இரவென்றும் பாராமல், வைசாலி அரசனிடம் கேள்வி கேட்டு கலங்கடிக்க, அவன் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான்.
‘உண்மையை சொல்லி விட்டால் தான் என்ன?’ என்ற யோசனை வர, இரண்டு நொடி அரசன் அமைதியாக இருந்தான்.
“பதில் கண்டிப்பா வேணுமா முட்டக்கண்ணி?” என்றவன் குரலில் இருந்த புன்னகை, வைசாலியை அமைதியடையச்செய்தது.
“என்ன திடீர்னு சைலண்ட் ஆகிட்ட?”
“காரணத்த சொல்லிட்டு வேற பேசுங்க”
“நீ தான் வம்பா கேட்குற. என் தப்பு இல்ல.” என்று பழியை அவள் மீது போட்டு விட்டே ஆரம்பித்தான்.
“உன் கிட்ட பேசுனா டிஸ்டர்ப் ஆகுறேன் லாலி. நீ வேணாம்னு சொல்லிட்ட. சாதாரணமா பழைய மாதிரி பேசலாம்ங்குற. என்னால முடியலயே. எனக்கு நீ ஃப்ரண்டுங்குற ஸ்டேஜ்ஜ தாண்டி ரொம்ப நாளாச்சு. சாதாரணமா.. ப்யூரா என்னால நடந்துக்க முடியாது. உள்ள ஒன்ன வச்சுட்டு வெளிய வேற மாதிரியும் பேச மாட்டேன். பேசி டிஸ்டர்ப் ஆகுறதுக்கு பேசாம இருக்கலாம்னு நினைச்சேன். அதான் உன் கால் அட்டன் பண்ணல. மெஸஜ் பார்த்தாலும் ரிப்ளை பண்ணல.”
இந்த பதிலுக்கு என்ன சொல்வது என்று புரியாமல், வைசாலி அமைதியாகி விட்டாள்.
“ஓய்.. பேசேன். இவ்வளவு நேரம் வாய் மூடாம பேசுன. மனுசனா நீனு கேட்ட. இப்ப ஏன் சைலண்ட்டா இருக்க?”
வைசாலி அந்த பக்கம் காபியை மொத்தமாக வாயில் ஊற்றி, டிஸ்யூவால் வாயை துடைத்துக் கொண்டாள்.
“சோ.. டிஸ்டர்ப் ஆகுறீங்கனு இவ்வளவு மாசமா பேசல? அப்போ இப்ப அந்த டிஸ்டர்ப் போயிடுச்சா? இல்ல நீங்களா கால் பண்ணீங்களே.. அதனால கேட்குறேன்”
மீண்டும் பேச்சில் வந்த மரியாதையை நினைத்து, சந்தோசப்படுவதா? சந்தேகப்படுவதா? என்று அரசனுக்கு புரியவில்லை.
“இப்பவும் போகலனு வச்சுக்கோ” என்று பட்டும் படாமல் பதில் சொல்ல, “அப்ப எந்த தைரியத்துல கல்யாணம் பண்ண பொண்ணு பார்த்தீங்க? ஒரு வேளை என்னை மறக்குறதுக்கா?” என்று கேட்டு வைத்தாள்.
‘எப்பா.. எவ்வளவு யோசிக்கிறா இவ!’ என்று அரசன் ஆச்சரியப்பட்டான்.
“உன்னை மறக்க கல்யாணமா? என்ன நக்கலா?”
“பின்ன? இன்னும் டிஸ்டர்ப் பண்ணுறேன்ங்குறீங்க. அப்புறம் கல்யாணத்துக்கு பொண்ணும் பார்த்தா?”
“பொண்ணு பார்க்குறது குத்தமா? ஏன் உன் வீட்டுல இத்தனை நாள்ல உன் கல்யாண பேச்ச எடுக்கவே இல்லையா? அப்படித்தான் இங்கயும் எடுத்தாங்க”
“நான் வேற பொண்ண லவ் பண்ணிட்டு இருக்கேன். இந்த பேச்ச விடுங்கனு சொன்னேன்” என்று அரசன் பல்லைக்கடித்தபடி பேச, வைசாலிக்கு ஒரே நொடியில் கோபம் இருந்த இடம் மறைந்து சிரிப்பு வந்திருந்தது.
