“ஜனனி!” என்ற அழைப்பில் நின்றவள் திரும்பிப் பார்க்க,
“நீ ஜனனி தானே?” என்றான் அவன்.
“ஆமா! நீங்க?” என்றவளுக்கு எங்கோ பார்த்த நியாபகம் தான் அந்த முகம்.
“என்னை தெரியல?” அவன் கேட்க,
“இல்லையே!” என்றாள்.
“பொங்கல் வைக்க நேரமாகிடுச்சு.. இங்க என்ன பண்ற?” என்று பிரியா வர,
“கோவிலுக்கு தான் வந்தியா? சரி வாங்க போகலாம்” என்றான் பொதுவாய் அவன்.
“யாரு டி இது?” பிரியா ஜனனியிடம் கேட்க,
“தெரிஞ்ச மாதிரி இருக்கு.. ஆனா சட்டுன்னு நியாபகம் வர மாட்டுது க்கா.. என்னை யாருன்னு தெரியலையா ஜனனின்னு கேட்டுட்டு யாருன்னே சொல்லாம போறான்” என்றாள் ஜனனி.
“சரி கோவிலுக்கு தான் வந்திருக்காங்க போல.. அப்புறமா பேசிக்கலாம்.. வா” என்று அழைத்து சென்றாள் பிரியா.
குல தெய்வ கோவிலுக்கு வந்து சேர்ந்ததும் பொங்கல் வைப்பதற்காக ஜனனி தண்ணீர் எடுக்க குளத்திற்கு வந்திருக்க, தன்னிடம் கேட்டவன் யார் என்கின்ற சிந்தனையோடு தண்ணீரை கொண்டு சென்றாள் ஜனனி.
பால நாதன் ஓரிடத்தில் மர நிழலில் அமர்ந்திருக்க, அருகே குண சீலனும் மகளையும் ஜெய்யையும் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
ஜெய் தன் தங்கை மற்றும் தம்பி என கதையளந்து சிரித்தபடி நின்றிருக்க, மொபைலில் இருந்து கண்களை எடுக்காமல் ஓரிடத்தில் அமர்ந்திருந்தாள் மகள் அஞ்சலி.
“பொங்கல் வச்சாச்சு அக்கா! பத்திரிக்கை எடுத்துட்டு வாங்க.. எல்லாம் வச்சு சாமி கும்பிட்டுடலாம்” என்று பிரேமா மல்லிகாவிடம் கூற, கணவனைப் பார்த்த மல்லிகா எதுவும் பேசாமல் நின்ற இடத்தில் இருந்தும் அசையாமல் இருந்தார்.
அதைப் பார்த்து பல்லைக் கடித்த பால நாதன் அங்கே வைத்து எதுவும் கூறாமல் பத்திரிக்கையை கொண்டு வந்து பிரேமா கைகளில் தர, இவை எதுவும் காஞ்சனா, குணசீலன் கண்களில் இருந்து தப்பவில்லை.
“இந்த மல்லிக்கு இப்ப என்ன பிரச்சனை? ஏன் மூஞ்சை தூக்கி வச்சுட்டு இருக்கு.. சாமி இதைப் பார்த்தா மட்டும் கோச்சிக்காதா?” என்று ஜெய் கேட்க,
“உனக்கு கல்யாணம் பேசினாலும் பேசினாங்க வீட்டுல நிம்…” கூற வந்த வார்த்தைகளை அப்படியே விழுங்கிக் கொண்டான் சூர்யா.
எவ்வளவு பெரிய வார்த்தை.. அண்ணனை காயப்படுத்தும் வார்த்தைகள் அது நிச்சயம்.. ஏதோ விளையாட்டு போக்கில் வாயில் வந்துவிட சூர்யாவே அதிர்ந்துவிட்டான் தான் கூற வந்த வார்த்தைகளில்.
“என்னால இந்த வீட்டுல நிம்மதி போச்சு.. அதானே? அதை ஏன் டா பாதில நிறுத்துற? உண்மை தானே?” என்றான் ஜெய்.
“சாரி சாரி டா அண்ணா! ஏதோ ஒரு புளோல வந்துடுச்சு.. ப்ளீஸ் சாரி ண்ணா!” என்ற சூர்யாவிற்கு அத்தனை வருத்தம்.
பிரேமாவிற்குமே மல்லிகாவின் செயலில் சங்கடமாய் போக, “அக்கா! புடிச்சோ புடிக்காமலோ, தெரிச்சோ தெரியாமலோ அஞ்சலி இந்த வீட்டுக்கு மருமகளா உங்க மகனுக்கு மனைவியா வரப் போறா.. நீங்க தானே முழு மனசோட எல்லாம் செய்யனும்?” என்று மெல்லிய அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறவும் தான் தன் புத்தி ஏன் இப்படி போகிறது என தலையில் அடித்துக் கொண்டு அவரே அனைத்தையும் வரிசையாய் எடுத்து வைத்தார் தாம்பபூலத் தட்டில்.
