மித்ரா, அரவிந்த், ரதி, ப்ரித்வி என நால்வருமாக மதிய உணவை முடித்துக்கொண்டு, அந்த அழகு நிலையத்திற்குச் சென்றனர்.
தரைத்தளத்தில் பெண்களுக்கும், முதல் தளத்தில் ஆண்களுக்கும் என இருபாலருக்குமான அழகு நிலையம் அது.
“நீங்க ரெண்டு பேரும் உள்ள போங்க. நானும் ப்ரித்வியும் மேல போய் எங்க வேலையைப் பாக்கறோம்” என்றான் அரவிந்த்.
“உங்களுக்கு என்ன வேலை?” என்று மித்ரா கேட்க, “நீங்க மட்டும் தான் பண்ணுவீங்களா? எங்க மாமாவும் டீ-டேன், பேஷியல், ஹேர்கட் எல்லாம் பண்ண வேண்டாமா!” என்று வருங்கால மாமனுக்காக வரிந்துக்கட்டிக்கொண்டு வந்தான் ப்ரித்வி.
“சரி சரி… என்னமோ பண்ணுங்க” என்று பொதுவாய் சொன்ன மித்ரா, ப்ரித்வியிடம், “டேய். நீயும் ஒழுங்கா ஷேவ் பண்ணு. வீட்ல என்னது இது தாடின்னு திட்டுனாங்கல்ல…” என்று தம்பிக்கு நினைவுப்படுத்திவிட்டு, ரதியை இழுத்துக்கொண்டு, உள்ளே நுழைந்தாள்.
ரதி மித்ராவால் இழுத்துச்செல்லப்பட்ட பொழுது, ஏதோ சொல்ல விரும்புபவள் போல் ப்ரித்வியைத் திரும்பிப் பார்த்தாள் ரதி.
அதை அவன் கவனித்து, ‘என்ன?’ என்று சைகை காட்டவும், பெண்கள் இருவரும் உள்ளே செல்லவும் நேரம் சரியாக இருந்தது.
‘என்ன சொல்ல வந்தா இவ?’ என்று யோசித்து இவனுக்குத் தான் மண்டை வெடித்தது. ஆனால், அங்கு ரதியோ, மித்ராவுடன் திருமணத்திற்கு எந்த மாதிரியான அலங்காரம் வேண்டும் என்று முடிவு செய்யும் வேளையில் மூழ்கினாள்.
யோசித்துப்பார்த்து, “என்ன சொல்ல வந்த?” என்று ரதிக்குக் குறுஞ்செய்தி அனுப்பினான் ப்ரித்வி.
ரதியின் கையில் அலைபேசி இருந்தால் தானே, அவள் அதைப் பார்க்க. ரதி கைப்பை எதுவும் கொண்டுவராததால், அவளுடைய அலைபேசியை மித்ராவிடம் கொடுத்திருந்தாள். மித்ராவின் கைப்பைக்குள் அழகாய் உறங்கிக்கொண்டிருந்தது ரதியின் அலைபேசி.
ரதியின் பதிலுக்குக் காத்திருந்து சலித்த ப்ரித்வியும், வந்த வேலையைப் பார்க்கத் தொடங்கினான்.
இங்கு மித்ராவின், சேலைக்கேற்ற நகைகள் தேர்வுசெய்யப்பட்டு, மேக்-அப் எப்படிச் செய்ய வேண்டும், சிகை அலங்காரம் எப்படி இருக்கவேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டிருந்தது. அந்த அலங்காரங்கள் மித்ராவுக்குப் பொருந்துகிறதா என்று ஒத்திகைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
இதன் நடுவே, ரதியின் அலைபேசி அழைக்கவும், ஒரு ஓரமாக மாட்டிவைக்கப்பட்டிருந்த மித்ராவின் கைப்பையில் இருந்து தன் அலைபேசியை எடுத்தாள் ரதி.
அழைத்தது அரவிந்த் தான். “இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்?” என்று அவன் கேட்க, அவள் மித்ராவிடம் கேட்டுவிட்டு, “ஒரு மணி நேரம்” என்று பதிலளித்தாள் ரதி.
