எதிரெதிர் இருக்கையில் வெகு நேரமாய் ஜெய்யும் ஜனனியும் அமர்ந்திருக்க, கைகளில் நடுக்கத்தை மறைக்க இரு கை விரல்களையும் கலக்கவிட்டு அதனை பார்த்தபடி நிமிராமல் அமர்ந்திருந்தாள் ஜனனி.
அவள் பார்க்கவில்லை என்றதுமே அவளை மட்டுமே பார்த்தபடி அமர்ந்திருந்தான் ஜெய்.
நேற்றைய தினம் சூர்யாவோடு வந்திருந்த அதே இடம். பேரர் காபியை வைத்துவிட்டு செல்ல, அதன்பின் தான் நேரம் செல்வதை உணர்ந்தவன் தன் கண்களில் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி கண்களை பெருவிரலால் நீவிக் கொண்டே,
“சோ?” என்றான்.
அதில் அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க, “உன் வீட்டுல பேசினதால உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் அப்படிதானே?” என்று கேட்க,
ம்ம் என்று தலையாட்டியவள் உடனே இல்லை என்றும் தலையாட்ட, பின் இதற்கு பதில் என்ன சொல்வது என தெரியாமல் விழித்தாள்.
“இல்ல! நான் கொஞ்சம் டெரர் பீஸ்… அந்த பொண்ணு பிச்சுகிட்டு ஓட….” என்று கூற ஆரம்பிக்கவுமே,
“ப்ளீஸ்! ப்ளீஸ்! ப்ளீஸ்! அதையெல்லாம் பேச வேண்டாமே! நான் சும்மா சூர்யாவை கலாய்க்குறேன்ன்னு… ப்ச்! ப்ளீஸ்! தெரியாம பேசிட்டேன்..
எதை அவன் பேசிவிட கூடாது என நினைத்து வந்தாளோ அதையே அவன் ஆரம்பித்து வைக்க, இன்னும் படபடப்பு அதிகம் ஆகி இருந்தது.
“வீட்டுக்கு வந்தே பேசலாமே!” என சூர்யா கூறும் பொழுதே ஜனனி கேட்டிருக்க,
“மாப்பிள்ளை எப்படி பிரீயா பேச முடியும் வீட்டுக்கு வந்தா? ” என்று கிண்டல் பேசியவனை நேரில் இருந்தால் நான்கு கொட்டு வைத்திருப்பாள்.
“வீட்டுக்கு வந்து பேச சொல்ல வேண்டியது தானே ம்மா?” என்று அன்னையிடம் கேட்டிருந்தாள்.. அனைவரின் முன் என்றால் இந்த கேள்வியை கேட்டிருக்க மாட்டான் என்றொரு நம்பிக்கையில்.
‘விட்டுடேன்’ என்பதை போல கண்களாலும் அவள் கெஞ்ச, அதனை கொஞ்சம் ரசிக்கும் பார்வை பார்த்திருந்தான் ஜெய்.
“ஹ்ம்! அப்புறம்?” ஜெய் கேட்க,
“இன்னுமா?” என்றாள் அவன் விடவில்லையோ, கோபமோ என்று. முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அவன் இருக்க, குழப்பத்தில் இருந்தாள் ஜனனி.
“அதில்ல!” என்று அவன் மெல்லிய புன்னகையை கொடுக்கவும் தான் மூச்சே வந்தது மீண்டும்.
“எப்படி இந்த மேரேஜ்க்கு சம்மதம் சொன்னன்னு கேட்டேன்” என்ற கேள்வியில்,
“அது… சூர்யா கேட்டான்.. அம்மா, அக்கா எல்லாருக்கும்…” என்று கூறும் முன்பே அய்யோ என்று ஆகி விட,
“ஒரே ஒரு நிமிஷம்!” என்று கூறி ஜனனி சுடசுட இருந்த காபியை மொத்தமாய் வாயில் சரிக்க,
“ஹேய்!” என்று முன்வந்து அவள் புறம் கைகளை நீட்டி இருந்தான் ஜெய்.
