மலைகளின் இளவரசி என்று செல்லமாய் அழைக்கப்படும் கொடைக்கானல்… மேகங்கள் ஒட்டி உறவாடும் அந்த உயர்ந்த மலைப்பகுதியில்.. சுற்றுலா பயணிகளுக்காக தனித்தனி குடில்கள் மற்றும் வீடுகளின் அமைப்புடன் பிரத்தியேகமாய் உருவாக்கப்பட்ட உயர் ரக தங்கும் விடுதி அது.
கருணா ரிசார்ட்ஸ் என்று தங்க நிறத்தில் மிளிர்ந்த பெயர் பலகையை சுமந்து நின்ற பெரிய மதில் சுவர்கள் எங்கும் வண்ண விளக்குத் தோரணங்களும் பூ அலங்காரத் தோரணங்களும் மேலும் அவ்விடத்தை ஒளியூட்டி அலங்கரித்தன…
உரிமையாளனின் திருமணத்திற்காக இருமடங்கு சுறுசுறுப்புடன் செயல் பட்டு வந்த விடுதிப் பணியாளர்கள், நிற்க நேரமில்லாமல் அங்கும் இங்குமாய் அலைந்தபடி திருமண வேலைகளை கவனித்துக் கொண்டிருக்க… எங்கெங்கோ இருந்து வரவழைக்கப்பட்ட விருந்தினர்கள், விடுதியின் மத்திய பகுதியில் நடுநாயகமாய் அமைக்கப்பட்ட மண மேடையின் முன் கூடியிருந்தனர்.
எதிர்பாராத அதிர்ஷ்டம் கிட்டிய மகிழ்ச்சியின் வெளிப்பாடாய் மலர்ந்த புன்னகையுடன் வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார் மணமகளின் தந்தை சேதுபதி.
“அடடே வாங்க வாங்க…” என்று தன் செல்வப் செழிப்பின் செழுமையை பறைசாற்றும் விதமாய் கம்பீரமாய் திருமணம் நடைபெறும் இடத்திற்குள் நுழைந்த ஒருவரை மரியாதையுடன் வரவேற்ற சேதுபதி, “டேய் பையா இங்க வா…” என்று விடுதி பணியாளன் ஒருவனை கைத் தட்டி அழைத்து, அவன் அருகில் வந்ததும், “சார் யாருன்னு தெரியுதா?, நம்ம பக்கத்து ரிசார்ட் ஓனர், இம்பார்ட்டெண்ட் கெஸ்டுக்காக அரேஞ்ச் பண்ணி வச்ச இடத்துக்கு சாரை கூட்டிட்டு போ. அப்படியே கூட இருந்து என்ன வேணும் ஏது வேணும்னு கேட்டு நல்லவிதமா கவனிச்சுக்கோ..” என்று உத்தரவு பிறப்பித்தார்.
பணியாளனுடன் நடந்து சென்றவர், ஒரு வித சந்தேகப் பார்வையுடன் சேதுபதியை திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்று அவருக்கான இருப்பிடத்தில் அமர்ந்து விட… அவரை வழிநடத்தி வந்த பணியாள் சேதுபதியின் உத்தரவிற்கு இணங்க வேண்டிய பணிவிடைகள் புரிந்து விட்டு பணியாளர்களுக்காக ஒதுக்கப் பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
“ வாடா… என்ன அந்த பந்தா… வேலை மேல வேலை குடுத்துட்டே இருக்கா?” என்று வந்தவனிடம் வினவினான் மற்றொரு பணியாள்.
“ சும்மாவே அந்த ஆளைக் கையில பிடிக்க முடியாது. இப்போ முதலாளிக்கு சம்மந்தியா வேற ஆகப் போறாரு கேட்கவா வேணும்?” என்று அலுத்துக் கொண்டான் முன்னவன்.
