ஆனாலும் தந்தை செய்து வைத்திருப்பதுடன் தலைக்கு மேல் இருக்கும் இந்த புதிய கடன் அவன் உதட்டில் இருந்த புன்னகையை உடனே அழிக்க,
“ஜானு!” என்றான்.
‘அவளிடம் கூற வேண்டும் தானே? நிச்சயம் கூற வேண்டும்.. திருமணத்தின் பின் தெரிந்தால் அவளோடு அவள் குடும்பத்தினர் என்ன நினைக்க கூடும்?’ என்ற சிந்தனைகள் தலைக்கு மேல் வலம் வர, அழைத்துவிட்டான்.
“ஜானு? நான்தானா?” புன்னகையோடு அப்போதுமே கிண்டலாய் தான் கேட்டாள்.
“நாளைக்கு மீட் பண்ணலாமா?” என்று கேட்கும் பொழுது வெளியே கதவை திறக்கும் சத்தம் கேட்க, எட்டிப் பார்த்தவன் சூர்யாவோடு அஞ்சலியும் செல்வதை பார்த்தான்.
தம்பியை அழைக்க நினைத்தவன் பின் முடிவை மாற்றிக் கொண்டு தன் அறைக் கதவை சாற்றிக் கொள்ள,
“ஹெலோ! லைன்ல இருக்கீங்களா?” என்ற குரல்.
“ப்ச்! சாரி ஜானு.. சொல்லு” என்றவன் அழைப்பு இயல்பாய் வந்தது.
“நீங்க தான் என்னவோ சொன்ன மாதிரி இருந்துச்சு.. நிஜம் தானான்னு கேட்டேன்” என்றாள்.
அதற்குள் பேசியதை நினைவு கூர்ந்து கொண்டு வந்தான்.
“ஆமா! முக்கியமான விஷயம் ஒன்னு பேசணும்.. சொல்லணும்” ஜெய் கூற,
“ரொம்ப அப்செட்டா இருக்கீங்க இல்ல?” என்றாள்.
“என்ன?”
“இல்ல! சம்திங் இஸ் மிஸ்ஸிங்” என்றவளுக்கு அவன் மனமும் கவனமும் இங்கே இல்லை என்பது புரிந்தது.
“ஒன்னும் ப்ரோப்லேம் இல்ல.. நாளைக்கு பார்க்கலாம்.. மார்னிங் ஆர் ஈவினிங்னு மெசேஜ் பண்ணிடுங்க.. இப்ப தூங்குங்க” என்று அவளே கூற,
“சாரி பா” என்றான் வருத்தமாய்..
“டாக்டர் சார்! ஏதோ ப்ரோப்லேம் புரியுது.. அதுல ஏன் இதையும் தலையில போட்டுக்குறீங்க? நான் எங்க போய்ட போறேன்.. அப்புறமா கூட பேசிக்கலாம்.. நீங்க கொஞ்சம் நார்மல் மோட்க்கு வந்து தூங்கினா ஐம் ஹாப்பி!” என்றவள்,
“தீர்க்க முடியாத பிரச்சனைனு என்ன இருக்கு.. எல்லாத்துக்குமே ஒரு முடிவு இருக்கு.. நல்லதோ கெட்டதோ நடக்கறதை நிறுத்த முடியாது.. அதுக்கு பீல் பண்ணிட்டு மட்டும் இருந்தா முடிஞ்சிடாது..” என்று கூறவும் அவன் கேட்டபடி இருக்க,
“என்ன ப்ரோப்லேம்னு தெரியாம ஓவரா ப்ளேட் போட விரும்பலை.. ஆனா நீங்க இப்படி இருக்குறது எனக்கு என்னவோ நல்லா இல்லை.. இப்பவே கேட்டுடுன்னு தான் மனசு சொல்லுது.. ஆனா உங்க மைண்ட்செட் முக்கியம்.. சோ இப்ப உங்களுக்கு ரெஸ்ட்..” என்று அவள் தன் எண்ணத்தை கூற,
மனதில் அன்றைய தினம் சூர்யா என நினைத்து தன்னிடம் ஜனனி பேசியது நினைவில் வந்தது.
எதையும் மனதில் வைத்து கொள்வதில்லை.. அதற்காக காத்திருக்கும் எண்ணமும் அவளுக்கு இருந்ததில்லை. இன்று அவனுக்காய் அவள் யோசித்தது பிடித்திருந்தது.
நாளை தன் நிலை கூறிய பின்பும் இந்த ஜானு புரிந்து தன்னுடன் இருக்க வேண்டும் என்றும் மனம் வேண்டியது.
