மனுஷன் தானா நீங்க எல்லாம்? பிசினஸ் வேற குடும்பம் வேற பிரிச்சு பார்க்க தெரியாத நீயெல்லாம்…. ” என்றவன் வார்த்தையை வாய்க்குள்ளேயே அடக்க,
“உன் பெரியப்பா ரொம்ப யோக்கியமா? பணத்துக்காக தான சம்மதிச்சான் கல்யாணத்துக்கு?” என திருப்பி கேட்டார் குணசீலன்.
“நான் இல்லனு சொன்னேனா? இல்லையே? ஆனால் அவரை தூண்டி விட்டது யாரு? நீங்க தானே? அவரு மேல தப்பு இல்லைனு சொல்ல மாட்டேன்.. ஆனால் இப்பவும் அடுத்தவங்க தப்பை சொல்ற உங்களை என்ன தான் பண்றது?” என்று கேட்க, குண சீலன் அமைதி.
“இப்ப சொல்றேன்.. எனக்கு எதுவும் வேண்டாம்.. கூடவே உன் பொண்ணும் வேண்டாம்.. இப்ப என்ன பண்ண போறீங்க.. அதை மட்டும் சொல்லுங்க கேட்டுட்டு நான் போயிட்டே இருக்கேன்” என்றவன் அங்கே அமந்துவிட்டான்.
“போதுமா? போதுமா உங்க ரெண்டு பேருக்கும்? இதுக்கு மேல என்ன இருக்கு போறதுக்கு? மானம் மரியாதைனு சொல்லி சொல்லி பொண்ணு வாழ்க்கையை கெடுத்த அப்பன்.. சொல்ல சொல்ல கேட்காம அவரு கூட சேர்ந்த பாவத்துக்கு தான் டி நீயும் அனுபவிக்குற” என மகளிடமுமாய் காஞ்சனா கண்ணீரோடு பேச,
ஒவ்வொரு முறையும் தன்னை வைத்து தன்னைக் கொண்டு சூர்யா பேசிய வார்த்தைகள் எல்லாம் முள்ளாய் குத்தி இருந்தது அஞ்சலிக்கு.
சில நிமிடங்கள் அமைதியாய் கழிந்தது. குணசீலனை மொத்தமாய் ஆட்டம் காண வைத்திருந்தான் சூர்யா.
மகளை இங்கே விட்டு சென்றால் அவள் நிலை. மதியம் இவர்கள் வரும் பொழுது அவர்களிடம் சரியாய் பேச முடியாமல் சென்றது கூட இது சம்மந்தமான வேலையில் தானே?
பால நாதன் வீட்டோடு சில நிலங்களையும் மகள் பெயரில் மாற்றும் எண்ணத்தில் அல்லவா அதற்கான வேலையில் இருந்தார்.
பணம் என்று வரும் பொழுது பாலநாதனை போல சூர்யாவும் எளிதாய் அவர்களிடம் இருந்து வந்து விடுவான் என்றல்லவா கணக்கிட்டு இருந்தார்.
அஞ்சலி நின்ற கோலம் வேறு மனதை பிசைய, எங்கே தவறினோம் என யோசித்தால் அது மகள் ஜெய்யை தான் திருமணம் செய்வேன் என்று வந்து நின்ற தினத்தில் ஆரம்பித்து இருந்தது.
இப்போதும் மகள் மட்டுமே அவர் கண்களுக்கு தெரிந்தாள். அவள் வாழ்க்கை நன்றாய் இருந்தால் போதும் என நினைத்தவருக்கு, மகள் மருமகனுடன் நன்றாய் வாழ வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கவில்லை.
“என் பெரியப்பா எவ்வளவு கடன் வாங்கினார்?” என்று சூர்யா கேட்க,
“கேட்கறாங்க இல்ல? சொல்லி தொலைங்களேன்” என்றார் காஞ்சனாவும் கணவனிடம்.
ஒரு தொகையை கூறவுமே சூர்யாவிற்கு மனதில் பாரம் ஏற, அதை முகத்தில் காட்டிடவில்லை.
“அந்த பணத்துக்கு நான் கராண்டி! இந்த சூர்யா மட்டும் தான் கராண்டி! இன்னும் ஒரு வார்த்தை அந்த வீட்டை பத்தியோ வீட்ல இருக்குற மனுஷங்களை காயப் படுத்துற மாதிரியோ இந்த வீட்ல இருந்து ஒரு பார்வை கூட வர கூடாது.. நாளைக்கு பேப்பர் ரெடி பண்ணி வீட்டுக்கு வரும்.. சைன் பண்ணி அனுப்புங்க..” என்றவன்,
“மறுபடியும் சொல்றேன்! ஒரு மாசத்துல ஏகப்பட்ட பிரச்சனை என் வீட்டுல.. இப்ப அண்ணனுக்கு கல்யாணம் வேற பேசி வச்சிருக்கோம்.. இனியும் பிரச்சனை பிரச்னைனு ஓடிட்டு இருக்க முடியாது.. இனி என்ன வேணும்னாலும் அந்த வீட்ல இருந்து என்னை தவிர யாரையும் நீங்க காண்டாக்ட் பண்ண கூடாது.. ஆர்டர்னு கூட வச்சுக்கோங்க..” என்று திரும்பி செல்ல எத்தனித்தவன்,
“கிளம்பு!” என்றான் தன்னைப் பார்த்து நின்ற அஞ்சலி முகம் பார்த்து.
