கீர்த்தியின் எண் இன்னமும் ‘பிசி’யெனவே வந்தது. அது என்னவோ, உடனேயே கீர்த்திக்கும் பிரித்விக்கும் நடுவே என்னவென தெரிந்துக்கொள்ள வேண்டுமென ஒரு உந்துதல் அவளுக்குள்.
‘அவனுக்கு நீ யார்? நீ ஏன் அதைத் தெரிந்துக்கொள்ள வேண்டும்’ என்று அவளது மனசாட்சி ஒரு கேள்வியை முன்வைக்க, அதற்குப் பதில் சொல்ல முடியாமல் விழித்தாள் ரதி.
‘அது… அவன் காலேஜ்ல என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்ன பையன்…’ என்று அவள் சொல்ல, ‘அதான் வேணாம்ன்னு அப்போவே சொல்லிட்டல்ல. அப்புறம் அவன் யார் கூட என்ன பண்ணா உனக்கென்ன???’ என்று மடக்கியது மனசாட்சி.
‘அது எப்டி. அவ்ளோ சீக்கிரம் என்னை மறந்துட்டான்..!!!’ என்று சிணுங்கிய அவளிடம், ‘நீ வேணாம்ன்னு சொல்லி மூணு வருஷம் ஆச்சு. இன்னும் உன்னை நெனச்சிட்டே சுத்துவானா…!!!’ என்று அவளுக்காக கொஞ்சம் கூட பாவம் பார்க்காமல் அவள் மனசாட்சி கேள்வி கேட்க, அதற்கு மேல் அதனுடன் வாதிட விருப்பம் இல்லாமல் வாக்குவாதத்தைக் கைவிட்டாள்.
படுத்தால் தூக்கமும் வரவில்லை. உப்பரிகையில் போய் நின்றால், அந்த இரவின் அமைதி கூட பிடிக்காமல் போனது போன்ற உணர்வு.
அறையை விட்டு வெளியே வந்தாள்.
அவள் நேராகச் சென்றது கார்த்தியின் அறைக்குத் தான்.
முதலில் மென்மையாய் கதவைத் தட்டினாள். அவன் வந்து கதவைத் திறப்பது போல் தெரியவில்லை.
‘தூங்கியிருப்பானோ?’ என்று யோசனை எழுந்தது தான். ‘பரவாயில்ல தட்டுவோம்’ என்று இன்னும் பலமாகத் தட்ட, கதவைத் திறந்தான் கார்த்தி.
அவளை உள்ளே விடும் எண்ணம் இல்லாதவன் போல், அறையின் வாசலை மறித்து நின்றுகொண்டு, “என்ன… சொல்லு” என்றான் அவசரமாக.
“நகரு” என்று சொல்லி, அவனைத் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தாள் ரதி. “ஹே. பிசாசே என்ன?” என்று அவன் மீண்டும் கேட்க, “போர் அடிச்சிது. நீ எப்போவும் வெட்டி தான. அதான் உன்ன வச்சி டைம்-பாஸ் பண்ணலாம்ன்னு வந்தேன்” என்றாள் ரதி.
இவள் உள்ளே வரும் முன் யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான் கார்த்தி. இந்நேரத்தில் வந்து கதவைத் தட்டுவது யாரென்று தெரியாவிடினும், யாராய் இருந்தாலும் உடனேயே திரும்பிச் சென்றுவிடுவார்கள் என்ற எண்ணத்தில், அழைப்பைத் துண்டிக்காமல், ‘இதோ வந்துடறேன்’ என்று மட்டும் மறுமுனையில் இருப்பவரிடம் சொல்லிவிட்டு, அலைபேசியை மேசை மீதே வைத்துவிட்டு வந்திருந்தான்.
ரதி அவன் படுக்கை மீது அமர்ந்துக்கொள்ளவும், அவள் இப்போதைக்கு இங்கிருந்து செல்லப்போவதில்லை என்று தோன்றவும், மேசை அருகே சென்று, ரதி கண்டுகொள்ளாதவாறு அந்த அழைப்பைத் துண்டித்து, அலைபேசியை எடுத்து தன் கால்சட்டை பைக்குள் போட்டுக்கொண்டான் கார்த்தி.