“இந்த டாக்டர் சார் எனக்கு பிடிக்கலை.. உர்ருனு உங்க முகம் இப்ப எப்படி இருக்கும்? கிளினிக்ல நான் பார்த்திருக்கேன்.. நல்லாவே இருக்காது.. நாளைக்கெல்லாம் என்னை பார்க்க இந்த உர்ரோட வராதீங்க.. ஓடிடுவேன்” ஜனனி கூற, சில நொடிகளுக்குள்
“விட்டா ஓடிக்கோ!” என்ற வார்த்தை கொஞ்சம் இலகுவாய் வந்தது அவனிடம் இருந்து.
“ஹப்பா! ஓடிடுனு சொல்லிடுவீங்களோனு நினச்சு பயந்துட்டேன்..” அவள் கூற,
“நீ பயந்ததை நானும் நம்பிட்டேன்” என்ற ஜெய் இப்பொழுது கொஞ்சம் முன் வந்திருந்தான்.
“தாட்ஸ் பெட்டர்..” என்றவள்,
“நாளைக்கு வெயிட் பண்றேன்” என்றுவிட்டு வைத்துவிட, மீண்டும் தன்னை சுற்றி உள்ள சூழளுக்குள் சிக்கிக் கொண்டான் ஜெய்.
**************
காரில் சென்று கொண்டிருந்த சூர்யா யோசித்த வண்ணம் வர, அஞ்சலி அருகே அமர்ந்திருந்தவள் அவனை ஓரக் கண்ணால் பார்ப்பதும் வெளியே பார்ப்பதுமாய் இருந்தாள்.
இப்போதுமே இப்படி நட்ட நடு இரவில் அவளை அழைத்துக் கொண்டு விட செல்லும் அளவுக்கு பிரச்சனை பெரியதா என்று தான் தோன்றியது அஞ்சலிக்கு.
புரியாமல் இல்லை. லட்சங்களில் கடன் என்றாலே பெரிய தொகை தான். ஆனால் அதன் அளவுகோல் அவளுக்கு தெரியவில்லை.
கேட்டது கேட்ட நேரம் கேட்டபடி கைக்கு கிடைக்க வாழ்ந்து வந்தவளுக்கு பிரச்சனையின் வீரியம் புரியவில்லை.
“என்னை கொண்டு விட்டா பிரச்சனை முடிஞ்சிடும் நினைக்குறியா?” அஞ்சலி ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்கமாட்டாமல் கேட்டுவிட,
“என்ன சொன்ன?” என்றான் அவள் கேள்வி அறிந்தே.
“இல்ல! பிரச்சனை என்னை வச்சு தான்னு புரியுது” அவன் பார்வைக்கு பயந்து அவள் இப்படி கூற,
“தெரிஞ்ச வரை சந்தோசம்.. அமைதியா வா!” என்றுவிட்டான் ஒரே வார்த்தையில்.
“இவன் உன்னை பேச விட்டா தானே அதிசயம்?” அவளே நினைத்துக் கொண்டதை சொல்லிக் கொள்ள, கேட்டாலும் கண்டு கொள்ளவில்லை சூர்யா.
அழைப்பு மணியை அழுத்தி விட்டு சூர்யா நிற்க, மொபைலை கையில் எடுத்தாள் அஞ்சலி.
மீண்டும் மீண்டும் அதை அழுத்திய வண்ணம் அவன் இருக்க,
“ஷ்ஷ்ஷ்! நான் போன் பண்றேன் இரு!” என்றாள் காதில் கைவைத்து.
“எனக்கு தெரியாமலா நிக்குறேன்? என்ன விருந்துக்கா வந்திருக்கோம் போன் பண்ணி அழைக்குறதுக்கு?” என்றவன் அவள் போனைப் பறித்து வைத்துக் கொண்டு மீண்டும் அழுத்த,
“அடங்க மாட்டான்!” என்றவள் காதைப் பிடித்தபடி நின்று கொண்டாள்.
வீட்டிற்குள் வெளிச்சம் வரவுமே சூர்யா சட்டை கையை மடித்து விட, இதென்னடா இது என்று பயந்து தான் பார்த்தாள் அஞ்சலி.
கண்ணாடி வழியே வெளியே மகளும் சூர்யாவும் நிற்பதை பார்த்த காஞ்சனா வேகமாய் கதவு திறந்து,
“வாங்க! வா அஞ்சலி!” என்றவர் பதட்டமாய்,
“என்ன இந்த நேரத்துல?” என்றபடி அஞ்சலி கையில் இருந்த பையைப் பார்த்தார்.
குணசீலனும் அப்போது தான் தூங்க சென்றிருக்க, விடாமல் கேட்ட அழைப்பு மணி சத்தத்தில் அவரும் எழுந்து வந்து விட்டார் மனைவி பின்பே!.
