கானகமயில் -19
கானகமயில் -19
Advertisement
“இவன் எப்படி இங்கு வந்தான்?” என்ற கேள்வியை தனக்குள் தாங்கிக் கொண்டு நின்றிருந்த பெண்ணவளை அழகன், மகேஷ் சாகர் மூன்று பேருமே கவனிக்கவில்லை.
அந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பதை ஒற்றை வார்த்தை ஒலியிலேயே கண்டு கொண்ட அழகனோ அவள் முகம் காண ஆவலாய் வாயிலையே பார்த்திருக்க, உள்ளே இருப்பர்களது பேச்சு குரலும், வாக்குவாதமும் வெளியில் இருப்போருக்கும் கேட்டது.
Advertisement
அகண்டனோ, “மலர் விரைந்து சமைத்திடு, வந்திருக்கும் விருந்தினர்களுக்கு நம் இல்லத்தில் இருந்து தான் உணவு கொடுக்க வேண்டும் என்று அப்பர் கூறச் சொன்னார் ” என்றான்.
Advertisement
அதற்கு தென்மலரோ, “இல்லை நான் சமைக்கவில்லை. வேண்டுமென்றால் தென்றலைச் சமைத்திட கூறலாம் அவள் சமைத்தால் சுவையாக இருக்கும். நான் சமைத்தால் தங்களைத் தவிர்த்து யாரும் நன்றாக இருக்கிறது என்று கூறுவதில்லை. அவ்வாறு இருக்கையில் விருந்தினர்களுக்கு என்னை சமைக்க கூறுகிறீர்களே இது சரிவருமென்று தோன்றவில்லை மாமகனே.”
(மாமகன்- தாயுடன் பிறந்தவன்..)
“என்னால் மட்டும் என்ன செய்திட இயலும். அப்பரே கூறியதற்கு பிறகு அவர் வார்த்தைகளை மறுத்து பேசுவதற்கு எனக்கு நா எழவில்லை. தெரிந்த வரை சமைத்திடு வேண்டுமென்றால், நான் உதவி செய்திடவா” என்று அவன் கேட்ட சில மணித்துளிகளிலேயே குழந்தையின் அழுகுரல் இவர்கள் இருவரைது செவியையும் தீண்டியது.
Advertisement
“பாருங்கள் இதற்கு மேல் நானே நினைத்தாலும் கூட சமைத்திட இயலாது. அகலிகை எழுந்து விட்டாள். நான் அவளை பார்க்கிறேன் இன்னும் சில மணித்தியாலங்களில் தென்றல் வந்துவிடுவாள் அவளிடம் கூறுங்கள் நன்றாகவே சமைத்து வைப்பாள்” என்று கூறிவிட்டு உள்ளே தடுப்பு போல் இருந்த பகுதிக்குள் நுழைந்தவள் தொட்டிலில் எழுந்து அமர்ந்து சிணுங்கி கொண்டிருந்த குழந்தையை தூக்கி இடையில் இறுத்திக் கொண்டு வெளியே வந்தவள்,
“என்னவாயிற்று என் தங்க பெண்ணுக்கு. ஏன் அழுகிறாய், தாயின் இடையிலேயே அமர்ந்துக் கொண்டிருக்க வேண்டுமோ? மற்ற வேலைகளை செய்யாது எப்பொழுதும் உன்னுடனே சுற்றிக் கொண்டிருக்க வேண்டுமா என்ன? என்னைக் காணவில்லை என்றாலோ, உறக்கம் களைந்து எழுந்தாலோ அழுகிறாயே, அத்துனை பிரியமா என் மீது. என் செல்ல பெண்ணுக்கு தாயின் மீது அலாதி பிரியம் போலவே” என்று கொஞ்சி பேச, குழந்தையோ அவளைக் கண்டு புன்னகைத்தவாறு எச்சில் ஒழுக அவள் கன்னத்தில் முத்தமிட்டு அவளைப் பார்த்து மீண்டும் சிரித்திட, நெஞ்சோடு குழந்தையை பொத்தி வைத்துக் கொண்டவளுக்கு ஏனோ இனம் புரியாத உணர்வு ஒன்று உள்ளமெங்கும் பரவிச் சென்றது. அதிலும் காலையில் புதிதாய் கண்ட ஆடவனைக் காண்கையில் தோன்றிய அதே உணர்வு மீண்டும் தோன்றிட, சட்டென்று முதுகை துளைக்கும் ஊசி பார்வையில் உடல் விரைத்தவள் இடதுபுறம் திரும்பி பார்த்து விட்டு அதிர்ந்து நின்றாள்.
