“மீண்டும் இணைவோம் மக்களே. இது இன்னிசைப் பண்பலை 92.70, நான் உங்கள் அழகன் கவியழகன் இது உங்கள் சிந்தனைகளைத் தட்டி செல்லும் நிகழ்ச்சி ‘செய்யுள் வழி ஒரு கருத்து’
நான் சொல்லப் போற கருத்து என்னங்கிற கெஸ் இருந்தா நீங்க கால் பண்ணி உங்களோட கருத்துக்களை பதிவு செய்யலாம். இப்ப ஒரு நேயர் தொடர்பில் இருக்காங்க, அவங்க யாருன்னு கேட்டு தெரிஞ்சுப்போம், ஹலோ யாரு பேசுற?”
“ஹலோ நான் மணிவண்ணன் சென்னைல இருந்து பேசுறேன்”
“சொல்லுங்க சார், உங்களுக்கு என்ன சந்தேகம்? உங்களோட கருத்து என்ன?”
“என்னோட கருத்து என்னன்னா அப்ப இருந்த ஆண்களும் சரி, இப்ப இருக்கிற ஆண்களும் சரி பெண்களுக்கு முக்கியத்துவம் தர்றாங்க. அதே மாதிரி ஒரு சிலர் முக்கியத்துவம் தராமலும் இருக்காங்க, இந்த கருத்தை தான் நீங்கள் சொல்ல வர்றீங்கன்னு நான் நினைக்கிறேன்”
“நீங்க சொன்னது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். ஆனா நான் சொல்ல வர்ற கருத்தை நிகழ்ச்சியோட இறுதியில சொல்றேன், அழைத்தமைக்கு நன்றி” என்று சொல்லி அழைப்பை துண்டித்தவன் மீண்டும் தொடர்ந்தான்.
“அதாவது நான் கேட்ட கேள்விக்கான பதில் என்னங்கிறதை இந்த இரண்டு நேயர்கள் மூலமா உங்களுக்கு புரிய வைக்கலாம்னு நினைக்கிறேன். அதாவது நாம ஒரு விஷயம் சொல்ல வர்றோம்னா அதை முழுசா கேட்டு புருஞ்சுக்கிட்டு அதற்கான பதிலை சொல்றதுக்கு இங்க இருக்கிற யாருமே தயாரா இருக்கிறது கிடையாது. சில விஷயங்கள் சிலருக்கு புரிந்தும் புரியாமயே போயிடுது, அதனால சிலர் ஆசைப்பட்டது கெடச்சும் கை நழுவி போயிடுது.
நமக்கான வாழ்க்கையை நாம தான் வாழணும்னு புருஞ்சவங்க சில பேர் தான். ஒரு சின்ன பாடலுக்கு பிறகு மீண்டும் இணைவோம். இது இன்னிசைப் பண்பலை 92.70, நான் உங்கள் அழகன் கவியழகன் இது உங்கள் சிந்தனைகளைத் தட்டி செல்லும் நிகழ்ச்சி ‘செய்யுள் வழி ஒரு கருத்து” என்று மீண்டும் அழைப்பைத் துண்டித்து விட்டு இதமான தென்றல் பாட்டை ஒன்றை ஒளிபரப்ப விட்டு விட்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்த அழகன், கையில் கட்டி இருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்தான்.
இன்னும் இந்த நிகழ்ச்சி முடிவதற்கு 20 நிமிடங்களே இருந்தது. ‘அதுக்குள்ள 40 நிமிஷம் போயிடுச்சா?’ என்று நினைத்தவன் பாடல் முடிந்ததும் மீண்டும் தன் நிகழ்ச்சியை தொடங்கினான்.
