1.3. முதல் சந்திப்பு
“Growing Heirs” நிறுவனம் பகிர்ந்த கயலின் விண்ணப்பத்தில் கால்டன் எதிர்பார்த்த அனைத்து அம்சங்களும் பொருந்திப் போகவே உடனே சம்மதம் தெரிவித்து பதில் மெயில் அனுப்பிவிட்டுப் படுத்தார். மறுகணமே உறங்கிப்போனார்.
அடுத்த நாள் காலை அந்நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. கால்டனின் ஆர்வத்தைப் பற்றிக் கயலிடம் தெரிவித்துவிட்டதாகவும், தொடர்பு கொள்ளலாமென்றும் சொன்னார்கள்.
மறு நொடி கயலுக்கு மெயில் செய்தார் கால்டன். முகவரி அனுப்பி மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வரமுடியுமா என்று கேட்டு எழுதினார். பிறகு அலுவலகம் கிளம்பிப் போனார்.
அன்று முழுவதும் பதட்டமாகவே இருந்தார். கால்டனின் மாற்றத்தை முகர்ந்த தெரெக் பேச்சை ஆரம்பித்தார்.
“என்ன விஷயம் கால்டன்.? நேத்துலேருந்தே சரியில்லையே நீ!”
“ஒன்னுமில்லை தெரெக். ஐம் நார்மல்..”
“25 வர்ஷமா உன் கூட இருக்கேன். என்கிட்ட பொய் சொல்லி தப்பிக்க முடியுமின்னு நினைக்கிறியா?”
“(பெருமூச்சு)”
“சொல்லு சொல்லு”
“Growing Heirs லேருந்து என் கண்டிஷன்ஸ்-கு ஏத்தமாதிரி ஒரு அப்ளிகேஷன் வந்துருக்கு. ஈவ்னிங் 5 மணிக்கு வர முடியுமான்னு கேட்டு மெயில் போட்டுருக்கேன்”
“ஓ அதான் நிமிஷத்துக்கு நிமிஷம் மெயில் செக் பண்ணிட்டு இருக்கியா!?”
“எதையுமே கவனிக்கத் தவற மாட்டியா!?”
“உன் விஷயத்துல எல்லாத்தையும் கவனிப்பேன்..”
“ரேச்சல் விஷயத்தைக் கூட நல்லா கவனிக்கற மாதிரி தெரியுது”
“ஆமா.. உனக்கு தெரியுது! அவளுக்கு எங்க புரியுது.? சேரி என் கதையை விடு. 8 வருஷமா அதே இடத்துல தான் நின்னுக்கிட்டு இருக்கு. நீ சொல்லு.. இப்ப கூட நீ அவசரப்படற மாதிரி தான் எனக்கு தோணுது”
“தெரெக்.. இது விஷயமா நாம நிறையா பேசிட்டோம். மறுபடியும் ஆரம்பிக்காத ப்ளீஸ்!”
“கால்டன்.. உனக்கு நடந்தது ரொம்ப துரதிர்ஷ்டவசமானது தான். ஆனா அதுக்காக நீ எடுக்கற இந்த முடிவு தேவையான்னு எனக்கு தெரியல்ல..”
“என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல”
“முடியல்ல உன்னோட. என்னமோ பண்ணு” அலுத்துக்கொண்டு வெளியேறினார் தெரெக்.
கால்டன் கயலிடமிருந்து பதில் வருமா என மெயிலைப் பார்த்துக்கொண்டு இருந்தார். மதியம் வரை பதில் இல்லை. பதட்டம், கோபம், எதிர்பார்ப்பு, ஏக்கம் என பல உணர்ச்சிகள் உள்ளுக்குள் போராடின.. 3 மணி வரை பதில் இல்லை என்றால் கால் செய்து கேட்டுவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டார். பதட்டம் தொடர்ந்தது. உதவியாளர் கேத்தரின் கால்டனின் பதட்டத்தைக் கண்டு ஆச்சரியம் கொண்டாள். பெரிய விஷயங்களில் கூட நிதானம் தவறாத கால்டன் ஒரு மெயிலுக்கு ஏன் இத்தனை பதட்டப்படுகிறார் என்று புரியவில்லை.
