ரதியும் அமலாவும் மாயா இருந்த ரூமுக்கு வந்து விட்டார்கள்.
நடந்ததை கேள்விப்பட்டதும் இருவருக்குமே அவ்வளவு வருத்தம்.
Advertisement
“என் பொண்ணுக்கு மட்டும் ஏன்தான் இப்படி நடக்குதோ?” என்று கண்ணீர் வடித்தாள் அமலா.
“விடும்மா. ஒரே விசயத்தை சொல்லி அழாத. எனக்கே போர் அடிக்குது..” என்ற மாயா சுவரில் சாய்ந்தபடி நின்றிருந்த விக்னேஷை பார்த்தாள். இதற்கு முன் சைட் அடிக்கவில்லை. இப்போது சைட் அடிக்க தோன்றியது. ‘டக்கர் பிகரா இருக்கான்..’ என்றது அவளின் மனம்.
Advertisement
Advertisement
கையில் கட்டு போட்டிருந்தான். அவனின் நீள விழிகளும் இவளைதான் ஆழமாக பார்த்தன.
“யார் அவனை அனுப்பி இருப்பாங்க?” என்று கேட்டாள் ரதி.
அவளை யார் கொல்ல வந்தது என்ற குழப்பதோடு அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் அவளின் பார்வை தன் உதடுகளை மேய்வதை கண்டு கன்னம் சிவந்து போனான்.
இவளுக்கு கொஞ்சம் கூட கவலையே இல்லை. அம்மா அக்காவை பக்கத்துல வச்சிக்கிட்டே பார்வையால என்னை திங்குறா என்று நினைத்தான்.
இரவு வந்தது.
“இவங்களை கூட்டிட்டு கிளம்பு..” என்று தம்பியிடம் சொன்னான் தருண். தினமும் அவன்தான் கொழுந்தியாவோடு துணைக்கு இருந்தவன்.
ஆனால் இன்று விக்னேஷ் “நீ போ. நான் இங்கேயே இருக்கேன். இனிமே இவளுக்கு எக்ஸ்ட்ரா ப்ரொடெக்ஷனை நாமதான் தரணும். பகல்ல நீ ஹாஸ்பிட்டல்ல இரு. நைட்ல நான் இருக்கேன்..” என்றான்.
திருமணம் ஆகாத ஒரு பெண்ணுக்கு திருமணமாகாத ஒரு பையனை காவலுக்கு விடுவதா என்று தருண் தயங்கினான்.
ஆனால் மனைவிக்கும் ஓர் இரவு ஆறுதல் சொல்லலாமே என்று நினைத்து “சரி எதுவா இருந்தாலும் போன் பண்ணு..” என்று சொல்லிவிட்டு இவர்களை அழைத்துச் கொண்டு கிளம்பினான்.
அவன் தன் கையை காயப்படுத்தி அவளை காப்பாற்றியது ரதிக்கும் அமலாவுக்கும் நம்பிக்கையை கொடுத்திருந்தது.
அவர்கள் சென்ற சில நிமிடங்களுக்கு பிறகு மாயாவை பார்த்தான் விக்னேஷ்.
அவன் சுவரில் சாய்ந்து நின்றிருக்கும் இந்த போஸ் மிகவும் அழகாக இருக்கிறதே என்று அவள் ஆச்சரியத்தில் மூழ்கி போயிருந்தாள்.
“இவ்வளவு சைட் அடிச்சா நான் கரைஞ்சே போயிடுவேன்..” என்றவன் அவள் பக்கத்தில் வந்தான்.
அவன் சொன்னதில் வெட்கப்பட்டு தன் உதட்டை கடித்தாள் இவள்.
“இவ்வளவு நேரமும் என் உதட்டை கடிக்கதானே கணக்கு போட்ட? இப்ப என்ன உன் உதட்டை கடிச்சிட்டு இருக்க?” எனக் கேட்டவன் அவளின் பற்களுக்கு இடையே இருந்த உதடுகளை மென்மையாக விடுவித்தான்.
“எனக்கு ஆன்சர் வேணும். ஒருத்தன் உன்னை கொல்ல வருவதா சொன்ன. அதே போல வந்தான். வாட் இஸ் த மேட்டர்?” எனக் கேட்டான்.
சொன்னால் நம்புவானா என்று இவள் தயங்க, “என்கிட்ட மறைக்காத. உண்மையை சொல்லு..” என்றான்.
