பாகீரதி வீட்டுக்குள் நுழையும் போது, கிருஷ்ணவேணியம்மாள் ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தார்.
“அம்மா! சாப்பிட்டீங்களா மா?”
சாவதானமாய் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அவரை ஏறிட்டு பார்த்தவர், “ம்ம்.ஆச்சு” என்றார். “காலேஜ்ல வேலை ஜாஸ்த்தி மா, அதான் ஹாஸ்பிடல் போயிட்டு நேரா காலேஜ் போயிட்டேன். நீங்க வரும்போது உங்களை ரிசீவ் பண்ண முடியலை”. அதற்கும் உம் கொட்டினார்.
வலிய ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு உடை மாற்றி முகம் கழுவி வந்தவர், சமையலறை சென்று பார்க்க, இரவு உணவு சமைக்கப்பட்டு அடுப்பு திட்டு துடைத்து, பாத்திரம் கழுவி வைக்கப்பட்டு சுத்தமாக இருந்தது.
“அம்மா! நீங்க எதுக்கு மா இந்த வேலையெல்லாம் பார்த்துட்டு?”
“ஏன் நான் இந்த வேலையை பார்க்கக் கூடாது? இது உன் வீடு, எனக்கு இங்க வேலை பார்க்க உரிமை இல்லைன்னு சொல்றியா? இல்லை, உங்களுக்கு தான் வயசாகிடுச்சுல, ஒரு ஓரமா தரதை தின்னுட்டு கிடங்கனு சொல்றியா?”
“அய்யோ என்னமா இப்படி சொல்லிடீங்க?! இது உங்க வீடு மா! இன்னைக்கு தானே ஊர்லேர்ந்து வந்தீங்க. அதான் ஏன் உங்களுக்கு சிரமம்னு கேட்டேன். மத்தபடி உங்க அளவுக்கு சுறுசுறுப்பு யாருக்கும் வராதே மா. வயசென்ன பெரிய வயசு”
அவர் பதிலில் சமாதானம் ஆனவர், புத்தகத்தை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார்.
பாகீரதி அவருக்கான உணவை எடுத்து போட்டுக் கொண்டு கிருஷ்ணவேணி பக்கத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்.
“உடம்பு இப்போ பரவாயில்லையா? டாக்டர் என்ன சொல்றாங்க?”
“இன்னைக்கு தான் மா செக் அப் போயிட்டு வந்தேன். ஒன்னும் பிரச்சனை இல்லைன்னு சொல்லிட்டாங்க. சாப்பாடுல மட்டும் கொஞ்சம் கவனமா இருக்கச் சொல்லியிருக்காங்க”
“ஆமா, உன்னோட உயிர்நாடியை எடுத்துட்டு வந்திருக்க, உன் உடம்புல நிறைய ஹார்மோனல் இம்பேலேன்ஸ் வரும். அதிக எண்ணெய், அதிக கொழுப்புள்ள சாப்பாடு சாப்பிட்டா ஜிவ்வுன்னு உடம்பு வெயிட் போட்டுடும். வெயிட் போட்டாலே எல்லா வியாதியும் வந்து சேர்ந்துடும்” அந்தக் கால எம்.ஏ அவர்!!
“சரிமா”
“நாங்கலாம் அந்த காலத்துல மெனோபாஸ் சமயத்துல எவ்ளோ வலி இருந்தும் பொறுத்துகிட்டோம், நீங்க என்னனா ஒரு சின்ன வலி கூட தாங்க மாட்டேன்றீங்க”
“என்னமோ போ. இந்த காலத்து டாக்டர்ங்களும் ஒன்னு சொல்றதுகில்லை. ஆ வு னா கத்தியை கையில எடுத்துடுறாங்க”
இதற்கு மேலும் விவாதம் செய்தால் அவர் தொடர்ந்து கொண்டே போவார் என்று தெரியும். மௌனமே மறுமொழியாய் தந்தார்!
