சென்னையில் இருந்த ஒரு புகழ்ப்பெற்ற தனியார் பொறியியல் கல்லூரி அது.
மதிய உணவு வேளைத் தொடங்கவும், மாணவர்கள் கல்லூரி விடுதியை நோக்கிக் கிளம்பிக்கொண்டிருக்க, வீட்டிலிருந்து வருபவர்களோ கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இருந்த பூங்காவிலோ, அல்லது உணவகத்திலோ அமர்ந்து உணவு உண்ணத்தொடங்கியிருந்தனர்.
ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி கட்டிடங்கள் இருக்க, கணினி அறிவியல் துறையிலிருந்து வெளிவந்திருந்தாள் ரதி.
நேற்றிரவே விடுதியில் வந்து தங்கியிருந்தாள் ரதி. ஓர் இரவுக்குள்ளேயே விடுதியில் கீர்த்தி உட்பட சில தோழிகள் கிடைத்துவிட்டனர்.
ஆனால், இந்த அரை நாளில், தன் துறையைச் சேர்ந்த மாணவர்களிடம் ரதி அதிகம் பேசியிருக்கவில்லை. முதல் நாள் என்பதால், அவளது ஆவணங்களைப் பரிசோதனை செய்வது, படிவம் நிரப்புவது, துறைத் தலைவரின் வரவேற்புரையைக் கேட்பது என்றே கழிந்த இந்த அரை நாள்.
ஒன்றரை மணி நேர உணவு இடைவேளை. விடுதிக்குச் சென்று மதிய உணவு சாப்பிட்டபின் மீண்டும் கல்லூரிக்கு வர வேண்டும்.
சில படிவங்கள் நகல் எடுக்கும் வேலை வேறு இருக்கவும், அதை வரும்போது எடுத்துவிட வேண்டும் என்று மனதுக்குள் கணக்கிட்டுக்கொண்டே அவள் நடக்க, “ஹெலோ… உன்ன தான். இங்க வா” என்ற குரல் கேட்டது அவளுக்கு.
தன்னைத் தான் யாரோ அழைக்கிறார்கள் என்று உணர்ந்தவள், சுற்றுமுற்றும் பார்க்க, சற்று தூரத்தில் நான்கு ஐந்து மாணவர்கள் கூட்டமாக நின்றிருந்தார்கள். கழுத்தில் அடையாள அட்டை தொங்கிக்கொண்டிருந்தது. முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்னமும் அடையாள அட்டை கொடுக்கவில்லையே. ஆதலால், அழைப்பவர்கள் நிச்சயம் சீனியர்ஸ் தான் என்று நினைத்தாள் ரதி.
‘ரேகிங்கா?’ என்று யோசித்தாள். காலையிலிருந்து ஆங்காங்கே ரேகிங் நடந்துக்கொண்டு தான் இருந்தது. கல்லூரி நிர்வாகம் அதைக் கண்டும்காணாமல் இருந்தாலும், யாரேனும் புகார் கொடுத்தால், ரேகிங் செய்பவர்களுக்கு நிச்சயம் குறைந்தபட்ச தண்டனையாக இடை நீக்கமாவது கிடைக்கும் என்று அறிந்தே இருந்தாள்.
அமைதியான பெண் தான். ஆனால், ‘என்ன ஆனாலும் பார்த்துக்கொள்ளலாம்’ என்ற தைரியம் இருந்தது.
அவர்கள் அருகில் சென்று நின்றாள். “கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மென்ட் தான…!” என்று கேட்க, “ஆமாம்…” என்றாள்.
“பேர் என்ன?” என்றான் அந்த நால்வரில் ஒருவன். அவன் மட்டுமே ரதியிடம் நேரடியாகப் பேசியது. மற்ற மூவரும், அவர்களுக்குள் சிரித்துக்கொண்டும், கேள்விக் கேட்பவனுக்கு யோசனை கொடுத்துக்கொண்டும் தான் அமர்ந்திருந்தனர்.
