“என்ன மேடம்! வீடு எப்படி இருக்கு?” சோபாவில் அமர்ந்திருந்தவளிடம் சமையலறை வாசலில் இருந்து வரும் பொழுதே கேட்டபடி வந்தான் சூர்யா.
“பரவால்ல! நல்லா தான் இருக்கு.. ஆனா என் வீட்டோட கேம்பர் பண்ணினா இது ரொம்ப சின்னதா தான் இருக்கு” என்றாள் அஞ்சலி.
“அப்போ பண்ணாத!” எளிதாய் அவன் கூற,
“கரெக்ட்! என் அப்பா கூட இங்கே கம்பர் பண்ண முடியாது இல்ல” என்று சாதாரணமாய் பேசுபவளை நினைத்து இறுகினாலும் இப்பொழுது காட்டிக் கொள்ளவில்லை அவன்.
“ம்ம் ஆமா! ஆனா இப்ப அது உன் அப்பா வீடு.. அவரா வா ன்னு கூப்பிட்டா தான் நீயே போக முடியும்” சூர்யா கூற,
“ஏன்! நான் போனா வராதன்னு சொல்லுவாரா? அது என் வீடு.. என் அப்பாக்கு நான் ஒரே பொண்ணு” என்றவள் பேச்சில் துளியும் திருமணம் ஆன முதல் நாள் கணவனிடம் பேசும் பேச்சு அல்ல.
தவறு எங்கே என்று தெரிந்தால் தானே திருத்தவா தூரத்தவா என்று யோசிக்கலாம் என்ற முடிவில் இருந்திருப்பான் போலும் சூர்யா.
“ஓஹ்! ஐ சீ!” என்றவன் அடுத்து என்ன செய்ய போகின்றான் என்பதை அவள் அறியவில்லை.
“எனிவே! என் ரூம் எங்க இருக்கு?” என்று அஞ்சலி கேட்க,
மேலே கை காட்டியவன், “ரைட்ல பர்ஸ்ட் ரூம் தான் நம்மோடது” என்று கூறி கவனிக்க, நம்மோடது என்ற வார்த்தைக்கு எதாவது வருமா என்று எதிர்பார்த்திருப்பான் போலும்.
“ஓகே! தேங்க்ஸ்! நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்” என்றவள் செல்ல, சிலபல கணிப்பிற்கு வந்திருந்தான் சூர்யா.
இடது பக்கமாய் இருந்த அறையில் தான் ஜெய் இருக்கிறான் என்பதை சில நிமிடங்களுக்கு முன் அனைவரும் அங்கே சென்றதில் அறிந்திருந்தாள் அஞ்சலி.
அறைக்கு வந்தவள் தந்தைக்கு அழைக்க அவர் எடுக்கவில்லை என்றதும் அலைபேசியை மெத்தையில் எரிந்து விட்டு படுத்தவள் அப்படியே நல்ல உறக்கத்திற்கும் சென்றாள்.
இன்று நடந்த எதுவும் அவளை பாதிக்கவில்லை என்பதற்கான அடையாளமாய்.
“பாலா சார் குடுத்து விட்டாங்க” என்று சிலர் கொண்டு வந்ததில் சாதம், சாம்பார், குழம்பு, மோர், ரசம், கூட்டு, பொரியல் என அனைத்தும் மண்டபத்தில் மீதமானது.
நடந்த களேபரத்தில் சாப்பிட்டும் சாப்பிடாமலுமாய் அனைவரும் சென்றிருக்க மீதியை வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார் பால நாதன்.
“என்ன ம்மா இவ்வளவு இருக்கு?” என்று சூர்யா கேட்க,
“அதான் டா நாங்களும் பாக்குறோம்.. இதை என்ன செய்ய? சொந்தம்னு வந்தவங்களும் வீட்டுக்கு வராம அப்படியே கிளம்பிட்டாங்க” பிரேமா கூற,
“வந்திருந்தாலும் பேசியே நோகடிச்சிருப்பாங்க.. நல்லது தான் இதுவும்” என்றார் மல்லிகா.
“இப்ப என்ன பண்ணலாம்?” என்று சூர்யா கேட்கவும் இறங்கி வந்திருந்தான் ஜெய்.
“உன் மொபைல் டா கால் வந்துச்சி” என்று சூர்யா மொபைலைக் கொண்டு வந்து கொடுத்தான்.
வேகமாய் சூர்யா ஜெய்யின் அறைக்குள் வந்த பொழுது அவன் மொபைலை ஜெய் அறையிலேயே விட்டுவிட்டு வந்திருந்தான்.