வைசாலி மௌனம் காக்க, “ஒரு வேளை.. மாதவன நினைச்சியா?” என்று சித்ரா சோகமும் பதட்டமுமாக கேட்டார்.
வைசாலி அதைக்கேட்டு விட்டு, அன்னையை முறைத்தாள்.
“அவன ஏன் நினைக்கிறேன்?”
“அப்ப உன் கூட வேலை பார்க்குறானே.. அந்த டாக்டர்.. அந்த பையன் பேரு என்ன?” என்று யோசிக்க, “ம்மா.. நான் அரசன தான் நினைச்சேன் போதுமா?” என்று பட்டென கூறியிருந்தாள்.
இதை எதிர்பார்க்காமல் ஆச்சரியப்பட்டாலும், உடனே இருவரின் முகத்திலும் சந்தோசம் பரவியது.
“அய்யோ.. லூசு அம்மா. எனக்கு அரசன பிடிக்குறது இல்ல. அவருக்கு என்னை பிடிச்சுருக்குனு சொன்னாரு. அத தான் நினைச்சேன். அவர் தான் கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்டாரு”
ஜோதிலிங்கத்தின் முகத்தில் சந்தோசம் இரட்டிப்பானது. அரசனுக்கு என்றால், மகளை கண்ணை மூடிக் கொண்டு திருமணம் செய்து வைத்து விடுவார்.
“எப்போ? காலையில பேசும் போதா?” என்று சித்ரா பரபரப்பாக கேட்க, “இல்ல. கேட்டு ரொம்ப நாளாச்சு” என்று எழுந்து கொண்டாள்.
“நீ என் சொன்ன?” என்று சித்ரா இன்னும் ஆர்வமாக, “எனக்கு தூக்கம் வருது. நாளைக்கு மதுரைக்கு கிளம்பனும். குட் நைட்” என்று கத்தரித்து விட்டு சென்று விட்டாள்.
“என்னங்க ஒன்னும் சொல்லாம போறா?”
“இந்த பேச்சுலயே தெரியலயா? அரசன மனசுல வச்சுட்டு தான் பாப்பா மத்தவங்கள வேணாம்னு சொல்லிட்டு இருக்கு. நம்ம கிட்ட சொல்ல கூச்சப்படுதோ என்னவோ? இல்லனா பாப்பாவே இன்னும் உணரல போல. பார்த்துக்கலாம் பொறுமையா இரு” என்று சித்ராவை அவர் அடக்கியது, வைசாலியின் காதில் விழத்தான் செய்தது.
ஏற்கனவே அரசனுக்கு வேறு பெண்ணோடு திருமணம் பேசுவதில் குழம்பியிருந்த வைசாலி, இதை புரிந்தும் புரியாமலும் மனதின் ஓரததில் போட்டு வைத்தாள்.
அதே போல் அரசனும் செய்து வைத்திருக்கிறான். ஆனால், வைசாலியை போல் குழப்பிக் கொள்ளாமல் தெளிவாக செய்திருக்கிறான்.
குழப்பமெல்லாம் தெளிந்து, பளிச்சென பதில் கிடைத்து இருந்தது அவளுக்கு. அந்த பதிலில் சந்தோசம் மிளிர்ந்தது.
“ஹலோ லாலி இருக்கியா?”
வைசாலி பொங்கி வந்த சிரிப்பை அடக்கி மௌனம் சாதிக்க, “லாலி.. இப்ப ஏன் சைலண்ட்டா இருக்க?” என்று கேட்டான்.
மௌனம் மட்டுமே பதிலாக இருக்க, “பேசமாட்ட. சரி வச்சுடுறேன்” என்றான்.
