1.4 ஆரம்பமே மறுப்பு
1.5 கயல்
மதியம் 3 மணி..
6 மணி நேர மூளை அறுவைசிகிச்சை செய்த பின்னர் ஆய்ந்து ஓய்ந்து மருத்துவமனைக்கு எதிரே இருந்த இந்திய உணவகத்துக்கு வந்து ஒரு சான்விச் வாங்கிக்கொண்டு காலியாக இருந்த ஒரு இருக்கையில் வந்து அமர்ந்தாள் 30வயதாகும் தமிழ்ப்பெண் கயல்.
மிக அவசரமாக ஒரு பெரிய தொகை அவளுக்குத் தேவையாய் இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் 2 தினங்களாக விழித்துக்கொண்டிருந்த அவளுக்கு “Growing Heirs” என்கிற பெரும் பணக்காரர்களுக்கு வாடகைத் தாய் நியமித்துத் தரும் நிறுவனம் பற்றித் தெரிய வந்தது.
அன்று காலையில் தான், அந்நிறுவனத்தின் வலைதளத்தில் இருந்த பதிவு செய்யும் விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்தாள். சமர்ப்பிக்கும் பொத்தானைத் தட்டும் முன் தயங்கினாள். பிறகு வேறு வழியில்லை என்று கிளிக் செய்து சமர்ப்பித்துவிட்டாள். சமர்ப்பித்துவிட்டாளே தவிர காலை முதலே மனம் பெருத்த சங்கடத்தில் இருந்தது. இப்போது கூட வாங்கிய உணவை உண்ண முடியவில்லை. இதயம் கனத்தது.
“மன்னிச்சுருங்க அப்பா. எனக்கு வேற வழி தெரியல்ல” என்று தமிழில் முனுமுனுத்தாள். கண்கள் கண்ணீர் அருவியை வழிய விட்டன.
சாப்பிடாமலே உணவகத்திலிருந்து வெளியே வந்தாள். மழையும் வெயிலும் ஒரே நேரத்தில் இருந்ததன் விளைவாய் வானவில்லொன்று புன்னகை செய்தது. மறைந்த தன் தாயுடன் வானவில்லைப் பலமுறை இரசித்த தருணங்களின் நினைவுகள், அவள் மனவேதனையை இன்னும் அதிகமாக்கின.
இப்போது இருக்கும் இக்கட்டான சூழலில் அம்மா இருந்திருந்தால் ஆலோசனை சொல்லியிருப்பாளே, நான் செய்வது சரியா தவறா என்று உணர்த்தியிருப்பாளே என்று தோன்றியது. “மிஸ் யூ அம்மா” என்று வாய்விட்டுச் சொல்லி, வானவில்லின் மேலேயே பார்வையை ஓட்டிக் கண்ணீர் வடித்தாள்.
“பணம் இல்லாததால தான் அம்மாவைக் காப்பாத்த முடியல்ல. அப்பாவையும் பணம் இல்லை என்பதால பறிகொடுத்துடக் கூடாது, அதுக்காகத்தான் இதைச் செய்யறேன், என்னவானாலும் பரவாயில்ல” என்று மனதைத் தேற்றிக்கொண்டு மெல்லிய விரலால் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, சாலையைக் கடந்து மீண்டும் தான் பணி செய்யும் பல்கலைக்கழக மருத்துவமனை நோக்கி நடந்தாள்.
அன்று தன் பக்கத்திலேயே கால்டன் இருந்ததையும், தன் அழுகையை அவர் கவனித்துக் கொண்டிருந்ததையும் அப்போது அவள் அறியவில்லை.
மருத்துவமனைக்குத் திரும்பிச் சென்றவள் நேராகத் தன் சக டாக்டரான அலி அசாஃப் தெனிஸோகுலு என்றவரின் அறைக்குச் சென்றாள். அவரும் கயலைப் போலவே ஒரு திறமையான மூளை அறுவைசிகிச்சை நிபுணர். இஸ்தான்புல்லைச் சேர்ந்தவர்.
கயலும் அலியும் ஒரே ஆண்டில் கென்டக்கி மருத்துவ ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில், முழு உதவித்தொகையுடன், மூளை அறுவைசிகிச்சைக்கான மேற்படிப்பு படிக்கத் தேர்வானவர்கள். கிடைத்தற்கரிய வாய்ப்பு அது.
இருவரும் துவக்கம் முதலே நல்ல நண்பர்களாக இருப்பவர்கள். இருவருக்கும் 30 வயதாகிறது.
“சாப்டியா” பேச்சை ஆரம்பித்தார் அலி.
“ம்ம்.. பேஷண்ட் எப்படி இருக்காரு? போஸ்ட் ஆப் ஐ.சி.யூவுக்கு ஷிப்ட் பண்ணியாச்சா?”
“யா.. பண்ணியாச்சு. நல்லா இருக்காரு. ஆனா அவர் கூட வந்தவங்க அளப்பறை தான் தாங்கல்ல.”
“எல்லாரும் இன்னும் 10 நாள் இங்க தான் இருப்பாங்க. என்ஜாய்”
“கடவுளே”
சம்பாஷனை இடையே புகுந்தார் மற்றொரு மருத்துவர்.
“வாழ்த்துகள் கயல். ரொம்ப சிக்கலான சர்ஜரி. திறமையா செஞ்சிருக்கிங்க”
“ம்” வேண்டா வெறுப்பாகச் சொன்னாள் கயல்.
