“என்னை சொல்லிட்டு நீ மட்டும் அந்த பொண்ணுகிட்ட பேசிட்டு வர்ற பார்த்தியா?” என்று மல்லிகா பிரேமாவிடம் கேட்க,
“க்கா! அந்த பொண்ணு நம்ம சூர்யா கூட படிச்ச பொண்ணு.. நியாபகம் இருக்கா சூர்யா பதினொன்னு படிக்கும் போது ஒரு பொண்ணு கல்லைக் கொண்டு எரிஞ்சு இவனுக்கு ஸ்டிட்சஸ் எல்லாம் போட்டோமே கண்ணுகிட்ட.. அது இந்த பொண்ணு தான்” என்று கூற,
“ஓஹ்!” என்றவர் தூரத்தில் நின்ற அந்த பெண்ணை பார்த்தபடி இருக்க,
“நமக்கு சொந்தம் தான்.. தூரத்து சொந்தமா இருக்காங்க.. சுப்பு தாத்தா தெரியும்ல.. அவரோட பேரப் பசங்களுக்கு மக போல இவங்க” என்றார்.
“எதுவுமே சரியா இல்ல பாலா என்ன பண்ண?” என்று குணசீலன் கேட்க,
“என்ன சொல்றிங்க சார்?” என்றார் பாலா.
“ப்ச்! எனக்கென்னவோ இந்த கல்யாணம் சரி வரும்னு தோணல” என்று நேராய் கூற,
“அப்படி எல்லாம் சொல்லதீங்க சார்.. நான் தான் எல்லாம் பாத்துக்குறேன்னு சொல்றேனே.. ஜெய் இனி தப்பு பண்ணாம நான் பார்த்துக்குறேன்” என்று கூற,
“அது இல்லை ய்யா.. என் பொண்ணுக்கும் இது சரி வராதுனு தோணுது.. அவ என்ன நினச்சு ஜெய்யைப் பிடிச்சிருக்குன்னு சொன்னானு தெரியல.. இப்போ நடக்குறது எல்லாம் பார்த்தா..” என்று தலையசைக்க, திடுக்கிட்டது மீண்டும் பாலாவின் மனம்.
“சரி! பேசிக்குவோம்.. என் பொண்ணுகிட்ட நான் முதல்ல தெளிவா பேசிக்குறேன்..” என்று கூற,
“பத்திரிக்கை வைக்க கோவிலுக்கு வந்த அப்புறம் இப்படி பேசுறது சரி இல்ல சார்!” என்ற பாலாவின் குரலில் கொஞ்சம் கோபமும் இருந்தது.
“அதெல்லாம் எங்களுக்கும் தெரியும்.. உன் பையனும் தான் சரி இல்ல.. அஞ்சலி பேசலைன்னா என்ன? உன் மகன் போய் பேசியிருக்கலாம் தான? அவ்வளவு திமிரா அவனுக்கு? இந்த கல்யாணம் மட்டும் நடக்கட்டும்.. அப்புறம் தெரியும் உன் மகனுக்கு நான் யாருன்னு?” என்றார் குணசீலன்.
திருமணம் நடக்கவில்லை என்றால் பணம் தர வேண்டிய சூழ்நிலை வரும் என்ற ஒரு காரணம் வேறு எதையும் யோசிக்க விடவில்லை பால நாதனை.
“நான் அவன்கிட்ட பேசுறேன் சார்!” என்றவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட்டார் குணசீலன்.
குணசீலனுக்கு மனைவி கூறிய சில வார்த்தைகளுக்கான அர்த்தம் இப்பொழுது புரிவதை போல தான் இருந்தது.. ஆனாலும் மகள் மேல் உள்ள பாசம் அதற்கு மேல் நின்றது.
“அங்கே பாரு ஜேக்! அது தான் உன் பிரண்ட்டோட அண்ணன் போல” என பிரியா காட்ட,
“இது அந்த டாக்டரு இல்ல? இதுக்கு தான் கல்யாணமா? பாவம் தான்” என்றாள் ஜனனி.
“யார் பாவம்?” பிரியா கேட்க,
“அந்த பொண்ணு தான்!” என்று கூறி சிரித்தாள் ஜனனி.