“ரதி…” என்றாள் இவள்.
“என்னது ரதியா? ரதின்னு பேர் வச்சிட்டா ரதியாகிடுவியா நீ?” என்று அவன் சிரிக்க, அவன் சொன்னது தன் காதிலேயே விழவில்லை என்பது போல் நின்றிருந்தாள் ரதி.
“சரி… ஹாஸ்டலா? இல்ல வீட்ல இருந்து வரியா?” என்ற கேள்விக்கு, “ஹாஸ்டல்” என்றும், “எந்த ஊர்???” என்ற கேள்விக்கு, “கடலூர்” என்றும் ஒற்றை வார்த்தைகளில் பதிலளித்துக்கொண்டிருந்தாள்.
கேட்பதற்கெல்லாம் பதிலளித்தாலும், அதில் ஒரு அலட்சியத் தொனி நிச்சயம் இருந்தது.
“சரி. உன் ஃபோன் நம்பர் குடு” என்று கேட்க, “அதெல்லாம் முடியாது” என்றாள் மறுப்பாக.
“என்ன ரதி… நீ குடுக்காட்டி உன் நம்பர் கிடைக்காதுன்னு நெனச்சியா?” என்று எதிரில் இருப்பவன் சிரிக்க, பதிலேதும் சொல்லாமல் நின்றாள் பெண்.
‘க்ளாஸ் வாட்ஸ்அப் குரூப்’, ‘டிபார்ட்மென்ட் குரூப்’ என்று பலதும் இருக்க, இவளுடைய அலைபேசி எண்ணை அவர்கள் நினைத்தால் கண்டுபிடித்துவிடலாம் தான். ஆனால், இவளாகவே அவர்களுக்கு எண்ணைக் கொடுத்துவிட இவள் மனம் ஒப்பவில்லை.
“நம்பர் கொடுக்காத பொண்ணோட நம்பரை நீங்களா தேடி தொல்லை பண்ற அளவுக்கு நீங்க அநாகரீகமானவங்கன்னா… பண்ணிக்கோங்க” என்றவள் அதற்கு மேல் அவர்களிடம் பேச்சு கொடுக்காமல் அங்கிருந்து நகர்ந்தாள்.
‘இப்படிச் சொன்னால், நாகரீகம் கருதியேனும் அவர்கள் அவள் எண்ணைக் கண்டுபிடித்து அழைத்து, தொல்லை செய்யவெல்லாம் மாட்டார்கள்’ என்று தான் நினைத்தாள் ரதி. ஆனால் அவர்களோ அவளின் எண்ணத்தைப் பொய்ப்பித்து, அவர்கள் அநாகரீகமானவர்கள் தான் என்று மெய்ப்பித்தார்கள்.
இரவு பகல் பாராமல் ஏதோதோ ப்ரைவேட் எண்களில் இருந்து அழைப்பு வந்தது. எடுத்து பேசினால், என்னன்னவோ தகாத வார்த்தைகளில் பேசுவதும், ஒருவேளை அழைப்பை எடுக்காவிட்டால், தொடர்ந்து குறுஞ்செய்திகள் வருவதுமாக இருந்தது ரதியைப் பொறுமையிழக்கச் செய்தது.
அந்த இரண்டு நாட்களில் இன்னமும் நெருங்கிவிட்ட கீர்த்தியிடம் தான் சென்று, “நான் வேணா கம்ப்ளைன் பண்ணிடவா கீர்த்தி?” என்று கேட்க, அவளும் “கண்டிப்பா… கண்டிப்பா” என்று ரதியின் முடிவை ஆமோதித்தாள்.
கல்லூரியின் ‘ரேகிங் தடுப்புக் குழு’வின் தலைவராக இருந்த ஒரு பேராசிரியரிடம் போய் நின்றாள்.