“ நீசொல்றதும் சரிதான் சாதாரண சூப்பர்வைசரா இருக்கும்போதே முதலாளி மாதிரி பந்தா பண்ணிட்டு இருந்தாரு, இப்போ அவரோட அழகான பொண்ணால எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் கிடைச்சிருக்கு சும்மா விடுவாரா?, இனிமேல் நம்ம பாடு திண்டாட்டம் தான்…” என்றார் மற்றொரு பணியாள்.
“அதுக்குள்ள ஒரு முடிவுக்கு வந்துட்டா என்ன அர்த்தம்? அதிர்ஷ்டமா?, துரதிர்ஷ்டமான்னு? போகப் போக தான தெரியும்!” என்று ஒருவர் குதர்க்கமாய் கூறிட…”என்ன சொல்ற பெரிய இடத்துக்கு சம்மந்தி ஆகிறது எப்படி துரதிர்ஷ்டமாகும்?” என்று குழப்பமாய் வினவினார் மற்றொருவர்.
“ பெரிய இடத்துக்கு சம்மந்தி ஆகலாம், ஆனா அது நிலைக்கணுமே!” என்றார் அவர்.
“ இன்னும் நீ என்னச் சொல்ல வரன்னு ஒன்னும் புரியல?” என்று அங்கு குழுமியிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் கேள்வி எழுப்பினர். “நீங்க சொன்னீங்களே அந்த அழகான பொண்ண நம்ம முதலாளிக்கு பிடிச்சது என்னமோ உண்மைதான், ஆனா அந்தப் பொண்ணுக்கு நம்ம முதலாளியை பிடிச்சிருந்ததா?” என்று முன்னவர் வினவ..
“அது நமக்கு எப்படி தெரியும்?, அந்தப் பொண்ணு தான் நம்ம முதலாளியை கண்டுக்கவே இல்லையே. அவர் இங்க இருந்த வரைக்கும் அந்த திசை பக்கம் கூட திரும்பலயே. ” என்றான் மற்றவன்.
“ நம்ம முதலாளிய கண்டுக்காதது மட்டும் தான உங்களுக்கு தெரியும். ஆனா அந்த பொண்ணோட கவனம் எல்லாம் முதலாளி கூட வந்த பிரண்ட் மேல இருந்தது உங்க யாருக்காவது தெரியுமா?”என்று புதிராய் வினவினார் அவர்.
” நீ யார சொல்ற? முதலாளியோட க்ளோஸ் ஃப்ரெண்ட்னு சொல்லிட்டு கூடவே இருந்ததுல, அந்த கரண் தம்பியையா சொல்ற?” என்று மற்றொருவர் வினவ…
” ஆமா அதே தம்பிய தான் சொல்றேன். நம்ம சின்ன முதலாளி ஊருக்கு கிளம்பி போனதுக்கு அப்புறம் கூட அந்தப் பையன்.. இங்கயே கொஞ்ச நாள் இருந்ததுல, அது எதுக்குன்னு நினைக்கிறீங்க?” என்றார் அவர்.
“ அப்போ இரண்டு பேருக்கு நடுவுல ஏதோ இருக்குன்னு சொல்ல வரியா?” என்றான் ஒருவன்.
“ எதுவும் இல்லாமலா, அந்தப் பொண்ணு அவனுக்காக பெரியகுளம் பஸ் ஸ்டான்ட்ல கால் கடுக்க காத்திட்டு இருந்துச்சு?,” என்று ஏதோ ரகசியத்தை அறிவிக்கும் குரலில் கூறினார் அவர்.