“நீ எனக்கு போன் செஞ்சு சொன்னப்போ நான் திரிவேணி சங்கமத்துல நின்னேன். என்னடா நமக்கு உடம்பு சரியில்லாதபோ கூட அம்மா நம்மளை வந்து பார்க்கலைனு நினைச்சுடாத சரியா?”
“எனக்கு தெரியாதா மா உங்களை பத்தி?!”
“என்னை பத்தி தெரிஞ்சு என்ன பிரயோஜனம்? உன் புள்ளைங்களை பத்தி என்ன தெரியும் உனக்கு?”
‘இப்போது என்ன சொல்வது? தெரியும் என்றா? தெரியாது என்றா? எந்த பால் போட்டாலும் அவர் சிக்சர் அடிக்க தயாராயிருக்கும் போது பாகீரதியும் தான் என்ன செய்வார்?!
“அது வந்து மா…”
“என்ன புள்ளைங்களை வளர்க்குற நீ? ரெண்டும் ரெண்டு மூலைக்கு போய் நிக்குது. சம்பாதிச்சுட்டா மட்டும் போதுமா? புள்ளைங்களை விட பெரிய சொத்து என்ன சேர்த்துட முடியும் நீ?”
பாகீரதியின் கண்கள் கலங்கியது. அனுதினமும் இதே குற்றசாட்டுகளை கேட்டுக் கொண்டு தானே இருக்கிறார்? நெருங்கிய சொந்தத்திடமும் அதே குற்றசாட்டை கேட்கவும், அவர் மனம் வேதனையில் கசிந்தது.
“உன் பொண்ணு இருக்காளே? சின்னதுலேர்ந்து நான் படிச்சு படிச்சு சொன்னேன். பொட்டை புள்ளையை எப்படி வளர்கனுமோ அப்படி அடக்கி வளர்கனும்னு. அவனும் கேட்கலை, கடைசில போய் சேர்ந்துட்டான். நீயாவது அதுக்கபுறம் கொஞ்சம் கண்டிச்சு வளர்க்க மாட்ட? இன்னக்கு காலையிலே பார்க்குறேன், ரெண்டு ஆம்பளை புள்ளைங்க இருக்கிற இந்த வீட்ல தொடை தெரியுற மாதிரி ஒரு குட்டை பாவாடையை போட்டுட்டு வந்து நிக்குறா உன் மக”
“இனியனை பத்தி எனக்கு நல்லாவே தெரியும். ஆனாலும் அவன் மூணாவது மனுஷன். அவன் முன்னாடி அப்படி வந்து நிக்கலாமா? அதுவுமில்லாம அவ தினமும் அவன் கூட தான் காலேஜ் போராளாமே? அப்படியா?”
“ஆமா மா. சின்ன புள்ளைலேர்ந்து ஒண்ணா வளருதுங்க. அப்படி வித்தியாசம் பார்க்க முடியல”
“உன் கண்ணனுக்கு ஒன்னும் தெரியாது மா. ஆனா பார்க்குற எல்லார் கண்ணும் அப்படியா இருக்கும்? ரசபாசமா நினைக்க மாட்டாங்க. கட்டிக்க போரவங்களுக்கே ஒரு வரையறை உண்டு. நீ பாட்டுக்கு தினம் ஒரு மூணாவது மனுஷன் கூட உன் பொண்ணை அனுப்புறியே. நாளைக்கு ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுனா எல்லாரும் உன்னை நோக்கி தானே விரலை நீட்டுவாங்க?!”
“அம்மா….”
“சரி, அந்த ரெண்டாவது ஒன்னு இருக்கே, அவனாவது ஒழுக்கமா வருவான்னு நான் கனவு கண்டுட்டு இருந்தேன். எங்க போறான், வரான் ஒன்னும் தெரியல. பேசுனா சரியா பேசக் கூட மாட்டேங்குறான். அது என்ன பெரியவங்கனு ஒரு மட்டு மரியாதை வேண்டாம்? பேசுறதுக்கு பதில் சொல்லாம இருக்கிறது என்ன பழக்கம்?”