“இதமான பாடல் இந்த நிமிடத்தை இதமாக்கியிருக்கும்னு நம்புறேன் . இது இன்னிசைப் பண்பலை 92.70, நான் உங்கள் அழகன் கவியழகன் இது உங்கள் சிந்தனைகளைத் தட்டி செல்லும் நிகழ்ச்சி ‘செய்யுள் வழி ஒரு கருத்து’
இன்னைக்கு நாம பாத்த செய்யுள் என்ன, அதோட முழு அர்த்தம் என்னன்னு பாத்துட்டோம். ஆனா அதுல இருந்து நான் உங்களுக்கு சொல்ல வர கருத்து என்னன்னு சின்னதா சொல்லிடுறேன் ஏன்னா உங்களுக்கும் போர் அடிக்க கூடாது இல்லையா. அதாவது இப்ப உங்க கண்ணு முன்னாடி ஒரு பொண்ணை ஒரு பையன் அடிக்கிறான், அதைப் பார்க்கும் போது நீங்க என்ன பண்ணுவீங்க? இதுக்கான பதிலை சொல்றதுக்கு ஒரு நேயர் காத்திருக்காங்க அவங்களோட பதிலை வச்சு தான் என்னோட மீதி விளக்கத்தை சொல்ல போறேன்” என்றவாறு அழைப்பை ஏற்று,
“ஹலோ சொல்லுங்க யார் பேசுறீங்க! எங்க இருந்து பேசுறீங்க”
“ஹலோ என்னோட பேரு மதுமிதா நான் திருநெல்வேலியில இருந்து கால் பண்ணி இருக்கேன். நான் பேசுறது கேட்குதுங்களா?”
“கேட்குது சொல்லுங்க சிஸ்டர்?”
“அய்யய்யோ சிஸ்டர் எல்லாம் வேண்டாம், நான் உங்களோட பெரிய பேஃன். உங்க வாய்ஸ் கூட சோ ஸ்வீட் தெரியுங்களா. இந்த நிகழ்ச்சிக்காகவே என்ன ஒர்க் இருந்தாலும் ஒதுக்கி வச்சுட்டு வந்து உக்காந்துருவேன். நான் காலேஜ் முடிச்சுட்டேன் வேலைக்கு போயிட்டு இருக்கேன், இருந்தாலும் உங்க வாய்ஸ் கேட்கணும்னே, எப்போ 11:00 கிளாக் ஆகும்னு வெயிட் பண்ணுவேன். அதனால சிஸ்டர்னு எல்லாம் சொல்லாதீங்க” என்றாள்.
“ஓகே ஓகே சிஸ்டர் சொல்லல, நீங்க சொல்லுங்க நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில்?”
“அதாவது என் கண்ணு முன்னாடி ஒரு பொண்ணை ஒருத்தர் அடிக்கிறாங்கன்னா, அதை பாத்து நமக்கும் பயமா இருக்கும் தானே. நாம போய் ஏதாவது கேட்டா நம்மளையும் ஏதாவது சொல்லிடுவாங்களோன்னு பயமா இருக்கும், அதனால வேடிக்கை பார்க்கிறதைத் தவிர இங்க வேற வழி கிடையாது” என்றாள் அப்பெண்.
“ஒரு பொண்ணா உங்களோட எண்ணத்தை சொல்லிட்டீங்க ஆனா அதுக்கும் நான் சொல்ல வர்றதுக்கும் ஒத்துப்போகுதான்னு பார்ப்போம். அப்படி நான் சொல்ல வர்ற விஷயம் நீங்க சொன்ன விஷயத்தோட ஒத்துப்போனா உங்களுக்கான பரிசு உங்க வீடு தேடி வரும், அதுக்காக எங்கள் இன்னிசைப் பண்பலைக்கு உங்களோட அட்ரஸை மெசேஜா தட்டி விடுங்க, அழைத்தமைக்கு நன்றி ” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டு பெருமூச்செறிந்தான்.
அதாவது கால் பண்ணிருந்த மூன்று பேருமே நான் சொன்ன விஷயத்தை தெளிவா புரிஞ்சுக்கல. சோ நானே விளக்கத்தை சொல்லிடுறேன், அதாவது ஒரு பொண்ண நடுரோட்டுல ஒருத்தர் அடிக்கிறார்னா சில பேருக்கு கோபம் வரும், சில பேர் எனக்கு என்ன வந்ததுன்னு நெனச்சு கடந்து போக பார்ப்பாங்க. சில பேருக்கு அதைப் பார்த்து பயமா இருக்கும் தட்டி கேட்க தைரியம் வராது. சிலரோ என் பிரச்சினையே தலைக்கு மேல இருக்குது இதுல இதுல வேற தலையிட்டு தலைவலியை ஏன் உண்டாக்கிக்கணும்னு கடந்து போக நெனைப்பாங்க.