காதில் விழுந்த வார்த்தையை உண்மையென ஏற்க முடியாத குழப்பத்துடன்… மற்றவர்கள் நின்றிருக்க… அதிலிருந்த ஒருவர் மட்டும் குழப்பத்தை தெளிவு படுத்திக் கொள்ளும் விதமாய், “ஏய் என்ன பேசிட்டு இருக்க நீ?, சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் உளராத.. சேதுபதி குணத்துல சுயநலமா இருந்தாலும், பொட்டப் பிள்ளைகள வளக்குற விஷயத்துல ரொம்ப கராறான ஆளு. என் பொண்டாட்டி கூட சொல்லுவா.. பிள்ளைன்னா அது சேதுபதி விட்டு பொம்பள பிள்ளைங்க மாதிரி இருக்கணும்னு. இந்த காலத்து பிள்ளைக எப்படி எப்படியோ திரியுதுங்க, ஆனா அந்த ரெண்டு பிள்ளைகளும் … வீட்டுக்கு அடங்கி, அப்பா அம்மா பேச்சைக் கேட்டு நடக்குதுன்னு ரொம்பவே பெருமையா பேசுவா!. அப்படிப்பட்ட பிள்ளைக மேல போய் அபாண்டமா பழி போடுற!”என்று சற்று கோபமாகவே வினவினார்.
“ராசு சொல்றதும் சரிதான், சின்ன பொண்ணாவது கொஞ்சம் வெட்டுசா இருக்கும், படிப்புக்கேத்த புத்திசாலியும் கூட யார் எப்படின்னு பார்த்ததும் கண்டு பிடிச்சுடும். ஆனா அந்த மூத்த பொண்ணு மீனா இருக்கே வெள்ளந்தி, ஊர் உலகம் புரியாத வெகுளிப் பொண்ணு, யாரு என்ன சொன்னாலும் நம்பிடும், அப்படிப்பட்ட தங்கமான பிள்ளைகளை போய் தப்பா பேசிட்டு இருக்க… இங்க பாரு எங்களுக்கும் சேதுபதி பிடிக்காது தான், அதுக்காக நீ என்ன சொன்னாலும் நம்புவோம்னு நினைக்காத.., ” என்று சேதுபதியை பிடிக்கவில்லை என்றாலும் அவர் வீட்டு பெண் பிள்ளைகள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்ட பணியாள் மற்றொருவரும் பழி போட்டவரை எதிர்த்து வாதாடினார்.
” ஆமா அப்பாவி வெள்ளந்தி.. யார் என்ன சொன்னாலும் நம்பிடும். மீனா ரொம்ப நல்ல பொண்ணு தான். யாரு இல்லன்னு சொன்னா?, அந்தப் பொண்ணு அந்த அளவுக்கு வெகுலியா இருக்க போய் தான். புதுசா வந்தவன் பேச்சைக் கேட்டு ஊர விட்டு ஓடிப் போக பார்த்துச்சு..”என்றார்.
இருவரின் விவாதத்தை கவனித்துக் கொண்டிருந்த மற்றவர்களின் முகம் பிரதிபலித்த உணர்வை படித்தவர், “நான் என் ரெண்டு கண்ணால பார்த்ததையும், காதால கேட்டதையும் தான் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கேன். நம்புனா நம்புங்க நம்பலைனா அப்படியே விட்டுடுங்க…, ஆனா நான் சொல்றது நிஜம்.” என்று பீடிகையுடன் மேலும் தொடர்ந்தார், “ நான் ஒரு நாள் என் மச்சினி மகளுக்கு கல்யாணம்னு லீவ் போட்டுட்டு தேனி வரைக்கும் போயிருந்தேன் ஞாபகம் இருக்கா?, அன்னைக்கு கல்யாணம் முடிஞ்சு நான் திரும்பி வரும் போது, பெரியகுளம் பஸ் ஸ்டாண்ட்ல இந்த மீனாப் பொண்ணைப் பார்த்தேன். என்ன ஏதுன்னு விசாரிக்கலாம்னு பஸ்ஸை விட்டு இறங்குனேன், நான் போய் பேசுறதுக்கு முன்னாடியே இந்த சிடுமூஞ்சி அவர் பையனோட வந்து, அந்தப் பொண்ணை அங்க இருந்து கூட்டிட்டு போயிட்டாரு. அவங்க போகும் போது, அந்தப் பையனுக்காக இவ்ளோ தூரம் வர அளவுக்கு உனக்கு தைரியம் வந்துடுச்சான்னு திட்டிட்டே இழுத்துட்டு போனாங்க” என்றார் அவர்.