“ஜெய், அஞ்சலியை கூப்பிடுங்க அக்கா!” என்று பிரேமா கூறவும்,
“ஜெய்! இங்கே வா டா!” என்றதும் அவன் அருகே வந்து நின்றான்.
“அஞ்சலி!” என்றதும் அவள் திரும்பிப் பார்க்க,
“இப்படி கொஞ்சம் வா மா” என்றார் மல்லிகா.
“சாரி ஆண்ட்டி! எனக்கு இந்த புகை எல்லாம் அலர்ஜி! ஒத்துக்காது” என்றவள் மல்லிகா அடுத்து கூற வருவதையே கேட்காமல் அலைபேசியுடன் திரும்பிக் கொள்ள,
யாரோ யாரையோ என்பதைப் போல நிற்க வைத்த இடத்தில் நின்றிருந்தான் ஜெய்.
“அஞ்சலி! என்ன பழக்கம் இது?” காஞ்சனா கோபமாய் கேட்க,
“இன்விடேஷன் வச்சு சாமி கும்பிடுறதா தானே சொன்னாங்க? பொங்கல் ஜெய் பிரதர்க்காக வேண்டினதுன்னு கார்லயே சொன்னாங்க இல்ல? நான் உள்ளே போய் சாமி கும்பிட்டுக்குறேன்” என்று திரும்பிக் கொண்டாள்.
“திமிரைப் பாரேன்!” சூர்யா கூறவும்,
“என்ன டா இது?” என்று நிவி அதிர்ச்சியாக, பால நாதனே ஒரு நொடி அதிர்ந்து தான் போனார்.
குணசீலன் எதுவும் பேசவில்லை. தன் மகளின் நடவடிக்கைகளை கவனித்தபடி அமைதியாய் அமர்ந்திருந்தார்.
ஆனால் அது தான் இன்னும் பற்றிக் கொண்டு வந்தது காஞ்சனாவிற்கு.
இத்தனைக்கும் நின்ற இடத்தில் நின்று அசையவே இல்லை அவன் ஜெய்.
“போய் சாமிகிட்ட நல்லா வேண்டிக்கோங்க!” என்ற பிரேமா நிலைமையை சரி செய்வதற்காக அடுத்த கட்டத்திற்கு இழுக்க,
“ஜெய்! இது நம்ம கோவில், நம்ம வழக்கம்.. நீ தான் இதை செய்யனும்.அது தான் முறை..” என்ற மல்லிகா,
“நீ இதை சாமி பாதத்துல வச்சு நல்லா கும்பிட்டுக்கோ” என்று கூற,
சாதாரணமாய் தெரிந்த அந்த வார்த்தைகள் எவ்வளவு குத்தலானது என காஞ்சனாவிற்கு புரிந்த நொடி தன்னை சாட்டையால் அடித்த வலி அவருக்கு.
பத்திரிக்கை அடங்கிய தாம்பூலத் தட்டுடன் ஜெய் கோவிலினுள் செல்ல, அங்கே அதற்கு முன் பொங்கல் வைத்து படையலுடன் சாமி கும்பிட நின்றனர் ஜனனி குடும்பத்தினர்.
“போய் ஜெய்கிட்ட நில்லு டி இப்பவாச்சும்” காஞ்சனா அஞ்சலியிடம் கெஞ்சவே செய்ய,
“ம்மா! அவனைப் பார்த்தீங்க தானே? என்னை ஒரு நேரம் திரும்பிப் பார்த்திருப்பானா? வான்னு கூப்பிட்டானா?” அஞ்சலி கேட்க,
“அதுக்கு நீ…” என்று காஞ்சனா கூற வர,
“போன்ல இருந்து நீயும் கொஞ்சம் திரும்பி யார் என்ன பன்றாங்கன்னு பார்திருக்கலாம் அஞ்சலி” என்றிருந்தார் குணசீலன்.
அவரை முறைத்த காஞ்சனா இந்த அளவுக்காவது கணவருக்கு தெரிகிறதே என்று நினைக்க,
“நீங்களுமா ப்பா! இங்கேயும் என்னை யாரும் நிம்மதியா இருக்க விட மாட்டிங்களா?” என்றாள் மகள்.
இவர்கள் பேச்சு தெளிவாய் கேட்கவில்லை என்றாலும் ஓரளவு கேட்க மல்லிகா, பால நாதன், பிரேமாவோடு சிறியவர்களுக்கும் ஓரளவு புரிய தான் செய்தது.
