ப்ரித்வி பேச வரவும், ரேகிங் செய்தவர்களின் நண்பனாக இருக்கும் என்று தான் நினைத்தாள் ரதி.
அதனாலேயே அவனிடம் பேசாமல் தவிர்த்தவள், அடுத்த நாள் கல்லூரியில் ரித்விக்கைக் காணும் வரை அந்நிகழ்வை மறந்தும் போனாள்.
அன்று, அட்டவணைப்படி உணவு வேளைக்கு முன் நடக்கவேண்டிய வகுப்பு, அந்தப் பேராசிரியர் ஏதோ முக்கிய வேலையாக இருக்கவும், ரத்துசெய்யப்பட்டது.
அதனால், அந்த ஒரு மணி நேரம், வகுப்புத் தோழிகளுடன் அவளது துறையைச் சுற்றி வந்தாள் ரதி.
இரண்டாமாண்டு மாணவர்களின் வகுப்பைக் கடக்கவும், ஜன்னல் வழியே ரித்விக் தெரிய, அவள் கால்கள் நகர மறுத்து தானாகவே நின்றுக்கொண்டது.
‘இவனைப் பற்றித் தானே புகார் கொடுத்தோம். இவனுக்குத் தானே சஸ்பென்ஷன் கொடுத்ததாகக் கேள்விப்பட்டோம். ஆனால், இவனோ வகுப்பில் அமர்ந்துள்ளானே!’ என்று இவள் தன் பாட்டிற்கு யோசித்துக்கொண்டிருக்க, “என்ன ரதி? சீனியர் க்ளாஸைப் பார்த்ததும் நின்னுட்ட…” என்ற தோழிகளின் கேலியெல்லாம் செவியில் விழவே இல்லை.
“நீங்க… ப்ரித்வி ப்ரித்வின்னு சொல்லுவீங்களே. அந்த மஞ்ச கலர் பூ போட்ட சட்டை போட்டிருக்கானே அவனா ப்ரித்வி?” என்று ரதி தோழிகளிடம் கேட்க, “ச்ச… ப்ரித்வி எப்டி இருப்பாங்க தெரியுமா?” என்று அவனை வர்ணிக்கத்தொடங்கினர் பெண்கள்.
அவர்கள் சொல்லச் சொல்ல, ரதிக்கு ஏனோ, நேற்று ஒரு நிமிடத்திற்கும் குறைவாகப் பார்த்த அந்த ஆடவனின் உருவம் அகக்கண்ணில் வந்துப்போனது.
“ப்ரித்வி ஃபோட்டோ வச்சிருக்கீங்களா?” என்று கேட்க, அவனுடைய இன்ஸ்டாக்ராம் கணக்கைக் காண்பித்தனர் ரதியிடம்.
அவனே தான்.
அவன் தானே நேற்று அவளிடம் பேச வந்தவன். அவன் தான் ப்ரித்வி என்றால், இவள் தவறான நபர் மீது புகார் கொடுத்திருக்கிறாளே. இதே ப்ரித்விக்கு தான் இடைநீக்கம் வழங்கப்பட்டதாக தோழிகள் வேறு சொன்னார்களே.
அடுத்து என்ன செய்வது என யோசித்தாள்.
நேற்று ப்ரித்வி இவளிடம் பேச வரவும், அவனுக்குப் பின்னால் சிலர் கூட்டமாக நின்றார்களே. அதில் சிலர் முகம் ஞாபகம் இருந்தது. இதே இரண்டாமாண்டு மாணவர்கள் வகுப்பில், அவர்களில் சிலரையும் அடையாளம் கண்டு கொண்டாள்.
தோழிகள் எல்லாம் மதிய உணவிற்குச் சென்றுவிடவும், கல்லூரியில் ஏதோ வேலை இருப்பதாக அவர்களிடம் சமாளித்து, கல்லூரியிலேயே தங்கியவள் அந்த வகுப்பில் வாயிலுக்கருகில் ஒரு ஓரமாக நின்றுக்கொண்டாள்.
வகுப்பு முடிந்ததும், மற்ற மாணவர்கள் வெளியே சென்றுவிட்டனர். ஆனால், நேற்று ப்ரித்வியோடு இருந்தவர்கள் மட்டும் இன்னமும் வகுப்புக்குள்ளேயே அமர்ந்து ஏதோ அரட்டை அடிக்கவும், வகுப்புக்குள் சென்றாள் ரதி.