அரவிந்துக்கும், ப்ரித்விக்கும் அங்கு வேலை முடிந்திருந்தது. ஒரு மணி நேரமென்றால், நிச்சயம் இரண்டு மணி நேரமாகும் என்று அரவிந்துக்குத் தெரியும். அவ்வளவு நேரம் வெளியே சென்று நிற்பதற்கு பதில், அந்த அழகு நிலையத்துக்குள்ளே ஏசியில் அமர்ந்திருக்கலாம் என்று அரவிந்த் சொல்ல, அவன் யோசனைக்கு ப்ரித்வியும் ஒப்புக்கொண்டான்.
அங்கிருந்த நாளிதழ்களை இருவரும் புரட்டிப் பார்க்கத் தொடங்கினர். அப்போது ரதியிடமிருந்து பதில் வந்தது ப்ரித்விக்கு.
அரவிந்திடம் பேசவென அலைபேசியை எடுத்த போது தான் ப்ரித்வியின் குறுஞ்செய்தியைப் பார்த்துவிட்டு, அதற்கு, ‘ஷேவ் செய்யாதையேன். இந்தக் குட்டி தாடி அழகா இருக்கு’ என்று பதில் அனுப்பியிருந்தாள் ரதி.
அதைப் பார்த்ததும், ப்ரித்வி சற்று நேரம் முன்பு தான் க்ளீன் ஷேவ் செய்யப்பட்ட கன்னங்களையும், தாடையையும் தடவிப்பார்த்துக்கொண்டான்.
“மாம்ஸ். ரெண்டு நிமிஷ மேகி மாதிரி, ரெண்டு நிமிஷத்துல தாடி ரெடியாக ஏதாவது வழி இருக்கா???” என்று அரவிந்திடம் கேட்டு, ஒரு வினோதப் பார்வையை அவனிடமிருந்து பெற்றுக்கொண்டான் ப்ரித்வி.
அரவிந்த் கணித்தது போலவே ரதியும் மித்ராவும் வருவதற்கு இரண்டு மணி நேரங்கள் ஆனது.
எதிர்ப்பார்ப்புடன் ப்ரித்வியை நோக்கிய ரதியின் கண்கள் ஏமாந்துப்போயின.
“இந்த மேக்-அப் தான்… இந்த ஹேர்-ஸ்டைல் தான்…” என்று உள்ளே முடிவு செய்ததைப்பற்றியெல்லாம் அந்த அழகுநிலையத்தின் வாசலிலேயே நின்று கொண்டு அரவிந்துக்கு விளக்கிக்கொண்டிருந்தாள் மித்ரா.
அண்ணன்-அண்ணி இருவரும் கவனிக்காமல் இருக்கவும், ப்ரித்வியை நேராகவே முறைத்தாள் ரதி.
ஒருவேளை ப்ரித்வி சவரம் செய்யும் முன்பே ரதி சொல்லியிருந்தால், அவள் உரிமையாய் கேட்டுக்கொண்டதற்காகவே நிச்சயம் சவரம் செய்திருக்க மாட்டான் தான்.
ஆனால், இப்பொழுது அவள் முறைக்கவும், அவளிடம் வம்புவளர்க்கவே விரும்பியது அவன் மனம்.
அவளருகில் வந்து, “கீர்த்திக்கு நான் ஷேவ் பண்ணா தான் பிடிக்கும்” என்று அவன் மெதுவாய் சொல்ல, பல்லைக்கடித்துக்கொண்டு நின்றாள் ரதி. ஒருவேளை அரவிந்தும் மித்ராவும் இல்லாமல் இருந்திருந்தால், நிச்சயம் அவனைக் கடித்திருப்பாள். ப்ரித்வி தப்பித்துக்கொண்டான்.
ஆனால், அந்நேரம் சரியாக ரதியின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்து மாட்டிக்கொண்டது என்னவோ கீர்த்தி தான்.
ரதியின் அலைபேசி திரையில், ‘கீர்த்தி’ என்று ஒளிர, அலைபேசியையும் முறைத்து வைத்தாள் ரதி.
பக்கத்தில் வந்து எட்டிப் பார்த்த ப்ரித்வி, “அட… என் கீர்த்தி பேபி” என்று சொல்ல, ரதியால் முறைப்பதைத் தவிர வேறேதும் செய்யமுடியவில்லை.
