“அம்மாஆஆஆஆ….” என்ற சூர்யாவின் அலறலில் உறங்கிக் கொண்டிருந்த அஞ்சலி பதறி அடித்து எழ, எதிர்பக்கமாய் எழுந்து நின்றான் சூர்யா.
பெரிய பெரிய மூச்சுக்களால் தன்னை சமன் செய்து, நெஞ்சில் கை வைத்து நீவி ஆசுவாசப்படுத்தி என சூர்யா ஒரு நிலைக்கு வரவே இரு நிமிடங்கள் தேவைப்பட,
அடித்து பிடித்து எழுந்த அஞ்சலியும் கட்டிலை, அவனை, சுற்றி கீழே என எதையோ தேடியவள் அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்ததும்,
“என்னாச்சு? ஏன் கத்தின?” என்றாள் பதட்டத்தோடே.
அவள் கேட்டதும் “லூசு லூசு! அறிவில்ல? இப்படியா பயம் காட்டுவ.. ச்ச! உசுரே போய்டுச்சு” என்று அஞ்சலியை தான் அவன் திட்டினான்.
“நானா? லூசா நீ? நான் தூங்கிட்டு தானே இருந்தேன்.. நீ கத்துனதுல தான் நானே எழுந்தேன்” என்றாள் அவன் குற்றம் சாட்டியதில்.
“என்ன பண்ணியா? பின்ன! கண்ணு முழிக்கவும் எனக்கு இவ்வளவு பக்கத்துல உன் மூஞ்சி..” என கையை அளவாய் காட்டியவன்,
“அவ்வளவு இடம் இருக்குல்ல! எதுக்கு என் பக்கத்துல வந்த? மூச்சே நின்னுடும் போல.. இப்படி பயம் காட்டி கேஸை திருப்ப பிளானா?ச்சை! பத்து நாள் ஆகும் போல என் பல்ஸ் நார்மல் ஆக!” என இன்னும் பேசியவனை தன்னால் முடிந்த மட்டும் முறைத்து நின்றாள் அஞ்சலி.
உறங்கிக் கொண்டிருந்த சூர்யா கண் விழிக்கவும் தனக்கு வெகு அருகில் கண்ட அஞ்சலியைப் பார்த்து தான் கத்தி ஊரைக் கூட்டி எழுந்திருக்க, கேட்டவளுக்கு எதைக் கொண்டு அவனை அடித்தால் தகும் என்ற அளவிற்கு கோபம்.
“உன்னையெல்லாம்…. நிம்மதியா தூங்க கூட விடாம டார்ச்சர் பண்ற?” என்று பதிலுக்கு அஞ்சலி கேட்டவள், அங்கிருந்த தலையணையை தூக்கி எறியவும் செய்ய,
சூர்யா பதில் கூறும் முன், “தெரியும்.. டார்ச்சர் பண்ண தான் கூட்டிட்டு வந்த.. அதை தானே சொல்ல போற? உன்னை பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா?” என்றாள் கடுப்புடன்.
“டார்ச்சர்னு தெரிஞ்சும்… உன் வீட்டுல உன்னை கொண்டு விட்டு செகண்ட் சான்ஸ் கொடுத்தும் நான் கிளம்புன்னதும் ஏன் கிளம்பின?” என்று சூர்யா கேட்க,
“என் விதி! எப்படி எப்படி எல்லாமோ வாழ கனவு கண்டு இப்படி உன்கிட்ட வாங்கி கட்டிட்டு இருக்கேன்..” என்றவள் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.
நள்ளிரவு வரை தந்தையைப் பற்றிய நினைவில் உறக்கம் என்பதே இல்லாமல் போக விடியும் நேரம் தான் உறங்கவே ஆரம்பித்து இருந்தாள்.
அதையும் கெடுத்து விட வந்து சேர்ந்தவனை எண்ணி தலைவலியும் வந்துவிட,
“மூவில, கதைகள்ல எல்லாம் தனக்கு பக்கத்துல பொண்டாட்டி படுத்திருந்தா அப்படி கொஞ்சுறானுங்க… இவன் என்னன்னா என் உசுரை வாங்குறான்” சத்தம் இல்லாமல் அஞ்சலி முணுமுணுக்க,
“எல்லாமே நீ பண்ணினத்துக்கு தான் ரிவீட்டு.. அப்பாவும் மகளும் கொஞ்ச நஞ்ச பாவத்தையா பண்ணி வச்சிருக்கீங்க?” டவலுடன் குளியலறை சென்றவனுக்கு அவள் முணுமுணுத்தது காதில் கேட்கவில்லை.