இவள் நடந்ததை முழுவதுமாகச் சொல்லவும், அன்று அவளிடம் பேசியவனின் பெயர் தெரியுமா என்று கேட்டார் அவர்.
அன்று மற்றவர்கள் அமைதியாய் இருக்க, ஒருவன் மட்டுமே தானே பேசினான். மற்றவர்கள் அவனை ‘ரித்வி’ என்று அழைத்தது நினைவிருந்தது. ‘ரித்வி’ என்பது பெயர் சுருக்கமாய் தான் இருக்கக்கூடும். முழுப்பெயர் என்னவாக இருக்கும் என்று யோசிக்கையில் தான் அவளுடைய வகுப்பு மாணவிகள் ‘ப்ரித்வி’ என்று யாரோ இவர்கள் துறை சீனியர் பற்றிப் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது ரதிக்கு.
‘ப்ரித்வி பார்க்க இப்படி இருந்தாங்க… அப்படி இருந்தாங்க… செம அழகு… செம ஸ்டைல்’ என்றெல்லாம் அவர்கள் உருகிக்கொண்டிருந்தார்கள்.
அன்று அவளை ரேக் செய்தவன் அழகாக இருந்தானா என யோசித்தாள். உடை அணியும் விடயத்தில் எல்லாம் அதிகம் இறுக்கிப்பிடிக்காத அந்தத் தனியார் கல்லூரியில் கொஞ்சம் தாடியும், தலையில் ஒரு பக்கம் கோடு போட்ட சிகையலங்காரமுமாக இருந்தான் அவன். லோ-ஹிப்பில் கருப்பு நிற முழுக்கால் சட்டையும், கோவா வெக்கேஷனில் வாங்கியது போல் பளிச் நிறத்தில் பூ போட்ட மேல் சட்டையும், கையில் ஏதோ நியான் நிறங்களில் ரப்பர்-பேன்ட் போல் என்னவோ எல்லாம் அணிந்திருந்தவனை நிச்சயம் ரதிக்குத் திரும்பிப் பார்க்கவும் தோன்றவில்லை.
ஆனால், ‘ரக்கெட் பாய்ஸ் தான் பிடிக்கும்’ எனச் சொல்லும் பெண்களுக்கு, அவன் ஸ்டைலாக தெரியவும் தான் வாய்ப்பிருக்கிறதே. அந்தப் பெண்கள் அந்த ஸ்டைலை ரசிப்பவர்கள் என்று நினைத்துக்கொண்டாள் ரதி.
அவள், அந்த மாணவனின் பெயர் ‘ப்ரித்வி’ என உறுதிபட நினைத்துவிட்டதாலோ என்னவோ, அவனின் அடையாள அட்டையில் அவள் அன்று ‘P. RITHVIK’ என பார்த்ததை ‘PRITHVI. K’ என தான் பார்த்தோம் என்று உண்மையைத் திரித்துச் சொன்னது அவளது மூளை.
அவளும், அந்தப் பேராசிரியரிடம், “ப்ரித்வி.கே” என்று பெயரைச் சொல்ல, “‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ ப்ரித்வியா?” என்று ஆச்சர்யமாகவே கேட்டார் அவர்.
“ஆமாம்…” என்றாள் ரதியும்.
ப்ரித்வி அப்படியெல்லாம் செய்திருக்க வாய்ப்பில்லை என்று அவருக்கே தெரியும் தான். ஆனால், அவருக்கும் ப்ரித்விக்கும் முன்பே ஆகாமல் இதுதான் சாக்கென்று பிடித்துக்கொண்டார் அவர்.