யோசிக்கவே இல்லை. அடுத்த நொடி கீழே போட்டிருந்த பையை தூக்கியவள் அவன் அருகில் சென்றிருக்க,
“எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்.. நான் இவளை இங்கே விட்டுட்டு போனா என் வளர்ப்பு தப்புன்னு ஆகிடும்.. இப்பவும் அதுக்காக தான் கூட்டிட்டு போறேன்.. அதுக்காக எப்பவும் இதே மாதிரி சூர்யா பொறுமையா இருப்பான்னு நினைச்சுடாதிங்க” என்றுவிட்டு சொல்லிக் கொள்ளாமல் திரும்பி சென்றிட, அவன் வேக நடைக்கு ஈடாக கிட்டத்தட்ட ஓடியிருந்தாள் அஞ்சலி.
“யாரு செஞ்ச புண்ணியமோ ஒரு நல்லவன் கையில அஞ்சலி மாட்டி இருக்கா.. இனி அவ சந்தோசமா இருக்குறதும் கேள்விக்குறி ஆகுறதும் அவ கையிலையும் உங்க கையிலையும் தான் இருக்கு.. வீடு அவங்களோடதாவே இருக்கட்டும்.. சூர்யா சொன்னதை செய்யாம இருக்க போறதில்ல.. தயவுசெஞ்சு இனியாவது அஞ்சலி விஷயத்துல கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க” என்று தன்னால் முடிந்த மட்டும் அறிவுரை கூறி சென்றார் காஞ்சனா கணவருக்கு.
தன்னிடம் இருந்த சாவி மூலம் வீட்டை திறந்து கொண்ட சூர்யா நேராய் சமையலறை செல்ல, எதுவும் பேசிவிடாமல் இருக்க வேண்டுமே என்ற வேண்டுதலுடன் மாடியில் அறைக்கு வேகமாய் சென்றுவிட்டாள் அஞ்சலி.
வந்ததும் தண்ணீரை எடுத்து பருகிவிட்டு வெளியே வந்து மாடியேற, அங்கே இன்னும் ஜெய் அறையில் வெளிச்சம் இருந்தது.
பேசலாம் என நினைத்த சூர்யா பின் தொல்லை செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தில் தன் அறைக்கு வந்துவிட்டான்.
மணி இரவு ஒன்றை தொட இருந்தது. சூர்யா அறைக்கு வரும் நேரம் அஞ்சலி உடை மாற்றிவிட்டு வந்துவிட, பார்த்தவன் எதுவும் கூறாமல் தலையை பிடித்தபடி அமந்துவிட்டான்.
கட்டில் அருகே சென்று அவன் பேச ஆரம்பிக்கும் முன் படுத்து விடலாம் என்ற முடிவில் இருந்தவள் அவன் உடையை கூட மாற்றாமல் அதுவும் தலையில் கைவைத்து இருக்கவும் அப்படியே விட மனம் இல்லாமல் அவனருகில் சென்றாள்.
அருகே நிழல் தெரியவும் என்ன என்பதை போல அவன் பார்க்க, என்ன சொல்வதென தெரியாமல் விழித்தாள்.
“தலைவலிக்குதா?” அஞ்சலி கேட்க,
“உன் குடும்பத்தால தலைவலி மட்டுமா வரும்” அவளுக்கு கேட்கும் படியே அவன் கூற, அதை விடுத்து
“காபி வேணுமா?” என்றாள்.
“ஹ்ம்!” என்றவன் பின்னால் சாய்ந்து நெற்றியை பிடித்தபடி கண்களை மூடிக் கொண்டான்.
அறையை விட்டு தாண்ட சென்றவள், “ஹே! இரு இரு! ஒரு நிமிஷம்!” என்ற அவன் அழைப்பில் பதறி அவன் அருகே வர,
“காபி போட தெரியுமா?” என்று கேட்டானே பார்க்கலாம்.
