“நீங்க அண்ணனுக்கு பார்த்த பொண்ணு அண்ணனை ஓகே சொல்லிச்சுன்னா என்ன பண்ணுவீங்க?” என்று கேட்க, பிரேமா, மல்லிகா இருவரும் அஞ்சலியைப் பார்த்தனர்.
சத்தியமாய் எதுவும் புரியவில்லை அஞ்சலிக்கு. அன்னையிடம் விளையாட்டாய் பேசிக் கொண்டு இருக்கிறான் என்ற வரையில் மட்டுமே புரியல, அவளும் பார்த்துக் கொண்டு இருந்ததால் பிரேமா, மல்லிகா இருவரும் இவள் புறம் திரும்பவும் என்னவென புரியாமல் விழித்தாள் அவள்.
“ப்ச்! ம்மா! நான் என்ன பேசிட்டு இருக்கேன்.. நீங்க என்ன எலியை திரும்பி பார்க்குறீங்க?” என்றதும் முறைத்த அஞ்சலி,
“நான் மட்டும் வெளில காட்டிக்க கூடாதாம்.. கொழுப்பை பாரு.. உனக்கு இருக்கு டா ஒரு நாளைக்கு” என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு அமர்ந்திருக்க,
“சூர்யா!” என கண்டிப்பு கலந்த அழைப்பு இரு அன்னைகளிடம் இருந்தும்.
“ஓகே சாரி! அதை விடுங்க.. நீங்க பார்த்த பொண்ணு மல்லி ம்மா.. கோவில்ல நீங்க பார்த்த பொண்ணு” என்று அழுத்தி கூறவும்,
“உன் பிரண்ட்டா?” என்று பிரேமா கேட்க,
“ம்ம் அதே தான்!” என்றான்.
“அந்த பொண்ணு தான் அண்ணனை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிச்சுன்னா என்ன செய்வீங்கன்னு கேட்குறேன்” என்றான்.
“அட ஏன் டா நீ வேற! அக்காவே ஒவ்வொண்ணா நினச்சு பிரஷர் எடுத்துட்டு இருக்காங்க.. நீ வேற இப்படி ஆசை குடுக்காத.. நீ முதல்ல சொல்ல வந்ததை சொல்லு” என்று பிரேமா கூறவும்,
“அதானே! நான் சிவனேனு ஜெய் சொன்னதுக்காக அமைதியா இருக்கேன்.. அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டா தான் எனக்கு நிம்மதியா தூக்கமே வரும்” என்றார் மல்லிகாவும்.
“அப்ப இனிமேல் நீங்க சீக்கிரமே நிம்மதியா தூங்கி எழுந்துக்கலாம்.. அந்த பொண்ணு அண்ணனை கல்யாணம் பண்ணிக்க ஓகே…” என்று இழுத்து இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்து,
“சொல்லிடுச்சு!” என்று கூறி பார்க்க, நம்பவா வேண்டாமா என்பதை போலவும் குழப்பமாயும் பார்த்து நின்றனர்.
“என்ன டா உளர்ற?” பிரேமா கேட்க,
“ப்ரோமிஸ் ம்மா.. போன வாரம் நீங்க என்கிட்ட சொல்லவுமே ஜனனி வீட்டுல போய் பேசிட்டேன்.. ஜனனிக்கு கொஞ்சம் யோசிக்க டைம் வேண்டி இருந்துச்சு.. இன்னைக்கு மார்னிங் தான் என்னை கூப்பிட்டு சொன்னா.. அவளுக்கு மட்டும் இல்ல அவங்க வீட்டுல கூட எல்லாருக்கும் சம்மதம் தானாம்.. கோவிலுக்கு வந்ததே நல்ல மாப்பிள்ளை அமையணும்னு தானாம்” என அவன் கூற கூற, ஆச்சர்யமும் சந்தோஷமுமாய் பார்த்து நின்றனர் இருவரும்.
