ஓங்கி உயர்ந்த மலைமுகடுகளை ஒய்யாரமாக தொட்டுத் தடவி, காதலுடன் தழுவிய முகிலினங்கள். மலைவெளியிலிருந்து சறுக்கி வழிந்த நீர்வீழ்ச்சிகள்.
நீலமும், பச்சையும் கலந்து உண்டான நிறத்தை ஊடுருவி கலந்து நின்ற பனித் திவலைகள். சிறுக்கிய பாறைகளை தடுத்தி நிறுத்தி, கட்டியணைத்திருந்த பருத்த மரங்கள்,
அவற்றின் இடையே புதராக பூரித்து வளர்ந்திருந்த செடிகள் பலதும், சஞ்சீவ மூலிகைகளாகவும், உயிர்குடிக்கும் நஞ்சு உற்பத்தி ஆலைகளாவும் வியாபித்து விரித்திருக்க,
குதிரைமலை குன்றின் மொட்டைப் பாறையில் குத்தி வைத்த கொடி மரத்தை, வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் நன்மாறன்.
“வேல்விழியை மீட்க என் செய்வேன்?, நெடுங்கிள்ளி ஒருபுறம், இரும்பிடையான் ஒருபுறம்… இடையில் சிக்கிய வேல்விழியை கொண்டு சேரன் அமைத்திருக்கும் அரக்க பொறிகள் மறுபுறம். எப்படி மீட்பேன், அல்லது மீள்வேன்? மீனாட்சியே வலி தருவாயா? என் சகோதரியின் மீது வீசப்பட்ட பாசக்கயிற்றை அறுத் தெறிவாயா?”, என்று குழம்பியபடி வேண்டுதலில் மூழ்கியிருந்தான், பாண்டிய வேந்தன்.
“இரும்பிடையானுக்கு என்ன திமிர்? கிழட்டு சிங்கத்திற்கு, புள்ளிமானின் மீது மையல்!!!? அரசியல் எவ்வளவு கீழ்த்தரமாக மலிந்துவிட்டது?. பெண்பிள்ளையின் மானத்தைக்காட்டி, ஒரு அரசை விலைக்கு வாங்க, துடிக்கும் இந்த மானமில்லா அரசியல் சதுரங்கத்தில் என்னை பகடை ஆக்கி விட்டனரே?!!”.
“என் குடிகள் எனக்கு முக்கியம். அவர்களின் உயிர் என்னுடைய உயிரைக் காட்டிலும் விலை உயர்ந்தது. ஆனால் சகோதரி பெண் பிள்ளையல்லவா? அவள் இதயத்தில் சிறுவயது முதலே அஸ்திவாரமிட்டு, கருங்கல்லில் கோபுரம் கட்டி அமர்ந்திருப்பது, நலங்கிள்ளியல்லவா? எப்படி அவளிடம் கிழட்டு ராஜாவுக்கு கழுத்தை நீட்டு என்பது? அதைவிட கேவலம் ஏது இருக்க முடியும் எனக்கு!!!…”, என்று யோசித்து யோசித்து, சோர்வடைந்து இருந்தான் பாண்டியன்.
மூன்றாம் சாமம் முடிந்து நான்காம் சாமத்திற்கு நகர்ந்திருந்த இரவில், நட்சத்திரங்கள் அதீத ஒளியுடன் பிரகாசித்துக் கொண்டிருந்தது. நிலவன்னை தன் மொத்த ஒளியையையும், குதிரைமலையின் மீது, பீச்சிக் கொண்டிருந்தாள். அவ்வப்போது சில விண்மீன்கள், பூமி நோக்கி பாய்ந்து வந்தன. சில நகர்ந்து இடம் பெயர்வதாக உணர்வு மேலிட்டது. அடர்ந்த இரவின் அகோர இருட்டில், குதிரைமலை குன்றில் அமர்ந்திருந்த நன்மாறன், விடியும்போது நிறைவேற்ற வேண்டிய கடமைகள் குறித்து யோசித்தபடியே நடைபோட்டான்.