அழைப்பை ஏற்று, ஸ்பீக்கர் மோடில் போட்டுவிட்டே “ஹலோ” என்றாள் ரதி. “ஹே ரதி… நான் உனக்கு ஒன்னு சொல்லட்டா…!!!” என்று கீர்த்தி தொடங்க, “என்னது? உனக்கு க்ளீன்-ஷேவ் பண்ணா தான் புடிக்கும்ன்னா…” என்று சிடுசிடுத்தாள் ரதி.
ப்ரித்விக்கு ரதியின் எரிச்சலில் ஒரு பக்கம் சிரிப்பு என்றால், எதிர்முனையில் கீர்த்தி எப்படி ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டிருப்பாள் என்று கற்பனை பண்ணிப் பார்க்க இன்னும் அடக்கயியலா சிரிப்பு.
“என்னது ஷேவா… ரதி… என்ன? எனக்கு மூஞ்சில கொஞ்சம் முடி இருக்குன்னு ஷேவ் கீவ்ன்னு எல்லாம் பேசுவியா நீ… நான் ஒன்னும் ஷேவ் எல்லாம் பண்ணல…” என்று கீர்த்தி பொரிய, சத்தம் போட்டே சிரித்துவிட்டான் ப்ரித்வி.
ப்ரித்வி சிரிப்பது கீர்த்திக்கும் கேட்டது. ‘அட. இந்தக் கொரங்கு ஏதோ பண்ணியிருக்கும் போல…’ என்று சுதாரித்துக்கொண்டாள் கீர்த்தி.
“உன் மூஞ்சை ஷேவ் பண்றதை பத்தி சொல்லல. உனக்கு என்னவோ அந்த ப்ரித்வி மூஞ்சி ஷேவ் பண்ணியிருந்தா தான் புடிக்குமாமே…” என்று கேட்க, உள்ளுக்குள் சிரித்துக்கொண்ட கீர்த்தி, “அட… ப்ரித்வி பேபி பத்தி சொல்றியா! ஆமா. நீ வேணா பாரேன். ஷேவ் பண்ணிப் பார்த்தா என் ஆளு கன்னம் பப்பாளி பழம் மாதிரி பளபளன்னு இருக்கும்” என்றாள்.
“ஹான்… பப்பாளியா? நல்லா இருக்கான். மரத்துல இருந்து கீழ உழுந்து நசுங்கிப்போன பாப்பாளி மாதிரி” என்று ரதி சொல்ல, சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டு, “ரதி. வார்த்தையை விடாத. என்ன இருந்தாலும் ப்ரித்வி என் ஆளு” என்றாள் கீர்த்தி.
சற்று முன் ரதியிடமிருந்த கோபம், எரிச்சல், பதிலுக்குப் பதில் பேசும் ஆர்வம் எல்லாம் ஒரே நொடியில் வடிந்துப் போய், அவள் முகம் சோர்ந்துவிட்டது.
அதற்கு மேல் இந்த விளையாட்டை விளையாட விரும்பாமல், “என்ன கீர்த்தி. எதுக்கு ரதிக்கு கால்? கடலூர் வந்துட்டியா?” என்று விஷயத்திற்கு வந்தான் ப்ரித்வி.
“ஹான். ஆமா. நான் வரேன்னு அவ கிட்ட சொல்லல. வந்து இறங்கிட்டு சர்ப்ரைஸா ஃபோன் பண்ணலாம்ன்னு பண்ணேன்” என்று கீர்த்தி சொல்ல, “எங்க இருக்க? பஸ் ஸ்டாண்ட்லயா?” என்றான் ப்ரித்வி.
“இன்னும் பத்து நிமிஷத்துல வந்துருவேன்” என்று கீர்த்தி சொல்ல, “சரி. நாங்க வந்து கூப்ட்டுக்கறோம்” என்று சொல்லிவிட்டு, அழைப்பைத் தானே துண்டித்துவிட்டான் ப்ரித்வி.
ரதியிடம் அலைபேசியை நீட்ட, நிமிர்ந்துப்பார்க்காமல் வாங்கிக்கொண்டாள் ரதி. அவள் அழவில்லை என்று கொஞ்சமாய் குனிந்து அவள் முகத்தைப் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டான் ப்ரித்வி.
