சிலையாகிய இருவரின் பார்வைகளும் சந்தித்துக்கொண்ட ஒவ்வொரு முறையும் தீப்பொறி தெரித்தது. இருவருமே ஒருவருக்குள் ஒருவர் தொலைந்து போய்க்கொண்டிருந்த வேளையில், முதலில் கால்டனே சுயநிலைக்கு வந்தார்.
“ப்ளீஸ் கம் இன்” என்று அழைத்தார். உள்ளுக்குள் உருகிவிட்டதைக் காட்டிக்கொள்ள இடம்தரவில்லை அவரின் ‘சுயம்’. தன்னைத் தானே இறுக்கிக் கொண்டார்.
கயலும் மிகச்சரியாக கால்டனின் அதே நிலையில் இருந்தாள். நன்றி என்று கூறிவிட்டு கையிலிருந்த மலர் கொத்தினை நீட்டினாள்.
அதைப் பெற்றுக்கொண்ட கால்டன் உள்நோக்கிச் சைகை செய்து, அவள் உள் நுழைந்ததும் கதவைச் சாற்றினார்.
கயலிடமிருந்து வந்த வாசனையும் அவள் அளித்த மலர் கொத்திலிருந்து வந்த வாசனையும் அவர் இல்லத்தையும் உள்ளத்தையும் நிறைத்தன.
மலர்கொத்தை சோஃபாசெட் நடுவிலிருந்த சிறு மேசையில் வைத்தார். வைக்கும் போது தான் அது மிக அழகாக இருந்ததைக் கால்டன் கவனித்தார். தொழில் நிமித்தம் எத்தனையோ மலர்கொத்துகளை வாங்கியிருக்கிறார், கொடுத்திருக்கிறார். எதையும் கவனித்ததில்லை அவர். ஆனால் கயலின் மலர்கொத்து அத்தனை அழகாகத் தெரிந்தது. பிறவற்றைப்போல் அல்லாமல் அது வேறுமாதிரி இருப்பதாய்த் தோன்றியது. அது உண்மையும் கூட.
“பொக்கே ரொம்ப அழகா இருக்கு. எங்க வாங்கினிங்க?”
“வாங்கல்ல. நான் செஞ்சேன். எனக்கு வாங்கி கொடுக்கறது பிடிக்காது” அவளின் குரல் திடமாக ஆனால் இனிப்பாக இருந்தது.
“ஓ.. வெரி ஒரிஜினல்.”
“தேங்க் யூ”
“காயல். பேர் சரியா உச்சரிக்கறேனா?”
“கயல்”
“ஓ.. கயல். இப்ப சரியா?”
“சரி தான்”
“காஃபி?”
“வேண்டாம்”
“சரி அப்ப விஷயத்துக்கு வரலாமா?”
“ம்…”
“அமெளண்ட் சொன்னாங்களா.? உங்களுக்கு ஓகே வா இல்ல அதிகம் எதிர்பார்க்குறிங்களா?”
“போதும்”
“அப்ப உங்களுக்கு ஓகேன்னா ப்ரொசீஜருக்கு போயிடலாமா? நீங்க டாக்டர்-னு பாத்தேன். ஸோ, உங்களுக்கு விளக்க வேண்டியது இல்ல”
“உங்க மனைவி இல்லையா? அவங்க என்னைப் பார்க்க வேண்டாமா?”
“நான் பேச்சிலர். மனைவி எல்லாம் இல்ல.”
“!!!!! புரியல்ல..”
“எனக்கு ஒரு வாரிசு வேணும். அவ்வளவு தான். உங்களுடைய ஒரு கருமுட்டையைத் தான் பயன்படுத்திப்பேன். அதுக்கும் சேர்த்து தான் அந்தத் தொகை”
“வாடகைத்தாய்-னு மட்டும் தானே போட்டிருந்துது??!!”
“இல்ல கயல். என் ஆஃபர் வெறும் வாடகைத்தாய்க்கு மட்டும் இல்ல”
இடி விழுந்தது போல் அதிர்ந்தாள் கயல். ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. மேற்கொண்டு பேச நா எழவில்லை அந்த தமிழ்ப்பெண்ணுக்கு. கோபம் தலைக்கேறியது. ஆனால் எதுவும் பேசவில்லை. இருப்பிடம் விட்டு எழுந்தாள்.
முடியாது என்று தலையை பலமாய், தீர்க்கமாய் அசைத்துவிட்டு வாசல் நோக்கித் திரும்பி அடியெடுத்தாள்.
“அதில குறிப்பிட்டிருந்ததை விட 2 மடங்கு பணம் தர்றேன்”
கால்டன் குரல் கேட்டுத் திரும்பினாள்.
“குழந்தை இல்லாத தம்பதிகளுக்குக் குழந்தை பெத்துத் தரப் போறேன்னு நினைச்சு தான் வந்தேன். நீங்க கேக்கறது வேற மாதிரி இருக்கு. சாரி. எவ்வளவு பணம் கொடுத்தாலும் இதை என்னால செய்ய முடியாது.” தெளிவாக முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டு வேக நடையில் வெளியேறினாள்.
அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றார் கால்டன். அவள் போன பின்னரும் கதவையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். ஏமாற்றம் விழிகளை நீர்த் திரையிட்டு மறைத்தது.
முதல் சந்திப்பே இறுதிச் சந்திப்பாகிவிட்டதாய் நினைத்து மிகவும் வருந்தினார்.
ஆனால் இது இத்தோடு முடியப்போகும் விதி அல்லவென்பது மறுநாளே தெரிய வந்தது.