சொன்னானே தவிர அழைப்பை துண்டிக்காமல் இருக்க, வைசாலியும் சிரிப்பையும் தன் சந்தோசத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்தாள்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த ஆட்களும் கிளம்பி, அந்த பகுதி காலியாவதை கவனித்தவள், உடனே எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.
அது வரை காதில் கைபேசி இருந்தது. அந்த பக்கம் அரசனும் அமைதி, இந்த பக்கம் வைசாலியும் அமைதி.
அறைவாசலுக்கு வந்தவள் ஒரு நொடி நின்று விட்டு, “குட் நைட்” என்றாள்.
“ஹேய்..” என்றவனுக்கு பதில் சொல்லாமல் வைத்து விட்டு, அறைக்குள் சென்று படுத்து விட்டாள்.
________
“நீ கேட்ட பீட்ரூட் மட்டும் கிடைக்கல. இருந்ததும் நல்லா இல்ல. வேற எல்லாம் வாங்கிட்டேன்” என்று காய்கறி பையை நீட்டிய கணவனிடம், “ஏங்க.. சாலி அரசன பார்த்து பேசியிருப்பாளா?” என்று கேட்டு வைத்தார் சித்ரா.
“நீ இத எத்தனை தடவ கேட்ப?”
“நீங்க பதில் சொல்லுற வரை”
“எனக்கு தெரியாதுமா..”
“அப்ப உங்க பொண்ணுக்கு போன போட்டு கேளுங்க”
“பாப்பா கான்ஃப்ரண்ஸ்க்கு போயிருக்கு. சும்மா போன் பண்ணிட்டு இருக்க கூடாது”
“நேத்துல இருந்து இதையே சொல்லுறீங்க. அரசனுக்கு வேற அடிபட்டு இருக்கு.. போய் பார்த்தாளானு தெரியல. பார்க்க சொல்லுங்கனு உங்கள சொன்னா மாட்டேங்குறீங்க”
ஜோதிலிங்கம் மனைவியின் அவசரத்தை கண்டு சிரித்து விட்டார்.
“உனக்கு ஏன் இவ்வளவு அவசரம்?”
“பேச்சுவாக்குல ஒரு நாள் அரசனுக்கு பொண்ணு பார்க்குறதா அமுதா சொல்லுச்சு.”
“ஓஓ.. அந்த கவலையா உனக்கு?”
“அமுதா கிட்ட சாலி போனா நாம எத பத்தியும் கவலை பட தேவையில்ல. தங்கமா பார்த்துப்பா”
ஜோதிலிங்கம் இதை தலையாட்டி ஆமோதித்தார். ஒரு வாரம் அங்கு இருந்த போது அமுதவல்லி எவ்வளவு மரியாதையாக நடந்து கொண்டார் என்பதை பார்த்தார் தானே. அங்கு தன் மகளை அனுப்பினால், காலம் முழுவதும் சந்தோசமாக இருப்பாள் என்பதில் ஐயமில்லை.
“அரசன் பத்தி யோசிக்கவே வேணாம். கண்ணு முன்னாடி வளர்ந்த பையன். உங்க மக ஒரு வார்த்தை பிடிச்சுருக்குனு சொன்னா தான் என்னவாம்?”
“அவசரப்படாத சித்ரா.. ஏற்கனவே ஒன்னு தப்பா போய் நின்னுடுச்சு. இதுல எந்த அவசரமும் வேணாம். நடக்குறது நல்லதா நடக்கும். அமைதியா இரு”
“போங்க.. சாலி சொல்லுறதுக்குள்ள அமுதா வேற பொண்ண பார்த்துட்டா என்ன பண்ணுறது?”
“அரசனுக்கு பாப்பாவ பிடிச்சுருக்கே. அப்படி எல்லாம் நடக்காது. நீ போய் வேலைய கவனி. முகத்த கழுவிட்டு வர்ரேன்” என்று மனைவியை அனுப்பி வைத்தார்.
_______
கான்ஃப்ரண்ஸ் முடிந்து அறைக்குத் திரும்பிய பின்னும், வைசாலியிடம் உற்சாகம் சற்றும் குறையவில்லை. அணைந்து கிடந்த கைபேசியை உயிர்பித்து பார்த்தாள். சித்ராவிடமிருந்து மட்டுமே அழைப்பு வந்திருக்க, அரசனின் சத்தத்தை காணவில்லை.