ரதியைக் கண்டதும் அமைதியானவர்கள், இவளையே பார்க்க, “அண்ணா….” என இழுத்தாள்.
ரதியின் மீது அவர்களுக்குக் கோபம் இருந்தது தான். இவள் கொடுத்த புகாரின் பெயரில் தானே, தவறே செய்யாத இவர்களின் நண்பனுக்குத் தண்டனை.
ஆனால், “அண்ணா…” என்று அழைத்து, எதையோ சொல்ல முடியாமல், தயங்கி, மிரண்ட பார்வை பார்க்கும் அந்தப் பெண்ணிடம் கோபமாக பேசத் தோன்றவில்லை.
“அண்ணா… ப்ரித்வி… நேத்து என்கிட்ட பேச வந்தாங்களே… அவங்க உங்க ஃப்ரெண்ட் தான…?” என்று கேட்க, “ஆமாம்” என்றனர்.
“ஒரு கொழப்பம் ஆகிடுச்சு. என்னை ரேக் பண்ணவங்க பேர் தான் ‘ப்ரித்வி’ன்னு நினைச்சிட்டு, நான் கம்ப்ளைன் கொடுத்துட்டேன். ஆனா, இப்போ என் ஃப்ரெண்ட்ஸ் சொல்லித் தான் தெரிஞ்சிது நேத்து பேச வந்தவங்க தான் ப்ரித்வின்னு.
என்னால ரொம்ப பெரிய தப்பு நடந்துச்சு. அதை சரி பண்ண நான் என்ன பண்ணணுமோ, அதை நான் கண்டிப்பா பண்ணிடறேன். அதுக்கு முன்னாடி அவங்க கிட்ட சாரி கேட்கணும். அவங்க நம்பர் கிடைக்குமா?” என்று கண்களில் மன்னிப்போடு ரதி கேட்க, ப்ரித்வியின் எண்ணை அவளிடம் கொடுத்தனர்.
இவள் முகமே தெளிவில்லாமல் இருக்கவும், “தெரியாம தானே பண்ண. விடும்மா. யாருகிட்ட கம்ப்ளைன் பண்ணியோ அவங்க கிட்ட விவரம் சொல்லி சரி பண்ணிக்கலாம். நீ முதல்ல ப்ரித்வி கிட்ட பேசு. அவன் சொல்லுவான்” என்று சமாதானம் எல்லாம் சொல்லி அனுப்பினர்.
அன்று மதிய உணவுக்கே செல்லாமல், யாரும் இல்லாத அவள் வகுப்பறைக்குச் சென்று அமர்ந்துக்கொண்டு, ப்ரித்வியின் எண்ணிற்கு அழைத்தாள்.
ப்ரித்வியின் திரையில் ரதியின் பெயர் ஒளிரவும், அழைப்பை ஏற்றவன், “சொல்லு ரதி…” என்றான் அவன்.
எடுத்ததும், அவன் ‘ரதி…’ எனவும், ‘என் நம்பர் அப்போ அவங்க கிட்ட இருக்கா?’ என்ற கேள்வி தலைக்குள் உதித்தாலும், அதை அப்போதைக்குத் தள்ளி வைத்துவிட்டு, கேட்கவேண்டிய மன்னிப்புகளை எல்லாம் கேட்டு முடித்தாள்.
“தெரியாம பண்ணிட்டேன். சாரி” என்று தொடங்கி, அவள் மன்னிப்புகளை எண்ணிக்கை இல்லாமல் கொட்ட, “ரதி. ரிலாக்ஸ்….” என்றான் அவன்.
அவள் அமைதியாகவும், “யார் கிட்ட கம்ப்ளைன் கொடுத்த?” என்று ப்ரித்வி கேட்க, “ஜீவரத்தினம் சார் கிட்ட” என்றாள் ரதி.
“அதான் விஷயம். அவருக்கும் எனக்கும் முன்னாடியே ஆகாது. அதான் நீ ஏதோ கொழப்பத்துல ‘ப்ரித்வி’ன்னு பெயர் சொல்லவும், அப்படியே எழுதிட்டார்” என்று அவன் சொன்னதற்கு பதில் சொல்லத் தெரியாமல் அமைதி காத்தாள் ரதி.