“என்னய்யா சொல்ற நீ சொல்றது நிஜமா? , அப்புறம் எப்படி அந்த பொண்ணு இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சது?” என்று குழப்பத்துடன் ஒருவர் வினவ…. ” உங்களுக்கு தான் சேதுபதியோட குணம் தெரியுமே இவ்வளவு வசதியான ஆளுங்க வந்து பொண்ணு கேட்கும்போது மாட்டேன்னா சொல்லுவாரு… ஏதேதோ சொல்லி அந்த பொண்ணையும் சரி கட்டிட்டாரு…” என்றார்.
” நீ சொல்றதெல்லாம் உண்மையாவே இருக்கட்டும், இந்த சங்கதி எல்லாம் உனக்கு எப்படி தெரிஞ்சது. ?” என்று மேலும் ஒருவர் கேள்வி எழுப்பிட…
” சேதுபதியோட பையன் தான் அவன் பிரண்ட் கிட்ட உளறிட்டு இருந்தான். அதை நான் அவங்களுக்கே தெரியாம ஒட்டுக் கேட்டுட்டேன்.அதனால தான் எனக்கு இந்த சங்கதி எல்லாம் தெரிஞ்சது” என்றார் அதுவரை சேதுபதியின் வீட்டு விஷயத்தை கடை பரப்பிக் கொண்டிருந்தவர்.
“முதல்ல அந்தப் பையன் என்ன சொன்னான்னு முழுசா சொல்லு…” என்று அரைகுறையாய் அறிந்த விஷயத்தை முழுதாய் அறிந்திட ஆர்வம் காட்டினர் மற்றவர்கள். “சொல்றேன் சொல்றேன் சொல்லாம எங்கப் போக போறேன். இந்த மீனாட்சி பொண்ணு இருக்கே, அதுவும் நம்ம சின்ன முதலாளி கூட வந்தா அந்த கரண்ட் தம்பியும் பேசி பழகி காதலிக்க ஆரம்பிச்சிட்டாங்க, மீனாட்சிக்காக தான் அந்த பையன் கூட வந்த பிரண்டு கிளம்பி போனதுக்கு அப்புறமும் போகாம இருந்திருக்கு, நம்ம சிடுமூஞ்சி சேதுபதி இருக்காரே, அவருக்கு பொண்ணோட நடவடிக்கையில சந்தேகம் வந்து, இரண்டு பேரையும் கூப்பிட்டு வச்சு விசாரிச்சு பார்த்திருக்காரு, அதுக்கு அந்த பையனும் இல்ல அது இதுன்னு மழுப்பாம.. ஆமா நாங்க ரெண்டு பேரும் காதலிக்கிறோம் உங்க பொண்ண எனக்கு கட்டிக் கொடுங்கன்னு கேட்டிருக்கு, சொத்து பத்து சொந்த பந்தம் எதுவும் இல்லாத உனக்கு போய் எப்படி என் பொண்ணு கொடுப்பேன்னு, அந்தப் பையன இனி கொடைக்கானல் பக்கமே வரக் கூடாதுன்னு மிரட்டி இருக்காரு. நீங்க சொன்னா போக மாட்டேன் உங்க பொண்ணு வந்து சொல்லட்டும்னு அந்த பையனும் பிடிவாதமா இருந்திருக்கு. உடனே நம்ம சேதுபதியும் மீனாட்சி கிட்ட என்னென்னவோ சொல்லி மிரட்டி அந்த பையனை காதலிக்கவே இல்லன்னு சொல்ல வச்சுட்டாரு, இதைக் கேட்டு மனசு உடைஞ்சு போன பையன். யார் முகத்துலயும் முழிக்க பிடிக்காம இங்க இருந்து கிளம்பி போயிடுச்சு. அப்ப முன்னாடி உன்னை காதலிக்கவே இல்லைன்னு சொன்ன பொண்ணு கமுக்கமா ஒரு லெட்டர் எழுதி அந்த பையன் ரூம்ல வெச்சிருக்கு. அந்த லெட்டர் சேதுபதி பையன் கையில சிக்கிடுச்சு, உடனே ரெண்டு பேரும் அடிச்சு புடிச்சு பெரியவளை பஸ் ஸ்டாண்ட்ல வந்து புள்ளைய கூட்டிட்டு வந்துட்டாங்க.” என்று தான் அறிந்த விபரத்தை எல்லாம் கூறி முடித்தார் அவர்.