“ஒரு கனவு போல வந்தது. திடீர்ன்னு சுத்தி இருந்த எல்லாமே பச்சை கலர்ல மாறி போச்சி. ஒருத்தன் குத்த வந்தான். ஆனா அது நிஜத்துல நடக்கல. அதுக்கு முன்னாடியே நீ வந்து காப்பாத்திட்ட..” என்றாள்.
“நான் வராம இருந்திருந்தா அவன் உன்னை குத்தி இருப்பான். உனக்கு எதிர்காலத்தை பார்க்கும் பவர் கிடைச்சிருக்குன்னு நினைக்கிறேன்..” என்றான்.
அவள் நம்பிக்கை இல்லாமல் பார்த்தாள்.
“கொஞ்ச நாள் பார்க்கலாம்.. இது என்னன்னு கண்டுப்பிடிக்கலாம்..” என்றவன் அவளது நெற்றியில் விளையாடிய கேசத்தை ஒதுக்கி நெற்றியில் முத்தமிட்டான்.
அவனின் கையை பற்றியவள் “சாரி. என்னால உன் கையில் அடிப்பட்டுடுச்சி..” என்றாள்.
“இட்ஸ் ஓகே.. உனக்காக நான் உயிரையே தருவேன். சொன்னா நம்ப மாட்டா. உனக்குள்ள நீ ஒருநாள் உணருவ..” என்றவன் “நான் பாதுகாப்புக்கு இருக்கும் போதே உன்னை கொல்ல ஒருத்தன் வரான்னா அவனுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்? என்னை பார்த்தா அவனுக்கு சின்ன குழந்தை மாதிரி தெரிஞ்சிருக்குமோ?” என்று கேட்டு பற்களை கடித்தான்.
“ஆனா நீ இல்லாத போதுதானே அவன் வந்தான்? அவனுக்கு உன்னை பார்த்தா பயம்தான்..” என்றாள் மாயா.
“நான் உன்னை விட்டு போயிருக்கவே கூடாது..” என்று தன் மீதே வருத்தப்பட்டான்.
“முடிஞ்சதை நினைக்க வேண்டாம்..” என்றவள் அவனின் செஞ்சாற்று உதடுகளை உற்று உற்றுப் பார்த்தாள். அவன் உதடுகள் எவ்வளவு மென்மையாக இருக்கும் என்று சோதிக்க சொல்லி இவளின் மனம் உசுப்பேற்றியது.
அவளின் கண்களில் இருந்த மோகத்தை பார்த்தவன் “கிஸ் வேணுமா?” என்று கேட்டான்.
திகைப்போடு அவன் விழிகளை பார்த்தாள். “சாரி. நான் மூணு மாசத்துக்கு துக்கத்துல இருக்கேன். கிஸ் பண்ண மாட்டேன்..” என்றாள்.
புரிந்து கொண்டவன் உதட்டை கடித்தபடி சரி என தலையாட்டினான்.
“ஆனா இந்த லிப்ஸ் எப்பவும் உனக்கு மட்டும்தான் சொந்தம். நீ எத்தனை நாள் கழிச்சு வேணாலும் யூஸ் பண்ணிக்கலாம்..” என்றான்.
‘ஆனா உங்க அம்மா என்னையும் உன்னையும் வாழ விடணுமே!’ என்று நினைத்தவள் அந்த கனகவதிக்கு எப்படி ஆப்பு வைப்பது என்று யோசித்தாள்.
“என்னை டிஸ்சார்ஜ் பண்ணதும் நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்டாள்.
ஆச்சரியப்பட்டவன் “ஆனா மூணு மாசத்துக்கு துக்கம் கொண்டாடுவதா நீதானே சொன்ன?” என்று கேட்டான்.
அவளின் உதட்டை தனது கட்டைவிரலால் வருடியவன் “கல்யாணத்துக்குப் பிறகு என்னை பட்டினி போட்டு சாகடிக்க முடிவு பண்ணிட்ட. சரி. நீ கல்யாணத்துக்கு ஆசைப்படுவதே பெரிய விஷயம்தான். பண்ணிக்கலாம்..” என்றான்.
ஆனால் சந்தேகம் தீரவில்லை. அதற்கேற்றார் போல் அவளும் “கல்யாணம் பண்ண பிறகு நாம உங்க வீட்ல போய் வாழலாம்..” என்றாள்.