மாளிகையின் மஞ்சணையில் துயில் கொள்ள வேண்டியவன், இரவின் பனியில் நனந்தபடியே, ஆழ்ந்த யோசனையில் இருந்தான். பரிதி திரும்ப வரும்வரை, என்ன தீர்மானம் எடுப்பது என்று குளம்பிப் போயிருந்தவன் சிந்தனையை ஒரு புரவியின் குளம்படி ஓசை கேட்டது. சற்று நேரத்தில் அதிகப்பட்ட ஓசை, குன்றுப் பகுதியில் நின்றுபோக.. அசாத்திய அமைதி ஏற்பட்டது.
வளைகளும், கொலுசு ஒலியும் கேட்டக இருளில் ஒரு பெண்ணின் உருவம் நடந்து வரும் நிழல் தோற்றம் தெரிந்தது. நன்மாறன் சுறுசுறுப்படைந்தான். “யாரது, இந்நேரத்தில் இங்கே உலவும் நீ யார்?,” என்று கேட்டான் நன்மாறன். அப்போது மேலும் இருவர் மூவரின், நடமாட்டம் தெரிந்தது. சட்டென்று தீப்பந்தம் ஒன்று ஏற்றப்பட்டது.
ஒரு பெண்ணும், மூன்று ஆண்களும் வர நன்மாறன் கரங்கள் இடையிலிருந்த உடைவாளை நோக்கி தானாக நகர்ந்தது.
அண்ணா, அவசரம் வேண்டாம் நான் வேல்விழி என்ற குரல் கேட்க, சற்று அதிசயித்துப் போனான் பாண்டியன். சற்று நேரத்தில் தீப்பந்த ஒளியும், வந்த நால்வரும் நெருங்கி வந்தபோது நன்மாறன் வியந்தே போனான்.
“வேல்விழி, என் ஆருயிரே, எப்படியம்மா இங்கு வந்து சேர்ந்தாய்?”, என்றவனை, ஓடிச்சென்று கட்டிக்கொண்ட வேல்விழியை, ஓட்டி வந்தவன் தன் முகத்தை மூடியிருந்த துணியை விலகியபோது இன்னும் அதிசயித்தான்.
மித்ர நீயா? என்று அதிர்ந்து போன நன்மாறனை ஒரே எட்டில் சென்று கழுத்தைக் கட்டிக்கொண்டான் நலங்கிள்ளி. மூவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து இருந்த, பரஸ்பர சிநேகத்தைப் பரிமாறிக் கொள்ளவும், வேல்விழி நன்மாறனிடம் நடந்தவற்றை விலக்கிக் கூறினாள்.
“இளமாறன் மட்டும் சரியான நேரத்தில் வந்திராவிடில், மொத்த நிகழ்வும் மாறியிருக்கும் நன்மாறா”, என்றான் நலங்கிள்ளி.
ஆனால், மாலையில் நான் கேட்டறிந்த விபரம் வேறாக இருந்தது”, என்றான் நன்மாறன்.
என்ன கேள்விப்பட்டாய் நன்மாறா, என்ற நலகிள்ளியிடம், ஆதிரை நம்பியின் சவாலையும், கெடு குறித்தும் விளங்கிய நன்மாறன், பாண்டியர்கள் நலனை காப்பது குறித்து யோசிப்பதை கூறினான்.அப்போது நலங்கிள்ளி….., “போரிடஸ்”, என்று அழைக்க, போரிடஸ் முன்னே வந்து நின்று வணங்கினான்.
“என்ன ஆச்சரியம்? கிரேக்கத்து பொறியாளன் போரிடஸ் இங்கு வந்துள்ளானா?, என்ற நன்மாறனை போரிடஸ் நிமிர்ந்து பார்த்தான்.