“இவ்வளவு விஷயம் நடந்திருக்கா, கூடவே வேலை பார்க்குறோம் நம்ம யாருக்கும் எந்த விஷயமும் தெரியல பாரேன். “என்று அங்கலாய்த்துக் கொண்டார் ஒருவர். “ சேதுபதி வீட்டு சங்கதிக என்னைக்கு நமக்கு தெரிஞ்சிருக்கு, அவரா வந்து சொல்ற வரைக்கும் எதுவும் தெரியாது அந்த அளவுக்கு ரகசியமால எல்லாத்தையும் வச்சுக்குவாரு. “என்று ஒருவர் பதில் தர, “அது என்னவோ உண்மை தான்… இப்ப கூட சின்ன முதலாளிக்கு நம்ம ரிசார்ட்ல தான் கல்யாணம்னு எல்லா ஏற்பாடையும் கவனிக்க சொன்னதுக்கு அப்புறம் பொண்ணு யாருன்னு கேட்டா என் பொண்ண தான் சின்ன முதலாளி கல்யாணம் பண்ணிக்க போறாருன்னு சொல்றாரு, அந்த அளவுக்கு எல்லாத்தையும் கமுக்கமாக செய்ற ஆளு, பொண்ணோட காதல் விஷயத்தை மட்டும் கடை பரப்பவா செய்வாரு. “ என்று முன்னவரின் வார்த்தையை ஆமோதித்தார் மற்றொருவர்.
“சரி அந்த பொண்ணு தான் அதோட அப்பா குணம் புரியாம தெரியாத்தனமா காதலிச்சிடுச்சு, அதுதான் இப்போ ஒன்னும் இல்லன்னு எல்லாத்தையும் முடிச்சு வச்சுட்டாங்கல, இதுல துரதிர்ஷ்டம்னு சொல்ற அளவுக்கு என்ன இருக்கு?” என்று இன்னொருவர் சந்தேகத்துடன் வினவினார்.
“மீனாட்சி காதலிச்சது இப்போ கல்யாணம் பண்ணிக்க போற நம்ம சின்ன முதலாளியோட க்ளோஸ் ஃப்ரெண்ட். இப்போ வரைக்கும் அவருக்கு எந்த உண்மையையும் தெரியாம தான் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி இருக்காரு. அவருக்கு மட்டும் தான் பிரண்டு காதலிச்ச பொண்ணு தான் நம்ம கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்ற உண்மை தெரிஞ்சா அவங்க வாழ்க்கை அதிர்ஷ்டமாவா இருக்கும்?” என்றார்.