“போன் பேசிட்டு வரலாம்னு வெளில போனேன்.. அதுக்குள்ள இங்க வந்துட்டீங்களா? ஆமா அப்ப யார் கூடவோ பேசிட்டு இருந்திங்களே.. யார் அது?” என்று கதிரவன் கேட்க,
“இவ கூட படிச்ச பையனும் அவங்க அம்மாவுமாம்” என்றவள்,
“எவனோ இவளை கிண்டல் பண்ணி சிரிச்சதுக்கு அந்த பையனை அப்ப கல்லைக் கொண்டு அடிக்கிறேன்னு இந்த பையன் மேல அடிச்சிருக்கா.. அடிச்சிட்டு ஒரு மாசம் அவன் கண்ணுல படாமல் ஓடி ஒளிஞ்சிருக்கா.. அதான் கிண்டல் பண்ணிட்டு போறான்..” என்றாள் பிரியா.
“சும்மா இரு க்கா.. அதை போய் எல்லார்கிட்டயும் சொல்லிக்கிட்டு..” என்ற ஜனனி,
“சரி! நான் போய் எல்லாம் எடுத்து வைக்குறேன்” என்று நகர,
“பார்க்க நல்ல பையனா இருக்கான் இல்ல.. ஜனனிக்கு கேட்டு பார்க்கலாம் இல்ல? பையன் என்ன பன்றாணாம்? கேட்டியா?” என்றான் கதிரவன்.
“இது எனக்கு தோணவே இல்லையே!” என்றவள்,
“வக்கீலுக்கு இப்ப தான் முடிச்சிருப்பான் போல.. அவனோட அண்ணனுக்கு தான் கல்யாணம்னு சாமி கும்பிட வந்திருக்காங்க.. தூரத்து சொந்தம் மாதிரி தான்.. வேணும்னா ஊர்ல போய் அம்மாகிட்ட பேசிட்டு தரகர் மூலமா ஜாதகம் குடுத்து விடலாம்” என்றாள் பிரியாவும்.
“சூர்யா! கோபம் யார் மேல வேணா வரலாம்.. ஆனா எல்லார்கிட்டயும் காட்ட முடியுமா? உன் மேல, நிவி மேல, அம்மா மேலன்னு நான் கோபப்படலாம்.. அதுக்கு ரைட்ஸ்ஸும் இருக்கு.. எனக்கு ஒரு பாலிடிசியனை அவன் பேசுறதை பிடிக்கலைனா அவன்கிட்ட போய் சண்டை போடவா தோணும்? ஒதுங்கி போக தானே தோணும்?.. இதுக்கு மேல என்ன சொல்ல..” என்று தோள்களை குலுக்கிக் கொண்டான்.
“சரி தான்! நான் தான் தப்பா நினைச்சிட்டேன்..” சூர்யா கூற,
“எல்லாம் சரி தான்.. ஆனா நடக்க போறது நல்லதில்லைன்றப்பவும் வளர விடுறோம்.. அது தான் கில்டியா பீல் ஆகுது” சூர்யா.
“எனக்குமே நிறைய குழப்பம் இருக்கு சூர்யா.. நான் இங்கே இருந்திருந்தால் அந்த நிச்சயம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை.. ஆனா இப்ப அதை மீறி வர முடியல.. அந்தாளு முடிவு பண்ணினதை நாம வேண்டாம்னு முடிவு பண்ணினா அது வெளில வேற மாதிரி ஸ்பிரேட் ஆகும்.. பேமிலிக்கு நல்லதில்ல.. என்ன ஆனாலும் சரினு விட்டாச்சு.. இதோ சாமிகிட்ட கூட பொறுப்பை கொடுத்தாச்சு.. இனி அவங்கவங்க பாடு” என்றவன் நிவியை திரும்பி ஒரு பார்வை பார்த்தான்.
“சூர்யா! என்ன நடந்தாலும்… சப்போஸ் இந்த மேரேஜ்னால நான் இந்த வீட்டை விட்டு போனாலும் நீ தான் டா இவங்களை எல்லாம் பார்த்துக்கணும்” என்று கூற,
“ண்ணா! என்ன பேசுற நீ? லூசா டா நீ?” என்று சூர்யா சட்டென கோபம் கொள்ள,
“அப்படிலாம் சொல்லாத ண்ணா! எனக்கு பயமா இருக்கு” என்றாள் நிவி.
“ஹே ச்சீ! என்ன இவ்ளோ பனிக் ஆகுறீங்க? நல்ல பசங்க.. சும்மா சொன்னேன்.. போங்க போய் எல்லாம் எடுத்து வையுங்க.. கிளம்பலாம்” என்றான் ஜெய் பேச்சை மாற்றி.
எப்பொழுதும் இப்படி பேசுபவன் அல்ல.. கோர்வையாய் திருமணத்தை பற்றிய பேச்சு வரவே இப்படி நடந்து விட்டால்? என்ற எண்ணத்தில் சூர்யாவிடம் முதலிலேயே கூறி வைக்கலாம் என்று அந்த நேரம் தோன்றியதை கூறி இருக்க, அதை தங்கை முன் கூறியிருக்க கூடாது என தாமதமாய் உணர்ந்தவன் அந்த பேச்சினை விட்டு விட்டான்.