அவளின் கை விரல்களோடு தன் கை விரல்களை கோர்த்தவன் “என் அம்மா உன்னுடைய எதிரி. நீ அவங்களை பழிவாங்க என்னை யூஸ் பண்ண நினைக்கிறியா?” என்று கேட்டான்.
அவளுக்கு பொய் சொல்ல ஆசை. ஆனால் அவனின் கண்களைப் பார்த்து சொல்ல முடியவில்லை.
“என் அம்மா மேல எனக்கும் கோபம்தான். நாம அவங்களுக்கு எதிரான ஆதாரங்களை கண்டுபிடிச்சி போலீஸ்ல போட்டு தரலாம். சட்டம் அவங்களுக்கான தண்டனையை தரும். அட்லீஸ்ட் அப்படி போனாலாவது அவங்க கொஞ்ச வருஷத்துல திரும்பி வந்துடுவாங்க. ஆனா நீ கொலை பண்ணினா அவங்க செத்துடுவாங்க. நீயும் ஜெயிலுக்கு போயிடுவ. கடைசியில் நான்தான் அனாதையா நிற்பேன்..” என்றான்.
கண்களை மூடி இடம் வலமாக தலையாட்டியவள் “எனக்கு உன் அம்மாவை கொல்லனும்ன்னு ஆசை கிடையாது. மனசார என் அப்பாகிட்ட அவங்க ஒரு சாரி கேட்டுட்டா போதும்.” என்றாள். அதை சொல்லும்போது அவளின் விழிகளில் கண்ணீர் வடிந்தது.
மரணத்தை பார்த்துவிட்டு வந்துவிட்டாள். மரணம் ஒன்றும் அவ்வளவு பெரிய வலியை தருவதில்லை. சுலபமாக இந்த உலகத்தின் இன்ப துன்பங்களில் இருந்து விடுதலை கொடுக்கும் ஒரு கருவியாகதான் அந்த மரணம் இருந்தது. கனகவதிக்கு இவள் விடுதலை தர விரும்பவில்லை.
அவனின் கையோடு தன் கை கோர்த்தபடியே அன்றிரவு உறங்கினாள்.
தான் அனுப்பிய ஆள் படுமோசமாக சிக்கிக் கொண்டான் என்று தெரிந்து கனகவதிக்கு ஆத்திரமாக வந்தது. விரைவில் நாம் ஜெயிலுக்கு போக போகிறோம் என்று பயந்தாள்.
வீட்டிற்கு வந்த தர்மேந்திரன் இவள் கடுகடுப்பாக இருப்பதை கண்டு பக்கத்தில் வந்து அமர்ந்தார். “என்னாச்சி?” எனக் கேட்டார்.
“நீங்க சொல்வதை நானும் ஏத்துக்கிறேன். இனி எந்த தப்பும் செய்ய மாட்டேன். ஆனா இப்ப மாட்டியிருக்கும் பிரச்சினையில் இருந்து நான் எப்படி தப்பிப்பதுன்னு சொல்லுங்க.. மாயா எல்லாம் உண்மையையும் சொல்ல போறா. என்னோட பசங்க ரெண்டு பேரும் ஏற்கனவே என்னை வெறுத்துட்டாங்க. அது உண்மையை சொன்னா அவங்களே வந்து என்னை போலீஸ்ல பிடிச்சி கொடுத்துடுவாங்க..” என்று கவலையாகச் சொன்னாள்.
அவளின் கையைப் பிடித்தவர் “இனி எந்த தப்பு செய்ய மாட்டதானே?” என்று கேட்டார்.
“கண்டிப்பா மாட்டேன்.” அவள் தலையை ஆட்ட “இதை நான் பார்த்துக்கிறேன்..” என்று சொல்லி ஆறுதல் படுத்தினார்.
மறுநாள் காலையில் மாயாவுக்கு தேவையான ஊசியை போட்டுவிட்டு சென்றார் மருத்துவர். பகலில் துணைக்கு இருக்க தருண் வந்து விட்டிருந்தான்.
“உன் அம்மாவும் அக்காவும் சாப்பாட்டு எடுத்துட்டு அப்புறமா வருவாங்க..” என்றவன் அவளின் கன்னத்தில் இரத்த துளி காய்ந்து கிடப்பதை கண்டு அதை தேய்த்தான்.
“உனக்கு ஏதாவது வேணுமா?” எனக் கேட்டான்.