சில பேர் தட்டி கேட்கணும்னு நினைப்பாங்க ஆனா அதுக்கான சூழ்நிலை அங்க இருக்காது. ஏன்னா அந்த நபர் கையில எதாவது ஆயுதங்கள் வச்சிருக்கலாம், இல்ல வேற ஏதாவது வச்சிருக்கலாம். அதனால முடிஞ்ச வரைக்கும் எல்லாரும் அதை ஒரு சாதாரண விஷயமா கடந்து போக தான் நினைக்கிறீங்க. அதாவது இது ஒரு சின்ன நிகழ்வு, ஒரு பையன் ஒரு பொண்ணை அடிக்கிறான், அப்ப ஒரு ஆளா இருக்கிறவனைப் பத்து பேர் சேர்ந்து தடுக்க முடியலன்னா நாம எல்லாம் மனுசங்களா இருக்கிறதுக்கு தகுதியில்லாதவங்களா ஆயிடுவோம்.
இதுக்கும் இந்த செய்யுளுக்கும் என்ன பொருத்தம் இருக்குன்னா, அந்த இரு மன்னர்களையும் தோற்கடித்து விட்டு வெற்றி வாகை சூடிய அரசருக்கு அவ்வளவு செருக்கு இருக்கும், அவ்வளவு கர்வம் இருக்கும், அவ்வளவு உரிமை இருக்கும். இன்னும் சொல்லப்போனா நான் இந்த நாட்டை ஜெயிச்சுட்டேன், இங்க இருக்கிற அத்தனை பேரும் எனக்கு தான் சொந்தம். என்னால என்ன வேணா செய்ய முடியும், அதுக்கு எனக்கு எல்லா உரிமையும் இருக்குங்கிற எண்ணமும் இருக்கும்.
ஆனா பெண்கள் நடந்ததை நெனச்சு அழுகுறாங்க, கஷ்டப்படுறாங்க, இதுக்கு மேலையும் அவங்களைக் கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நெனைக்கிறாரு. தனக்கு இருக்கிற அத்தனை உரிமையையும் தகர்த்துக்கிட்டு அதுக்கு மேல அவங்கள கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு போரையே நிறுத்துறாரு. போருங்கிறது ஒரு அரசனுக்கு ரொம்ப முக்கியமானது. ஒரு போர்ல ஜெயிச்சா அந்த நாடே அவனோடது, அந்த நாட்டுக்கு வரி செலுத்தக்கூடிய சிற்றரசுகள், குறுநில மன்னர்கள், குறுநில ராஜ்ஜியங்கள், குக்கிராமங்கள்னு எல்லாமே அவனுக்கு கீழே வந்துடும். அவனோட எல்லைகள் இன்னும் பெருசா விரிவாகும், அப்படி இருக்கும் போது அந்த வாய்ப்பையும் அவன் தவற விடுறான்னா பெண்களை அந்த அளவுக்கு மதிக்கிறான்னு அர்த்தம். பெண்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா முன்னால போய் நிக்கிறதுக்கு அவங்க எப்பவும் தயங்குறதில்லன்னு தானே அர்த்தம்.
ஆனா நாமளோ சாதாரணமா ஒரு பொண்ணுக்கு நடக்கிற கொடுமையையே தடுக்க மாட்டேங்கிறோம். அந்த அரசரோட இடத்துல இப்ப இருக்கிற மனிதர்கள் இருந்தா என்ன பண்ணி இருப்பாங்க? ஒண்ணு தொடர்ந்து போரை நடத்தி அந்த ராஜ்யத்தை கைப்பற்றி இருப்பாங்க. இல்லையா தலைவனற்ற கூட்டம், கணவன் இல்லா பெண்கள், வேறு என்ன செய்வார்கள் அவர்கள் கற்பை சூரையாடுவார்கள், அவர்கள் பெண்மையை சிதைக்க நினைப்பார்கள், அவர்களை மானபங்க படுத்த நினைப்பார்கள், அவர்களது வாரிசுகளை அழிக்க நினைப்பார்கள் இதைத் தவிர நல்லதொன்றும் செய்ய முன்வருவாங்கன்னு எனக்கு தோணல.