“என்ன ஆச்சு? இன்னும் நைட் ட்ரெஸ்க்கு மாறாம, சுடி போட்டுட்டு சுத்துற?” என்று கார்த்தி கவனித்து சொன்னபிறகு தான் தான் இன்னும் உடை கூட மாற்றவில்லை என்பதையே உணர்ந்தாள் ரதி.
“டயர்டா இருந்தா தூங்க வேண்டியது தான?” என்று கார்த்தி கேட்க, “தூக்கம் வரலயே” என்றாள் பாவமாக.
“ஏன். என்ன ஆச்சு…???” என்று உள்ளுக்குள் இருந்த அக்கறையை மறைத்துக்கொண்டு சாதாரணமாய் கேட்பது போல் கேட்க, “ப்ச். போடா” என்று சலித்துக்கொண்டாள் ரதி.
கார்த்தியுடன் ஏதாவது கதையளக்கவேண்டும் என்றே வந்தவளுக்கு, இப்போது வாய் திறந்துப் பேசவே கடினமாக இருந்தது.
ஏதோ மனதில் உள்ளதை எல்லாம் கொட்டிவிட வேண்டும் போல் இருந்தது. ஆனால் வார்த்தைகள் வரவில்லை. ஏன் தன் மனம் இப்படித் தன்னை அலைக்கழிக்கிறது என்று அவளுக்கே புரியாத போது அவனிடம் என்ன சொல்வாள்.
‘எல்லாம் அவனைப் பார்த்தால் தான்’ என்று மனதுக்குள் ப்ரித்வியைத் திட்டினாள். ‘என்னை மறந்து வேறு பெண்ணோடு இருக்கிறானென்றால், என் கண் முன் எதற்கு வந்து நிற்க வேண்டும்…!!!. ‘ரதி’ என்று யாருக்கும் கேட்காத வண்ணம் எதற்கு என் பெயரை முணுமுணுப்பாய் அழைக்க வேண்டும்..!!!. எதற்குக் கண்களால் சிரிக்க வேண்டும்..!!!!’ என்று ஒவ்வொன்றும் நினைக்க நினைக்க அழுகை வந்துவிடும் போல் இருந்தது.
‘அவனுக்காக எதற்கு அழவேண்டும்???’ என்று ஒரு பிடிவாதம் வேறு, அழவும் விடாமல் தடுத்தது.
தனக்குள்ளாகவே யோசனையில் மூழ்கியிருக்கும் தங்கையிடம் தானே பேச்சுக் கொடுத்தான் கார்த்தி.
“என்ன ஆச்சு? திருவரசன் பெரியப்பா, உங்க அப்பா கிட்ட ஏதோ தனியா கூப்ட்டு சொன்னாரே. அரவிந்த் அண்ணா கல்யாண விஷயமாவா? உனக்கு ஏதாவது தெரியுமா?” என்று கார்த்தி கேட்க, “எனக்குத் தெரியல. அண்ணியோட அப்பா, பெரியப்பாவைத் தனியா கூப்ட்டு போய் தான் சொன்னார்” என்றாள் ரதி.
“அவங்க வீட்டுக்குப் போய்ட்டு வந்தீங்களா?” என்று கார்த்தி கேட்க, “ம்ம்ம்” என்றாள்.
“எதுக்கு?” என்று அவன் கேட்க, “அண்ணியோட தம்பியை நாங்க தான் பஸ் ஸ்டாப்ல இருந்து பிக்-அப் பண்ணி கூப்ட்டு போய் விட்டோம்” என்றாள் ரதி.
“யாரு? ப்ரித்வியையா?” என்று கார்த்தி கேட்க, “ஆன். அவனைத்தான்” என்றாள் எரிச்சலாக.
அவன் பெயரைச் சொன்னதும் தங்கை எரிச்சலாவதைக் கண்டவனுக்குச் சிரிப்பாகத் தான் இருந்தது. அதை அடக்கிக்கொண்டு, “அதுக்கு ஏன் எரிஞ்சி விழுற. என் அளவுக்கு இல்லைன்னாலும் இந்த ப்ரித்வியும் கொஞ்சம் அழகா தான இருப்பான். நல்லா கலகலன்னு பேசுவான் வேற!” என்று ப்ரித்வி பெருமைப் பாடியவனை, நிச்சயம் ‘எருமை’ என்று தான் மனதுக்குள் திட்டிக்கொண்டிருந்தாள் ரதி.