“ம்ஹூம். உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா மாமா?”
அவளின் அருகில் அமர்ந்தவன் “எதுக்கு கோபம் வரணும்?” எனக் கேட்டான்.
“நான் அந்த கைலாஷ் ஆபிஸ்க்கு வேலைக்கு போனேன். அக்கா கையை கட் பண்ணிக்கிட்ட டைம்ல உங்களை ரொம்ப மோசமா பேசினேன்..”
அவளின் வலது கையை எடுத்தவன் அளவுக்கு மீறி வளர்ந்து கிடந்த நகங்களை கவனித்தான்.
“கைலாஷ் ஆபிஸோ இல்ல வேற எங்கேயோ.. அது உன் இஷ்டம். இந்த உலகத்துல ஈசியான விசயம் என்ன தெரியுமா, அடுத்தவங்களுக்கு ரூல்ஸ் போடுறதுதான். நமக்கு நாமே ரூல்ஸ் போட்டுக்கிட்டா அதை பாலோ பண்றது ரொம்ப கஷ்டம். ஆனா அடுத்தவங்களுக்கு ரூல்ஸ் போட்டுட்டு நீ பாலோ பண்ணலன்னு அவங்களை திட்டுவோம். இது ரொம்ப தப்பு. என் அம்மா அவங்க எல்லையை தாண்டி செயல்பட்டாங்க. அங்கே நான் அவங்களுக்கு தெளிவா புரிய வைக்காம போயிட்டேன். அதுல என் தப்பு வேணா இருக்கு. உன் தப்பு இல்ல..” என்றான்.
இனிமையாக பேசும் மாமனை இவளுக்கு பிடித்து விட்டது.
“கூட பொறந்தவ கையை அறுத்துக்கிட்டா யாருக்கா இருந்தாலும் கோபம் வரும். நீ என் மச்சினி.. உன்னை இப்படி பண்ணவங்களை கண்டுப்பிடிச்சி கண்டம் துண்டமா வெட்ட ஆசை வருது. உனக்கு வந்த கோபத்துல எந்த தப்பும் இல்ல. ” என்றான்.
“சாரி மாமா. நீங்களும் உங்கம்மா போல இருப்பிங்கன்னு நினைச்சி ஏதேதோ பேசிட்டேன்..”
அவளின் கன்னம் கிள்ளியவன் “அப்படின்னா உங்கக்காவும் சைக்கோவா?” என்று கேட்டான்.
“வேலிட் கொஸ்டீன்..” என்றவள் அவன் முகத்தில் தன் யோசனைகளை தொலைத்து விட்டாள்.
“நீங்க ஒரு சாயல்ல விக்கி மாதிரியே இருக்கிங்க..” என்றாள்.
உதட்டை சுழித்தவன் “அவன்தான் என்னை மாதிரி இருக்கான். முதல்ல பிறந்தது நான்தான்..” என்றான்.
அவசரப்பட்டு வாயை விட்டு விட்டோமே என்று நினைத்தவள் தன் வார்த்தைகளுக்கு எப்படி சாக்கு சொல்வது என்று யோசித்த நேரத்தில் அந்த அறையின் கதவு திறந்துக் கொண்டு உள்ளே வந்தார் கைலாஷ்.
கூடவே சரவணனும் வந்தான்.
அவர்களை கண்டதும் எழுந்து நின்றான் தருண்.
“எங்க வீட்டு மருமகளோடு நாங்க தனியா பேசணும். நீ வெளியே போ தம்பி..” என்றார் கைலாஷ்.
“மருமகளான பிறகு தனியா பேசுங்க. இப்ப இவ என் மச்சினி. என்னால தனியா விட்டு போக முடியாது. எந்த நாய் சைக்கோ நாய்ன்னு இப்பவெல்லாம் புரிஞ்சிக்கவே முடியல. தனியா பேசுறேன்னு சொல்லி இவளை நீங்க ஏதாவது பண்ணிட்டா என்ன செய்வது?” என்று கேட்டான் தருண்.
மௌன சாமியார்களிடம் இருக்கும் ஒரு நல்ல குணம் எதையும் நேரடியாக பேசி விடுவதுதான். ஆனால் தன் மாமனுக்கு இவ்வளவு பேச வரும் என்பதுதான் மாயாவுக்கு ஆச்சரியத்தை தந்தது.