அதை அவன் மறந்திருக்க ஜெய் அறையில் இருந்த சூர்யாவின் மொபைல் சிணுங்கிய சத்தத்தில் எங்கிருந்து சத்தம் வருகிறதென பார்க்க, மெத்தையில் தான் கிடந்தது சூர்யாவின் மொபைல்.
“ஜனனி” என்ற பெயரோடு அழைப்பு வர, கீழே செல்லும் எண்ணம் இல்லாமல் இருந்தவன் அதை அப்படியே வைத்துவிட, இரண்டாவதாய் மீண்டும் அழைப்பு வந்தது.
ஜெய்க்கு ஜனனி யார் என்று தெரிந்திருந்தாலும் இப்பொழுது அழைப்பது ஏன் என்றும் ஓரளவு யூகம் இருக்க,
‘ஒரு வாட்டி பண்ணிட்டு எடுக்கலைனா விட மாட்டாங்களா? சிடுவேஷன் தெரிஞ்சும் எப்படி தான் இப்படி பன்றாங்களோ!’ என்ற நினைப்போடு அட்டன் செய்து காதில் வைக்க,
“சாரி சாரி சூர்யா! இப்ப கால் பண்ண வேண்டாம்னு தான் நினச்சேன்..” என்றவள்,
“நானும் மண்டபத்துல தான் இருந்தேன்.. ஆனாலும் ஏன்னு ஒரு குவஸ்டின் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு.. ஆன்சர் தெரிஞ்சுட்டா நான் பாட்டு என் வேலையை பார்ப்பேன்ல?” என்று படபடவென அவள் கேட்க,
“இதுல என்ன இவங்களுக்கு ஆக போகுதுனு இவ்வளவு அவசரம்?’ என்று தான் தோன்றியது ஜெய்க்கு.
“ஹெலோ! ஹெலோ!” என்று அவள் கத்த, “ஸ்ஸ்!” என்று இவன் மொபைலை காதில் இருந்து எடுக்க,
“மறுபடியும் சாரி! டிராபிக்ல ஆட்டோ மாட்டிக்கிச்சு.. கேட்குதான்னே தெரியல” என்றவளை,
‘உனக்கு என்ன டி அவ்வளவு அவசரம்? அப்புறமா பேசேன்.. அவங்களை டிஸ்டர்ப் பண்ணாத ஜேக்!” என பிரியா திட்டுவதும் இவன் காதில் விழ தான் செய்தது.
“நீ சும்மா இரு க்கா! எவ்வளவு கிண்டல் பண்ணுவான்.. என்னனு கேட்போம்” என்று அங்கே அவர்களுக்குள் பேசியவள்,
“எனக்கு அப்பவே தெரியும்! உன் அண்ணன் முகமே சரி இல்லை.. அந்த பொண்ணுகிட்ட என்ன சொன்னாரோ.. பிச்சுகிட்டு ஓடி உன்கிட்ட வந்திருக்கு” என்று கூற, இவன் எதுவும் பேசவில்லை.
“உன் அண்ணன் டெர்ரர் பீஸ் போல! சில பசங்க அக்காவை பார்க்க வந்துட்டு தங்கச்சியை புடிச்சிருக்குன்னுவாங்க இல்ல? அந்த மாதிரி நினைச்சுக்கோ.. ஹாப்பி மேரிட் லைப் மேன்!” என்றவள்,
“உன் அண்ணனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.. நான் சொன்னேன்னு சொல்லிடாத..” என்றாள்.
“நீ பிஸியா இருக்கியா?” என்றதற்கு இவன் பதில் கூறவில்லை. மாறாக இருமல் வந்துவிட, அங்கே பிரியாவும் திட்ட,
“சரி சரி! நான் அப்புறம் பேசுறேன்” என்று வைத்துவிட்டாள்.
“யார் ண்ணா? பேசினியா?” என்ற சூர்யா மொபைலைப் பார்க்க, அழைத்தது ஜனனி.
“இவ எதுக்கு கால் பண்ணினா? என்ன சொன்னா?” என்று சூர்யா கேட்கவும், தோள்களை குலுக்கியவன்,
“என்னம்மா இதெல்லாம்?” என்றான்.
“சாப்பாடு டா.. மண்டபத்துல இருந்து வந்திருக்கு” என்று மட்டும் கூறவும்,
“இவ்வளவும் என்ன பண்ண போறீங்க? பக்கத்துல இருக்க டிரஸ்ட்க்கு கால் பண்ணுங்க.. அவங்களே வந்து வாங்கிட்டு போவாங்க.. இல்லைனா அனுப்பி விடுங்க” என்றான்.