“என்ன? ப்ரித்விக்கு என்ன குறை. மூஞ்சை அப்டி வச்சிக்கற” என்று கார்த்தி கேட்க, “நீயே வச்சிக்கோடா உன் ப்ரித்வியை” என்றாள் ரதி சூடாக.
“ப்ச். நான் மட்டும் பொண்ணா இருந்தா, நானே என் ‘ப்ரித்வி டார்லிங்’கை கல்யாணம் பண்ணியிருப்பேன்” என்று கார்த்தி சொன்னது தான் தாமதம். அமர்ந்திருந்தவள் எழுந்து நின்று, கார்த்தியின் முடியைக் கொத்தாகப் பிடித்து, தலையை உலுக்கினாள்.
“முடியை விடு பிசாசே!” என்று அவன் சொன்னதைப் பொருட்படுத்தாது நான்கு உலுக்கு உலுக்கிவிட்டுத் தான் அவனை விட்டாள் ரதி.
“பிசாசே” என்று அவன் திட்டியதைப் பொருட்படுத்தாமல் வேகமாய், அங்கிருந்து தன் அறைக்கே சென்றுவிட்டாள் ரதி.
‘அது என்னடா. அந்த கீர்த்தில இருந்து… இந்த கார்த்தி வரைக்கும் எல்லாரும் என் பாயசத்துலயே பங்குக்கு வரீங்க!’ என்று புலம்பியது அவள் மனம்.
பாயசமா அவன்? நினைக்கும் போதே இனித்தானே. பாயசம் தான்.
ஆனால், அவனை வேறு யாரோடும் சேர்த்து நினைக்கும் போது தான் கசந்தது. ‘அவன் என்னை மறந்துட்டான்னா… நானும் அவனை மறந்துட்டேன்’ என்று உச்சக்கட்ட கோவத்தில் உடல் சோர்ந்துவிட, உறங்கிப்போனாள் ரதி.
கார்த்தியோ அங்கு ரதியின் கோபத்தை நினைத்துச் சிரித்துக்கொண்டிருந்தான்.
ப்ரித்வியைப் பற்றி ரதி கார்த்தியிடம் எதுவும் சொன்னதில்லை என்றாலும், அவர்கள் இருவரைப் பற்றியும் முழுபடமே இவனிடம் ஓட்டியிருந்தாள் கீர்த்தி.
எல்லாம் தெரிந்தும் வேண்டுமென்றே அவளை வம்பிழுத்த திருப்தியில் மிதந்துக்கொண்டிருந்தான் கார்த்தி.
ரதி உள்ளே வரும் முன் அவன் பேசிக்கொண்டிருந்தது கீர்த்தியிடம் தான்.
அவள் சென்றபின் மீண்டும் கீர்த்திக்கு அழைப்பு விடுத்து, “நீ சொன்னது சரி தான் கீர்த்தி. அந்த ப்ரித்வி பையன் பேரைச் சொன்னாலே இந்த ரதி பொண்ணு டென்ஷன் ஆகுது” என்றான்.
கீர்த்தி ரதியின் கல்லூரித் தோழி. இருவரும் பொறியியலில் வெவ்வேறு துறையை எடுத்திருந்தாலும், விடுதியில் இருவருக்கும் பழக்கம். இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போக நாளுக்கு நாள் நெருக்கமாகினர்.
கீர்த்தியின் குடும்பம் டெல்லியில் வசிக்கும் தமிழ்க் குடும்பம். சிறுவயதிலிருந்தே டெல்லியிலேயே வளர்ந்த கீர்த்தியின் மனதில், ‘என்ன இருந்தாலும் நம்ப ஊர் போல வராது’ என்று தன் பெற்றோர் அடிக்கடிச் சொல்லுவது ஆழப்பதிந்தது.