அவள் முறைப்பதைக் கூட பொருட்படுத்தாமல், “உன் அப்பாவை வேற அந்த கேள்வி கேட்டுட்டு வந்திருக்கேன்.. காபில எதையாவது கலந்து என்னை கொல்ல பார்த்தின்னா?” என்றவன்,
“வேண்டாம் வேண்டாம்.. நீ போய் தூங்கு” என்று கூற,
“இந்த வாய் இருக்குல்ல… அது கொஞ்சம் கொஞ்சமா பேசினாலே இந்த தலைவலி எல்லாம் வராது.. வக்கீல் புத்தி மாறுதா பாரு” என்று கோபமாய் கூறியவள் கதவை திறந்து வெளியே செல்ல,
“இவல்லாம் பேசுற அளவுக்கு இருக்கு” என்றபடி மீண்டும் பழைய நிலையில் அமர்ந்துவிட்டான்.
ஃப்ளாஸ்கில் கொண்டு வந்த காபியை அவன் கண்முன்னே இரண்டு கப்பில் ஊற்றி ஒன்றை தனக்கு எடுத்து குடித்து காண்பித்த பின்பே அவனுக்கு மற்றொன்றை கொடுக்க,
“நானே சொல்லலாம்னு நினச்சேன்.. என்ன இருந்தாலும் சேப்டி முக்கியம் இல்ல?” என்றான் அவள் செய்ததின் பொருள் அறிந்து.
“நாக்குல எப்பவும் விஷம் தான்” என்று அஞ்சலி கூற,
“அது உனக்கும் உன் குடும்பத்துக்கும் மட்டும்” என்றான் அப்போதும் விடாமல்.
“அது தான் தெரியுமே!” என்றவள் அவனுக்கு முதுகு காட்டி படுத்துவிட,
“பண்றதெல்லாம் மொள்ளமாரித் தனம்… கேட்டா கோவம் வேற! அப்பனோட திமிரு!” என்றவன், அதை ஒதுங்கவைத்துவிட்டு படுத்துக் கொண்டான்.
அடுத்த நாள் ஜெய் சீக்கிரமே எழுந்து கிளம்பி வந்து டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க, சில நிமிடமிகளில் எல்லாம் சூர்யாவும் வந்துவிட்டான்.
மல்லிகா எதுவும் பேசாமல் வேலையில் கவனமாய் இருக்க, பிரேமா தான் ஜெய்யிடம் பேச்சுக் கொடுத்து பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தார்.
“உன் பொண்டாட்டியை கொண்டு விட்டுட்டு வாடான்னு சொன்னா போய் அவ வீட்டுல விருந்து சாப்பிட்டு கூடவே கூட்டிட்டு வந்துட்ட போல?” விளையாட்டாய் மட்டுமே சூர்யாவிடம் பிரேமா கேட்க,
“பின்ன! நேத்து கோபத்துல சொல்லிட்டு.. காலையில அந்நியன் மாதிரி அறிவிருக்கா உனக்கு ஒரு பேச்சுக்கு சொன்னா கூட்டிட்டு போய் விட்டுட்டு வருவியான்னு கேட்பிங்க.. எனக்கு தெரியாதா பிரேமா மம்மி!” என்றான்.
“என்ன சொன்னார் அந்த மனுஷன்? எதுக்காக இப்படி பண்ணினாராம்?” என்று பிரேமாவே கேட்க,
“வேற என்ன சொல்லுவார்? எல்லாம் ஆசை மகளுக்காக தானாம்.. அதான் ஜெய் சொன்னானே! அதே தான்.. நல்லா லெப்ட் அண்ட் ரைட் கொடுத்தாச்சு.. காஞ்சனா ஆண்ட்டி தான் பாவம்.. ஆனா அவங்ககிட்ட கூட நான் பேசல.. பேசி இருந்தா இன்னும் மெத்தனமாகிடும் அந்த ஆளுக்கு.. இன்னைக்கு பேப்பர் வீட்டுக்கு வரும்.. சைன் பண்ணி அனுப்பி விடுங்கன்னு சொல்லி இருக்கேன்” என்றான் சூர்யா.
“என்ன பேப்பர்?” ஜெய் கேட்க,
“அந்த கடனுக்கு தான்..” என்றவன் அதை பற்றி விளக்கமாய் அண்ணனிடம் கூற,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. அந்த ஆளுக்கு பொறந்ததுக்கே எனக்கு இந்த தண்டனை வேணும்” என்றான் ஜெய்.
“அப்ப நான் யாரு டா அண்ணா? அந்த ஆளை வச்சு நீயும் என்னை பிரிச்சு பாக்குறியா? உதை விழும்.. எதுனாலும் சேர்ந்து தான் ஃபேஸ் பண்ணனும்.. கடன் தானே அடைக்கலாம்” என்றவன் இரவெல்லாம் யோசித்து ஒரு முடிவிற்கு வந்திருக்க, ஜெய்யும் அதை தான் சிந்தித்துக் கொண்டிருந்தான்.