‘அஞ்சு ரூபாய்க்கு நடிக்கச் சொன்னா அம்பது ரூபாய்க்கு நடிக்கறா’ என்று கீர்த்தி குறித்து நினைத்துக்கொண்டான் ப்ரித்வி.
சற்று தூரத்தில் நின்று மித்ராவுடன் பேசிக்கொண்டிருக்கும் அரவிந்திடம் சென்ற ப்ரித்வி, ரதியின் தோழி கீர்த்தியைப் பேருந்து நிலையம் சென்று அழைத்துச்செல்ல வேண்டும் என்று சொன்னான்.
அதற்கு மேல் அங்கேயே நின்றுபேசிக்கொண்டிருக்காமல், பேருந்து நிலையத்திற்குச் சென்றுவிடலாம் என்றான் அரவிந்த்.
மற்ற மூவரும் மகிழுந்துக்கு அருகிலேயே நின்று கொண்டிருக்க, நான்கு அடி தூரத்தில் நின்ற ரதியையும் மகிழுந்தில் ஏறும்படி அழைத்தான் அரவிந்த்.
உள்ளே அமர்ந்த ரதியின் கைகள் தானாக, தன் இடது தோளில் மாட்டியிருந்த மித்ராவின் கைப்பையைத் திறந்து, தன்னுடைய அலைபேசியை அதனுள் வைத்தாள்.
அலைபேசியை வைத்துவிட்டு, கைப்பையின் ஜிப்பை மூட முயன்ற போது, பைக்குள்ளிருந்த ஏதோ ஜிப்பில் சிக்கியது.
சிதறியிருந்த கவனத்தைச் சிரமப்பட்டு மீட்டெடுத்து, கைப்பையில் இருந்த பொருட்கள், ஜிப்பில் சிக்காத வண்ணம் ஒழுங்குப்படுத்தி அடுக்கி வைத்தாள். அந்தப் பணியின்போது ரதியின் கண்களில் பட்டது, மித்ராவின் கைப்பைக்குள் இருந்த அந்த ப்ரெக்னன்ஸி டெஸ்ட் கிட்.
முதலில் தான் நினைப்பதைச் சரியென நம்பமுடியாமல், மகிழுந்துக்குள் இருந்த மங்கலான வெளிச்சத்திலே உற்று உற்றுப் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டாள்.
‘அண்ணி பையில் இது எதற்கு? வேறு யாருக்காகவேணும் வாங்கியிருப்பாரா? இல்லை அவருக்காகவே தானா? என்று தொடங்கி, ஓராயிரம் விடைத்தெரியா கேள்விகள் ரதிக்குள்.
‘இதைப் பற்றி அண்ணனுக்குத் தெரியுமா?’ என்று யோசிக்கவும் தான் நினைவு வந்தது மதியம் அரவிந்தும், மித்ராவும் சேர்ந்து மருந்தகத்திற்குச் சென்றது. அண்ணனுக்குத் தெரிந்துதான் இருக்கும் என்று யூகித்துக்கொண்டாள்.
ஆனாலும், ‘அவளுக்குத் தெரிந்து அரவிந்த் பொதுவாக அவசரப்படுபவன் இல்லையே. பிறகு ஏன் இதில் மட்டும் இப்படி! ஒருவேளை குழந்தை உருவாகியிருக்கிறது என்று உறுதியானால்! இருவீட்டிற்குத் தெரிந்தால்…’ என்று ஏதேதோ யோசித்து ரதிக்குத் தலைவலி வந்தது தான் மிச்சம்.
‘எதுவாகினும் அரவிந்த் பார்த்துக்கொள்வான்’ என்று நினைத்துக்கொண்டு இதைப் பற்றி யோசிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க எண்ணினாலும் அவள் மனம் மெல்ல அதையே ஓட்டிக்கொண்டிருந்தது.
ரதியுடன் பின்னிருக்கையில் தான் ப்ரித்வியும் அமர்ந்திருந்தான். ரதி கைப்பைக்குள் ஆராய்ந்ததைப் பற்றியெல்லாம் எதுவும் தெரியாத ப்ரித்வி, அவள் முகம் இன்னுமின்னும் சுருங்குவதைக் கண்டு, மொத்தத்திற்கும் தான் கீர்த்தியுடன் சேர்ந்து செய்த கலாட்டா தான் காரணம் என்றே நினைத்துக்கொண்டான்.