“நான் ஈவ்னிங் காலேஜ் வரேன். அப்போ சாரை பார்த்துப் பேசுவோம். அதுவரைக்கும் கொஞ்சம் இந்த கில்ட்டி மோட்ல இருந்து வெளிய வா… இப்போ லஞ்ச் டைம்ல்ல. போ போ… போய் சாப்டு போ” என்று அவன் இவளை விரட்டிய படி அழைப்பைத் துண்டிக்கவும், அவள் இதழோரம் சிறு புன்னகை.
மாலை இவளுக்கு வகுப்பு முடியும் நேரம், இவள் வகுப்பின் வாசலிலேயே காத்திருந்தான் ப்ரித்வி. இவள் வெளியே வரவும், புன்னகைத்தான்.
அவள் கால்கள் அனிச்சையாக அவனிடம் நடந்தன.
‘ஹேய்… ப்ரித்வி டி….’, ‘ப்ரித்வி என்ன நம்ப க்ளாஸ் பக்கம்…?’, ‘அதான. சஸ்பென்ஷன்னு சொன்னாங்களே…?’, ‘ரதி… ரதி என்ன டி ப்ரித்விகிட்ட பேசிட்டு இருக்கா…’, ‘ப்ரித்விக்கு எப்டி ரதியைத் தெரியும்…?’ என்று பேசியபடியே ரதியின் தோழிகள் அவர்களைத் தான் பார்த்துக்கொண்டிருந்தனர்.
இருவரும் ஒன்றாக நடந்து எங்கோ செல்லவும், “என்னடி… ப்ரித்வியும் ரதியும் ஒன்னா போறாங்க…?” என்று அங்கே ஒன்றிரண்டு இதயங்கள் உடைந்தன.
“ரதி. உன்னை ரேக் பண்ணது யாரு? யாருக்குப் பதிலா என்னைப் போட்டுக் குடுத்த?” என்று ப்ரித்வி கேட்கவும், அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல், “நான் வேணும்ன்னு அப்படிப் பண்ணல…” என மீண்டும் சாரி மழைப் பொழியத் தொடங்கினாள்.
“அட… சாரி எல்லாம் போதும். யாருன்னு சொல்லு” என்று அவன் மீண்டும் கேட்கவும், ரித்விக்கைப் பற்றிய அடையாளங்களைச் சொன்னாள்.
“ஓஹ். ரித்விக். செய்யக் கூடிய ஆள் தான்” என்றான் ப்ரித்வி.
“அவங்களோட ஃப்ரெண்ட்ஸ்… ரித்வின்னு கூப்டாங்க… அப்புறம் நான் அன்னைக்கு காலைல இருந்து ‘ப்ரித்வி… ப்ரித்வி…’ன்னு உங்க பேரைத் தான் கேட்டதால, அந்தப் பேரே பதிஞ்சிப்போய். அவங்க பேர் ப்ரித்வியா தான் இருக்கும்ன்னு சொல்லிட்டேன்” என்று விளக்கம் கொடுத்தாள் ரதி.
“என் பேரை எங்க கேட்ட?” என்று ஆர்வமிகுதியில் கேட்க, “அது… என் க்ளாஸ் பொண்ணுங்க தான். ‘ப்ரித்வி ஸ்டைல்… அழகு… க்யூட்’ன்னு உங்க புராணமே பாடிட்டு இருந்தாங்க” என்றாள் ரதி.
“அட… நமக்கு ஜூனியர் க்ளாஸ்ல இவ்ளோ விசிறிகளா? நல்லா இருக்கே. நம்பளும் நாலு கேர்ள்- ஃப்ரெண்ட்ஸ் வச்சிட்டு சுத்தலாம் போலயே” என்று அவன் சிரிக்கவும், தனக்கே தெரியாமல் ரதி முறைக்கவும், எதற்கென்றே தெரியாவிட்டாலும், “சும்மா சொன்னேன்…” என்றான் அவன்.