சென்ற கல்வி-ஆண்டில் மாணவர்கள் விடுதி பிரச்சனைகளைத் தீர்க்கும் பொறுப்பு இவருடையதாக இருந்தது. சென்னையிலேயே இல்லம் இருந்தும், விடுதியில் தங்கிக்கொண்டு, ‘ஹாஸ்டலில் இது சரியில்லை. அது ஒழுங்கில்லை’ என்று விடுதியின் பிரதிநிதியாக இவரிடம் வந்து நிற்பான் ப்ரித்வி. இவர் பிரச்சனைகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கவும், அவன் மீண்டும் மீண்டும் வந்து கேட்கவுமாகவே ஓடியது கடந்த ஆண்டு. அதில் சில பல முறைகள் இருவருக்குள்ளும் வாக்குவாதங்களும் வந்திருக்க, அந்தப் பேராசிரியருக்கு என்னவோ ப்ரித்வி தன்னை மதிக்காதது போல் ஒரு எண்ணம்.
மொத்தத்திற்கும் சேர்த்து, ரதியிடம், ‘ப்ரித்வி என்ற ‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ துறையைச் சேர்ந்த இரண்டாமாண்டு மாணவன்’ தான் அவளை ரேக் செய்தது என எழுதி வாங்கினார் அவர்.
தன்னிடம் வம்பு வளர்த்தவன் மீது புகார் கொடுத்த மகிழ்வில் சுத்தியவள் செவிக்கு அடுத்த நாளே அவள் வகுப்பு மாணவிகள் மூலமே தகவல் வந்து சேர்ந்தது. அவர்கள் துறை சீனியர் ப்ரித்விக்கு ஏதோ ஜூனியர் பெண்ணை ரேக் செய்ததற்காக ஒரு மாதம் இடைநீக்கம் என்று.
“ஐயோ… ஒரு மாசம் ப்ரித்வி காலேஜ் வரலன்னா நான் என்ன பண்ணுவேன்!” என்று ஒருத்தியும், “அது யாருடி ப்ரித்வி ரேகிங் பண்ணான்னு போய் கம்ப்ளைன் பண்ணது..?” என்று மற்றொருத்தியும், “அதான… ரேகிங் பண்றது ப்ரித்வியா இருந்தா எனக்கெல்லாம் ஜாலியா தான் இருந்திருக்கும்” என்று ஒருத்தியுமாகப் பேசிக்கொண்டிருக்க, ரதிக்கு ‘ஹையோ’ என்றிருந்தது.
‘இவளுங்களுக்கு என்ன தான் டேஸ்ட்டோ’ என்று தான் அந்தப் பெண்களின் ரசிப்புத் திறனை ரதி குறைத்தே எடைப்போட்டாள் உண்மையில் அவள் ப்ரித்வியைக் காணும் வரை.
ரதி கைப்பட புகார் கடிதம் எழுதிக்கொடுக்கவும், அதை வைத்தே, அந்தக் கல்லூரியின் ரேகிங் ஒழிப்புக் குழுமத்தின் மற்ற உறுப்பினர்களிடம் ப்ரித்விக்குக் கொடுக்கவேண்டிய தண்டனை குறித்துப் பேசினார். மற்ற பேராசிரியர்களுக்கு ‘ப்ரித்வியா?’ என்று தான் இருந்தது. சிலர் ‘ப்ரித்வி அப்படி இல்லையே’ என்றும் தொடங்க, அவர்களை வாயே திறக்க விடாமல் பேசினார் ரதி புகார் கொடுத்த பேராசிரியர்.
‘ஒருவருக்கேணும் தண்டனை கொடுத்தால் தான், மற்றவர்களுக்குப் பயம் வரும். புதிதாக வந்தவர்களுக்கு ரேகிங் பிரச்சனை இருக்காது’ என்று அடித்துப்பேசி, ப்ரித்விக்கு ஒரு மாதக்காலம் இடைநீக்கம் வாங்கிக்கொடுத்தார்.
ப்ரித்விக்கு இடைநீக்கம் குறித்த கடிதம் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது. அதைத் திறந்துப் பார்த்தவனுக்குத் தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை.