நலங்கிள்ளி இளமாறன் போரிட்டசை அனுப்பியதன் நோக்கத்தை, நன்மாறனிடம் விளக்கினான். நன்மாறனுக்கு இப்போது மும்மடங்கு பலம் கிடைத்து இருந்தது. போரிடஸ் பேசலானான்…
“பாண்டிய வேந்தே, இளவல் நலங்கிள்ளியே கேளுங்கள். இந்த பொறிகள் லேசுப்பட்டவையல்ல. இவற்றைக் கொண்டு, வேகமாக எதிரிகளின் நிலைகளை அழித்துவிட முடியும். இவை மிகவும் புத்திசாலித்தனமாக உயரமான இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. இவற்றை ஒரு எளிமையான போர் மூலமோ, அல்லது தொலைவில் இருந்து கொண்டோ அழித்துவிட இயலாது. ஆகவே….!!??”, என்று தயங்கி நின்றான்.
“என்ன போரிடஸ் என்ன தயக்கம்?”, என்றான் நன்மாறன்.
“அரசே இந்த அசுர பொறிகளை நெருங்கிச் சென்றுதான் அழிக்க முடியும். அதை செய்ய தியாக உள்ளங்கள் தேவை”. என்றான்.
“தியாக உள்ளங்கள் என்றால்??!!, நீ எதை குறிப்பிடுகின்றாய் போரிடஸ்?”, என்றான் நலங்கிள்ளி.
“வேறு எந்த மார்க்கமும் கிடையாது அரசே!, சோழ இளவலே!, அதை நெருங்கித் தான் அளிக்க வேண்டும். ஆயிரம் பேர் மாள்வதற்கு பதில், ஒரு சிலரே மாள்வது நலம். பொறிகளை அழிக்க தயாராக உள்ள சில தியாக வீரர்களைத் தாருங்கள் போதும். நாளை உட்சிப் பொழுத்திற்குள் அவற்றை முற்றாக அழித்து விடுகின்றேன்” என்றான் போரிடஸ்.
“போரிடஸ் நீ கூறுவது தற்பலி வீரர்களா? அப்படியொரு முறையின்றி வெற்றி கொள்ள இயலாதா?”, என்றான் நன்மாறன்.
“நிச்சயமாக முடியாது அரசே! இவை தாக்குதல் தொடங்கும் போது, நம் படைவீரர்கள், குடிமக்கள் என்று, குறைந்தபட்சம் சில ஆயிரம் பேரை, ஏன் ஓர் ஊரைக்கூட இழக்க வேண்டியது வரும். அதற்கு ஒரு சிலர் ரகசியமாக, பொறிகள் அமையப்பட்ட இடங்களை ஊடுருவி, பொறிகளை அடைந்து எதிரிகள் அவர்களை வீழ்த்தும் முன் அவற்றை அழிக்கும் துரித முறையே சிறந்தது” என்றான் போரிடஸ்.
“இது எங்கனம் சாத்தியம் சகோதரனே!!??, ஒருவேளை இதை எதிரிகள் அறிந்தால், நாம் அனுப்பும் ஒவ்வொரு உயிருக்கும், அவர்கள் கொண்டு செல்லும் திட்டங்களுக்கும் ஆபத்து ஆகுமே?” என்றாள் வேல்விழி.
“அப்படி நம்முடைய திட்டங்களை எதிரிகள் அறியாது செயலாற்ற ஏற்ற வீரர்களையும், அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான ஆயூதங்கள் உள்ளிட்டவற்றையும் நான் பொருப்பெற்றுக் கொள்கின்றேன், உத்தரவு மட்டும் இடுங்கள்” என்றான், போரிடஸ் மிகுந்த நம்பிக்கையுடன்.
சற்று நேரம், நன்மாறனும், நலங்கிள்ளியும் தீவிரமான யோசனையில் இருந்தனர். பரிதி அந்த மவுனத்தை களைத்தான். ” வேந்தே, போரிடஸ் கூறுவது சரி, அவரது திட்டமே எளிதாக வெற்றிபெற உதவும். போரிட்டு வெல்ல இப்போது இயலாது” என்று, தன்னுடைய கருத்தை அழுத்தமாக பதிவிட்டான் பரிதி.