ஆடிட்டர் ஜெய்யைப் பார்த்து பேசி இருந்ததும் லிங்கத்தின் மூலம் தெரிந்திருந்தவர் கைகளை பின்புறம் கட்டி வந்து நிற்க,
“என்ன அஞ்சலி என்ன பிரச்சனை? ஏன் பையோட வந்திருக்க இந்த நேரத்துல?” மகளிடம் காஞ்சனா கேட்க, அதைப் பார்த்தவன்,
“இந்தாங்க சார் உங்க பொண்ணு… இனி எனக்கும் அவளுக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என்று அஞ்சலி கையைப் பிடித்துக் கொண்டு வந்து அவர் முன் கூறி விட, அதிர்ந்த பார்வை மூவரிடமுமே.
“சூர்யா! என்ன சொல்றிங்க?” காஞ்சனா கேட்க,
“உங்க ஹஸ்பண்ட் இவளை தான் பிசினஸ்ல இன்வெஸ்ட் பண்ணி இருக்கார்.. ப்ச் சும்மா சொல்ல கூடாது.. கிரேட்! கிரேட் பிசினஸ் மேன்” சூர்யா புகழாரம் சூட்ட, கலங்கிக் கொண்டு வந்தது காஞ்சனாவிற்கு.
காஞ்சனாவை பார்த்து வந்த இரக்கத்தை எல்லாம் தனக்குள்ளே புதைத்துக் கொண்டான் சூர்யா.
அத்தை என்று அழைத்தால் நன்றாக இருக்குமே என நினைத்த காஞ்சனா இப்பொழுது ஆண்ட்டி என்ற அழைப்பும் இல்லாத விளிப்பில் அதிர்ந்து அவன் பேசியதில் பதில் இல்லாமல் நின்றார்.
“போதும்! உங்களால நான், என் அண்ணன், என் பெரியப்பா, என் பேமிலின்னு எல்லாரும் பட்டது போதும்.. இது உங்க பொண்ணு.. அவளுக்கு என்ன வேணா எழுதி குடுங்க.. என் குடும்பத்தை விட்ருங்க” என்று கூற,
“சூர்யா கொஞ்சம் பார்த்து பேசு! என்கிட்ட என்ன நடந்ததுன்னு கேட்காமல் இன்னொருத்தர் சொல்றதை வச்சு முடிவு பண்ணாத” குணசீலன் கூற,
“வாங்க சார்! வந்து உட்காருங்க. சொல்லுங்க உங்க ரீசன் என்னனு கேட்போம்” என்று கேட்டவன் முகத்தில் கொஞ்சமும் இளக்கம் இல்லை.
“சூர்யா!” என்று அவர் சத்தமாய் கூற,
“என்னன்றேன்? என்ன நினைச்சுட்டு இதெல்லாம் பண்றீங்க? உங்களுக்கு பெரியப்பா பணம் தரணும்னா அது பிசினஸ்.. அதுக்கு போய் உங்க பொண்ணு கேட்டான்னு அவர்கிட்ட பிசினஸ் பேசியிருக்கீங்க” என்றவன்,
“அசிங்கமா இல்ல?” என்று அவர் காதருகே சென்று கூறியும் விட்டான்.
“சூர்யா!”
“போதும் நிறுத்துங்க சார்… உங்க பொண்ணு என்ன கேட்டாலும் பணத்தை வச்சு வாங்கி குடுத்துடுவீங்க தானே?” என்று கேட்க,
“என்னங்க இதெல்லாம்?” என்று கேட்ட காஞ்சனா தலையில் அடித்தபடி அழுதார்.
“படிச்சு படிச்சு சொன்னேனே.. அப்பாவும் பொண்ணும் இப்படி தீராத பாவத்தை சேர்த்து வச்சிருக்கீங்களே!” என அழ,
“நீ புரியாம பேசாத டி! நான் என்ன அவன்கிட்ட வீட்டை வாங்கி நானேவா வச்சுக்க போறேன்? எல்லாம் என் பெண்ணுக்காக தானே? அவளுக்கு வர்றது எல்லாம் உங்களுக்கு தானே?” என நியாயமாய் பேசியதாய் நினைத்து குணசீலன் சூர்யாவிடம் கூற,
“யோவ்!” என்ற சூர்யா அழைப்பில் குணசீலன் ஸ்தம்பித்து நிற்க,
“ஏதாச்சும் கேட்டுட போறேன்! ச்சை! யாருக்கு வேணும் உன் பணம், உன் பொண்ணு, சொத்து எல்லாம்? அன்னைக்கு என் அண்ணனை வேண்டாம்னு சொன்ன உன் பொண்ணை நான் வேணாம்னு சொல்லிட்டு போயிருந்தா எங்க போயிருக்கும் உன் மானம் மரியாதை எல்லாம்?” என்றவன்,
“இப்பவரை வெளில உன் பொண்ணுக்கு என்னவோன்னு எவனும் பேசலைனா அதுக்கு காரணம் என் குடும்பம் தான்.. இல்லைனுவியா நீ?” என்று கேட்க, அவன் பேச்சில் இமைக்க மறந்து நின்றது குண சீலனோடு அஞ்சலியுமே தான்.