ஜூனியர்கள் வந்து ஐந்து நாட்கள் தான் ஆகியிருந்தது. இந்த ஐந்து நாட்களிலும் இவன் வேறு வேலைகளில் இருக்க, இவன் ஜூனியர்களிடம் அதிகமாக பேசவும் கூட இல்லையே. அப்படி இருக்க, அது எப்படித் தன் மீது ரேகிங் புகார் என்று குழம்பிப்போனான்.
‘ஏதோ குழப்பம் நடந்திருக்கிறது’ என்று இவன் தரப்பைச் சொல்லப் போக, அந்தக் குழுமத்தின் உறுப்பினர்கள் யாரும் அதைக் கேட்கத் தயாராக இல்லை. அதற்கு அந்தக் குழுமத்தின் தலைவருக்கும் தனக்கும் ஆகாதது தான் காரணம் என்று புரிந்தது.
புகார் கொடுத்தவர்களைப் பற்றிய தகவல்களைக் கேட்க, அந்தத் தகவல்களை எல்லாம் வெளியிட முடியாது என்று சொல்லிவிட்டனர்.
இரண்டு நாட்கள் அமைதியாக வீட்டில் கழித்தான்.
கல்லூரியில் அனுமதி இல்லை என்றாலும், ‘வகுப்புக்குப் போகவில்லை. ஆசிரியர்களைப் பார்க்கத் தான் போகிறேன்’ என்று அதற்கு ஏதேதோ காரணம் சொல்லிவிட்டு, இவனுக்கு நெருக்கமான, சில பேராசிரியர்களிடம் சென்று நின்றான்.
‘இது என்ன பிரச்சனைன்னே தெரியல. நான் எதுவும் செய்யல. இதுல ஏதோ குழப்பம் இருக்கும்ன்னு தோணுது. யார் கம்ப்ளைன் கொடுத்ததுன்னு தெரிஞ்சா அவங்க கிட்ட விசாரிச்சிக்க வசதியா இருக்கும்’ என்று பேராசிரியர்கள் சிலரிடம் நிதானமாக தன் நிலையை எடுத்துரைத்தான்.
இவனைத் தெரிந்தவர்கள் தானே அவர்கள். இதை நிச்சயம் ப்ரித்வி செய்திருக்க வாய்ப்பே இல்லை என்று அவர்களுக்கும் தெரியும் தானே. அதோடு ப்ரித்வி அவர்களுக்குப் பிரியமான மாணவனாயிற்றே. படிப்பில் படுச்சுட்டி. அதோடு, முதல் ஆண்டிலேயே, Coding’ல் கலக்கி, மற்ற கல்லூரிகளில் நடக்கும் Coding போட்டிகளில் பரிசு வாங்கி இவர்களுக்குப் பெருமைச் சேர்ப்பவனுமாயிற்றே. கல்லூரி விழாக்கள், அல்லது இவர்கள் துறைச் சார்ந்த விழாக்கள் என்றால் அதிலும் பங்குவகிக்கும் பொறுப்பான மாணவன்.
அவனுக்காக, அவர்களால் முடிந்ததை அவர்களும் செய்யத்தான் செய்தார்கள். ரேகிங் ஒழிப்புக் குழுமத்தில் உறுப்பினர்களாக இருக்கும் பேராசிரியர்களிடம் பேச்சுக் கொடுத்து, ‘என்ன புகார், யார் கொடுத்தது’ என்ற தகவல்களைச் சேகரித்து, அதை ப்ரித்வியிடம் சொன்னார்கள்.
“நம்ப டிபார்ட்மென்ட் தான். பேரு ரதி. காலேஜ் முதல் நாள் அந்தப் பொண்ணு கிட்ட நம்பர் கேட்டு பிரச்சனை பண்ணியிருக்காங்க. அவ கொடுக்கலன்னதும், அவங்களாவே அவ நம்பர் கண்டுபிடிச்சு, ஃபோன் பண்ணி ஏதேதோ தப்பா பேசியிருக்காங்க. ஃபோன் எடுக்காம விட்டா, கெட்ட வார்த்தைல மெசேஜ் வேற. இதெல்லாம் தாங்காம தான் பொண்ணு கம்ப்ளைன் கொடுத்திருக்கு” என்று ப்ரித்விக்குத் தகவல் சொன்னார்கள்.