பேருந்து நிலையம் வந்துவிட, மற்ற மூவரும் மகிழுந்துக்குள்ளேயே அமர்ந்திருக்க, ப்ரித்வி மட்டும் கீழே இறங்கிக் காத்திருந்தான். ரதியின் சோர்ந்த முகம் அவனை வாட்ட, அவள் பக்கம் இருந்த கதவைத் திறக்க, அவன் எதுவும் சொல்லாமலேயே அனிச்சை செயலாக அவளும் வெளியே இறங்கி நின்றாள்.
ரதி தன் மூளைக்குள் அந்த ப்ரெக்னன்சி கிட் விஷயத்தையே போட்டுக் குழப்பிக்கொண்டிருக்க, உண்மையில் ப்ரித்வி சொன்னது அவள் கருத்தை எட்டவே இல்லை.
அவள் எண்ணவோட்டம் அறியாதவனோ, ‘இவ என்னைச் சுத்தவிட்டதுக்கு எல்லாம் நான் இப்டி இறங்கி வந்து பேசவே கூடாது. நானே பேசறேன். கண்டுக்காம நிக்கறா பாரு. இவ முகம் சுருங்குனதும் உருகுறேன் பாரு. என்னைச் சொல்லணும்’ என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டு மீண்டும் முருங்கை மரம் ஏறினான்.
இருவரும் ஆளுக்கொரு பக்கமாக நிற்க, வந்து சேர்ந்தாள் கீர்த்தி.
வந்தவள், நேராக, “ப்ரித்வி பேபி…” என்று அவனை நோக்கி வர, இருவருக்கும் நடுவில் போய் நின்றுக்கொண்டாள் ரதி.
“அட… குறுக்க இந்த கௌஷிக் வேற…” என்ற கீர்த்தி, ப்ரித்வியிடம், “ஷேவ் பண்ணி. மழ மழன்னு அமுல் பேபி மாதிரி இருக்க” என்றாள்.
“அமுல் பேபியா…” என்று ரதி ப்ரித்வியை மேலும் கீழும் பார்க்க, “பேபி. உன் ஃப்ரெண்ட் முன்னாடி இதெல்லாம் சொல்லாத. அவங்க வீட்ல தான தங்க போற. பொறாமைல உனக்குச் சாப்பாட்டுல எதையாவது கலந்துடபோறா..” என்றான் ப்ரித்வி.
“அவ்ளோ அக்கறைன்னா, உன்னோட இந்த அஞ்சரை அடி பேபியை நீயே உங்க வீட்டுக்குத் தூக்கிட்டுப் போய் தொட்டில் கட்டி சீராட்டு” என்று பொரிந்தாள் ரதி.
“ப்ச். அது எப்டி ரதி. கல்யாணம் ஆகாம நான் ப்ரித்வி வீட்ல தங்க முடியும்” என்று கீர்த்தி வராத வெட்கத்தை வரவைத்துக்கொண்டு கேட்க, “முடியலடி” என்றாள் ரதி.
கீர்த்தியைத் தூரத்தில் கண்டதுமே, அரவிந்தும் மித்ராவும் மகிழுந்தை விட்டு இறங்கியிருக்க, அதை உணராது மூவரும் பேசிக்கொண்டிருக்க, உரையாடல்கள் அனைத்தும் அவர்கள் செவிகளிலுமே விழுந்தது.
‘கீர்த்தியும் ப்ரித்வியும் லவ் பண்றாங்களா!’ என்று அரவிந்தும் மித்ராவும் ஒருவருக்கொருவர் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டதோடு சரி.
அவர்கள் மூவரிடமும் எதுவும் கேட்காமல், அப்போது தான் அங்கு வந்தவர்கள் போல், “எப்டி இருக்க கீர்த்தி???” என்று புதிதாக வந்தவளின் நலனை விசாரித்தனர்.
தனக்கும் ப்ரித்விக்கும் நடுவில் கீர்த்தி அமர்ந்துக்கொண்டு அவர்கள் இருவரும் ஏதோ பேசிக்கொண்டு வரவும், பார்வையை மொத்தமாக ஜன்னல் பக்கம் திருப்பிய ரதியின் எண்ணங்கள் அவள் கல்லூரிக் காலங்கள் நோக்கிச் சென்றது.