இப்படியான மனநிலையில் உள்ள மக்கள் தான் இப்ப நிறைய பேர் இருக்காங்க. சில ஆண்கள் தான் இப்படி இருக்காங்களே தவிர எல்லாரையும் நான் சொல்லல. பெண்ணை சக மனுசியா, நம்மளை மாதிரி இன்னொரு உயிரா பார்க்கிறது கிடையாது. இதை தான் நான் சொல்ல வர்றேன், அத்தகைய தகுதிகள் வாய்க்கப்பெற்ற அரசர்களே பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுக்கும் போது ஆணும் பெண்ணும் சமமென்ற நிலை நிலவி வரும் இந்த காலகட்டத்துல ஒரு ஆணால் பெண்ணுக்கு தொடர்ந்து அநீதிகள் இழைக்கப்பட்டு வருகிறது.
காரணம் என்னன்னு நீங்களே உங்களைக் கேட்டு பாருங்க காரணத்துக்கான பதில் தெரியும். பெண் என்பவளும் உன்னை போல் ஒருவள் தான், இன்னும் சொல்லப்போனால் உன்னை விட ஒரு படி மேல். உன்னால் சுமக்க முடியாத, உன் உயிரை அவள் சுமந்து இவ்வுலகை காண செய்கிறாள். அப்படியானால் அவளும் ஒரு கடவுளுக்கு சமம். பெண்ணை நேசிப்போம், மாதர் குலத்தை நேசிப்போம், இதுதாங்க நான் சொல்ல வந்த விஷயங்கள். நான் சொன்னதோட அர்த்தம் உங்களுக்கு புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன், புருஞ்சா நீங்களும் உங்களை மாத்திக்கலாம் தப்பில்லை.
இது இன்னிசைப் பண்பலை 92.70, நான் உங்கள் அழகன் கவியழகன் இது உங்கள் சிந்தனைகளைத் தட்டி செல்லும் நிகழ்ச்சி ‘செய்யுள் வழி ஒரு கருத்து’ மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் மறுபடியும் சந்திக்கலாம், உங்களிடம் இருந்து விடைபெறுவது நான் உங்கள் அழகன், கவியழகன். இன்னிசைப் பண்பலையுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் மீண்டும் சந்திக்கலாம் நன்றி வணக்கம்” என்றதோடு தன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு,
‘அப்பாடா’ என்று பெருமூச்சோடு எழுந்து நின்றவனை ஓடி வந்து அணைத்துக் கொண்டான், பாடல்களை ஒலிபரப்பு பணியில் இருப்பவன்.
“சூப்பர்டா சத்தியமா இப்படி ஒரு செய்யுளோட இந்த விஷயத்தை கனெக்ட் பண்ணி நீ சொல்லுவேன்னு நான் நினைச்சு கூட பார்க்கல. நிஜமா எனக்கு அப்படியே கை, கால் எல்லாம் புல்லரிக்க ஆரம்பிச்சுருச்சு தெரியுமா..”
“அடேய் எதுக்கு இவ்வளவு எமோஷனல் ஆகுற. உண்மையத் தானே சொன்னேன். உன்னை மாதிரி எல்லாருக்கும் இது புருஞ்சா நல்லது தான்” என்று சொல்லி விட்டு வெளியில் செல்லலாம் என்று திரும்பிய அழகன் அந்த கண்ணாடி கதவின் மீது சாய்ந்து நின்றிருந்த பெண்ணைக் கண்டு புருவம் சுருக்கியவன், ‘யார் இது புதுசா?’ என்ற எண்ணத்தோடு பார்த்திருக்க,
மிதமான நடையோடு அவன் அருகில் வந்தவள், தன் கரத்தை அவன் முன் நீட்டிட,
அழகனோ அவளைக் கூர்ந்து பார்த்தானே தவிர அவள் கரத்தை பற்றி குலுக்கவும் இல்லை, அவளிடம் பேசவும் இல்லை. இலகுவாக அவளைக் கடந்து அந்த அறையை விட்டு வெளியேறி இருக்க, இதழில் சூடிய புன்னகையோடு அவனையே பார்த்திருந்தாள் கவித்தாரகா..
குரல் வழி உன் குணத்தை அறிந்த கணம் வியந்தேன் ஆயிரத்தில் ஒருவனோ நீயென நினைந்தேன்.
மாறாக, கரம் நீட்டிய பாவையிவளை விழிமோதி தீண்டாது அலட்சியம் தரித்து நகர்கையில் இலட்டத்தில் ஒருவன் தான் நீயென நிச்சியத்தே விட்டேன்..