“சார் மறுபடியும் டிஸ்டர்பாக போயிட்டாரு போல” என்று சிரித்துக் கொண்டே சித்ராவை அழைத்தாள்.
“அப்படியா? எப்படி இருக்கா.. இருக்கு கை? சரியாகிடுச்சா?” என்றவர் மருமகனை மரியாதை இல்லாமல் பேசக்கூடாது என்று சுதாரித்தார்.
“ஒரே நாள்ல சரியாகாதுமா.”
“போகும் போது பழம் எதாவது வாங்குனியா?”
“வாங்குனேன். பார்த்தேன். அமுதா ஆண்ட்டி டீ போட்டு கொடுத்தாங்க. குடிச்சுட்டு கிளம்பிட்டேன். இவ்வளவு தான். இப்போ வெளிய கிளம்புறேன். நைட் பேசலாம்”
சித்ராவை பேசவிடாமல் வைத்து விட்டு, தன் வேலையை பார்த்தாள்.
ஊரைசுற்றி முடித்து.. இரவு, காரிலேயே இராமநாதபுரம் சென்று சேர்ந்தனர். சித்ரா முன்பே உறங்கி இருக்க, வைசாலியும் வந்ததும் சென்று படுத்து விட்டாள்.
அடுத்தநாள் காலை.. சித்ரா வேலை செய்தாரோ இல்லையோ.. நொடிக்கொரு முறை மகள் எழுந்து விட்டாளா? என்று பார்த்துக் கொண்டே இருந்தார்.
அவள் களைப்பில் வெகுநேரம் உறங்க, சித்ராவிற்கு கோபமே வந்து விட்டது.
“சாலி.. எந்திரி” என்று எழுப்ப, “என்னமா?” என்று புரண்டு படுத்தாள்.
“எவ்வளவு நேரம் தூங்கிட்டே இருப்ப? சாப்பிடுற நினைப்பு இல்லயா? எந்திரிச்சு வா”
“அப்புறம் சாப்பிடுறேன்”
“இப்ப எந்திரிக்கிறியா இல்லையா?”
அவ்வளவு தான் எழுந்து அமர்ந்தவள், தூக்கத்துடனே எல்லாம் செய்து முடித்து சாப்பிட அமர்ந்தாள்.
சித்ரா கணவரிடம் கண்ணை காட்ட, “வேலை எல்லாம் நல்லா முடிஞ்சதாமா?” என்று விசாரித்தார் ஜோதிலிங்கம்.
தலையாட்டியவள் வேலையை பற்றியும் ஊர் சுற்றியதை பற்றியும் சொல்லிக் கொண்டிருக்க, “அமுதாவ பார்த்தியே.. எப்படி இருக்கு?” என்று சித்ரா இடையில் வந்தார்.
அமுதவல்லியிடம் பேசியதை விளக்கமாக சொன்னவள், மறந்தும் அரசேந்திரனின் பெயரை எடுக்கவில்லை.
“அரசனுக்கு கை நல்லா இருக்கா?” என்று சித்ரா கேட்க, “நேத்து தான கேட்டீங்க? உங்களுக்கு வேணும்னா போன் பண்ணி நீங்களே கேளுங்க. என்னை விடுங்க” என்று எழுந்து சென்று விட்டாள்.
சித்ரா மகளை முறைக்க முடியாமல் கணவனை முறைக்க, அவர் சிரித்துக் கொண்டிருந்தார்.
________
ஆதிகேசவன் கையில் இருந்த கேமராவில் புகைப்படம் எடுத்து தள்ளிக் கொண்டிருந்தான். குடும்பத்தினர் ஒவ்வொருவரையும், தனித்தனியாக அந்த உலக அதிசயத்தின் முன்பு நிற்க வைத்து படமெடுத்துக் கொண்டிருந்தான்.