“என்னடா அம்மா நம்மளை குறை சொல்லிட்டே இருக்காங்களேனு மனசு விட்டுறாத. நான் இப்போ பேசாட்டி, பின்னாடி இந்த உலகமே உனக்கு பிள்ளையை ஒழுங்கா வளர்க்க தெரியலைனு உன்னை தான் பழி சொல்லும், பார்த்துக்கோ!”
“என் மேலேயும் தப்பு இருக்கு. தோட்டம் துரவு விட்டுட்டு வர முடியாதுனு ஊர்லேயே நின்னுட்டேன். நான் இங்க உனக்கு ஒத்தாசையா இருந்திருக்கணும். நடந்தது நடந்து போச்சு. இனி இந்த ரெண்டு புள்ளைங்களை என் கன்ட்ரோல்ல விட்டுடு. நான் பார்த்துக்குறேன்”
பாகீரதிக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. இதை அவர் எதிர்பார்த்திருந்தாலும், எப்படி சமாளிக்க போகிறோம் என்ற பதைபைப்பு அவரை ஆட்டி படைத்தது. அபி கூட சமாளித்து விடலாம், ஆனால் ரிபு! பாகீரதிக்கு தலை சுற்றியது!!
நேரம் வேறு கடந்துக் கொண்டிருக்க, ரிபு, அபி இருவருமே வந்தபாடில்லை. மணியையும், வாசலையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணவேணியை பார்த்தாலே பாகீரதிக்கு திக்கென்றிருந்தது.
சற்று நேரத்தில் ரிபு வந்தாள். கிருஷ்ணவேணி அங்கு அமர்ந்திருப்பதை கண்டுகொள்ளாமல் அவள் உள்ளே செல்ல பாட்டி அவளை தடுத்தார், “சுந்தரி”
“நான் ஒன்னும் சுந்தரி இல்லை”
“நீ சுந்தரி இல்லையா? அம்மாடி பாகீ! இது உன் பொண்ணு திரிபுரசுந்தரி இல்லையா? நான் அவனு தானே நினைச்சு பேசிட்டு இருந்தேன்!!”
“பாட்டி! என் பேரு சுந்தரி இல்லை, ரிபு”
“இந்த ரிபு, பொறி, சொறியெல்லாம் என் வாயில வராது, நான் சுந்தரினே கூப்பிட்டுகிறேன். ஆமா, ஏன் இவ்வளோ லேட்டு?”
“ஸ்பெஷல் கிளாஸ் இருந்துச்சு”
“எப்படி வந்தே?”
“பைக்ல”
“நீ பைக் ஓட்டுவியா?”
“நான் ஓட்டலை. பைக் டேக்சில வந்தேன்”
“பைக் டேக்சியா? அதை ஓட்டினது பொண்ணு தானே?”
“பாட்டி நான் எப்போ வரேன் போறேன், எதுல வரேன் போறேன் இதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாதது. சும்மா நொய் நொய்னு ஏதாவது கேட்டுட்டே இருக்காதீங்க”
“ரிபு. அவங்க உன் பாட்டி, பார்த்து பேசு”
“ஓ, அவங்க வந்ததும் நீங்கலாம் என்னை பேச வந்துடீங்க இல்லை?!”
“அம்மாடி, அவ உன் அம்மா. அவ பேசாம வேற யாரு பேசுவாங்க?!”
“அம்மானு பேரு இருக்கிறவங்க எல்லாம் அம்மா ஆயிட முடியாது”
அவள் பேச்சில் பாகீரதி அடிபட்டு போய் நிற்க, உள்ளே சென்று கதவை அறைந்து சாற்றிக் கொண்டாள்.
“இந்த காலத்து புள்ளைங்களுக்கு பெத்தவங்களோட வலியும் வேதனையும் புரியுறதில்லை. ஆனால் புரியுற காலமும் வரும். அவ பேசுனதை ஒன்னும் மனசுல வச்சிக்காத மா. நீ வருத்தப்பட்டு ஒரு சொட்டு கண்ணீர் விட்டாலும் அந்த பாவம் உம்பொன்னுக்கு தான் போய் சேரும்”.