ஏனெனில் காலையில் பார்த்த அந்நிய ஆடவன் இப்போது இங்கே அமர்ந்து இருப்பதைக் கண்டவளுக்கு கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அவளை விட அதிக அளவு நடுக்கத்தோடு அமர்ந்திருந்தான் மகேஷ். அவன் அருகில் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த அழகனுக்கு அவள் கையில் இருந்த குழந்தையும் அவளும் சிறிதும் அன்னியமாக தெரியவில்லை. ஏதோ பல நாட்கள் கழித்து தன் உயிரைக் கண்ட உணர்வு. அவர்களைத் தன்னுள் ஆழப்புதைத்துக் கொள்ள ஆவல் பரபரத்தது. ஆனால் விழிகளால் மட்டுமே அவளை ஆரத்தழுவி தன் உயிருக்குள் நிரப்பிக் கொண்டு அமர்ந்திருந்தான்..
இதையெல்லாம் இன்னும் விறகு கட்டை தலையில் சுமந்தவாறு பார்த்துக் கொண்டிருந்த தென்றலோ, நாலு பக்கமும் குச்சி ஊன்றி மேலே பெரிய அளவினால் இலைகளைக் கொண்டு கூடாரம் அமைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் போட்டுவிட்டு மலரை நெருங்கியவள், “யார் இவர்கள் எதற்காக இங்கு வந்துள்ளார்கள்?” என்று வினவிட,
“எ.. எனக்கும் தெரியாது தென்றல். மாமகன் தான் அழைத்து வந்தாரென்று எண்ணுகிறேன். இவர்களுக்கு நம் இல்லதிலிருந்து தான் இன்று உணவு கொடுக்க வேண்டும் என்று அப்பர் கூறிவிட்டாராம். நீ சமைத்துக் கொடுத்துவிடேன் அகலிகை அழுது கொண்டே இருக்கிறாள் என்னவென்று தெரியவில்லை..”
“உனக்கும் தெரியாதா. ஆமாம், இவர்களை எங்கேயாவது பார்த்தது போல் நினைவிருக்கிறதா என்ன?” என்றதும் சட்டென்று மலரின் முகம் மாறியது.
நொடியில் அதை சீர்படுத்திக் கொண்டவள், “இல்லை இப்பொழுது தான் முதல் முறை காண்கிறேன். இதற்கு முன் நீ எங்கேனும் கண்டிருக்கிறாயா என்ன?”
“இல்லை எனக்கும் இவர்களைப் பார்த்தது போல் நினைவில் இல்லை. உனக்கு நினைவிருக்கிறதா என்று தெரிந்து கொள்வதற்காக கேட்டேன். சரி அந்நிய ஆடவர்கள் இருக்கும் இடத்தில் நீ இருக்க வேண்டாம். நீ செம்பட்டியின் இல்லத்திற்கு செல், நான் சமைத்து முடித்து இவர்களை அவர்களுக்கு உண்டான குடிலுக்கு அனுப்பி வைத்த பிறகு வந்து அழைத்துக் கொள்கிறேன். ஏனெனில் புதியவர்களைக் கண்டு அகலிகை மீண்டும் அழுவாள், அவளை சமாதானப் படுத்துவதற்குள் நமக்கு தான் போதும் போதும் என்றாகி விடும். விரைந்து செல்” என்று அவளை வலது புறம் இருந்த சந்து வழியாக செம்பட்டியின் இல்லத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு நகர்ந்த தென்றலின் பார்வை அவ்வப்போது அழகன் மீது அழுத்தமாய் படிந்து மீண்டது. ஆனால் அவனோ அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை. தொலைதூரத்தில் அச்சு அசலாக கவியின் சாயல் கொண்டு செல்லும் பெண்ணையே விழி விரித்துக் கண்டு கொண்டிருந்தான்..