குடும்பமாக கிளம்பி இருந்தனர். உலக அதிசயத்தின் முதல் அதிசயமான காதல் சின்னத்தை பார்க்க..
அண்ணன் அண்ணி அவர்களது மகனுடன் நிற்க, அன்னையும் தானும் நின்று புகைப்படமெடுத்துக் கொண்டான். குடும்பம் மொத்தமாக எடுத்த படத்தை, அரசனுக்கு அனுப்பி வைத்தான் நந்தகோபாலன்.
அரசன் அந்த படத்தை பார்த்து புன்னகைத்தான். ஆதிகேசவனின் முகத்தில் அந்த வெறுமை இல்ல. புன்னகை இல்லை என்றாலும் கூட, வெறுமையும் விரக்தியும் இல்லை.
அவனை நினைத்து அரசனுக்கு பெருமையாகத்தான் இருந்தது. அவனிடத்தில் இருந்து தெளிந்து வந்து, வாழ்வின் தெளிவான முடிவுகளை எடுப்பது சிரமமே.
அவன் மனோகரியின் மீது வைத்திருக்கும் அன்பாகட்டும், அதற்காக உயிரையே விட தயாரான காதலாகட்டும், அரசனால் அதை பெரிய குற்றமாக நினைக்க முடியவில்லை. அறிவின் அடிப்படையில் தற்கொலை முட்டாள்தனமானது என்றாலும், ஆதிகேசவனின் காதலில் குறை காணவே முடியாது.
அடுத்தடுத்து அவன் நடந்து கொண்டது எல்லாம் நினைவில் வந்தது. முக்கியமாக மாதவனுக்கு தண்டனை வழங்கிய நாளில், ஆதிகேசவன் நடந்து கொண்ட விதம் நினைவில் வந்தது.
எட்டு மாதங்களுக்கு முன்பு மாதவனின் வழக்குக்கு தீர்ப்பு வந்திருந்தது. மாதவனை தவிர, அந்த வழக்கில் மாட்டிக் கொண்ட யாரும் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் தான், குற்றத்தை நிரூபித்து இருந்தது.
மாதவன் ஒப்புக் கொண்டதில், அவனுக்கு தண்டனை குறைக்கப்பட்டு இருந்தது. ஐந்து வருட சிறை வாழ்க்கையோடு, அபராதமும் விதித்து இருந்தனர். மருத்துவனாய் இருந்து லஞ்சம் கொடுத்து தவறான பாதையில் சென்றதற்கு, கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
தண்டனையை வாங்கிக் கொண்டு மாதவன் வெளியேற, அவன் முன்னால் சென்று நின்றான் ஆதிகேசவன்.
மாதவன் அவனை புரியாமல் பார்க்க, “அந்த ஏழு கோடிய நான் உனக்கு தர்ரேன். என் பொண்டாட்டி பிள்ளை ரெண்டையும் திருப்பிக் கொடுக்கிறியா?” என்று கை நீட்டினான்.
மாதவன் அதிர்ந்து போய் பார்த்தான். மனோகரியின் கணவன் இவன் என்று புரிய, மாதவனால் பேச முடியவில்லை.
“டாக்டர் தான் கடவுளுக்கு அடுத்த பணில இருக்காங்களாமே. எங்க கடவுள் சார்… என் பொண்டாட்டியயும் வயித்துல இருந்த புள்ளையயும் திருப்பி கொண்டு வந்து கொடுங்களேன். பார்ப்போம்.”
ஆதிகேசவனின் குரலில் ஆவேசம் இருக்க, மாதவனின் தலை குனிந்தது.
“முடியாதுல? முடியாது… ஏன்னா நீ சுயநலம் பிடிச்ச சாதாரண மனுசன். செய்யுற தொழிலுக்கு சுத்தமா இல்லாத துரோகி. உன்னை மட்டும் முதல்லயே பார்த்து இருந்தா, என் பொண்டாட்டி போன இடத்துக்கே அனுப்பி வைச்சுருப்பேன். தப்பிச்சுட்ட. ஜெயில் தண்டனை உனக்கு போதுமானு எனக்குத்தெரியாது. ஆனா மனோகரி ஆத்மா நிம்மதியடைஞ்சு இருக்கும்.”