“என்ன தான் நடந்துச்சு? என்கிட்ட ஒரு வார்த்தை கேட்கணும்னு உங்க யாருக்கும் தோணலையா?” பால நாதன் கேட்க,
“இது என்னோட முடிவு தான் பெரியப்பா!” என்றான் சூர்யா.
பால நாதன் சூர்யாவை பார்க்கவும்,
“ஜெய்யை அஞ்சலி கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதை முதல்ல சொல்லு சூர்யா.. அஞ்சலி தான் சூர்யாவை செலக்ட் பண்ணினதுன்னு ரெண்டாவது சொல்லு… யாருமே யார்கிட்டயுமே சம்மதம் கேட்கலன்னு மூணாவது சொல்லு… எல்லாத்துக்கும் மேல இந்த கல்யாணம் எதுக்காக இவ்வளவு தூரம் வந்ததுன்னு தெரிஞ்சும் அமைதியா இப்ப வந்து ஏன் கேட்கறார்ன்னு கேளு.. அதுக்கு அப்புறமா உன்னோட முடிவா இல்ல யாரோட முடிவுன்னு அவர் முடிவு பண்ணட்டும்” என்ற மல்லிகா அவர்கள் புறம் திரும்பாமலே பேசி இருந்தார்.
பால நாதனால் பதில் கூற முடியாத கேள்வி. அவர் எதிர்பாராத கேள்வியும் கூட.. அதுவும் தன்னிடம் பேச கூட பயம் கொள்ளும் மனைவியிடம் இருந்து..
“மல்லி ம்மா! நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க” என்ற சூர்யாவிற்கு பெரியம்மாவிற்கு ஏதேனும் தெரிந்திருக்குமோ என்ற சந்தேகம் வர, அதை அப்போது காட்டிக் கொள்ளவில்லை.
“இந்த வீட்ல வர வர என்ன நடக்குதுன்னே எனக்கு ஒன்னும் புரியல.. என்னவோ கல்யாணம்னு பேச ஆரம்பிச்சதுல இருந்து நடந்து முடிஞ்ச வரைக்கும் எல்லாமே ஏடாகூடமா தான் இருக்கு” என்று பிரேமா கூறி முடிக்கவும் அஞ்சலி அதை கேட்டபடி வரவும் சரியாய் இருந்தது.
“ஏன் நல்லா தானே முடிஞ்சிருக்கு?” என்று வேறு கூறி வர,
‘இது ஒரு லூசு! அவ வந்ததை தான் சொல்றாங்க.. அது கூட புரியல..சரியான காமெடி பீஸ்’ என நினைத்த சூர்யாவிற்கு சிரிப்பு தான் வந்தது அந்த நிமிடம்.
“அது.. அது… இல்ல அஞ்சலி.. நம்ம வீட்ல சில பிரச்சனை.. அதை தான் பேசிட்டு இருந்தோம்..” என்று சமாளிக்க பார்க்க, அதில் இன்னும் சத்தமாய் சிரித்தான் சூர்யா.
“சூர்யா!” என்று மல்லிகா அதட்டவுமே,
“சாரி மல்லி ம்மா!” என்று அவன் கூற, பால நாதனுக்கு அவர் கேட்க வந்ததே மறந்து போனது.
“அப்பா வரலையா அங்கிள்? உங்ககூட வருவாங்கன்னு நினைச்சேனே?” என்று அவரிடம் அஞ்சலி கேட்க,
“இப்ப வரலையாம் மா.. இன்னொரு நாள் வர்றதா சொல்லிட்டாங்க” என்று கூறவும்,
“ஓஹ்! சரி அங்கிள்!” என்றவள் அதற்கும் வருத்தப்படவில்லை.
‘என்ன மேட் இவ?’ என்று தான் நினைத்து அவளைப் பார்த்தான் சூர்யா.
“உங்க ஒன்னு விட்ட அண்ணே கல்யாணத்துக்கு வந்தாங்களே! அவங்க கூட வீட்டுக்கு வரலையா மாமா?” என்று பிரேமா கேட்க,
“நடந்து முடிஞ்ச கல்யாணம் அப்படி.. யாரு வருவா? நாலு பேர் துக்கம் விசாரிக்குற மாதிரி வருவாங்க.. அவங்களும் ஜெய் ண்ணா வாய்க்கு பயந்தே வந்திருக்க மாட்டாங்க.. யாரும் தேவை இல்லை விடுங்க ம்மா” என்று விட்டான் சூர்யா.
அந்த வீட்டில் தானும் ஒருத்தியாய் இருப்பதாய் நினைத்துக் கொண்ட அஞ்சலிக்கு இன்னும் அவள் என்னென்ன அனுபவிக்க இருக்கிறது என்று தெரியவில்லை.