பாகீரதி கண்ணீர் விடவில்லை தான்! அவர் கண்களும் மனமும் மரத்து போயிருந்தது! தான் பிள்ளைகளுடன் ஓட்டும் உறவுமாய் பழகாவிட்டாலும், அம்மா, அப்பா இரு ஸ்தானத்திலும் இருந்து ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றிக் கொண்டு தானே இருக்கிறார்?? அம்மாவே இல்லை என்று சொல்கிற அளவுக்கு அவர் என்ன செய்து விட்டார்?
இன்னும் தன் இரண்டாவது மகன் மட்டும் தான் தன்னை குறை சொல்லவில்லை, அவனும் சொல்லிவிட்டால்…..
பேசாமலே இருப்பதற்கு ரிபு போல் ஏதாவது பேசிவிட்டால் கூட தேவலாம்.
மணி பத்தை நெருங்கிக் கொண்டிருக்க, அபி இன்னும் வந்திருக்கவில்லை. என்ன நினைத்து கொண்டிருக்கிறான் இந்த பையன்? இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டும். அவன் அலைபேசிக்கு அழைத்தவருக்கு அவன் அதை எடுப்பான் என்ற நம்பிக்கை இல்லை. பெரும்பாலும் எடுக்கவே மாட்டான்.
ரிங் போய்க்கொண்டேயிருக்க அவன் எடுக்கவில்லை என்றவுடன் அவர் அழைப்பை துண்டிக்க எத்தனித்த நொடி, அழைப்பு ஏற்கப்பட்டது.
“அபி! எங்கடா இருக்க? என்னடா நினைச்சுட்டு இருக்க உன் மனசுல? எப்ப கேட்டாலும் ப்ரெண்ட்ஸ் கூட படிக்க போறேன்னு சொல்ற, நைட் எல்லாம் வர மாட்டற? இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும் எனக்கு”
“அம்மா…” எதிர்புறம் அபியின் குரல் உடைந்து கசிந்தது
“அபி? என்னாச்சுடா? அழறியா? என்னாச்சு அபி?”
“அம்மா! நான்…. என்னை ஸ்டேஷன்க்கு கூட்டிட்டு வந்துட்டாங்க மா”
உலகம் சுழலும் என்று படித்திருக்கிறார், இன்று தான் அதை அனுபவித்து பார்த்தார். அவர் எப்படி காவல் நிலையம் வந்து சேர்ந்தார் என்று அவருக்கே ஆச்சரியம் தான். தானும் வருகிறேன் என்று கூறிய கிருஷ்ணவேணி அம்மாளை ரிபுவுக்கு துணை வைத்துவிட்டு, அமிழ்தினியனை நேரே பேகூர்(Begur) போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லிவிட்டு, அவரும் அங்குச் சென்றார்.
பாகீரதி கலங்கிய கண்களுடன் அமர்ந்திருக்க, அமிழ்தினியன் அவர் பக்கத்தில் அவர் கையை பிடித்தபடி ஆறுதல் கூறிக் கொண்டிருந்தான்.
அபியுடன் சேர்ந்து அவன் வயதை ஒட்டிய ஐந்தாறு பிள்ளைகளும் அங்கிருக்க, ஒவ்வொருவரின் பெற்றோரும் வந்து கொண்டிருந்தனர். பெற்றோர் அனைவரும் வந்ததும், படிக்கும் பிள்ளைகள் என்பதால் இந்த மட்டில் எச்சரித்து அனுபவதாக கூறி இன்ஸ்பெக்டர் அனுப்பி வைத்தார். வீடு வந்து சேரும் போது நள்ளிரவை தாண்டியிருந்தது. அமிழ்தினியன் அபியிடம் இதை பற்றி எதுவும் கேட்க வேண்டாமென்று கூறியிருக்க, பாட்டி உட்பட யாரும் அவனை எதுவும் கேட்கவில்லை. பாகீரதி அவனை முகம் கொடுத்துக் கூட பாரவில்லை.