“நத்திங்! பழக்கம் தான்!” என்று டிஸ்ஸு எடுத்து உதட்டில் ஒற்றிக் கொள்ள,
“அது சரி! நல்ல பழக்கம் தான்!” என்று மீண்டும் பின்னால் சாய்ந்து கொண்டவன் இதழ் திறக்காமல் சிரிக்க,
“இங்க பாருங்க! இந்த மாதிரி எல்லாம் எனக்கு பேச வராது! அன்னைக்கு போன்ல பேசினத்துக்கு சாரி.. இனி அதை எல்லாம் எப்பவும் சொல்லிக் காட்டக் கூடாது.. கொஞ்சம் அதிகமா தான் பேசுவேன்.. அதையுமே நீங்க தான் அட்ஜஸ்ட் பண்ணனும்” என்று வேக வேகமாய் அவள் கூற, அவள் பேச பேச கொஞ்சம் கொஞ்சமாய் விரிந்தது அவன் புன்னகை.
ஒரு நிறைவும் கூட மனதில். என்னவோ எல்லாம் நலம் என்ற ஒரு நம்பிக்கை மனதில் விதையானது அந்த நேரத்தில் ஜெய்க்கு.
திருமண வாழ்க்கைக்கு பெரிதாய் கனவு இருந்ததில்லை என்ற பொழுதிலும் அஞ்சலியின் நடவடிக்கைகளில் திருமணத்திற்கு பின்னான தன் நாட்கள் குறித்து அவன் அதிகம் யோசித்தது உண்டு. இனி இப்படி தானோ என்றெல்லாம் யோசித்ததும் உண்டு.
ஜனனியை காணும் வரை இருந்த சின்ன சின்ன எதிர்மறை எண்ணங்கள் கூட இப்பொழுது பனியாய் விலகியதை நொடியில் கண்டு கொண்டான் கண்முன்.
“நானுமே அமைதி எல்லாம் இல்லை.. அதனால மேட்ச் ட்ரா!” அவன் கூறி புன்னகைக்க, இப்பொழுது மீண்டும் விழிப்பது அவள் முறையானது.
“நான் கேட்ட கேள்விக்கு இன்னும் அன்ஸர் வர்ல.. கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னது ஏன்?” தெரிந்தே ஆக வேண்டும் என்று அவன் நிற்க,
“ஏன்னா? டாக்டர் தானே நீங்க? அப்படி தான் உங்க தம்பி சொன்னான்.. டூ பிளஸ் டூ பைவ்னு ஒரு கணக்கு.. சரியா வரும்னு தோணுச்சு சொன்னேன்.. இப்ப என்ன? உங்களுக்கு பிடிக்கலைனா பிடிக்கலைனா சொல்லிட்டு கிளம்புங்க..” என்று அவளும் அவளாய் பேச, அதுவே அவனுக்கு இன்னும் ஆசுவாசத்தை கொடுத்தது.
“வர்ற வரைக்கும் அப்படி ஒரு தாட் இல்லை!” என்றவனை,
அவள் கண்களை சுருக்கி கொஞ்சமாய் முறைத்து பார்த்து ‘அப்போ இப்போ இருக்காமா?’ என்பதை போல பார்க்க, அவனுக்கே ஆச்சர்யம் தான் இந்த அளவுக்கு அவனின் அவள் கண் பாஷை மீதான புரிதல்.
“இப்ப கன்ஃபார்மா இல்லைனு சொல்ல வந்தேன்!” என்றான் அவளுக்கு பதிலாய்.
“கணக்கு தப்பா வருதான்னு நீயும் செக் பண்ணணுமே! அதுக்காக தான் வந்தேன்” என்றான் மீண்டும் புன்னகை நீள.
“தேங்க் காட்! இப்ப இன்னுமே கான்ஃபிடன்ட்டா ப்ரோசீட் பண்ணலாம்னு தோணுது..” அவன் பேச்சில் வெளிப்படையாய் அவள் கூற,
“ஆஹான்!” என்றவன்,
“எனக்குமே!” என்றான் அதே உணர்வுடன்.
அதிகமாய் பேசிக் கொள்ளவில்லை என்றாலும் இருவருக்குள்ளுமே ஒரு நிறைவு தன் இணை குறித்து தோன்ற, அது அவரவர் குடும்பத்தினருக்கும் மகிழ்வாய் அமைந்தது.
பால நாதன் மூக்கால் காற்றடித்தபடி மனைவி மல்லிகாவை முறைக்க, அவர் கண்டு கொள்ளவே இல்லை கணவனை.
“நீங்களே இந்த வீட்டு முடிவை எடுத்துட்டிங்க அப்படின்னா நான் எதுக்கு இந்த வீட்டுல?” என்று இரவு பத்து மணி அளவில் குதித்துக் கொண்டிருக்க, அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தான் ஜெய்.