ஒரு வழியாக 2.55க்கு “ஓகே” என்று கயலிடமிருந்து பதில் வந்தது. அதைப் படித்ததும் ஏன் தனக்கு இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது என்று தன்னைத்தானே பலமுறை கேட்டுக்கொண்டார் கால்டன். தயார் செய்துகொள்ளும் பொருட்டு அனைத்து அலுவல்களையும் புறந்தள்ளிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டார். காரில் சென்ற போது, கயல் அன்று அழுதுகொண்டிருந்ததனால் அவள் ஏதோ பிரச்சினையில் இருக்கலாம், அதனால் தன் முன்மொழிவை ஏற்பாள், இல்லாவிட்டாலும் எப்படியேனும் சம்மதிக்கவைத்துவிடுவது என்று முடிவு செய்துகொண்டார்.
வீட்டுக்கு வந்து சூட்டை மாற்றி வேறு உடை அணிந்து கொண்டு காபிக்கு தயார் செய்து வைத்துவிட்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் கயலுக்காகக் காத்திருந்தார்.
கால்டன் லெக்ஸிங்டனிலிருந்து அரைமணி நேர பயணத்தில் தனித்தனி வில்லாக்களால் ஆன ஒரு கேட்டட் கம்யூனிட்டியின் வீடொன்றில் தனியே வசித்து வந்தார். மீண்டும் மெயிலைத் திறந்து கயலின் அப்ளிகேஷனில் இருந்து அலைபேசி நம்பர் எடுத்து வாட்ஸப்பில் இருப்பிடத்தைப் பகிர்ந்தார். சிறிது நேரத்தில் கயலிடமிருந்து ஒரு தம்ஸ் அப் இமோஜி வந்தது. பரபரப்பாக இருந்த கால்டன் கயலிடம் அதைக் காட்டிக்கொள்ளவே கூடாது என்று பயிற்சி செய்துகொண்டார்.
சரியாக 5 மணிக்கு வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. கரைபுரண்டோடிய ஆர்வத்தோடு கதவைத் திறந்தார் கால்டன்.
வெளிர் சிமெண்ட் நிறத்தில் வெள்ளை மலர்கள் எம்பிராய்டரி செய்யப்பட்ட குர்த்தா, வெள்ளை ஜீன்ஸ், கேஷுவல் ஷூ அணிந்து நின்றிருந்தாள் கயல்.
லேசாகக் கலைந்த பின்னலிடப்பட்ட நீண்ட கூந்தல் முன்னால் கிடந்தது. அன்று பார்த்தவாறே அரிதாரமற்ற முகம், சாயம் பூசாத உதடுகள், மை பூசிய விழிகள், ஒல்லியான கச்சிதமான உடலமைப்பு. ஒரு பூங்கொத்து எடுத்து வந்திருந்தாள்.
வாசலில் வந்தவளை வாவென்று கூட அழைக்காமல் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றார், இதுவரை அப்படி நடந்துகொண்டவரல்லாத கால்டன்.
கயலும் தன் கயல் விழிகளைக் கால்டன் மீது ஓட்டினாள். கரும்பச்சை நிற பார்மல் சட்டை, கருப்பு பேண்ட், தோல் பெல்ட், கருப்பு ஷூ, நீண்ட புருவங்கள், கூரிய கண்கள், மிக லேசான தாடி, மெல்லிய மீசை, கட்டமைப்பான உடல், திருத்தமான முகம் என்று எதையும் கவனிக்கத் தவறவில்லை கயல்.
இருவருமே ஒருவரால் ஒருவர் கவரப்பட்டனர். இருவரின் மூளைக்குள்ளும் காதல் எனும் கெமிக்கல் மாயாஜாலம் நிகழ்ந்தது. ஆனால் இருவருமே அதைக் காட்டிக்கொள்ளக் கூடாது என்பதில் குறியாய் இருந்தனர்.
ஆனால் எதைக் கட்டுப்படுத்தினாலும் விதியின் விளையாட்டினைக் கட்டுப்படுத்த இயன்றவரும் உண்டோ.?!
-வித்யா குரு