குனிந்து நின்றிருந்தவனை பார்த்து பேசி விட்டு ஆதிகேசவன் சென்று விட, மாதவனை சிறைக்கு அழைத்துச் சென்று விட்டனர்.
இத்தனையும் அரசன் சற்று தள்ளி நின்று கவனித்துக் கொண்டிருந்தான். ஆதிகேசவன் கோபத்தில் மாதவனை அடித்து விட்டால்? அதனால் தான் அருகில் நின்று இருந்தான். ஆனால் ஆதி அப்படி செய்யவில்லை.
நிதானத்தையும் விடவில்லை. பேச வேண்டியதையும் பேசி விட்டான். அதன் பிறகு தான் அரசன் ஒரு முடிவுக்கு வந்தான். தீர்ப்பு வந்த இரண்டு நாட்களுக்கு பிறகு, ஆதியை தனியாக அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
“எங்க போறோம்?” என்று கேட்டவனுக்கு, “சும்மா.. ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்னு.. நீயும் கால் சரியில்லனு வீட்டுலயே அடைஞ்சு கிடக்கிறியே” என்றிருந்தான்.
ஒரு இடத்தில் சென்று காரை நிறுத்தி விட்டு, “இறங்கு.. உனக்கு ஒன்னு காட்டுறேன்” என்றான்.
ஆதிகேசவன் புரியாமல் இறங்கி நின்றான்.
“என்ன காட்ட போறீங்க?”
“அதோ.. வந்தாச்சு”
அரசன் காட்டிய திசையை திரும்பிப் பார்த்த ஆதிக்கு, எதுவும் விளங்கவில்லை. நான்கு பெண்கள் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒரு பெண் மட்டும் மிகவும் அமைதியாக வந்து கொண்டிருந்தாள்.
“ஓரமா வருதே அந்த பொண்ணு தான்” என்று அரசன் கூறவும், அமைதியாக வந்தவளை நன்றாக பார்த்தான்.
அவளை வேறு எங்குமே பார்த்தது போல் நினைவு இல்லை.
“என்ன அண்ணா?”
“இந்த பொண்ணோட இதயத்துக்கு பதிலா தான் மனோகரியோட இதயத்த வச்சுருக்காங்க”
“ண்ணா..!” என்று அதிர்ந்து போய் மீண்டும் மிருதுளாவை பார்த்தான். பார்த்த விழி நின்று விட்டது.
மனோகரியின் இதயம் மற்றும் நுரையீரல், வேறு பெண்ணுக்கு வைத்திருக்கிறார்கள் என்று தெரியும். ஆனால் அந்த பெண்ணின் பெயரோ முகமோ எங்குமே வெளியே வரவில்லை. அரசன் வரவிடவில்லை. யாரோ எவரோ என்று இருந்த பெண்ணை, இன்று பார்க்கும் போது ஆதியால் அதிராமல் இருக்க முடியவில்லை.
“மனோகரி சாகல. இதோ இந்த பொண்ணோட உடம்புல இன்னும் துடிச்சுட்டு உயிரோட தான் இருக்கா. என்ன ஒன்னு, இப்ப அந்த இதயம் உனக்கு சொந்தமில்ல. அந்த பொண்ணுக்கு மட்டும் தான் சொந்தம். நீ கேட்ட மாதிரி மனோகரிய உயிரோட காட்டிட்டேன் ஆதி. இனி என்ன செய்யப்போற?”
ஆதிக்கு பேச்சும் மூச்சும் நின்றே விட்டது. மிருதுளா பேருந்தில் ஏறும் வரை, அவளை பார்த்த பார்வையை அகற்றவில்லை.
மிருதுளா அமைதியாக மிக அமைதியாக இருந்தாள். மூச்சு கூட நிதானமாக விடுவாள் போலும். அவளது இதயத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்கமாட்டாளோ? நினைத்த வேகத்தில் சிறு நிம்மதி பரவியது ஆதிக்கு.
ஆதியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் அரசன். மிருதுளா ஏறிய பேருந்து கிளம்பி விட, ஆதி அரசனிடம் திரும்பினான்.
“என்ன பண்ண போற?” என்று மீண்டும் கேட்க, ஆதியின் முகத்தில் நீண்ட நாட்களுக்குப்பிறகு புன்னகை எட்டிப்பார்த்தது
“இதெல்லாம் ரொம்ப அநியாயம் இல்லணா?”
“எது?”
“காதலிக்கும் போது என் இதயம் உனக்கு. உன் இதயம் எனக்கு. அங்க நீ இருக்க நான் இருக்கேன்னு பேசுறது. இதோ அதே இதயம் இன்னைக்கு வேற உடம்புல சாதாரணமா துடிச்சு, அதுக்கு கொடுத்த வேலைய பார்த்துட்டு இருக்கு”
அரசன் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றான்
“அந்த பொண்ணு நல்லா இருக்கட்டும்ணா. ரொம்ப வருசம் வாழ்ந்து அந்த இதயம் நிறைஞ்சு போற அளவு சந்தோசம் கிடைக்கட்டும்”
ஆதியின் கண்கள் உணர்ச்சி பெருக்கில் கலங்கி விட, அழுந்த துடைத்துக் கொண்டான்
“நான் என்ன முடிவு பண்ணேன்னு கேட்டீங்கள்ள? அன்னைக்கு சொன்னீங்கள.. என் அப்பா ஆர்மி மேன். நாட்டுக்காக உயிர விட்ட வீரர்னு. அவரோட மகன் நான் கோழையா இருக்கேன்ல? இனிமே இருக்க மாட்டேன். நானும் ஆர்மில ஜாயின் பண்ண போறேன். இந்த உயிர சுமந்துட்டு கடமையேனு என்னால வாழவே முடியாது. என் பட்டு எங்கயோ வாழுறா.. அந்த நிம்மதில நானும் வாழுவேன். அப்போ என் உடம்பு இருந்த கண்டீஷன்க்கு, ஆர்மி ஒத்து வருமானு யோசிச்சுட்டு இருந்தேன்.. அதான் உங்க கிட்ட கூட சொல்லல. இன்னும் நந்து கிட்டயும் சொல்லல. இப்போ முடிவு பண்ணிட்டேன்ணா. ஆர்மில தான் சேருவேன். அனாமத்தா போற உயிர் மக்களுக்காக போகட்டுமே. அந்த மக்களோட மக்களா இருக்க என் பட்டு இதயத்துக்காக போகட்டுமே..”
ஆதி பேசப்பேச, அவன் கண்ணில் உயிர்ப்பும் உறுதியும் கூடிக் கொண்டே போனது. அதை பார்த்த அரசனின் மனதில், அப்படி ஒரு நிம்மதி பரவியது
ஆதியிடம் மிருதுளாவை காட்டும் வரை, அவனுக்கு சற்று யோசனையாக தான் இருந்தது. மனோகரியின் மீது கொண்ட காதலால், மிருதுளாவை தொந்தரவு செய்ய கிளம்பி விடுவானோ என்ற பயம் இருந்தது.
ஒருவரின் கண்ணை மற்றவருக்கு வைத்ததால் காதல் வந்த கதை, சினிமாக்களில் வேண்டுமானால் ரசிக்கப்படலாம். வாழ்க்கையில் நிச்சயம் கசக்கும்.
வேறு ஒருவருக்காக மற்றொரு உயிரை ரசிப்புதும், அவர்களை தொந்தரவு செய்வதும், நிச்சயம் ஏற்கவே முடியாத ஒன்று. அந்த உயிருக்கு தனி ஆசைகள் விருப்பங்கள் இருக்கும். அதில் அவர்களை வாழ விட்டு விடுவதே நலம்.
ஆதியும் அதே எண்ணத்தோடு பேசவும், அரசனுக்கு நிம்மதியானது. ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறதல்லவா?