1.2. மைவிழியாள்
வானவில்லின் விளிம்பில் கால்டன் சந்தித்த அந்தக் கலங்கிய விழிகள், காந்தமாய் அவரை இழுத்தன. அதுவரை அனுபவித்திராத உணர்ச்சிவயப்பட்டார் அவர்.
அந்த விழிகள் பெரிதாக, நீள புருவக் குடைகளின் கீழ் இருந்தன. ஆனாலும் நீர் சிந்திக்கொண்டிருந்தன. அவள் மருத்துவர் உடையில் இருந்ததைக் கால்டன் கவனித்தார்.
ஆலிவ் பச்சை நிறப் பேண்ட்டும் கறுப்பில் ஆலிவ் நிற இலைகள் வரையப்பட்ட முழங்கால் நீள குர்த்தாவும் மருத்துவர் கோட்டும் அணிந்திருந்தாள் அந்த மைவிழியாள்.
இடைக்கு கீழே தொங்கிக்கொண்டிருந்தது பின்னலிடப்பட்ட அவளின் கார் கூந்தல். கோதுமைமாவு வண்ணத்தில் இருந்தாள். கால்களில் கேஷுவல் ஷூ, புருவ மத்தியில் குட்டிப் பொட்டு, அரிதாரமற்ற முகம், சாயமற்ற உதடுகள் என்று ஒரு சராசரி இந்திய பெண்ணுக்கான அனைத்து அடையாளங்களுடன் நின்றிருந்தாள். அவளின் முகம் ஏதோ பெரிய சோகத்தில் அவள் இருப்பதை உணர்த்தியது. அதிலும் அத்தனை அழகாக இருந்தாள். வெறும் 2 நிமிடங்களில் இவை அனைத்தையும் அலசிவிட்டார் கால்டன்.
கால்டனைப் போல் அந்த பெண்ணின் கண்கள் அவரைச் சந்திக்கவே இல்லை. வானவில்லை மட்டும் தொடக்கம் முதல் முடிவு வரை பார்த்துவிட்டு, கண்ணீர் சிந்தினவே தவிர, தன்னை ஒருவர் அணு அணுவாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார் என்பதைக் கூட அவள் உணர்ந்தாளில்லை.
மனப்போராட்டத்தில் இருந்த அவள், வழிந்த கண்ணீரை அழகிய விரலால் துடைத்துவிட்டு, சாலையைக் கடந்து அப்புறம் சென்று, ஒரு பெரிய கட்டிடம் நோக்கி நடக்கலானாள்.
அவள் அணுகிய கட்டிடம் கென்டக்கியில் உள்ள உலகப் புகழ்பெற்ற மருத்துவ ஆராய்ச்சி பல்கலைக்கழகம்.
அவள் மறையும் வரை கால்டன் அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.
கால்டன் ஒரு இளமையான, அழகான, வெற்றிகரமான, பணக்கார, பெரிய குடும்பத்தின் வாரிசு; தொழிலதிபர். அவரை அடைய வேண்டும் என்கிற இச்சை கொண்ட அழகிய அமெரிக்க இளம் பெண்கள் ஏராளம். ஆனால் தன்னை அணுகிய பெண்களை அவர் அலட்சியம் செய்துவந்திருக்கிறாரே தவிர எந்தப் பெண்ணும் இப்படி அவரைக் கவர்ந்ததில்லை.
அவள் பார்வையிலிருந்து மறைந்த பின்னர் சுயநினைவுக்கு வந்த கால்டன், இதயம் படபடவென அடித்துக்கொண்டிருப்பதை அப்போது தான் கவனித்தார். மிகவும் வித்தியாசமாக இருந்தது அவருக்கு. ஆயினும், தான் ஒரு பெண்ணால் கவரப்பட்டதை ஒப்புக்கொள்ள ஈகோ தடுக்கவே, ஒன்றுமே தனக்குள் நடக்காதது போல் நம்பிக்கொண்டு வந்த வேலையைக் கவனிக்க காட்சியகத்திற்குள் சென்றார்.
