கால்டன் கேட்டதை வீடு திரும்பிய பின்னரும் கூட ஜீரணம் செய்ய முடியவில்லை அவளால்.
ஆத்திரம் அடைத்துக்கொண்டது. ஆனால் சிறிது நேரம் கழித்து கால்டன் மீது கோபப்படுவது அர்த்தமற்றது என்று புரிந்தது.
“அவர் அளித்தது ஒரு ஆஃபர். ஒத்துவந்தால் ஏற்கலாம், இல்லாவிட்டால் மறுக்கலாம். ஒத்துவரவில்லை, மறுத்து வெளியேறிவிட்டோம் அவ்வளவுதானே, எதற்குத் தேவையின்றி இதை நாடகமாக்குகிறோம்?!” என்று தோன்றியது. எனவே கோபத்தைக் கைவிட்டாள். ஆனால் அத்தனை கோபத்துக்கிடையிலும் கால்டனின் வசீகரத்தை அவளால் மறக்கமுடியவில்லை. இதயத்தின் ஒரு பக்கத்தைக் கால்டன் கரைக்கத் துவங்கிவிட்டிருந்தார்.
“ச்ச, அவர் எப்படி இருந்தா என்ன! இனி அவரைச் சந்திக்கப்போறதில்ல” என்று மனதைத் திசை திருப்ப முயற்சித்தாள்.
கயல் வெளியேறிய பின்பு, கால்டன் மிகவும் வருத்தப்பட்டு உட்கார்ந்து விட்டார். மறு சிந்தனை ஏதுமின்றி திட்டவட்டமாக அவள் மறுத்து உடனே வெளியேறியும் விட்டது ஆச்சரியமாய் இருந்தது அவருக்கு. “கால்டன் கூப்பர்” அளித்த வாய்ப்பை மறுத்தது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றுதான் அங்கு.
கால்டன் போட்டுவைத்திருந்த பல கணக்குகளை உடைத்துப்போட்டுப் போய்விட்டாள் கயல்.
அவள் அளித்த டெராரியம் மேசையில் இருந்து கால்டனை ஏளனமாகப் பார்ப்பது போல் தோன்றியது.
கயல் பற்றிய சிந்தனையில் மணி 8 ஆனதே தெரியவில்லை. 8 மணிக்கு தெரெக் வந்தார்.
“வாவ், நைஸ் டெராரியம். யார் கொடுத்தா?”
“கேக்காத..”
“3 மணிக்கே கிளம்பிட்டன்னு கேள்விப்பட்டேன்.”
“ஆமா. வேலை இருந்துது”
“இந்த டெராரியம் வாங்குனது தான் அந்த வேலையா?”
“(முறைத்தார்)”
“முறைக்காத, மேட்டர சொல்லு. நீ சொன்ன அந்த அப்ளிகண்ட் வந்தாங்களா? என்ன ஆச்சு?”