உள்ளே நுழைந்த தென்றல் சமைப்பதற்கான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்த அகண்டனை நெருங்கியவள் சிறுகுரலில், “உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் மாமகனே” என்றாள்.
“என்ன கேட்க வேண்டும் விரைந்து கேள். விருந்தினர்களுக்கு தேவையான உணவை சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அப்பர் கூறிவிட்டார். குழந்தை அழுததால் மலர் எடுத்து கொண்டு இங்கிருந்து சென்று விட்டபடியால் நீயும் நானும் தான் இணைந்து சமைத்தாக வேண்டும். எதுவாயினும் விரைந்து கூறு” என்றவாறு தன் வேலையை கவனித்துக் கொண்டிருந்தவன் சில கணங்களாகியும் அவளிடமிருந்து பதில் வராது போகவும் நிமிர்ந்து அவள் முகம் பார்க்க அவள் முகம் எதையோ கண்டு அச்சம் கொண்டது போல் இருந்தது.
எப்போதும் ஆண்களுக்கு நிகராக துடுப்புடன் இருப்பவள் இப்போது எதையோ கண்டு விட்டு அச்சம் கொண்டிருப்பது அவனுக்கு ஒரு வித நெருடலையே கொடுத்தது. அவள் கரம்பிடித்து இழுத்துக்கொண்டு பின்புற வாயில் வழியாக வெளியே வந்தவன், “இப்போது கூறு இங்கு நாம் பேசுவது அவர்களுக்கு கேட்காது. என்னவாயிற்று இசை, எதைக் கண்டு விட்டு உன் முகம் இப்படி அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறது.”
“அச்சம் என்று சொல்வதை விட குழப்பம் என்றே கூறலாம் ”
“என்ன குழப்பம்?”
“வந்திருக்கும் மூவரில் ஒருவரை நான் அறிவேன்”
“எவ்வாறு? வரும் வழியில் கண்டாயா அல்லது சுள்ளி பொறுக்க சென்ற இடத்தில் கண்டாயா?”
“இங்கு இல்லை. மலரை அழைத்து வந்தோம் இல்லையா அந்த ஊரில் கண்டேன்”
“என்ன அந்த ஊரிலா? அப்படியானால் அவனுக்கும் மலருக்கும் ஏதேனும்..?”
“தெரியவில்லை ஆனால் இவனது புகைப்படத்தை மலர் மறைத்து வைத்திருந்தாள் அதை நான் கண்டிருக்கிறேன்.”
“அப்படியானால் அகலிகை இவனது குழந்தையாக இருக்கும் என்று ஐயப்படுகிறாயா”
“உறுதியாக தெரியவில்லை. ஆனால் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.”
“அப்படியானால் இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து விடலாமா” என்று கேட்ட அகண்டனின் குரலிலும், முகத்திலும் தான் எத்தனை மகிழ்வு.
“அது அத்தனை எளிது கிடையாது. அனைத்தையும் மறக்கச் செய்து அவளை இங்கு அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்களது கடந்த கால நினைவுகள் ஒன்று கூட அவள் நினைவுகளில் இல்லை. அவ்வாறு இருக்கையில் இவரைப் பற்றி எப்படி அவள் அறிந்து கொள்வாள், இவரது நினைவுகளை தெரிந்து கொள்வாள்..”