அபினவ் இரு தினங்களாக கல்லூரி செல்லாமல் வீட்டில் விடுப்பு எடுத்திருந்தான். பாகீரதி அவனுடன் பேசினார் இல்லை. ஸ்டேஷன் சென்று வந்த இரண்டாம் நாள் அமிழ்தினியன் வந்தான்.
“வா இனியா, சாப்பிடுறியா?”
“இல்லை பாட்டி நான் சாப்பிட்டேன், நீங்க பாட்டி?”
“ஆச்சு பா”
“அபியை பார்த்துட்டு போலாம்னு வந்தேன்”
“போய் பாரு போ. ரெண்டு நாளா ரூம்குள்ள தான் அடைஞ்சு கிடக்குறான். கொஞ்சம் புத்தி மதி சொல்லு”
இன்றைய நிலைமையில் அபிக்கு தேவை புத்திமதி இல்லை, அவனுக்கு என்ன வேண்டுமென்று அமிழ்தினியன் அறிவான்.
எதுவும் பேசாமல், எந்த விவரங்களும் கேட்காமல், அறிவுரை வழங்காமல் அவன் தோள் மீது கை போட்டவன், “டேய்! நான் இருக்கேன் டா. நாங்க எல்லாம் இருக்கோம். உன்னை அப்படி விட்டுடுவோமா. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்” எனவும் அபி உடைந்து கதறிவிட்டான்.
அவன் கதறிய சத்தம் கேட்டு வீட்டில் மற்றவகளும் ஓடி வர, அவன் அழுவது பொறுக்காமல் பாகீரதி அவன் பக்கம் அமர்ந்து அவன் கைகளை பிடித்துக்கொண்டு “அபி! விடுறா. என்ன நடந்து போச்சுன்னு இப்படி அழுவுற? இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை” எனவும், “சாரி மா! எனக்கு சின்ன புள்ளைலேர்ந்து பைக்னா ரொம்ப பிடிக்கும் மா. ஸ்கூல் படிக்கும் போதே இந்த மாதிரி ரேசிங் இருக்கிறதை தெரிஞ்சிகிட்டேன். அப்புறம் ‘டி.டி.வி நேசன்’ விடீயோஸ் நிறைய பார்த்தேன். அவர்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை மாதிரி பைக் எடுத்துட்டு வேகமா உலகமெல்லாம் சுத்தணும்னு ஆசை. நீங்க ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருந்தப்போ, அவர் இங்க பெங்களூர் வந்திருந்தார். அவரை பார்க்க தான் போயிருந்தேன். நாங்க ஒரு க்ரூப்பே இருக்கோம். காலேஜ்ல என் ஃப்ரெண்ட்டு ஒருத்தன் தான் இந்த ஸ்ட்ரீட் ரேசிங் (Street racing) பத்தி சொன்னான். லீகலா ரேசிங் பண்றதுனா நிறைய செலவு ஆகும். ஆனா இந்த ஸ்ட்ரீட் ரேசிங்க்கு ஒரு பைக், பெட்ரோல், காலியான ரோடு இருந்தா போதும். தினம் ஏதாவது ஒரு ரோடு செலக்ட் பண்ணி ரேசிங், வீலிங் பழகுவோம். பெரும்பாலும் நைட் தான் செய்ய முடியும் அப்போ தான் பப்ளிக் யாரும் இருக்க மாட்டாங்க. போலீஸ் பிடிப்பாங்கனு தெரியும், போலீஸ் வந்தா பைக்ல பறந்துடலாம், அவங்க கையில சிக்க முடியாதுன்னு ஒரு குருட்டு நம்பிக்கைல பண்ணிட்டேன் மா. நேத்து எப்படியோ மாட்டிகிட்டோம். ரொம்ப ஒரு மாதிரி அவமானமா போச்சு மா. ச்சே”
தலையிலடித்துக் கொண்டு அழும் அவனை மடி தாங்கி ஆறுதல் படுத்தினார். அவன் தலையை ஆதுரமாய் கோதிவிட்டார். யாராலும் கொடுக்க முடியாத ஆறுதலை அந்த தலை கோதல் கொடுத்துக் கொண்டிருந்தது. அந்த தலைக் கோதலிலே அவன் மனதிலுள்ள பாரத்தையெல்லாம் விரட்டி அடித்துக் கொண்டிருந்தார். நானிருக்கிறேன் என்று அவன் மூளைக்கு செய்தி அனுப்பிக் கொண்டிருந்தார்!!