“எத்தனை காலத்துக்கு இதை சொல்லியே படுத்த போறானோ!” என்றபடி தானும் எழுந்து படுக்கையை சரி செய்தாள்.
நேற்றைய தினம் தனக்கு மூத்த வழக்கறிஞர் ஒருவரின் துணையுடன் மொத்தமாய் அலசி ஆராய்ந்து எடுத்துவிட்டான் சூர்யா.
முடிவில் தொன்னுறு சதவீதம் பால நாதன் பெயர் இதில் வர வாய்ப்பில்லை என்று வர, துணிவாய் இறங்கி நோட்டீஸையும் அனுப்பி வைத்துவிட்டான்.
தானே செல்ல நினைத்தவன் முதலில் குணசீலன் என்ன எதிர்வினை ஆற்ற போகிறார் என அறியவே நோட்டிசை அனுப்பி இருக்க, அது சென்ற சில மணி நேரத்தில் எல்லாம் அஞ்சலிக்கு அழைத்துவிட்டார் குணசீலன்.
“சொல்லுங்க ப்பா!” என எடுத்ததும் அஞ்சலி கேட்க, அதை கவனிக்கும் நிலையில் எல்லாம் அவர் இல்லை.
“என்ன அஞ்சலி இது? உன் புருஷனுக்கு என்ன தான் வேணுமாம்?” என்று கோபமாய் கேட்க,
“ஏன் ப்பா? சூர்யா திரும்ப அங்கே வந்தானா?” என்றாள் வேகமாய்.
“அவன் வர்ல.. நோட்டீஸ் விட்ருக்கான்.. என்ன நினைச்சுட்டு இதெல்லாம் பன்றான்.. மாப்பிள்ளை ஆச்சேன்னு கொஞ்சம் விட்டுக் குடுத்தா…” என்று பேசிக் கொண்டே போக, இந்த பக்கம் அலைபேசி சூர்யா கைகளுக்கு சென்றிருந்தது அவர் அறியாதது.
“சூர்யா வந்தானா?” என அஞ்சலி கேட்கும் நேரம் அவனறைக்குள் நுழைந்திருந்த சூர்யா வேகமாய் மொபைலை பிடுங்கி தன் காதில் பொருத்தி இருக்க, சட்டென கையில் இருந்து பறிக்கப்பட்டதில் அதிர்ந்த அஞ்சலி அது சூர்யா என்றதும்,
“போச்சு!” என தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்.
“நான் ஒன்னும் உங்களை விட்டு குடுக்க சொல்லலையே!” என்ற சூர்யா குரலில் குணசீலனுமே அதிர,
“சூர்யா!” என்றவருக்கு வார்த்தை வர மறுத்தது.
“தாராளமா பதில் நோட்டீஸ் அனுப்பலாம்.. தயவு தாட்சண்யம் எல்லாம் பார்க்க தேவை இல்ல” என்று சூர்யா.
“உங்க பெரியப்பா நான் கேட்ட இடத்துல எல்லாம் கையெழுத்து போட்டிருக்கார்” மிரட்டலை அமைதியாய் அவர் கூற,
“அஞ்சு நிமிஷத்துல அவர் கையெழுத்தை மாத்தி காட்டி உங்க தலையெழுத்தை மாத்த எனக்கு தெரியும்” என்றான் இவனும் அமைதியாய்.
“இவன் வக்கீல் படிக்க தான் லாயக்குன்னு எப்படி இவங்க வீட்டுல கண்டு புடிச்சாங்க?” அதி முக்கியமான கேள்வி அப்போது தான் தோன்றியது அஞ்சலிக்கு.
“சூர்யா! என்ன இது? அதான் பேசிக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு தானே? வீட்டுக்கு வாங்க பேசி முடிவு பண்ணலாம்.. அதை விட்டுட்டு கோர்ட்டு கேசுன்னு..” என இறங்கி வந்ததை கெத்தாய் மிடுக்காய் குணசீலன் கூற,
“அதுவும் என்னோட முடிவு தான்.. ஆனா அதை மாத்தி இப்ப சட்டப்படி போகலாம்னு முடிவு பண்ணி தான் அதை அனுப்பி இருக்கேன்.. இன்னொன்னு தெரியுமா? என்னோட தனிப்பட்ட முதல் கேஸ் இது தான்..” என்று பெருமையாய் சூர்யா கூற, குணசீலன் பல்லைக் கடித்தார்.
