, அதற்கு மேல் நிற்க வேண்டாம் என,
“வா போலாம்!” என பிரேமா அவன் கைகளைப் பிடிக்க,
“ம்மா! இப்படியே விட்டா பூனைக்கு மணியை யார் கட்டுறது?” என்றான் ஒருவித சிரிப்புடன்.
“ப்ச்! இது விளையாட்டு இல்ல சூர்யா.. யார் எப்படி போனா நமக்கென்ன?” ஜெய் கேட்க,
“ண்ணா! இந்த பெரிய மனுஷன் இளிச்சவாயனா பார்த்து இதை தள்ளி விட்டா பரவால்லையா?” என்ற கேள்விக்கு,
“சூர்யா! விளையாடாத! நீ இப்ப வர்றியா இல்லையா?” என்ற ஜெய் கேள்விக்கு,
“சாரி ண்ணா!” என்றவன்,
“ம்மா! ப்ளீஸ்!” என்று கூற, அங்கே வாக்குவாதம் அதிகமாக, அஞ்சலியைப் பார்த்த ஜெய் முகச் சுளிப்புடன் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
“ஜெய்! ஜெய்! அண்ணா!” என எவ்வளவு சூர்யா அழைத்தும் நிற்கவில்லை.
அஞ்சலி அனைத்தையும் பார்த்தாலே தவிர எதையும் காlண்டு கொள்ளவில்லை. சூர்யா பேசியது கேட்ட போதிலும் அதை ஆராயவில்லை.
முடிவில் பிரேமாவை சம்மதிக்க வைக்கும் பொறுப்பில் சூர்யா வென்றிருக்க, மல்லிகாவிற்கு அவ்வளவு கலக்கம்.
“டேய்! நீயும் என் பையன் தான் டா” என்றார்.
“அதனால தான் மா சொல்றேன்!” என்றான் எளிதாய் சூர்யா.
இவ்வளவு பேச்சிலும் அஞ்சலியை வேண்டாம் என்ற பேச்சு தான் அதிகமாய் இருக்க, அது கொஞ்சமேனும் அஞ்சலியை அசைக்கவே இல்லை.
காஞ்சனாவோடு குணசீலனுமே குறுகி போயிருந்தார்.
வெளியே வந்த ஜெய் கோபமாய் மண்டபத்தை விட்டு கிளம்ப, யார் அழைப்பிற்கும் அவன் நிற்கவில்லை.
பால நாதன் நிவியிடம் என்னவென கேட்டவர் அஞ்சலி அறைக்கு வரும் முன் அங்கே சூர்யா மாப்பிள்ளை ஆகி இருந்தான்.
காஞ்சனா, குணசீலனுக்கு சரி என்றோ வேண்டாம் என்றோ கூறும் வாய்ப்பு கூட அங்கே இல்லாமல் போனது.
“சார் என்ன இது?” என குணசீலனிடம் பாலா கேட்க,
“என்னை எதுவும் கேட்க வேண்டாம்.. நடக்குறது நடக்கட்டும்.. அப்புறமா பேசிக்கலாம்” என்றவர் பாலா முகத்தை பார்க்கவே இல்லை.
“ஜேக்! அங்க பாரு! கல்யாண மாப்பிள்ளை எங்க போறாரு? இதானே முஹூர்த்த நேரம்?” என்று பிரியா கேட்க, ஜனனி திரும்பிப் பார்த்த போது ஜெய் காரில் ஏறிக் கொண்டிருந்தான்.
அப்போது தான் கல்யாணத்திற்கு தயாராகி மண்டபத்தின் வாசலில் வந்திருந்தனர் பிரியா, ஜனனி இருவரும்.
“தெரியலையே!” என்றவள் பிரியவோடு உள்ளே சென்ற போது நிலவரம் மாறி இருந்தது.
சூர்யா அஞ்சலியின் கழுத்தில் மூன்று முடிச்சிட, வந்திருந்தவர்கள் தங்களுக்குள் பேசியபடியும் வேண்டப்பட்டவர்களுக்கு கேட்க்கும்படியும் என தங்களால் ஆனதை செய்து வைக்க, அஞ்சலி திருமதி சூர்ய பிரகாஷ் ஆகி இருந்தாள்.