பேச்சே வரவில்லை.. சாதாரணமாய் சொல்லி இருந்த ஒரு விஷயத்தை சத்தமே இல்லாமல் முடித்துவிட்டு அல்லவா வந்திருக்கிறான்.
“சூர்யா! நிஜமாவா சொல்ற? நாங்க சும்மா பேசிட்டு தானே டா இருந்தோம்? ஜெய் கூட இப்ப வேணாம்னு சொன்னானே? நீ எப்ப டா இந்த வேலையெல்லாம் பார்த்த? என்னனு அவங்க வீட்டுல பேசின? உன்னை நம்பி எல்லாரும் சம்மதம் சொல்லிட்டாங்களா?” கிண்டலாய் கேட்க நினைத்தாலும் முடிவில் ஆச்சர்ய பாவமே வந்து நின்றது பிரேமாவிற்கு.
“இந்த கிண்டல் தானே வேணாம்ன்றது? அவளைப் பத்தி உங்களுக்கு தெரியாது ம்மா.. அண்ணனுக்கு பாக்குறதுக்கு மட்டும் இல்ல கேரக்டர்ஸ்லயும் நல்லாவே ஒத்து வரும்.. நீங்க சொல்லவும் எனக்கு ஜெய்க்கு ஜனனியை விட யாரும் பெட்டரா இருப்பாங்கன்னு நினைக்கவே முடியல.. அதான் மனசுல தோணவும் எல்லாரும் இருக்கும் போது போய் பேசிட்டு வந்துட்டேன்” என்றான்.
“சூர்யா! டேய்! சூர்யா!” என்று அழைத்துக் கொண்டே சூர்யா கண்ணங்களைப் பற்றிய மல்லிகாவிற்கு பேச்சு நின்று போயிருந்தது.
கண்ணின் ஓரம் கண்ணீர் துளிர்த்திருக்க, “மல்லி ம்மா! இதெல்லாம் டூ மச்!” என்று முறைத்தான் அவரை.
“டேய்! உனக்கும் கொஞ்சம் மேல ஏதோ இருக்கு டா” பிரேமா கிண்டல் செய்ய,
“அது சரி தான் ம்மா.. ஆனா உங்களுக்கு மகனா பிறந்தும் இருக்கு பார்த்திங்களா அது தான் அதிசயம்” என்று சூர்யா, சில நொடிகளுக்கு பிறகே புரிந்து முறைத்தார்.
“ஓகேஓகே! எல்லாமே ஜனனி வீட்டுல சொல்லிட்டேன்.. அவங்களும் புரிஞ்சிகிட்டாங்க.. எந்த பிரச்சனையும் இல்ல.. அவங்க பேமிலி பத்தி தான் அன்னைக்கே சொல்லிட்டேனே.. நாம எல்லாரும் போய் பேசினா கரெக்ட்டா இருக்கும்.. அண்ணன்கிட்ட மட்டும் பேசினா போதும்.. அவனுக்கும் பிடிக்கும்னு நம்புறேன்” என்றான் சூர்யா.
“ஆனா இப்ப தானே மாமாகிட்ட அவனுக்கு பொண்ணு பாக்குறதை பேச வேண்டாம்னு சொல்லி இருக்கோம்?” என்று பிரேமா கேட்க,
“அவரை எல்லாம் நான் பார்த்துக்குறேன்.. இந்த ஜெய்கிட்ட பேசுறi பொறுப்பை மட்டும் யாராவது எடுத்துக்கோங்க” என்று மல்லிகா கூற,
“அதுக்கு தான் இருக்கானே! அவன் பார்த்துப்பான்” என்று பிரேமா கூற,
“எவன் அவன்?” என்று சூர்யா கேட்க,
“வேற யாரு டா.. நீயே தான்.. இங்கேயும் நீ தான் பேசணும்” என்றார் பிரேமா.