சிறுவயதிலிருந்தே அங்கேயே வளர்வதால், டெல்லியோடு ஒன்றிவிட்டாலும், தென்னகத்தில் வாழும் ஆசை இருந்தது பெண்ணின் மனதில்.
அவ்வப்போது ஏதாவது விழாவிற்கு மட்டும் வந்து போகும் தமிழகத்தில் கொஞ்ச நாள் வாழ்ந்துப் பார்க்கும் ஆசையில், சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்ந்தாள் கீர்த்தி.
அடிக்கடி வீட்டிற்குச் செல்ல முடியாத காரணத்தால், மூன்று நான்கு நாட்கள் சேர்ந்தாற்போல விடுமுறை வந்தால், ரதியோடு அவளின் கடலூர் இல்லத்திற்கு வந்துவிடுவாள் கீர்த்தி.
ரதி கல்லூரி முதலாமாண்டு படிக்கும் போது தான் ரதியின் முதல் அண்ணன், திருவரசனின் முதல் மகன் விக்னேஷிற்குத் திருமணம் நடந்தது. தமிழ் திருமணம் பார்க்கும் ஆசையில் ரதியுடன் வந்துவிட்டாள்.
திருமணச் சடங்குகளைக் கவனித்தாளோ இல்லையோ, அப்போது தான் கல்லூரி முடித்த குடும்பத்தின் இளைய மகனாய் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டு, அனைவரிடமும் வம்பு வாங்கிக்கொண்டிருந்த கார்த்தியை நன்றாகவே கவனித்தாள்.
கீர்த்தி தன்னை அடிக்கடி நோட்டமிடுவதை கார்த்தியும் கவனிக்கத் தான் செய்தான். ஆனாலும், தானாக அவளிடம் சென்று பேசாமல் போக்கு காட்டினான்.
இரண்டு ஆண்டுகள் கழித்து, திருவரசனின் இரண்டாவது மகன், விஷ்ணுவிற்குத் திருமணம் நடக்க, இந்த முறை கார்த்தியைப் பார்க்கவென அதில் கலந்துக்கொண்டாள் கீர்த்தி.
அவளாகவே சென்று கார்த்தியிடம் முதலில் பேசினாலும், அதன் பின் நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தது கார்த்தி தான்.
அப்போதே அலைபேசி எண் பகிர்ந்துக்கொண்டவர்கள், அதன் பின் அலைபேசியில் கதையளந்த நேரத்திற்குக் கணக்கே இல்லை. காதலில் எல்லாம் அதிக நாட்டம் இல்லாதவள் போல் பேசும் ரதியிடம், கார்த்தியும் சரி, கீர்த்தியும் சரி, அவர்கள் பழக்கத்தைப் பற்றி வாயே திறக்கவில்லை.
போன ஆண்டு தான் நடந்தது கார்த்தியின் சொந்த அண்ணன் கண்ணனின் திருமணம். அப்போதெல்லாம் அவர்களின் கல்லூரிப் படிப்பு முடிந்து, ரதி சென்னையிலும், கீர்த்தி பெங்களூரிலும் பணிபுரிந்துக்கொண்டிருந்தாலும், ‘நான் வந்தே தீருவேன்’ என்று அடம்பிடித்து அதற்கும் வந்து சேர்ந்தாள் கீர்த்தி.
ஆயினும் மறந்தும் கூட, கார்த்தியும் கீர்த்தியும் யாருக்கும் தெரிவது போல் பேசிக்கொள்ளவில்லை. கண்பாஷைகள் பேசுவதிலேயே அந்த விழாவைக் கடத்தி, காதல் வளர்த்தனர்.
கீர்த்திக்கு அதற்குள் திருமணம் செய்துக்கொள்வதில் விருப்பமில்லை. கார்த்தியும், ரதிக்கும், தன்னை விட மூத்தவனான அரவிந்துக்கும் திருமணம் முடிந்தால் தான் தன்னுடைய திருமணம் பற்றியப் பேச்சு வருமென்பதால், அதுவரை மாட்டிக்கொள்ளாமல் காதலிப்பது எப்படி என்பதில் மட்டும் கவனம் செலுத்தினான்.