“அவளுக்கு தான் தெரியாது. ஆனால் வந்திருக்கும் அவனுக்கு தெரிய வாய்ப்புள்ளதே. இங்கேயே தங்குவதற்காக வந்திருக்கிறார்கள், நிச்சயம் அவன் தான் அகலிகையின் தந்தை என்றால் தான் நேசித்த பெண்ணை எப்படி விட்டுக் கொடுப்பான்?”
“ஏன் நீங்கள் விட்டுக் கொடுக்க தயாராகவில்லையா?” என்று கேட்ட தென்றலிசையின் விழிகளில் நொடியில் நீர் கோர்த்துக் கொண்டது.
அதை துடைத்து விட அவனுக்கு ஆவல் இருந்தாலும், வெளியில் நின்று அதை செய்யத் துணிவின்றி மீண்டும் அவள் கரம் பற்றி இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவன், உறங்குவதற்கென்று மறைத்தால் போல் தடுக்கப்பட்டிருந்த தடுப்புக்குள் அவளை இழுத்துச் சென்றவன், அவளை இறுகத் தழுவிக் கொண்டான்.
“என் நேசத்தை நான் தியாகம் செய்யவில்லை, அது ஒருபோதும் நிகழாது. எப்படி உன்னை கரம் பற்ற வேண்டும் என்று அனுதினமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அத்தனை எளிதில் உன்னை விட்டுக் கொடுப்பேன் என்று எண்ணாதே இசை. அப்படி உன்னை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றால் நிச்சயம் இந்த உடலில் உயிர் இருக்காது. அப்படி ஒன்று நிகழ்ந்தால் மரணத்தை விரும்பி ஏற்றிருப்பேன், என் உடல் மண்ணுக்கு உரமாகியிருக்கும் அதை நினைவில் கொள்” என்றவன் அவளை இன்னும் இறுகத் தழுவி அவள் பிறைநுதலில் முத்தமிட்டு விலகியவன்,
“இது நம் இருவரது திருமணத்திற்கான ஒப்பந்தம் நினைவில் கொள். நிச்சியம் நான் மலரின் கரம் பற்ற மாட்டேன், அப்பர் வேண்டுமென்றால் அவளை திருமணம் செய்து கொள் என்று என்னிடம் கூறியிருக்கலாம். மலரை தவிர அனைவரும் அந்த எண்ணத்தில் உள்ளார்கள். ஆனால் என் மனதில் நீ மட்டும் தான் உள்ளாய், உன்னை மட்டும் தான் என் மனைவியாக என்னால் வரிவடித்திட இயலும். உன்னுடன் மட்டும் தான் எனக்கான அனைத்தும் நிகழ வேண்டும் என்று பேராவல் என்னுள் உள்ளது. ஆகையால் எந்நிலையிலும் நீ கலங்கவும் கூடாது, அதேபோல் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை சந்தேகிக்கலாகாது. என் மீது நீ கொண்ட நம்பிக்கை உயிர் உள்ளவரை நிலைத்திருக்க வேண்டும் புரிகின்றதா” என்று அவன் பொறுமையாக அவளுக்கு மட்டும் கேட்கும்படி சிறு குரலில் சொல்ல சரி என்பது போல் தலையசைத்தவளது, நெற்றியில் முத்தமிட்டு அடுத்து கன்னத்திலும் அழுத்தமாய் இதழ் பதித்து விலகியவன், “வா சமைப்போம்” என்று கூறி அவளை அழைத்துச் சென்றான்.
இருவரும் உணவுகளை சமைத்து முடித்து ‘அப்பாடா’ என்று மூச்செறிகையில், “குடிக்க தண்ணீர் கிடைக்குமா” என்று வெளியில் இருந்து குரல் கொடுத்தான் மகேஷ்.