“கோர்த்து விடுறதை எவ்வளவு அழகா மேனேஜ் பண்றீங்க ம்மா..” என்றவன்,
“பேசலாம்.. ஆனா..” என்று யோசித்து,
“சரி பேசலாம்.. ஆனா நீங்களும் இருக்கனும்.. ரெண்டு பிட்டு என் கூட சேர்த்து பேசணும்” என்று முடிவு செய்ய, அதுவரையுமே அவர்களை பார்த்தபடி தான் அமர்ந்திருந்தாள் அஞ்சலி.
அவளுக்கு புரிந்தது இன்று அவள் சூர்யாவுடன் பார்த்தது ஜெய்க்கு பார்த்திருக்கும் பெண். ஜெய்யிடம் இனி தான் பேச வேண்டும் போல.. அனைவருக்கும் அந்த பெண்ணையும் தெரியும் போல. நினைத்தபடி அமர்ந்திருக்க,
“அஞ்சலி! வேற எதுவும் வேணுமா ம்மா?” என்றார் மல்லிகா.
“ஹான்! இல்ல இல்ல.. போதும்” என்றவள் எழுந்து செல்ல, அவள் படியேறி செல்லும் வரை பார்த்தவர்,
“சூர்யா! உன் வாழ்க்கையும் எங்களுக்கு ரொம்ப முக்கியம்.. புரிஞ்சிப்பன்னு நினைக்குறேன்” என்று மல்லிகா கூற, பிரேமா எதுவும் பேசாமல் மகனைப் பார்க்க, சூர்யா சிரித்தானே தவிர பதில் கூறினான் இல்லை.
*****************
“ம்மா! இன்னுமா ஜேக் வர்ல?” என்று மாலை தன் வீட்டிற்கு மகளுடன் வந்திருந்தாள் பிரியா.
“இல்லையே! நானும் அவளுக்காக தான் பார்த்துட்டு இருக்கேன்.. உனக்கு போன் பண்ணினாளா? நீ போன் போட்டியா?” மீனாட்சி கேட்க,
“பண்ணினேன்.. பண்ணாம எப்படி இருப்பேன்.. கேட்டதுக்கு வீட்டில வந்து சொல்றேன்னு சொல்லிட்டா” என்றாள் ஆவலுக்கு விடை தெரியாமல்.
“சூர்யாவை பார்த்துட்டு தான் ஆபீஸ்க்கே போவேன்னு சொன்னா.. சூர்யாகிட்ட என்ன சொன்னான்னு தெரிஞ்சா நம்ம வேலையாச்சும் சரியா ஓடும்.. எல்லாம் விளையாட்டு தான் இவளுக்கு” என ஜனனியை திட்டியபடி பாலைக் காய்ச்ச, மகிழினி பாட்டியிடம் தாவிக் கொண்டாள்.
“அதான் ம்மா.. என்னாலையும் என்னனு தெரியாம அங்கே இருக்க முடியல.. அவருக்கு போன் பண்ணி சொல்லிட்டு இங்கே வந்துட்டேன்” என்றாள் பிரியா.
“அவ முகத்தை வச்சு எல்லாம் ஒன்னும் சரியா சொல்ல முடியாது.. வாயாடினாலும் சரியான அமுக்குனி வேற!” என்ற மீனாட்சிக்கு பிரியா சிரிக்க, வாசலில் ஸ்கூட்டி சத்தம் கேட்கவும் மகிழினி தான் ஓடினாள் சித்தியை வரவேற்க.
“மகி அம்மு!” என அவளை தூக்கிக் கொண்டு ஜனனி உள்ளே வர, அவளை பார்த்தபடி இருவரும் நின்றனர்.
“செம்ம டையார்ட் மா.. ஒரு காபி!” என்றவளுக்கு மீனாட்சி எடுக்க செல்ல,
“இவ ஒருத்தி! கேட்டா தான் பதில் சொல்லுவா!” என சத்தமாய் கூறிய பிரியா,
“காலையில சூர்யாவை பார்த்து பேச போறேன்னு சொன்னியே டி? பார்த்தியா? என்ன பேசின?” என நேரடியாய் கேட்க,
“அதானே! தெரிஞ்சிக்காமல் தூக்கம் வராதே உனக்கு!” என விளையாட்டு காட்டினாள் ஜனனி.