வந்தவன் பாலாவை சுற்றி அனைவரும் நிற்பதை பார்த்தாலும் கண்டு கொள்ளாமல் தன் அறை பக்கம் திரும்ப,
“அவனை நிற்க சொல்லு டா!” என்றார் சூர்யாவிடம். அஞ்சலியும் அங்கே தான் நின்றிருந்தாள்.
தன்னிடம் அறையில் அந்த வாய் பேசுபவன் பாலாவின் முன் அமைதியாய் நிற்பதை பார்த்து அவளும் நடப்பதை வேடிக்கை பார்க்க,
“ண்ணா!” என்றான் சூர்யா அமைதியாய்.
“ப்ச்! இப்ப என்ன?” என்று அன்னை அருகே வந்து நிற்க,
“உன் கல்யாணத்தை பத்தி தான் பேசிட்டு இருந்தோம்” என்றார் பிரேமா.
“பேசிட்டு என்கிட்ட போனா போகுதுன்னு சொல்லறீங்க” என்று பாலா குற்றமாய் கூற,
“அதுல என்ன தப்பு? எல்லாருக்கும் புடிச்சிருக்கு.. சொல்ல வேண்டியது தானே டா?” என்றான் சூர்யாவிடம் ஜெய்.
“இதென்ன டா பழக்கம்? நீங்க எல்லாம் பார்த்து பேசி முடிச்சுட்டு அப்புறமா என்கிட்ட வந்து தகவல் சொல்றது?” என்று அவர் அதிலேயே நிற்க,
“ப்ச்! ம்மா! செம்ம டையார்ட்! சாப்பாடு எடுத்து வையுங்க.. பிரெஷ் ஆகிட்டு வர்றேன்” என்று படியேற சென்றவன்,
“சூர்யா! மேரேஜ் சிம்பிளா வச்சுக்கலாம்.. ஏதாச்சும் கோவில்ல ஓகே! எந்த கோவில்னு அவர்கிட்டயே கேளு.. இல்லைனா அதுக்கும் கேட்கலைனு சொல்ல போறாரு.. அப்புறம் ரொம்ப எல்லாம் யாரும் வேண்டாம்..” என்றவன் யோசனையாய்,
“இல்ல அதை மட்டும் எதுக்கும் ஜனனி வீட்டுல பேசிக்கலாம்.. அவங்க என்ன நினைக்குறாங்கன்னு கேட்டுக்கலாம்.” என்று கூறிவிட்டு படியேற,
“ஏற்கனவே குதிச்சுட்டு நிக்குற மனுசனை ஏவி விட்டுட்டு போறியே டா பாவி! அவரு பொண்ணை ஏன் முதல்ல என்கிட்ட சொல்லலைனு கேட்டா இவன் கல்யாணம் வரை முடிவு பண்ணினா மாதிரி பத்த வச்சுட்டு போறான்.. தேவை தான் எனக்கு” என நினைத்தபடி திரும்பி பெரியப்பாவை பார்க்க,
“அவ்வளவு தூரம் போயாச்சா?” என்றவர் மனைவியைப் பார்க்க, அவர் எப்போதோ ஜெய்க்கு சாப்பாடு எடுத்து வைக்க சென்றிருந்தார்.
“அப்போ நான் இல்லாம கூட கல்யாணத்தை நடத்த போறீங்க? அதுக்கும் தயாரா தான் இருக்கீங்க? அப்படி தானே?” என்று கேட்க,
“அய்யோ பெரியப்பா! என்ன பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க.. ஜெய் சும்மா சொல்லிட்டு போறான்.. நீங்க தான் எங்களுக்கு எல்லாம் முன்னாடி நின்னு பார்க்கணும்.. பொண்ணு பார்க்க எப்படியும் போகணும் தானே? இது சும்மா தெரிஞ்ச பொண்ணுன்றதால எல்லாருக்கும் புடிச்சிருக்குன்னு சொன்னாங்க.. மத்தபடி யாரும் பேசி பழகி பார்க்க எல்லாம் இல்லை” என்று சமாதானம் செய்ய நினைக்க,
“என்ன மாமா நீங்க? நீங்க தானே கேட்டிங்க ஜெய் இப்பல்லாம் வீட்டுல சரியா இல்லனு.. அவனே கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லும் போது நாம தடையா நிக்கலாமா?” என பிரேமாவும் கூற,
“அதான் முடிவு பண்ணிட்டு போறாரே பெரிய மனுஷன்.. அவரே எல்லாத்தையும் பார்த்துக்கட்டும்” என்ற பால நாதன் அனைவரையும் முறைப்பாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே செல்ல,
“நீ பயப்படுறத பார்க்க கூட நல்லா தான் இருக்கு” என்றாள் சூர்யாவை நக்கலாய் அஞ்சலி.