“பொண்ணு யாருன்னு தெரிஞ்சதும் என்கிட்ட சொல்லணும். நானே பேசிக்கறேன். ஆர்வக்கோளாறுல நீங்களே போய் அந்தப் பொண்ணைக் கேக்கறேன்னு எதுவும் பண்ணி வைக்காதீங்கடா” என்று நண்பர்களை எச்சரித்தும் இருந்தான்.
இரண்டொரு நாளில், அவனுடைய நண்பர்கள் ‘இதான் அந்தப் பொண்ணு’ என்று வகுப்புகள் முடிந்து விடுதி நோக்கித் தனியே நடந்துக்கொண்டிருந்த ரதியை அடையாளம் காண்பித்தனர்.
அவள் பின்னால் மெதுவாக நடந்தான் ப்ரித்வி. இவனோடு வந்த நண்பர்களை, “டேய். இப்போ எதுக்குடா கூட்டமா வரீங்க. திரும்ப ஏதாவது ரேகிங் கேஸ்ல மாட்டவா? இங்கயே நில்லுங்கடா” என்று அவர்களை நிறுத்திவிட்டு, இவன் மட்டுமாக, அவளருகில் சென்றான்.
“ரதி” என்று இவன் அழைக்கவும் திரும்பிப் பார்த்தாள். இவளிடம் என்னவெனத் தொடங்குவது எனத் தெரியாமல் இவன் ஒரு நொடி யோசிக்க, இவள் அவனையும், அவன் பின்னால் கூட்டமாய் நின்றுக்கொண்டு இவர்களையே பார்த்துக்கொண்டிருக்கும் அவனுடைய நண்பர்கள் கூட்டத்தையும் பார்வையால் அளந்தாள்.
நிச்சயம் சீனியர்கள் தான். அப்போதே எதுவும் பேசிவிடாமல் சென்றுவிடவேண்டும் என்று தான் மனதில் நினைத்துக்கொண்டாள்.
கல்லூரி தொடங்கி, ஒரு வாரம் தான் ஆன நிலையில் அதற்குள் வேறு எதையும் பேசி, எதையாவது இழுத்துப்போட்டுக்கொள்ள கூடாது என்ற எண்ணம் மட்டுமே அவளுக்கு மேலோங்கி இருந்தது.
ப்ரித்வியோ, “அந்த ரேகிங் கம்ப்ளைன் பத்தி பேசணும்” என்று தொடங்கியது தான் தாமதம். “எனக்குப் பேச வேண்டாம்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்தாள் ரதி.
மாணவர்கள் நிறைந்த சாலையில், ப்ரித்வி அவள் பின்னோடு ஓடினால் நிச்சயம் நன்றாக இராதே. நின்ற இடத்திலேயே ஒரு நிமிடம் நின்று, ஓட்டமும் நடையுமாக அவள் செல்வதைப் பார்த்தான்.
அவள் பயமும், பதட்டமும் புரிந்தது. அவள் மேல் கோபம் கொள்ளவும் முடியவில்லை தான். ஆனால், அவளிடம் பேசியும் ஆகவேண்டுமே. ஏற்கனவே, மூன்று நாட்கள் வகுப்புகள் சென்றிருந்தன. அதுவும், இடைநீக்கம் எல்லாம் இவன் இத்தனை காலம் வளர்த்து வந்த நற்சான்றிதழில் விழும் கரும்புள்ளி ஆயிற்றே. நிச்சயம் அவளிடம் பேசி தானே ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு நண்பர்களிடம் சென்றான்.