ப்ரித்வி – ரதியைப் பற்றி இத்தனை நாட்கள் கார்த்தியிடம் எதுவும் சொல்லாத கீர்த்தி, அரவிந்தின் திருமணப் பேச்சுத் தொடங்கவும் தான் அவர்களைப் பற்றி அவனிடம் சொன்னாள்.
கீர்த்தி ப்ரித்வியைப் பற்றியும், ரதி மீதான அவனுடைய காதலைப் பற்றியும் சொன்னதை வைத்தே கார்த்திக்கு ப்ரித்வியைப் பிடித்துப் போனது. பிறகு நேரில் சந்தித்த போது, ப்ரித்வியின் பேச்சும் நடத்தையும் கார்த்தியை இன்னும் கவர்ந்தது. அவனுடன் ரதி மகிழ்ச்சியாக இருப்பாள் என்ற நம்பிக்கை பிறந்தது அவனுள்.
ஆனால், ரதிக்கு அவனைப் பிடித்திருக்க வேண்டுமே. அவள் கல்லூரிக் காலத்தில் ப்ரித்வியை வேண்டாம் என்று சொல்லியிருந்தாலும், அவள் மனதிற்குள் ஆசை உண்டு என்று கீர்த்தி சொல்கிறாள் தான். இருந்தும், அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று நினைத்திருந்தான்.
இன்று ப்ரித்வியின் பெயரை எடுத்ததுமே கடுகாய் பொரிந்தாள் தான் அவன் தங்கை. அவள் இனிமையாய் பேசியிருந்தால் கூட சந்தேகித்திருப்பான். ஆனால், மிகவும் பிடித்தவர்களை மட்டுமே திட்டும், அவர்கள் மீது மட்டுமே கோபத்தைக் காட்டும் ரகம் ரதி.
அவள் கோபத்தின் அளவே அவளுக்கு நிச்சயம் அவனைப் பிடித்திருக்கிறது என்று கார்த்திக்குக் காட்டிக்கொடுத்துவிட்டது.
அதுவும், பெண்ணாய் இருந்திருந்தால் தானே திருமணம் செய்துக்கொள்வேன் என்று சொன்னதும் அவன் முடியைப் பிடித்துத் தலையைச் சுழற்றியதை எல்லாம் நினைத்து நினைத்துப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தான் கார்த்தி.
அதையெல்லாம் கீர்த்தியிடம் வேறு சொல்ல, அவளும் அவனுடன் சேர்ந்து சிரித்துக்கொண்டிருந்தாள்.
“இப்போ என்ன. அந்த ப்ரித்வி பய உன்னை ‘பேபி’ன்னு சொன்னதுக்குத் தான் அம்மணிக்கு இவ்ளோ கோவமா?” என்று கார்த்தி கேட்க, “ஆமா. பாவம். அங்கேயே மூஞ்சி மாறிடுச்சாம் அவளுக்கு. ப்ரித்வி சொன்னான்” என்றாள் கீர்த்தி.
அதற்கு கார்த்தி சிரிக்க, “நான் ப்ரித்வி கிட்ட சொன்னேன். ‘சும்மா பண்ணேன்னு சொல்லிடலாம்ன்னு சொன்னேன். அவன் தான் ‘கொஞ்ச நேரம் சுத்தவிடுவோம். மேடம் தான் என் மேல லவ்வே இல்லைன்னு சாதிக்கறாங்கல்ல’ன்னு சொல்லிட்டான்” என்று ப்ரித்வி சொன்னதை எல்லாம் ஒப்பித்தாள் கீர்த்தி.
“அது அவன் பாடு. அவ பாடு. நமக்கென்ன. வேடிக்கைப் பார்ப்போம். நீ எப்போ வருவ?” என்றான் கார்த்தி.
“நாளைக்கு வந்துடுவேன். நாளை மறுநாள் தான் பந்தக்கால் நடுவாங்களாமே. அதுக்கெல்லாம் வந்துடுவேன்” என்றாள் கீர்த்தி.
நெடுநாட்கள் கழித்து இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளப்போகும் உற்சாகத்தோடே இருவரும் உறங்கச் செல்ல, அன்றைய இரவு அமைதியாகக் கடந்தது.