“அதுவும் சரிதான் பேசாம நாமலே சின்ன முதலாளி கிட்ட எல்லா உண்மையும் சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்திடலாமா?” என்று ஒருவர் யோசனை கூறிட..” நம்மகிட்ட இது உண்மைன்னு நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லையே!, அவர் ஃப்ரெண்ட் நினைச்சிருந்தா இந்நேரம் உண்மையை சொல்லி கல்யாணத்தை நிறுத்திருக்கலாம். ஆனா அவரே அமைதியா இருக்கும்போது நாம இந்த விஷயத்துல என்ன செய்ய முடியும்?, சரி நம்ம சின்ன முதலாளியோட வாழ்க்கை தான் முக்கியம்னு ரிஸ்க் எடுத்து போய் எல்லா உண்மையும் சொன்னா சேதுபதி சும்மா இருப்பாரா?, என்னமோ அவர் மேல இருக்கிற பொறாமைல பொய்கதை சொல்றோம்னு நம்ம மேலேயே பழி போடுவாரு.” என்று அடுத்தடுத்து காரணங்களை கூறினார்.
“நீ சொல்றதும் சரிதான் நமக்கு எதுக்கு இந்த வம்பு சொல்ற வேலையை செஞ்சுட்டு குடுக்குற சம்பளத்தை வாங்கிட்டு போயிட்டே இருக்கலாம்..” என்று கூடி இருந்த அனைவரும் ஒருமனதாய் முடிவெடுத்து அடுத்தடுத்து வழங்கப்படும் வேலைகளை கண்ணும் கருத்துமாய் செய்து கொண்டிருந்தனர்.
பணியாளர்கள் மொத்தமாய் யார் குறித்து புறம் பேசிக் கொண்டிருந்தார்களோ இங்கு அவரோ தனிமையில் தன் மனைவியிடம் தனது கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்…
“மாப்பிள்ளை இன்னும் வரலைன்னு எதுக்கு இந்த புலம்பு புலம்பிட்டு இருக்க, அதான் அவரோட பாட்டி இங்க தானே இருக்காங்க.. அப்புறம் எதுக்கு உனக்கு வேண்டாத கவலை?” என்றார் சேதுபதி.
“அது இல்லங்க ஒருவேளை அந்த பையன் மூலமா.. ஏதாவது உண்மை தெரிய வந்தா என்ன பண்றது?” என்று தனது பயத்தின் காரணத்தை கூறினார் காஞ்சனா சேதுபதியின் மனைவி.
“அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டான். அவனுக்கு அந்த அளவுக்கு தைரியம் இருக்காது. அவனே நம்ம மாப்பிள்ளைய அண்டிப் பொழைக்கிறவன்… உண்மைய சொன்னா அவன் பொழப்பும் போயிடும். தேவையில்லாம கண்டதையும் யோசிச்சு கவலைப்பட்டுட்டு இருக்காம கல்யாணத்துக்கு வந்தவங்கள போய் கவனி” என்றார் சேதுபதி.
“என்னமோ உங்க பிடிவாதத்தால பொண்ணோட வாழ்க்கையை நாசமாக்கிடாதீங்க அவ்வளவுதான் நான் சொல்லுவேன்..” என்று புலம்பியபடி அங்கிருந்து விலகிச் சென்றார் காஞ்சனா.
மனைவியின் பயம் தன்னையும் தொற்றிக் கொள்ள…கவலை கொண்ட சேதுபதி உடனே மணமகனின் துர்கேஸ்வரியை நேரில் சந்தித்து தனது கவலையை பகிர்ந்து கொண்டார். “வணக்கம் துர்கா அம்மா.. முகூர்த்த நேரம் நெருங்கிட்டே இருக்கு, மாப்பிள்ளை இன்னும் இங்க வரல..” என்று தயங்கிக் கொண்டே வினவினார்.
“ நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம் அவன் இங்க தான் வந்துட்டு இருக்கான், இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க இருப்பான்.” என்று நம்பிக்கை கூறினார் துர்க்கேஸ்வரி.
துர்கேஸ்வரி ஆறுதல் கூறிக் கொண்டிருந்த அதே நேரம்… மேளதாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட சொகுசு வாகனத்தில் ஒய்யாரமாய் அமர்ந்து திருமணம் நடைபெறும் அரங்கை நோக்கி வந்து கொண்டிருந்தான் அவன்.