“திமிரு டி உனக்கு!” என்றவன் அடுத்து பேசும் முன் ஜெய் இறங்கி வர, சூர்யா, பிரேமா, அஞ்சலி, ஜெய் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்.
“எம்டன் போயாச்சா?” என்று நிவியும் அறையில் இருந்து வர,
“நீ இன்னும் தூங்கலையா?” என்றான் ஜெய் அவளிடம்.
“நல்ல தூக்கத்துல தான் இருந்தேன்.. சத்தம் அதிகமா கேட்கவும் தான் எந்திச்சிட்டேன்.. இப்படி மாநாடு நடக்கும் போது நான் இல்லாமல் எப்படி?” என்றாள் அவள்.
“நான் சொல்ல சொல்ல கேட்காமல் ஆரம்பிச்சு வச்சது இவ தான்” என பிரேமாவை கைகாட்டிய மல்லிகா,
“பொண்ணு பார்க்க போகணும்னு அவர்கிட்ட பேச சொன்னா என்னவோ கல்யாணமே முடிச்சு வச்ச மாதிரி ஆடுறாரு!” என்றார்.
“பொண்ணு பார்க்கவா?” ஜெய் கேட்க,
“ஆமா! பார்க்கணும்ல? அவங்க வீட்டுல பேசி முடிவு பண்ணனும்ல?” என்று பிரேமாவும் கேட்க,
“என்னண்ணா! நீ ஸ்ட்ரைட்டா கல்யாணக் கனவுல இருந்த போல!” என்று சூர்யா கிண்டல் செய்ய,
“டேய்!” என்று அதட்டியவன்,
“அதெல்லாம் எதுக்கு?” என்று கேட்க,
“நீ மட்டும் பார்த்து பேசினா போதுமா? நாங்க எல்லாம் அண்ணியை பார்க்க வேண்டாமா?” என்றாள் நிவி.
“ஆமா டா! நாளைக்கு நாள் நல்லா இருக்கு.. அதான் போகலாம்னு ஆரம்பிச்சேன்.. மாமா இப்படி பேசிட்டு போறாரு!” என்றார் பிரேமா.
“நாளைக்கேவா? ஹ்ம்! அப்ப அந்தாளையும் கூட்டிட்டு போய் பேசி நாள் குறிச்சிட்டு வந்துடுங்க.. எனக்கு வேற ஒரு வேலை இருக்கு” என்று ஜெய் கூற,
“அதுவும் சரி தான்.. ரொம்ப எல்லாம் நாள் கடத்த வேண்டாம்.. அண்ணா சொன்ன மாதிரி சிம்பிளா எல்லாம் பண்ணிடலாம்.. சீக்கிரம் நடந்தா தான் ஊர் வாயையும் அடைக்க முடியும்” என்று அஞ்சலியை சூர்யா முறைக்க,
“இவனுக்கு வேற வேலை இல்ல.. என்ன பேசினாலும் என்னை இழுக்கலைனா பொழுது போகாது இவனுக்கு!” என அஞ்சலியும் முறைத்தாள்.
*****************
“நாளைக்கு மார்னிங் உன் வீட்டுக்கு போகலாம்.. ரெடியா இரு!” அறைக்கு வந்த அஞ்சலியிடம் சூர்யா கூற,
“ஏன்? திருந்திட்டு என் அப்பாகிட்ட மன்னிப்பு கேட்க போறியா?” அஞ்சலி நக்கலாய் கேட்க,
“அடிங்! திமிரு டி உனக்கு.. நான் திருந்தணுமா? முதல்ல உன்னை திருத்தி என் காலுல விழ வைக்குறேன் பாரு” என்று சூர்யா கூற,
“உன் காலுல நானு? கனவு தான்.. திருந்த நான் என்ன தப்பு பண்ணினேன்?”
“ஓஹ்! நீ என்ன தப்பு பண்ணினன்னே நான் இன்னும் உனக்கு புரிய வைக்கலையா?” என்று அவன் அவளை பார்க்க, அதற்கு அவள் புரியாமல் விழிக்க,