“முடிவு எடுக்க காலதாமதம் வேண்டாம் அரசே, நான்காம் சாமம் சென்று கொண்டிருக்கிறது. எதிரிகள் கண்ணயரும் நேரமிது. ஆற்றலோடு செயல்பட்டால் தான் முடியும். என்னுடைய தலைவர், இளமாறனுக்கு கொடுத்த வாக்கின்படி, நான் கடமையாற்ற வேண்டும். வீரர்கள் குறித்து கூட நீங்கள் யோசிக்க வேண்டாம். அதையும் நானே பார்த்துக் கொள்கின்றேன்” என்றான், போரிடஸ்.
நலங்கிள்ளி நன்மாறன் தோளைத் தழுவி, “முடிவை அறிவித்து விடு மித்ரா… நேரமில்லை. ஆபத்தைக் கடந்தாக வேண்டும், என்றான்.
சிறிது நேரம் யோசித்த நன்மாறன், “எதிரியோடு நேரடியாக மோதி வீழ்வது வேறு, ஆனால் தெரிந்தே உயிரை இழக்க வீரர்களை களத்திற்கு அனுப்புவது என்பது எனக்கு மிகவும் நெருடலாகவும், வலியாகவும் உள்ளது. என்றாலும் ஆயிரக்கணக்கான என்னுடைய குடிமக்களையும், வீரர்களையும் பொது சொத்துக்களையும் காக்க இதற்கு சம்மதிக்கின்றேன். செயலாற்று போரிடஸ். ஜெயம் உண்டாகட்டும். பரிதி போரிடசுக்கு தேவையான உதவிகளை செய்”, என்றான் நன்மாறன்.
போரிடசும், பரிதியும் அரசனை வணங்கிவிட்டு புறப்பட்டு சென்றனர். நலங்கிள்ளி, வேல்விழி மற்றும் நன்மாறன் மூவரும் குதிரைமலை அரண்மனைக்கு திரும்பியிருந்தனர்.
வேல்விழி இருப்பிடையானை குறித்தும், நெடுங்கிள்ளி குறித்தும் கூறியபோது, நன்மாறனால் கோபத்தையும், கொந்தளிப்பையும் அடக்க முடியவில்லை. நெடுங்கிள்ளி உயிரை எடுத்துவிட துடித்தான். நலங்கிள்ளியும், வேல்விழியும் அவனை தேற்றி, கட்டுப்படுத்தினர்.
அதேவேளையில் போரிடஸ் முன்பாக குடந்தையின் புறவெளியில் இருந்து சேர்ந்து கொண்ட, சோழத்தின் தனிப்படை வீரர்கள் நின்று கொண்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் தெளிவான, கண்டிப்பான உத்தரவுகளை போரிடஸ் கொடுத்தான். இறுதியாக பரிதி மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கந்தகதூள்கள், மற்றும் சில வேதிப்பொருட்கள் நிறைந்த, பைகள் கொடுக்கப்பட்டன. அடுத்த சில நொடிகளில், வீரர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் நெடுகிலும், பயணம் தொடங்கினர்.
நான்காம் ஜாமம் முடிந்து, விடியல் தொடங்கிய நேரத்தில், தற்பலி நிறைவேற்றிட அந்த தியாக வீரர்கள், மேற்கு தொடர்ச்சி மலையின் உயர்ந்த முகடுகளில் அமைக்கப்பட்டிருந்த, அசுரப்பொறிகளை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர். கதிரவன் அன்று உதயத்தை தள்ளிப் போட்டிருந்தான். கடுமையான பனிப்பொழிவும், மேக மூட்டமும் இருக்கும் வேளை சாதகமாக அமைந்தது.
விரைவாக முன்னேறிய வீரர்கள், மலைகளின் உயரமான குன்றுகளை யார் கண்ணிலும் படாது அணுகினர். பதுங்கி பதுங்கி அவர்கள் பொறியின் அருகில் சென்று பதுங்கவும், குதிரை மலைக்குன்றின் மீது சிகப்பு கொடியை பறக்க விட்டான் போரிடஸ்.