“என்ன திமிரு. சீனியர்ன்னு கூட மரியாதை இல்லாம, பேசாம போகுது அந்தப் பொண்ணு” என்று நண்பர்கள் சீற, “விடுடா… பாவம் ஏற்கனவே ரேகிங் அது இதுன்னு பயந்து இருப்பாங்க” என்று அவளுக்காகப் பரிந்து பேசினான்.
“சரி. நேர்ல பேச தான் பயப்படுறா. ஃபோன் பண்ணி விஷயத்தைச் சொல்லு. அவ நம்பரும் கண்டுபிடிச்சிட்டோம்” என்று அவனுக்கு ரதியின் எண்ணை அனுப்பினார்கள்.
ரதியின் எண்ணைச் சேமித்துக்கொண்டான். ஆனால், இப்போதைக்கு அவளுக்கு அழைத்து பேசும் எண்ணமில்லை. ரேகிங் செய்தவர்களே அலைபேசியில் அழைத்து தானே தொல்லை கொடுத்திருக்கிறார்கள். மீண்டும் புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் பதறுவாளோ என்று யோசித்தான்.
‘ரேகிங் கம்ப்ளைன்’ என்று சொன்னதுமே அவள் படபடத்ததில் அவள் அதனால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று புரிந்தது.
அவனுக்கு அவளிடம் உடனேயே பேசி, அந்தப் புகாரைத் திரும்பப் பெற்றுக்கொள்ள சொல்ல வேண்டும் தான். ஆனாலும் நண்பர்களிடம், “ரெண்டு நாள் கழிச்சு அந்தப் பொண்ணு கிட்ட நேர்லயே பேசுவோம். ஃபோன் எல்லாம் வேணாம்” என்றான் ப்ரித்வி.
“ஏன் மச்சான்?” என்று கேட்ட நண்பர்களிடம், “டேய். நம்பளும் அந்தப் பொண்ணுக்குத் தெரியாம தான அவ நம்பர் எடுத்திருக்கோம். இப்ப நான் ஃபோன் பண்ணிப் பேசுனா, என்னையும் அந்த ரேகிங் பண்ணவங்க மாதிரி நினைச்சிட்டான்னா! என் மேல நல்ல ஒப்பீனியன் இருக்காதில்ல அந்தப் பொண்ணுக்கு” என ப்ரித்வி சொல்ல, அவர்களுக்காகவே சிரித்துக்கொண்டனர் அவனின் நண்பர்கள்.
“நீ எப்போ மச்சான் ஒரு பொண்ணுக்கு உன்னைப் பத்தி என்ன ஒப்பீனியன் இருக்குன்னு எல்லாம் கவலைப் படத் தொடங்குன?” என ஒருவனும், “ஃபோன் பண்ணப் போறதில்லன்னா… அப்புறம் எதுக்கு டா அந்தப் பொண்ணு நம்பர் சேவ் பண்ணி வச்ச?” என்று நண்பர்கள் கேலி செய்ய, “டேய்… சும்மா இருங்கடா…” என்றவன், அவர்கள் கேலி தாங்காமல் வீட்டிற்குக் கிளம்பினான்.
செல்லும் வழியெல்லாம், ரதியின் படபடத்த விழிகளே அவன் நினைவை ஆக்கிரமித்திருந்தது.
‘ச்ச… ப்ரித்வி… இளகுன மனசு டா உனக்கு…’ எனத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். ‘அந்தப் பொண்ணு பார்க்கவே அமைதியா இருந்துச்சே. அந்தப் பொண்ணுக்கு எவன் டா தொல்லை கொடுத்தது…!’ என்றிருந்தது அவனுக்கு.
இரண்டு நாட்கள் கழித்து அவளிடம் நிதானமாகப் பேசுவோம் என்று நினைத்தான் ப்ரித்வி.
ஆனால், அடுத்த நாள் மாலையே ரதியின் எண்ணில் இருந்தே அவனுக்கு அழைப்பு வந்தது.