இருவருமாக, சென்று பேராசிரியர் ஜீவரத்தினத்திடம் பேசவும், அவர் புகார் கொடுத்தது கொடுத்தது தான். அதைத் திருப்பிப் பெறவெல்லாம் முடியாது என்றார்.
ப்ரித்வி ஏதோ பேசவும், அவன் தான் அந்தப் பெண்ணை மிரட்டிப் புகாரைத் திரும்ப வாங்கச் சொல்வதாக அவன் மேல் மீண்டும் பழி சுமத்தினார். அவரிடம் பேசிப் பயனில்லை என்று உணர்ந்துக்கொண்டவன், ரதியை அழைத்துக்கொண்டு, வெளியே வந்துவிட்டான்.
துறைத் தலைவர் தொடங்கி, கல்லூரியின் தலைமை இயக்குநர் வரை பலரிடம் பேசிப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்தான் ப்ரித்வி.
அவன் மீதான புகார் திரும்பப்பெறப்பட்டு, உண்மையில் தவறிழைத்த ரித்விக்கிற்கு இடைநீக்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
மாலை நான்கு மணியிலிருந்து, நான்கு மணி நேரம் இருவரும் அலைந்திருந்தனர்.
அந்தச் சோர்வு இருந்தும், ‘எல்லாம் சரியானதே…’ என்ற திருப்தி இருவரிடமும்.
“அதான் சஸ்பென்ஷன் கேன்சல் பண்ணிட்டாங்கல்ல… ஸோ… நானும் ஹாஸ்டல் தான் போவேன். கேன்டீன்ல சாப்ட்டு தான் போவேன். நீயும் சாப்ட வாயேன்” என்றான்.
அவளுக்கும் பசித்தது. மதிய உணவுக்குப் பிறகு, மாலையில் ஒரு காஃபி கூட குடிக்கவில்லையே. விடுதி வரை நடந்துச்செல்ல நிச்சயமாக தெம்பில்லை.
“வரேன். ரொம்ப பசிக்குது” என்று அவள் சொல்ல, “தெரியும். எச்.ஓ.டி ரூம்ல அவர் டேபிள் மேல இருந்த சமோசாவ வச்ச கண்ணு வாங்காம பார்த்தியே… அப்போவே தெரியும்” என்று அவன் சொல்ல, சிரித்துக்கொண்டாள்.
கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இருந்த உணவகத்தில் இருவருமாக அமர்ந்தனர்.
ப்ரித்வி ஒரு தோசையும், ரதி ஒரு வெங்காய ஊத்தப்பமும் சொல்லியிருந்தனர்.
சில நொடிகள் அமைதியில் கழிய, பேச்சை ‘சாரி’யுடன் தொடங்கினாள் ரதி.
“இன்னும் உன் ‘சாரி’ ஸ்டாக் முடியலயா?” என்று சிரித்துக்கொண்டே கேட்க, அவன் சிரிப்பு அவளையுமே ஒட்டிக்கொண்டது.
‘புன்னகை தொற்றுவியாதியோ’ என்று முதல் முறையாக அன்று தான் யோசித்தாள் ரதி.
“நான் விசாரிக்காம இப்டி உடனே தண்டனை குடுப்பாங்கன்னு நினைக்கல…” என்று ரதி சொல்லவும், “ஆமா… இந்த காலேஜ்ல ரெண்டு வருஷம் முன்னாடி வரை ரேகிங் பிரச்சனை ரொம்ப அதிகம். அப்போ கொண்டு வந்தது தான் இந்த ரேகிங் ஒழிப்பு கமிட்டி எல்லாம். கம்ப்ளைன் போச்சுன்னாலே பிரச்சனைன்னு நிலைமை வரவும் தான் ரேகிங் கொஞ்சம் குறைஞ்சுது. ஆனாலும், இப்போவும் ஹார்ம்லெஸ் ரேகிங். அப்பப்போ இப்டி ஹார்ம்ஃபுல் ரேகிங் எல்லாம் நடக்குது தான்.
ஒரு டைம் இப்டி தப்பு நடந்து, டைரக்டர் வரைக்கும் போய்ட்டோம்ல்ல. இனி கவனமா இருப்பாங்க.
