மலர்கொத்து செய்துகொண்டிருந்த போது அந்த இல்லத்தரசி ஜெனிஃபர் வந்தார்கள். யாருக்கு என்று கேட்டார்கள். ஒரு நண்பருக்கு என்று மட்டும் சொன்னாள் கயல்.
அவர்களும் உதவட்டுமா என்று கேட்டார்கள்.
“வேண்டாம் மா. நான் டெராரியம் வகை பொக்கே செய்ய உங்க கிட்டேருந்து தான் கத்துகிட்டேன். நானே செய்யறேன். நீங்க எப்படி இருக்குன்னு மட்டும் சொல்லுங்க”
“நீ செஞ்ச எது தப்பா இருந்திருக்கு கயல்?!”
“நா எது செஞ்சாலும் அது சரியாத் தான் இருக்கும்மின்னு நம்பறிங்களா அம்மா?”
“நிச்சியமா”
“தேங்க்ஸ் மா” குழப்பத்திலிருந்த கயலுக்குத் தன் அம்மாவே இந்த அம்மா வடிவில் வந்து தெம்பூட்டுவது போல் இருந்தது.
மெள்ளக் கேட்டாள்.
“ஏம்மா.. நீங்க இந்த வாடகைத் தாய் மாதிரி எல்லாம் ஒன்னும் ட்ரை பண்ணல்லியா?”
“அப்பல்லாம் வாடகைத்தாய் ரொம்ப நிறைய இல்லம்மா. இருந்திருந்தாலும் அப்ப அதுக்கெல்லாம் எங்களுக்கு வசதி இல்ல. ஆனா இப்ப குழந்தை இல்லாத பல பேர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெத்துக்கறாங்க. நல்ல விஷயம் தான். ஆமா! ஏன் திடீர்னு கேக்குற”
“ஒன்னுமில்ல மா சும்மா தான் கேட்டேன்”
தலையைக் கோதிவிட்டுச் சென்றார் ஜெனிஃபர்.
ஒரு சிறிய ஆக்டகான் வடிவ கண்ணாடிப் பேழைக்குள், வித்தியாசங்களைக் கடந்து, இருக்கும் ஒற்றுமைகளைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு, ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டு, ஒன்றுக்கொன்று துணையாக இருந்துகொண்டு வாழும் டெராரியம் வகை மலர்கொத்தினைக் கால்டனுக்காகச் செய்துமுடித்தாள் கயல். அவள் நினைத்ததை விட அழகாக அமைந்திருந்தது.
தேநீருடன் வந்த ஜெனிஃபர், கயலின் டெராரியத்தைச் சிலாகித்தார்.
கயல் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு கால்டன் அனுப்பிய இருப்பிடத்தைப் பின்பற்றி ஒரு வாடகைக் காரில் அங்கே சென்றடைந்தாள். காரைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு, கால்டனின் வில்லாவைக் கண்டுபிடித்தாள். செல்லும் வழியில் அந்த கேட்டட் கம்யூனிட்டியில் ஒவ்வொன்றும் தனித் தனி வீடுகளாய், வெறும் வெளிச் சுற்றுச்சுவரை மட்டும் பகிர்ந்துகொள்ளும் படிக் கட்டப்பட்டிருப்பதைக் கவனித்தாள். பணக்காரர்களின் பிரைவசிக்கு ஏற்றதுதான் என்று எண்ணிக்கொண்டாள். கால்டனின் வீட்டைச் சுற்றி மட்டும் வறட்சியாய் இருந்தது. நிறைய இடம் இருந்தும் ஒரு செடி கூட இல்லை. இதையும் கவனித்தாள் கயல்.
ஒரு நீண்ட மூச்சு இழுத்துவிட்டுக்கொண்டு காலிங் பெல்லை அழுத்தினாள்.
கதவைத் திறந்த கால்டனைக் கண்டதும் காந்தவிசையில் மாட்டிக்கொண்டாள் அந்த இரும்புப் பெண்மணி. அத்தனை அழகாக இருந்தார் கால்டன்.
உள்ளே வரும்படி அழைத்த கால்டனின் குரல் கேட்டதும் சுயநிலைக்குத் திரும்பிய கயலுக்குத் தன் நெருக்கடிகள் நினைவுக்கு வரவே, எப்படியேனும் இந்தத் தம்பதியரைச் சரிக்கட்டி வாடகைத் தாய் ஆகி பணத்தினைப் பெற்று இந்தியாவுக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும் என்று தீர்மானம் செய்தாள்.
கால்டனும் டெராரியத்தைப் பாராட்டிய உடனேயே நேரிடையாக விஷயத்துக்கு வந்துவிடவே, அதில் குறிப்பிட்டிருந்த தொகை போதுமா என்று கேட்டதற்குப் போதும் என்றாள்.
உண்மையிலேயே கால்டன் குறிப்பிட்டிருந்த தொகை மிகவும் பெரிது. அவள் நெருக்கடியையும் தீர்த்து, பிறகு சில ஆண்டுகள் வரையும் செலவுகளைச் சமாளிக்க முடிகிற அளவு தொகையினைத் தான் கால்டன் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் கால்டன் திருமணமாகாதவர், வாடகைத் தாயாக அன்றி தன் கருமுட்டையைப் பயன்படுத்தி அவர் ஒரு வாரிசினை உண்டாக்கப் பார்க்கிறார் என்று புரிந்த போது கோபமும் ஏமாற்றமும் ஒருங்கே ஏற்பட்டன கயலுக்கு.
மருத்துவ முறை கருவுறுதலானாலும் அது அவள் குழந்தையும் தானே; தன் குழந்தைக்குத் தாயாக அல்லாமல் வெறும் வாடகைத்தாயாக இருக்கக் கால்டன் இரண்டு மடங்கு பணம் தந்தாலும் அதை எப்படி ஏற்பாள்? மறுத்துவிட்டு வெளியேறிவிட்டாள்.
பண நெருக்கடி தீரப்போவதாய் நினைத்துப் போனவள் ஏமாற்றத்தோடு திரும்பினாள்.