“என்னையும் என் அப்பாவையும் பார்த்தா மட்டும் இவனுக்கு புளோ அள்ளிக் கொட்டும் போல…” வாய்க்குள் அஞ்சலி கூற, சூர்யா பார்த்த பார்வையில் கப்சிப்.
“இப்ப என்ன தான் பண்ணனும்?” என இன்னும் இறங்கி வந்தார்.
“என்னை கேட்டா.. அதான் தெளிவா வந்து சேர்ந்துச்சு தானே? பதில் வேணும்..” என்றவன் கட் செய்து போனை தூக்கிப் போட, அதை எதிர்பாராதவள் கேட்ச் பிடிப்பதற்குள் நொந்து போனாள்.
“என்ன? இங்க இருந்துட்டு நியூஸ் குடுக்குறியா உன் அப்பாக்கு?” சூர்யா கேட்க,
“எனக்கே நியூஸ் அவர் தான் சொன்னார்.. நான் என்ன குடுக்க.. நீ என்ன என்கிட்ட சொல்லிட்டா பண்ற?” என திருப்பிக் கேட்டாள் அவளும்.
“வாய் வாய்! திமிரு டி உனக்கு” என்று சொல்லி தான் சென்றிருந்தான்.
அதன்பின் காஞ்சனாவிற்கு அழைத்து தான் முழு விபரத்தையும் கேட்டு தெரிந்து கொண்டாள் அஞ்சலி.
“இந்த அப்பா ஏன் ம்மா இப்படி பன்றாங்க? சூர்யா தான் சொல்றான் இல்ல.. தப்புன்னா எவ்வளவு பணமோ அதை சொல்லிட்டு விட வேண்டியது தானே? இதெல்லாம் அவருக்கு தேவையா? இனி இவன் சும்மா இருக்க மாட்டான்” என்று அஞ்சலி பொரிந்து தள்ள,
“அஞ்சலி! நீ தான் பேசுறியா?” என்று ஆச்சர்யம் காட்டினார் காஞ்சனாவே.
“ஏன் ம்மா?” அஞ்சலி கேட்க,
“உன் அப்பா என்ன பண்ணினாலும் சரினு சொல்லுவ? இப்ப இப்படி கேட்குற?” என கேட்க,
“அது.. அதான் தெளிவா சூர்யா சொல்றானே! இப்ப தான் எனக்கே புரியுது” என்றாள்.
“எல்லாம் சரி தான்.. இந்த சூர்யாவை நீ வான்ற பழக்கம் என்கிட்ட தானா இல்ல நேராவே அப்படி தான் கூப்பிட்டுட்டு இருக்கியா?” என்று இந்தியன் அம்மாவாய் அவர் கேட்க,
“ரொம்ப முக்கியம்.. முதல்ல அப்பாகிட்ட போய் பேசுங்க ம்மா.. இவன் வேற என்னவெல்லாம் பண்ண போறானோ.. பேசாம உண்மையான அமௌன்ட் சொல்ல சொல்லுங்க.. இல்லைனா இவன் இன்னமும் ஆடுவான்” என்று கூறி வைத்துவிட, மகளை நினைத்து அப்படி ஒரு நிம்மதி காஞ்சனா முகத்தில் வந்திருந்தது.
இரவில் அதை எல்லாம் நினைத்தபடி இருந்தவள் தந்தை குணம் அறிந்து அவர் என்ன முடிவெடுப்பார் என்று சிந்தித்து, சூர்யா என்ன செய்வானோ என தந்தைக்காய் பயந்து உறங்கவே இல்லாமல் இருக்க, விடியும் நேரமும் அக்கப்போராய் இருந்தது அவனுடன்.
கீழே வரும் பொழுது சூர்யா ஏற்கனவே வந்து சாப்பிட்டபடி இருந்தான்.
ஜெய் சூர்யாவோடு பேசியபடி இருக்க, மற்றவர்கள் ஜெய் திருமண விஷயமாய் கலந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அஞ்சலி சென்று சூர்யா அருகே நிற்க, “சாப்பிடுறியா?” என்றார் பிரேமா.
“இல்ல ஆண்ட்டி! அப்புறமா சாப்பிடுறேன்!” என்று கூற,
“ம்மா! அப்ப நான் என் பிரண்ட்ஸை எல்லாம் கூப்பிட கூடாதா?” என்று கேட்டுக் கொண்டிருந்தாள் நிவி.