அதுவுமில்லாம… மேடம் பேர் தெரியலன்னு சொன்னாவாச்சும், விசாரிச்சிருப்பாங்க. நீங்க தான் போய் ‘ப்ரித்வி தான்’ன்னு தெளிவா சொல்லியிருக்கீங்களே…” என்றான் ப்ரித்வி.
ரதி விட்ட இடத்தில் இருந்தே மீண்டும் மன்னிப்புக் கேட்கத் தொடங்குவாள் எனத் தெரிந்தவன், அவள் வாய் திறக்கும் முன் முந்திக்கொண்டான்.
“செஞ்ச தப்புக்குப் பிராயச்சித்தமா….” என்று ப்ரித்வி தொடங்க, “என்ன?” என்று பார்த்தாள் ரதி.
“இன்னைக்கு பில் நீயே கட்டு” என்று அவன் சொல்ல, சிரித்துக்கொண்டே ‘சரி’ என்றாள் அவளும்.
அதன் பின் இருவருக்குமான பேச்சுகள், படிப்பு தொடர்பானதே.
“பிடிச்சு கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்தியா? இல்ல எது எடுக்கறதுன்னு தெரியாம ஏதோ ஒன்னு எடுப்போம்ன்னு எடுத்தியா?” என்று ப்ரித்வி கேட்க, “பிடிச்சு தான் எடுத்தேன். ஸ்கூல்லையே கம்ப்யூட்டர் க்ரூப் தான்” என்றாள் ரதி.
“ஓஹ். ஸ்கூல் சிலபஸ்லயே C++ படிச்சிருப்பியே” என்று கேட்க, ஆமாமென்று தலையசைத்தாள் ரதி.
“இங்க முதல் செம்ல C மட்டும் தான் நடத்துவாங்க. அதெல்லாம் உனக்குப் படிக்க ஒரு செம் தேவையே இல்ல. நீயா கொஞ்சம் செல்ஃப்-ஸ்டடி பண்ணு. DSA நல்லா கத்துக்கோ” என்று தொடங்கியவன், ஏதேதோ வலைத்தளங்கள் பெயரை எல்லாம் சொல்லி, அதிலெல்லாம் ‘கோடிங்’ செய்து பழகச் சொன்னான்.
ஏதோ லீட்கோட், கோட்-செஃப், ஹேக்கர்-ரேங்க் என்றெல்லாம் சொன்னான். அவன் சொல்வது புரியாவிட்டாலும், தலையை ஆட்டிவைத்தாள் ரதி.
அவள் முகம் போன போக்கிலேயே அவள் விழிப்பது தெரிந்து, பேச்சின் திசையை மாற்றினான்.
“ஹாஸ்டல்ல தான இருக்க. வீடு எங்க?” என்று கேட்க, “கடலூர்” என்றாள்.
“எங்க பூர்வீகம் கூட அங்க தான்…” என்றவன், “அப்போ. நம்ப ஊர் பொண்ணா நீ…” என்று கேட்கவும், அதற்கும் அவளிடமிருந்து புன்னகை தான்.
அதற்குள் தோசை வேறு வந்துவிட, இருவரின் கவனமும் உணவு பக்கம் திரும்பியது.
இருவரும் அமைதியாக உணவருந்திய நேரம், அழைக்காமலேயே ஆஜரானது ப்ரித்வியின் நண்பர் கூட்டம்.
“டேய். வாங்கடா. உக்காருங்க” என்று ப்ரித்வி அழைக்க, ரதியும் அவர்களைப் பார்த்து சினேக புன்னகை வீசினாள்.
“வேணாம் வேணாம். ஜோடியா உக்காந்திருக்கீங்க. நாங்க டிஸ்டர்ப் செஞ்சா தங்கச்சி திட்ட போகுது” என்று சொல்ல, “டேய் சும்மா இருங்கடா…” என்று அடிக்குரலில் நண்பர்களிடம் சீண்டினான்.
நண்பர்களுக்குள் இந்தப் பேச்செல்லாம் சகஜம் தான். ஆனால், ரதி எப்படி எடுத்துக்கொள்வாளோ என்ற யோசனையில், அவள் முகம் பார்க்க, அவளும் அதை சகஜமான பேச்சாகத் தான் எடுத்துக்கொண்டாள் என்று புரிந்தது.