வானம் வெளுத்து சூரியன் இப்போது தெளிவாக தெரிந்தான். குதிரை மலை குன்றையும், மேற்குத்தொடர்ச்சி மலையையும் சூரியக்கதிர்க்கள் பிரகாசமாக்கியிருக்க, நன்மாறனும், நலங்கிள்ளியும் வேல்விழியும் குன்றை அடைந்தனர். அப்போது வேகமாக புரவி ஒன்று குதிரைமலை சோதனை சாவடியைக் கடந்து வந்தது.
ஆதிரை நம்பி வருவதை கண்டதும், நலங்கிள்ளியும், வேல்விழியும் ஒளிந்து கொண்டனர். நன்மாறனும் பரிதியும் அங்கு நிற்க, தன் குண்டு உடம்பை தூக்கிக் கொண்டு வேகமாக வந்தான் ஆதிரை நம்பி. வந்த வேகத்தில்,….!!
“நன்மாறா என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றாய் உன் இதயத்தில்… அத்தனை நான் எடுத்துக் கூறியும், நீ போரை பூ போட்டு அழைத்து இருக்கின்றாய். இதனால் உன் சகோதரியின் மானமும், பாண்டிய மக்களின் உயிரும் உடைமையும் பறிபோகும் என்பதை மறந்தாயா? யார் அறிவுரைப் பேரில் நீ இத்தனை ஆட்டம் போடுகின்றாய். தலைக்கனம் பிடித்தவனே…. “, என்று கோபத்தில் கொதித்துக் கத்தினான், ஆதிரை நம்பி. அதுவரை அமைதியாக நின்ற பரிதி, ஏதோ சொல்ல வாய் திறப்பதற்குள், ஆதிரை நம்பியின் முதுகில், கனத்த ஒரு அறை விழுந்தது.
ஐயோ… தொலைந்தேன் என்று முன்னே தடுமாறி சென்றவன் திரும்பப் பார்க்க அங்கே போரிடஸ் நின்று கொண்டிருந்தான். அவனின் உரமேறிய உடலும், இடையில் தொங்கிய அகன்ற உயரம் குறைவான உடைவாளும் ஆதிரை நம்பிக்கு அதிர்ச்சியையும் கலக்கத்தையும் உண்டாக்கின. அப்போது பாறையின் பின்பிருந்த நலங்கிள்ளியும், வேள்விழியும் வெளியேறி வந்தபோது, ஆதிரை நம்பிக்கு இவையெல்லாம் கனவு போலவே தோன்றின.
நன்மாறன் கூறினான், ” ஆதிரை நம்பி, உன்குரு சீத்தலையார், இப்போது எங்கள் கரங்களில், மேலும் போரில் மாற்றமே இல்லை போர் தொடங்கியும் விட்டது. இழப்பிற்கு நானோ, என் தேசமோ பொறுப்பாக முடியாது என்றான்.
போரிட்டசைப் பார்த்துக் கையசைக்க, போரிடஸ் பினோத ஒளி ஒன்றை மலை முகட்டை நோக்கி எழுப்ப அவை பாறைகளில் மோதி மோதி எதிரொலித்து. அசுரர் பொறிகளை நோக்கி ஆதிரை நம்பியை நிற்க வைத்தான் போரிட்டஸ்.
மளமளவென தகவல்களை பாறை ஒலியிலிருந்து பெற்ற அந்த தற்பலி வீரர்கள் பொறியை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் சென்று போதினர். அடுத்த நொடியில் அவர்கள் உடலில் கட்டியிருந்த ரசாயன பொருட்கள் ஒன்றோடு ஒன்று கலந்து கொள்ள பெரிய வெடிச்சத்தம் டமார்…டமார் என்று எழும்ப பொறி கோபுரங்கள் நெருப்புப் பிழம்பாக மாறி எரிந்தன. எறிந்த கோபுரங்கள் சடார்….. றென்று மலையில் இருந்து பள்ளத்தில் கவிழ்ந்தன. ஒரே நெருப்பும் புகையுமாக மேற்குத்தொடர்ச்சி மலை காட்சித்தந்தது.