“வெல்கம் கால்டன். நீங்க வந்திருக்கறது பத்தி ரொம்ப சந்தோஷம்”
கை குலுக்கிப் புன்னகை உதிர்த்தார் கால்டன்.
காட்சியக மேலாளர் ஒவ்வொரு வகை கண்ணாடி பற்றியும் விளக்கலானார்.
ஒரு சுவற்றில் முழுவதும் பலவகை பிரதிபலிக்கும் கண்ணாடிகள் மாட்டியிருந்தார்கள். மாயாஜாலம் போல் ஒரு கணம் அந்தக் கண்ணாடிகள் அனைத்திலும் கால்டனுக்கு அந்த இந்திய மைவிழியாளே தெரிந்தாள்.
தன் கண்களையே ஒருகணம் நம்ப முடியாமல் போனது கால்டனுக்கு. கவனம் சிதறிப்போனது. காதுகளில் காட்சியக மேலாளரின் குரல் கேட்கவில்லை, மூளை வேலை செய்யவில்லை என்பது போல் உணர்ந்தார்.
அனைத்தையும் கட்டுபாட்டில் வைப்பதில் ஈடுபாடுடைய கால்டன் தன்னையே கட்டுப்படுத்த முடியாமல் போவதை எண்ணி வியந்தார். கோபம் வந்தது.
உடனடியாக விடைபெற்றுக் காரைக் கிளப்பி வீடு நோக்கிப் புறப்பட்டார். காரில் சென்றுகொண்டிருந்த போது, “வழக்கமா நாம பார்த்துவந்த பெண்களைப் போல இல்லாம இவள் வித்தியாசமான தோற்றத்தில் இருந்ததனால கொஞ்சம் பார்வையை நிலைக்கவிட்டோம், அவ்வளவுதானே! இந்தியாவில கூட ஒரு அமெரிக்கரை வித்தியாசமாத்தான் பார்ப்பாங்க. இதுவும் அப்படித்தான், வேறொன்னுமில்லை” என்று தனக்குத்தானே சமாதானம் கூறிக்கொண்டார். ஆனால் அது அவரின் ஈகோவிற்கு இடும் தீனி தான் என்பதே உண்மை என்று மறுபக்கத்தில் அவருக்குத் தெரிந்தே இருந்தது
இரவு..
தன் வீட்டில் இரவு உணவாக சில பழங்களையும் பச்சையாக காய்கறி சாலட்டையும் உள்ளிறக்கிவிட்டு ஒரு சிறு கோப்பை விஸ்கியுடன் லேப்டாப்பினைத் திறந்தார்.
ஒரு புதிய மெயில் வந்திருக்கிறது என நோட்டிபிகேஷன் காண்பிக்கவே, அதைத் தட்டித் திறந்தார். அனுப்பியவர் கட்டத்தில் “Growing Heirs” என்று இருந்தது.
காலை காரில் சென்றபோது வந்த அழைப்பு இந்த நிறுவனத்திலிருந்து தான். ஒரு இந்தியரிடமிருந்து வந்த பொருத்தமான விண்ணப்பத்தினை அனுப்பியிருப்பதாகச் சொன்னார்களே அந்த மெயில் தான் இது என்று புரிந்துகொண்டு ஆர்வத்துடன் திறந்தார்.
மாலை வானவில்லின் விளிம்பில் சந்தித்த அதே மைவிழியாளின் புகைப்படம் இருந்தது கண்டு ஆடிப்போனார். விதியின் விளையாட்டை அறிந்தவர் யார்.?!
படிவத்தில் பெயரைப் பார்த்தார்.. கயல் என்று இருந்தது. அமெரிக்கப் பாணியில் அவள் பெயரை வாய்விட்டு ஒருமுறை சொல்லிப்பார்த்தார். ஏறக்குறைய சரியாக இருந்தது.
மீண்டும் அந்த புகைப்படத்தை முறைத்துப் பார்த்தார். அவளின் முகத்திலும் கண்களிலும் தொலைந்து போனார்.
1.3 முதல் சந்திப்பு