ஒரு சந்தேகம் உள்ளுக்குள் அவனை அரித்தது உண்மை தான். காரணம் இல்லாமல் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்க வாய்ப்பில்லை.. அதில் வீட்டோடு மாப்பிள்ளை என்று இப்பொழுது கூறாமல் விட்டு அப்பொழுது கூறினால்?
உடனே சென்று விட மாட்டான் தான்.. சூழ்நிலையை நம்ப முடியாதே! எப்பொழுது யாருக்கு சாதகமாக இருக்கும் என்று தெரியாத நிலையில் எச்சரிக்கை செய்து வைப்பது சரி என்றே தோன்றியது.
அப்படி இல்லை என்றாலும் இரு வீட்டையும் தவிர்த்து இவனே தனியாய் செல்வது என்று முடிவெடுத்து எதாவது செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
பால நாதன் மேல் இருக்கும் கோபத்தில் அதையும் கூட செய்தாலும் செய்து விடுவான் ஜெய்.
ஆக மொத்தத்தில் அவனை அவனே நம்ப தயாராய் இல்லை.
“என்ன மாப்பிள்ள! தனியா என்ன பண்றீங்க?” நிவியும் சூர்யாவும் சென்ற பின் தனியே நின்ற ஜெய் அருகே வந்து குணசீலன் கேட்க,
“ஒன்னும் இல்ல சார்! சும்மா தான்..” என்றான் அவன்.
“இன்னும் என்ன சார்? அதான் பத்திரிக்கை வந்து சாமியும் கும்பிட்டாச்சே!” என்று அவர் கேட்க,
“சரி தான்! ஆனா என்னை பெத்தவரே இன்னும் உரிமையா சம்மந்தின்னு உங்களை கூப்பிட்ட மாதிரி தெரியல.. அதுக்கு முன்னாடி நான் முந்திக்க கூடாதே! மே பீ உங்களுக்குள்ள எதாவது இருக்கலாம்.. இருந்தாலும் அவருக்கு அப்புறம் தானே எனக்கு யார்னாலும்?” என்றவன் பேச்சின் தெளிவில் சில நொடிகள் பேச்சே வரவில்லை குணசீலனுக்கு.
இன்று தான் இவ்வளவு நெருக்கமாய் பார்த்துக் கொள்வதும் பேசிக் கொள்வதும் இருவரும்.
பால நாதன் மகன் தானே! அவனைப் போல் தானே இருப்பான்? என்று தவறாய் கணித்தது இப்பொழுது புரிந்தது.
“என்ன மாப்பிள்ள நீங்க! நான் சம்மந்தின்னு தான் கூப்பிட சொன்னேன்.. உங்க அப்பா தான் மரியாதை குடுத்து.. அப்படி.. கல்யாணத்துக்கு அப்புறம் சம்மந்தின்னு கூப்பிடுறேன்னு தான் சொன்னார்” என்று அவர் சமாளிக்கப் பார்க்க,
“ஆஹான்! அப்ப நானுமே கல்யாணத்துக்கு அப்புறமா முறை வச்சு கூப்பிட்டுக்குறேன்” என்று அவர் திகைத்த முகம் பார்த்து திரும்பப் போனவன்,
“நீங்களுமே கூட யோசிச்சி கூப்பிடுங்க..” என்று கூறி விட்டு செல்ல, மகளுக்கு ஜெய் மேல் கோபம் ஏன் என்று தெளிவாய் புரிந்தது குணசீலனுக்கு.
தன்னை யாரும் எதிர்த்து பேசினால் குணசீலனுக்கு பிடிக்காது.. கொஞ்சமும் மாறாமல் அவரை போலவே தான் அஞ்சலியும்.
பள்ளி, கல்லூரி முதலே தனக்கு ஆமாம் கொட்டுபவர்களை மட்டுமே உடன் வைத்து பழக்கம் கொண்டவளுக்கு இந்த ஜெய் பேச்சு பிடிக்கவில்லை.
ஆனாலும் ஒரு பருவப் பெண்ணாய் அவனைப் பிடித்திருக்கிறது.தெளிவாய் புரிந்தாலும் மகள் செய்வது சரியா என்று யோசிக்க முடியவில்லை அவருக்கு.
செல்லமாய் வளர்த்த மகளின் தந்தையாய் அவள் ஆசையை நிறைவேற்ற மட்டுமே அவர் பாடுபட்டார்.