இருந்தும், “நீ எதுவும் தப்பா எடுத்துக்காத” என்று சொல்லி வைக்க, “என் ஃப்ரெண்ட்ஸ் நம்பள இங்க பார்த்தாலும் இப்டி கலாய்க்க தான் செய்வாங்க” என்றாள் ரதி.
“அவங்களுக்கு என்ன தெரியும். இங்க பாதி நேரம் பாவ-மன்னிப்பு செஷனும். மீதி நேரம் கம்ப்யூட்டர் சயின்ஸ் க்ளாஸும் நடந்துச்சுன்னு” என்றான் ப்ரித்வி.
இவர்கள் பேசும் அனைத்தும் கேட்கும் விதமாக பக்கத்து மேசையில் அமர்ந்திருந்த ப்ரித்வியின் நண்பர்கள், “விடு மச்சான். வாட்ஸ்ஆப்ல கெமிஸ்ட்ரி க்ளாஸ் எடுத்துக்கோ. அதான் நம்பர் இருக்குள்ள…” என்று கலாய்க்க, “சும்மா இருங்களேன்டா…” என்றான் ப்ரித்வி கெஞ்சும் குரலில்.
“ரதி. உனக்கு ஹாஸ்டல்க்கு டைம் ஆகுது பாரு. சீக்கிரம் சாப்டு…” என்று நண்பர்கள் வாயை அடைக்க முடியாமல் ரதியை விரட்டினான்.
அவள் உண்டு முடிக்கவும், இருவருமாக எழுந்து பணம் செலுத்தும் இடத்திற்கு சென்றனர்.
அவன் கேட்டது போலவே, கட்டணத்தை ரதி செலுத்தினாள்.
“சரி. நீ கிளம்பு. பார்ப்போம். அப்புறம் ஏதாவது ஹெல்ப் வேணும்ன்னா கேளு. என் நம்பர் சேவ் பண்ணிட்ட தான?” என்று ப்ரித்வி கேட்க, தலையசைத்தவள், “நான் மதியம் கால் பண்ணப்போ, எப்டி நான் தான் கால் பண்றேன்னு தெரிஞ்சுது? எடுத்ததும் ‘சொல்லு ரதி’ன்னு கேட்டீங்க?” என்று தீடீரென நினைவு வந்தவளாக கேட்டாள்.
“அதுவா… பசங்க உன் நம்பர் கண்டுபிடிச்சு சொன்னாங்க. நீ நேர்ல பேசாம போய்ட்டல்ல. அதான் உனக்கு ஃபோன் பண்ணி விஷயத்தைப் புரிய வைக்கச் சொன்னாங்க” என்று அவன் சொல்ல, “அப்போ ஏன் ஃபோன் பண்ணல…?” என்றாள் கேள்வியாக.
“‘கம்ப்ளைன் பண்ணிட்டோம். இனி பிரச்சனை இல்ல’ன்னு ஒரு நிம்மதில இருப்ப.
இப்ப ஒரு புது நம்பர்ல இருந்து கால் பண்ணி. ‘நான் ப்ரித்வி பேசறேன்’ன்னு சொன்னா, கண்டிப்பா கால் கட் பண்ணிடுவ.
‘திரும்ப கால்ஸ் வருதே’ன்னு பயப்பட வேற செய்வியே…
அதான் ரெண்டு நாளைக்கு அப்புறம் நேர்லயே திரும்ப பேசலாம்ன்னு விட்டுட்டேன்” என்று அவன் சொன்னதில் தனக்காக யோசித்தவன் மீதான மதிப்பு கொஞ்சமாய் கூடியது ரதிக்கு.
“சரி. கிளம்பு... டைம் ஆச்சு…” என்றவன் அவசர அவசரமாக உணவகத்திலிருந்து, ஒரு பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் வாங்கி அவள் கையில் திணித்தான்.
“சாப்ட்டுட்டே போ…” என்று டாடா காட்டியவனிடம், “இதுக்கு காசு…!.” என்றாள் ஐஸ்க்ரீமை வாங்கிக்கொண்டு.
“அட… போம்மா…” என்று அழகாய் சலித்துக்கொண்டவனைப் பார்த்து, அளவாய் புன்னகைத்துவிட்டு விடுதியை நோக்கி நடந்தாள்.