“அதான் ஜனனி வீட்டு பக்கம் ரிசெப்ஷன் மாதிரி வைக்கலாம்னு சொல்லி இருக்காங்க இல்ல.. அப்ப கூப்பிட்டுக்கோ” என்றார் பிரேமா.
“ப்ச்! வேணாம் ம்மா.. அதான் அடுத்து நிவி மேரேஜ் இருக்கே.. அதை சூப்பர் கிராண்டா பண்ணிடலாம்” என்று முடித்துக் கொள்ள, சூர்யாவும் மறுக்கவில்லை.
“வர்ற வெள்ளி போனா அடுத்த வெள்ளி கல்யாணம்.. இனியாவது இந்த வீட்டுல நல்லதே நடக்கணும்” மல்லிகா கூற,
“இனிமே எல்லாம் நல்லது தான் நடக்கும். மல்லி ம்மா!” என்றான் சூர்யா.
நாட்கள் நகர நகர குணசீலனுக்கான அடிகளும் தொடர்ந்து விழுந்து கொண்டே இருந்தது.
குணசீலன் பினாமி முதற் கொண்டு வெளிவர வைத்திருந்தான் சூர்யா.
வேறு வழியே இல்லை எனும் நிலையில் தான் வக்கீல் மூலம் பேசி என மொத்தமாய் முடித்து வைக்கும் நிலைக்கு தள்ளப் பட்டிருந்தார் குணசீலன்.
அதில் மொத்த பணம் இவ்வளவு என்றும் அதில் மாதம் இவ்வளவு தான் தர முடியும் என்றும் சூர்யா கூற மறுப்பு கூறவெல்லாம் முடியாத நிலை.
மகளே தன் பேச்சை கேட்க போவதில்லை எனும் பொழுது, வீட்டை வாங்கவெல்லாம் முடியவே முடியாத காரியம் என தெரியவே சில நாட்கள் ஆனது அவருக்கு.
ஜெய், சூர்யா இருவரும் சூர்யாவின் மூத்த வழக்கறிஞருடன் குணசீலன் வீட்டிற்கே சென்றுவிட, அவர்கள் முன்னேவே காஞ்சனாவும் அத்தனை பேச்சு கணவனை.
“மக மகன்னு சொன்னிங்களே! அவ வாழ்க்கை முக்கியம்னா அவங்க சொல்றதை கேளுங்க” என்று கூற,
“நீங்க லீகலா பண்ணி இருந்தா எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. இப்ப எங்க பணம் மட்டும் இல்ல.. நீங்க எங்க எல்லாம் குடுத்து இருக்கீங்களோ அங்கே எல்லாம் எவ்வளவு வாங்கி இருக்கீங்க? இன்னும் எவ்வளவு கேட்டு இருக்கீங்கன்னு தெரியணும்?” என்று சூர்யா வந்து நிற்க,
மொத்ததமாய் அதை இழுத்து மூடும் நிலை தான் குணசீலனுக்கு.
“நாங்க ஏமாத்தவும் இல்ல.. ஏமாறவும் இல்ல.. உங்களுக்கு தர வேண்டிய காசு மாசம் மாசம் என் அக்கௌன்ட்ல இருந்து வந்துடும் இன்ட்ரெஸ்ட்டோட” ஜெய் கூற, எல்லாம் பேசி முடித்து கிளம்பும் வரை அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து எழுந்து கொள்ளவில்லை குணசீலன்.
“ஆண்ட்டி! நாளன்னைக்கு ஜெய்க்கு மேரேஜ்! நீங்க கண்டிப்பா வரணும்..” என்று சூர்யா கூற,
“வந்துடுங்க அத்தை!” என்றான் ஜெய்யும்.
முகம் மலர தலையாட்டி புன்னகைத்து வந்து விடுவதாய் கூறி காஞ்சனா வழியனுப்பி வைத்துவிட்டு வந்தவர்,
“உங்க பொண்ணு பண்ணின உருபடியான வேலை சூர்யாவை கல்யாணம் பண்ணினது தான்.. அவளும் திருந்திட்டா.. உங்களையும்…” என்ற காஞ்சனா முடிக்காமல் உள்ளே சென்றுவிட, உள்ளதாவது பிழைத்ததே எனும் நிலை குணசீலனுக்கு.