அம்மாவின் மடிக்கும், அம்மாவின் தலை கோதலுக்கும் தான் மனதை கற்பூரமாய் கரைக்கும் வலிமை உண்டு!!அவனும் கரைந்துக் கொண்டிருந்தான்!!!
இனிமேல் அவர் பார்த்துக் கொள்வார் என்று தெரிந்து அமிழ்தினியன் அங்கிருந்து விலகினான்.
“தேங்க்ஸ் அதிப்பா”
“எதுக்கு?”
“நீ தானே பண்ணினது?”
“ஏய் லூசு நான் என்ன பண்ணினேன்?”
“எனக்கு என்ன நடந்துச்சுனு சரியா தெரியாது, ஆனால் இதுக்கு பின்னாடி நீ தான் இருக்கேன்னு தெரியும். நான் அன்னைக்கு அபி ‘டி.டி.வி நேசன்’ விடீயோஸ் பார்கிறான்னு உன் கிட்ட சொல்லும் போதே கண்டிப்பா நீ அவனை ஃபாலோ பண்ணி ஏதாவது கண்டுபிடிச்சிருப்ப, கண்டிப்பா இன்னைக்கு நடந்த அரெஸ்ட் இதெல்லாம் உன் வேலையா தான் இருக்கணும்னு என் உள்ளுணர்வுக்கு தோணுது. இல்லேனா நைஸ் ரோட்டுல ரேசிங் பண்ணிட்டு இருந்தவனை எதுக்கு பேகூர் ஸ்டேஷன்ல புடிச்சு வைக்கிறாங்க?”
கண்கள் ஒளிர்விட அவளை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது. பின்னே அவன் கஷ்டப்பட்டு அபியின் ரகசியம் அறிந்து, தினம் அவனை பின் தொடர்ந்து விஷயம் அறிந்தபின், இதை வீட்டில் கூறினாலோ , அறிவுரை கூறினாலோ ஒரு மாற்றமும் நேர போவதில்லை என்பதை அறிந்து, தனக்கு தெரிந்த நண்பன் ஒருவன் மூலம் பேகூர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் பேசி கைது செய்வது போல் செய்து, இவன் எதுவும் தெரியாது போல் சென்று கூட்டி வந்தால் ஒரே நிமிடத்தில் அத்தனையும் அவள் போட்டு உடைத்து விட்டாள்.
“இவ பெரிய சி.ஐ.டி சுந்தரி. வந்துட்டா கண்டுபிடிக்க”
“டேய்! நான் சி.ஐ.டி சுந்தரி இல்லை, வேணும்னா ரிவால்வர் ரிபுனு வச்சிக்கோ”
அவன் பட்டென்று சிரித்துவிட்டான்!!
அவன் சிரிப்பு அவளுக்குள் இதுவரை இருந்த புழுக்கத்தை நொடியில் விரட்டியது. மனம் மிக லேசாக அவன் மீண்டும் சுமூகமாய் பேசியது சொல்லா முடியா ஆறுதலாய் வழங்கியது. இனிமேல் எதற்காகவும் அவனை கோபப்பட வைக்கக் கூடாதென்று அவள் மனம் உறுதி செய்துக்கொண்டது……
அவர்கள் இருவரின் இணைந்த நகைப்பொலியை கிருஷ்ணவேணி அம்மாள் பார்த்தபடி நின்றுக்கொண்டிருந்தார்……