“என்னனு சொல்லு டி.. ஒரே புலம்பல்.. நல்ல சம்மந்தம் தத்து பித்துன்னு!” என் மீனாட்சியும் காபியை கொடுத்து சொல்ல,
“ஆமா! நான் மட்டும் தான் புலம்பினேன்.. உங்களுக்கெல்லாம் ஒன்னும் இல்ல அப்படி தானே?” என அன்னையுடன் சண்டைக்கு நின்றாள் பிரியா.
“பார்த்தது சரி டி.. என்னனு பேசின? எங்ககிட்ட நீ கலந்துக்கவே இல்ல.. அம்மாக்கு விருப்பமா இல்லையானு கேட்கல.. என் புருஷன்கிட்ட ஒரு வார்த்தை சொன்னியா? எதுவும் சொல்லாம நீ பாட்டுக்கு போயிருக்க.. அப்படினா வேண்டாம்னு சொல்ல தான் போயிருக்க.. எங்கங்கிட்ட சொன்னா உன்னை கண்வின்ஸ் பண்ணிடுவோம்னு சொல்லாம போய்ட்ட அப்படி தானே?” என்று பிரியா கேட்க,
“அவ இன்னும் என்ன சொன்னானே சொலலல.. அதுக்குள்ள நீ ஏன் வாரி இறைக்குற? பொறு!” என்ற மீனாட்சி,
“சொல்லு ஜனனி! என்ன சொன்ன? சூர்யா தம்பி என்ன சொன்னாங்க?” என அமைதியாய் கேட்டார்..
“ம்மா! எனக்கு உங்களுக்கு விருப்பம், அக்கா விருப்பம் எல்லாம் புரிஞ்சது.. ஆனாலும் நமக்கு அவங்க கொஞ்சம் பெரிய இடம் தானே? அதனால தான் யோசிச்சேன்.. ஆனா சூர்யா அப்படி ஸ்டேட்டஸ் பாக்குறவன் இல்லையே? அவனே வந்து கேட்குறான்னா அவங்க வீட்டுல பேசினது நிஜமா தானே இருக்கும்?” என்றாள் ஜனனி.
“இவ்வளவு யோசிச்சியா ஜேக்? உன்னை நான் இன்னும் சின்ன பிள்ளையாவே நினைச்சுட்டு இருக்கேன்” என்றாள் பிரியா.
“பின்ன! அம்மா நமக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க.. எல்லாம் யோசிக்கணும் இல்ல? சரினு தோணுச்சு அதான் சூர்யாகிட்ட சொல்லி அவங்க வீட்டுல வந்து பேச சொன்னேன்” என்று கூறவும்,
“அப்ப நல்ல விஷயம் தான் சொல்லி இருக்க.. இதை ஏன் டி எங்ககிட்ட சொல்லாம தவிக்க விட்ட? முதல்ல உன் மாமாக்கு சொல்லணும்.. அவரும் தான் டென்ஷனா இருப்பார்” என்று பிரியா மொபைலை எடுக்க,
“உனக்கு உன் புருஷனுக்கு நான் சொல்லலைனு தானே க்கா கோபம்? உன் புருஷனை உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு நான் தான் சொன்னேன்.. சூர்யாகிட்ட என்ன பேச போறேன்னும் மாமாவோட ஒப்பீனியனும் ஏற்கனவே மாமாகிட்ட கேட்டுட்டேன்..” என்று சிரித்தபடி ஓட,
“அடிப்பாவி! உன்கூட சேர்ந்து அவரையும் என்கிட்ட பொய் சொல்ல வைக்குறியா? உன்னை!..” என பிரியா ஜனனியைப் பிடித்து மொத்த, மகிழினியும் காரணம் புரியாமல் சிரித்தபடி ஜனனியை தன் பிஞ்சு கைகளால் அடிக்க ஆரம்பித்தாள்.