அதைக் கண்டு ஆதிரைநம்பி வெலவெலத்து ஒடிந்து தரையில் உட்கார்ந்தான். வேல்விழி விழிகள் ஆச்சர்யத்தில் இமைக்கக் கூட செய்யவில்லை. நலங்கிள்ளியும் நன்மாறனும் வாயடைத்துப் போயினர். போரிடஸ் மட்டும் புன்னகைத்தான். புன்னகைத்துவிட்டு திரும்பியவன் ஆதிரை நம்பியை கழுத்தைப் பிடித்து தூக்கியவன், “ஓடிப்போ… உயிர் பிச்சை தருகின்றேன். சோழத்தின் தனிப்படை இருக்கும் வரை உங்கள் திட்டங்கள் எதுவும் நடக்காது”, என்றான்.
ஆதிரை நம்பி நடுங்கியபடியே ஓடிச் சென்று புரவியில் ஏறி சேரத்தை நோக்கி ஓடினான். நன்மாறன், நலங்கிள்ளி இருவரும் போரிட்டசை தழுவிக்கொண்டனர்.
அருமையான வியூகமும் ஆர்ப்பரிப்பான வெற்றியும் பெற்றுத்தந்தாய் போரிடஸ். ஆனால் சோழத்து தனிப்படையின் மாசுமருவற்ற உயிர்களை இழந்து விட்டோமே, என்றான் நன்மாறன்.
“இல்லை அரசே, இழந்தது சோழத்து தனிப்படை வீரர்களை அல்ல, அதன் தூதர்களை என்றான் போரிடஸ்” அமைதியாக.
“என்ன வீரர்கள் உயிர் போகவில்லையா? தூதர்கள் யார்?, என்று நன்மாறனும், நலங்கிள்ளியும் ஆச்சரியத்துடன் வினவ,..
வேல்விழி உதடுகள் முணுமுணுத்தன….. “குரைமுகன்கள்” !!!?? என்று…
நலங்கிள்ளி உடல் சிலிர்த்துப் போனது. உண்மையாகவா போரிடஸ் என்றான் சிலிர்ப்பு அடங்காமல். “ஆம் இளவரசசே”!!. என்று அமைதியுடன் பதிலளித்தான் போரிடஸ்.
நன்மாறனுக்கு ஆச்சரியத்திலும் ஆச்சரியம். “எப்படியோரு முன்மதி… எவ்வளவு எளிதாக, சந்தேகம் வராமல், பெரும் வெற்றியை சிறிய உயிர்கள் செய்து முடித்து உள்ளன,” என்றவன் விழிகள் நீரில் நிறைந்தது.
வேல்விழி நலங்கிள்ளியையும், நன்மாறனையும் அணுகினாள். இறந்த போர்வீரர்கள் நினைவாக நடுகல் நாடும் பழக்கம் சோழத்தில் உள்ளது அல்லவா? மனித உயிர்களுக்கு மட்டுமல்ல, இன்று நமக்கு பெரிய வெற்றியை ஈட்டித்தந்த அந்த சிறிய உயிர்களுக்கும் நடுக்கல் நட்டு ஆண்டு தோறும் வழிபட உத்தரவு இடுங்கள் அண்ணா என்றாள் வேல்விழி.
அதை நன்மாறன் உளமார ஏற்றுக்கொண்டார். “பரிதி குரைமுகன் மேடு என்று இதற்கு பெயரிட்டு, ஒவ்வொரு குரைமுகன் நினைவாக கல்வெட்டு எழுதி இங்கு வை. ஆண்டுதோறும் நம் படைகளும் குடிகளும் இனி இவர்களுக்கு மரியாதை செய்யவேண்டும். முதல் மாலையும் பூஜையும் அரச குடும்பத்தில் இருந்து நிறைவேற்றப்படும். இது என் உத்தரவு” என்றான் நன்மாறன்.
அதே வேளையில், ஞானபிரம்மர் மாளிகையை கோச்செங்கான் தன் படைகளுடன் சூழ்ந்து நின்றான். உள்ளே ஞானபிரம்மர் உறங்கிக் கொண்டிருக்க, அவரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு பெற்று இருந்தான் கோச்செங்கான்.
தொடரும்….