“எதாவது உதவின்னா கேளுங்க. செய்ய காத்திருக்கேன்” என்று கூறி விஷமமாக ஒரு புன்னகை வீசிவிட்டு வெளியேறினார் அந்த மருத்துவர்.
“ஆரம்பத்துலேருந்து கடைசி வரை நான் இவன் கண்ணுல படவே இல்ல போல” என்று கிண்டலாகச் சொன்னார் அலி.
“இருக்கற பிரச்சினையில இவன் ஒரு பிரச்சினை எனக்கு” என்று கடுப்பாய்ச் சொன்னாள் கயல்.
“பேசாம உனக்குத் தேவைப்படற பணத்த இவன்கிட்ட கேட்டு வாங்கிக்கோயேன். நல்ல பணக்காரான் தான். நீ கேக்குற பணம் எல்லாம் இவனுக்கு ஒரு தொகையே இல்ல”
“இவன்கிட்ட பணம் கேட்டா பதிலுக்கு அவன் வேற எதிர்பாப்பான் அலி”
“புரியல்ல”
“விடுங்க. இவன் கிட்ட கேக்கமாட்டேன். அவளோதான்”
“சரி வேற என்ன பண்ணப் போற?”
“காலையில தான் ஒரு ஏற்பாடு பண்ணியிருக்கேன். எப்படி வர்க் அவுட் ஆகுது பாப்போம்”
“எதுவா இருந்தாலும் சீக்கிரம் பிரச்சினையை முடி. நீ சிரிச்சு பல நாள் ஆகுது. குழி விழாம கன்னம் மேடு தட்டி இருக்கு”
“எனக்கும் சிரிக்கறது எப்படின்னே மறந்துரும் போல இருக்கு. சீக்கிரம் நல்லது நடக்கும். நடக்கனும்” என்று சொல்லிவிட்டு சுற்றுக்குக் கிளம்பினாள் கயல்.
அலியும் வேறு புறம் சுற்றுக்குக் கிளம்பினார்.
பணி முடித்து கயல் தான் தங்கியிருக்கும் இல்லத்திற்குச் சென்றாள். ஒரு மலர் அலங்காரம் செய்யும் ஜெனிஃபர்-காடன் (Gordon) என்ற 50 வயது தம்பதியர் இல்லத்தில் கயல் வாடகைக்குத் தங்கியிருந்தாள். அந்தத் தம்பதியருக்குப் பிள்ளைகள் இல்லை. கயலை அவர்கள் வாடகைக்குக் குடியிருப்பவளாகப் பார்க்காமல் மகளாகவே நினைத்தார்கள்.
நண்பனின் பெற்றோரையும் அப்பா அம்மா என்று அழைக்கும் பண்பாடு கொண்ட நாட்டில் பிறந்து வளர்ந்த கயலுக்குப் பிள்ளைகளின்றி ஏங்கும் தம்பதியரைப் பாசத்தால் கவர்வதென்ன பிரமாதமா?!
அவர்கள் இல்லத்தில் பெரிய மலர் பூங்கா இருந்தது. அவர்களோடு சேர்ந்து அவளும் தினமும் பணிமுடித்து வந்ததும் சிறிது நேரமேனும் தோட்ட வேலை செய்வாள். மலர்கொத்து விதம் விதமாகச் செய்வாள். அவர்களோடு நன்றாக ஒட்டிக்கொண்டாள். கயலை அவர்கள் மிகவும் நேசித்தனர்.
கயலுக்குப் பணத்தேவை ஏற்பட்ட போது அவர்கள் தங்களால் இயன்றதைக் கொடுத்தனர். ஆனால் அவள் வாங்க மறுத்துவிட்டாள். கயலின் நேர்மையும் பண்பாடும் நற்குணமும் அவர்களை மிகவும் கவர்ந்தது.
அன்று மிகவும் சோர்ந்து போய் வந்தவள், ஜெனிஃபர் தயார் செய்து வைத்திருந்த இந்திய உணவினைச் சாப்பிட்டுவிட்டு நேராகத் தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.
உறங்கும் முன் அந்நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. அவள் பதிவு செய்த விண்ணப்பத்தில் ஒரு பெரும் பணக்காரர் ஆர்வமாய் இருப்பதாகவும், சரியெனில் அந்த பணக்காரரே மறுநாள் கயலைத் தொடர்பு கொள்வார் என்றும் சொன்னார்கள்.
சரி என்று சொல்லிவிட்டு அழைப்பினைத் துண்டித்தாள். அதீத சோர்வில் உறங்கிப்போனாள்.
மறுநாள் அவளுக்கு விடுமுறை. சற்று தாமதமாக எழுந்தவள், அலைபேசியை எடுத்தாள்.
கால்டனிடம் இருந்து 5 மணிக்கு வீட்டுக்கு வர முடியுமா என்ற மெயில் வந்திருந்தது. என்ன செய்வதென்று குழம்பினாள்.
ஒரு நெருக்கடியில் விண்ணப்பித்துவிட்டாளே தவிர முழு மனதாக இதை அவள் செய்யவில்லை. உடனே பதில் அனுப்பாமல் யோசிக்கத் துவங்கினாள். மதியத்திற்கு மேல் வேறு எந்த வழியும் தெரியாததால் சரி என்று பதில் அனுப்பி, வெறும் கையோடு போக வேண்டாமென்று ஒரு மலர்கொத்து செய்ய ஆரம்பித்தாள்.