ஜெய் எதையும் கண்டும் காணாமல் அவன் போக்கில் இருந்து கொண்டான். இதற்கு என்னவென மறுப்போ ஆறுதலுமோ கூற முடியும் என தோன்றவில்லை.
ஆனால் பால நாதனை அந்தந்த நேரங்களில் பார்க்கவும் தவறவில்லை அவன்.
“பிரேமா! அங்கே பாரேன்!” என்று மல்லிகா கூறவும் அந்த பக்கம் அவர் பார்க்க, கண்மூடி அனைவரும் பிரார்த்தனையில் நின்றிருக்க ஜெய் அருகே ஒரு பெண்.
இருவரையும் தான் வைத்த கண் அகலாமல் பார்த்திருந்தார் மல்லிகா.
“க்கா!” என்று முறைத்த பிரேமா,”எவ்வளவு பிரச்சனை போய்ட்டு இருக்கு.. என்ன பண்றீங்க நீங்க? ” என்று கேட்க,
“இப்படி பார்க்க மட்டும் தான் முடியும்.. வேற என்ன செய்ய முடியும் நான்.. ஆனா ஜோடி பொருத்தம் நல்லா இருக்குல்ல?” என்று கேட்க, பின்னால் நின்ற சூர்யாவும் இதை கேட்டுக் கொண்டு தான் நின்றான்
“விடுங்க ம்மா! பெரியம்மா நினைக்க கூட கூடாதா?” என்று வேறு கூற,
“தப்பு சூர்யா! என்ன பழக்கம் இது.. அதுவும் ஜெய்க்கு நிச்சயம் ஆன அப்புறம்?” என்று கேட்டவர்,
“அக்காவை நினச்சா எனக்கு பயமா இருக்கு” என்றார்.
“ப்ச்! சாமி கும்பிட வந்த இடத்திலேயும் புலம்பிகிட்டு… என்னம்மா நீங்க.. எல்லாத்தையும் அவர்கிட்ட சொல்லுங்க.. கேட்டு அவரே எதாவது பண்ணட்டும்” என்றான் சூர்யா.
“அதுவும் சரி தான்” என நினைத்தபடி பிரேமா அமைதியாக, மல்லிகாவும் அதனை கேட்டவர் நீயே துணை என கடவுளிடம் சரணடைந்தார்.
“சீக்கிரமே நல்ல வரனா அமையனும்னு வேண்டிக்கோ ஜனனி” என்று மீனாட்சி கூறியவர் தானும் வேண்டிக் கொள்ள,
ஜனனி கண்மூடிக் கொண்டாள் ‘எனக்கு வேண்டியதை என்னிடம் கொண்டு வா’ என்று வேண்டி.
அவளருகில் நின்ற ஜெய்யும் தான் “எனக்கான நல்லதை நீயே பார்த்துக் கொள்” என வேண்டிக் கொண்டான்.
தரிசனம் முடிந்து அனைவரும் வெளியே வர, “ஹெலோ மேடம்!” என ஜனனி அருகே சென்றான் சூர்யா.
“சாரி! நிஜமா எனக்கு சரியா நியாபகம் இல்ல.. ஆனா எங்கேயோ பார்த்த நியாபகம் மட்டும் இருக்கு” என்று ஜனனி புன்னகையுடன் கூட, அருகே பிரியாவும் கதிரவனும் நின்றிருத்தனர்.
“ஹ்ம்! இப்ப நியாபகம் வரும்..” என்றவன்,
“ஐம் சூர்ய பிரகாஷ் லெவன் ஏ என்று கூற, சட்டென விழித்துக் கொண்டாள் ஜனனி.
“ஹே! சூர்யா!” என்றவள்,
“எவ்வளவு மாறிட்ட?” என்று ஆச்சர்யம் காட்ட,
“சூர்யா!” என்று வந்தார் பிரேமா.
“ம்மா! இது ஜனனி! என்னோட ஸ்கூல்மேட்” என்று கூற,
“ஹாய் ஆண்ட்டி!” என்ற ஜனனி ப்ரியாவையும் அறிமுகம் செய்து வைத்தாள்.
“நீ எங்கே இங்கே?” என்று சூர்யா கேட்க, இருவரும் தெரிந்து கொள்ள என நேரம் நகர பிரேமா அவர்கள் குடும்பத்தைப் பற்றி விசாரித்தார் பிரியாவிடம்.
“ஓஹ்! சுப்புசாமி தாத்தா குடும்பமா நீங்க?” என பிரேமா கேட்க,
“ஆமா ஆண்ட்டி!” என்றாள் ஜனனி.
“பழக்கம் இல்லை ஆனா அவரை எல்லாருக்கும் தெரியும்” என்றார் பிரேமா.