சலசலக்கும் சொந்தங்கள்
இறுதி அத்தியாயம் 15
‘வந்திருவோம்’ என்றவருக்காக அடுத்த நாள் விடுப்பு எடுத்து காத்திருந்தாள். அனைவரும் வீட்டில் இருக்க வாசலில் லாரி சத்தம் கேட்கவும் விரைந்து சென்று பார்த்த நிம்மி, “வண்டி என்ன திரும்புது” என்று கூற பின்னாலே வந்திருந்திருந்தவர்களில் பீட்டர் அம்மா, “வேற வீட்டுக்கு வந்த வண்டிய இங்க திருப்பியிருப்பாங்க”.
ஆனால் அந்த வண்டி இரண்டு வீடு தள்ளி, பீட்டரின் சித்தப்பா ஹென்றி – நிம்மி அத்தை லீமா வீட்டில் நின்றது. அதற்குள் நிம்மி மொபைல் அடிக்கவும் எடுத்தவள், “சொல்லுண்ணா”.
அவளின் அண்ணன் ரூபன், “சின்னக்குட்டி, அத்தைக்கும் சீர் கொடுத்தறலாம்னு எல்லாரும் முடிவு பண்ணோம், அதனால முதல்ல இங்க வந்திட்டேன், எல்லாத்தையும் இறக்கிட்டு அங்க வந்திருறேன்”.
நிம்மி, “சரிண்ணா” என்றுரைத்து போனை கட் செய்து, தன் வீட்டினரிடம் அண்ணன் கூறியதைச் சொல்லவும், பீட்டரின் தாத்தா ‘நாமளும் சின்னவன் வீட்ல இருந்துட்டு பிறகு, இங்க வரலாம் அதுதான் முறையும் கூட, ஏன்னா லீமாவும் எங்களுக்கு மருமகள் இல்லயா, வாங்க போவோம்’ என்று சொல்லி அனைவரையும் அழைத்து சென்றார்.
அங்கு ஏற்கனவே ஹென்றி-லீமாவின் மகளும் பேரப்பிள்ளைகளும் பொங்கலுக்காக வந்திருந்தனர். பல வருடங்களுக்கு முன் செய்யாது விட்ட பொங்கல் சீர் செய்யவே தற்போது ரூபன் வந்திருப்பது. ரூபன் லாரியில் இருந்த பொருட்களை இறக்க தன் மாமா, மச்சான்களை கூட்டி வந்திருந்ததால் அனைவரும் சேர்ந்து வீட்டிற்குள் எடுத்து சென்றனர். அப்போது ரூபன் பொங்கல் வைக்க தேவையான பாத்திரங்களை ஹாலில் வைக்கும் போது, ஹென்றி-லீமாவின் மகள் செபியா, “ஏன் பெரியவங்க பொங்கல் சீர் கொடுத்தா கௌரவம் குறைச்சுடும்னு சின்னவங்க கையில கொடுத்து விட்டிருக்காங்களோ”
நிம்மி அண்ணன் இதைக் கேட்கவும் நின்ற தன் உறவினர்களிடம், “நீங்க நான் சொன்னதெல்லாம் இறக்குங்க, டைம் ஆகுது” எனக் கூறி விட்டு, தன் அத்தை மகள் செபியாவிடம் திரும்பி, “சொல்லுங்க அண்ணி, என்ன விஷயம்”
இவ்வளவு நாளுக்கு பிறகு குடும்பம் சேர்ந்திருக்கும் போது, இவ வேற தேவையில்லாத பேசுறாளே’ நினைத்து பீட்டர் அப்பாயி, “செபி, சும்மா இரு”.
அவரை கவனிக்காதது போல் செபியா, “வீட்டுக்கு பெரியங்க சீர் செஞ்சா தான மரியாதையா இருக்கும்”.
ரூபன் நெஞ்சுக்கு குறுக்காக கைகளைக் கட்டி வெகு அமர்த்தலாக, “இப்ப இங்க என்ன மரியாதைக் குறைவா நடந்துருச்சு, எனக்கு எங்க அத்தைக்கு சீர் செய்ய உரிமையில்லையா, எங்க ஊர்ல அப்பா வர முடியாத சூழ்நிலையில இருந்தா, அவர் பையன் மூனு வயசா இருந்தாலும், அந்த சபையில எவ்வளவு பெரியவங்க, வயசானவங்க இருந்தாலும், இந்த மூனு வயசு பையன தான் சீர் செய்ய கூப்பிடுவாங்க, அது தாய்மாமன் சீரானாலும், அண்ணன் தம்பி சீரானாலும், அப்படி இங்க எங்க அப்பா இல்லாத பட்சத்துல எனக்கு மட்டும் தான் சீர் செய்ய முழு உரிமை இருக்கு, இன்னும் உங்களுக்கு புரியற மாதிரி சொல்லனும்ன்னா, எங்க அப்பா இப்ப உயிரோட இல்லன்னு வைச்சுக்குவோம்”
இதைக் கேட்டதும் அனைவரும், பதற, நிம்மி, “டேய் எரும, அப்பாவ என்ன சொல்ற”.
நிம்மி மாமியார் கூட மருமக ‘சரியாதான் சொல்றா, என்னவேன்னா பேசலாமா’ என்று மனதில் குமைந்தார்,
நிம்மி அண்ணன் அவள் அருகில் சென்று தோளோடு சேர்த்தணைத்து, “சின்னக்குட்டி, நெருப்புனு சொன்னா வாய் வெந்துறாது, அப்பாக்கு ஒண்ணும் ஆகாது” என்றவன் செபியாவிடம், “என்ன விட சின்னவங்க தான் நீங்க, ஆனாலும், அண்ணி தவிர வேற எந்த மரியாதைக் குறைவான பேச்சும் பேசினதில்ல, ஏன்னா, எந்த முறையையும் மரியாதை தவறாம செய்ய தான் நான் நினைப்பேன், வேலை தான் செய்றேன் வெளிநாட்ல, அதுக்காக நம் கலாச்சாரத்தை தெரியாதவன் இல்ல, உண்மையில, நான் ஒரு கிராமத்தான், அதுல எனக்கு எந்த கௌரவ குறைச்சலும் இல்ல. எங்க அத்தைக்கும் சரி என் தங்கச்சிக்கும் சரி பிறந்த வீட்டு சீர் செய்தா நான் தான் அங்க முன்னாடி நிப்பேன், நான் தான் செய்வேன், இதுக்கு மேல யாரவது சீர் செய்றத பத்தி பேசனும்ன்னாலும் எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்ல, வாங்க, என்ன ஏதுனு பேசிக்கலாம்”
பீட்டரின் சித்தப்பா ஹென்றி, “என்ன மாப்பிள்ள, செபியா ஏதோ தெரியாம பேசுறா, நீங்க ஆக வேண்டியத பாருங்க”.
நிம்மி, “அண்ணா, நீ என்ன சண்டியரா? சண்டைக்கு கிளம்பிட்ட, இறக்க வேண்டியதெல்லாம் இறக்கியாச்சானு பாரு, போ”.
நிம்மி சின்ன அத்தை லீமா அழும் குரல் கேட்க, அனைவரும் அவளைக் காண, ரூபன் அவரருகில் சென்று, “என்ன அத்த ஏதாவது தப்பா பேசிட்டேனா”, அவரோ அவன் கைகளைப் பிடித்து, “சந்தோஷத்துல அழுகை வந்திருச்சு, நீ பேசுனதும் என் பிறந்த வீட்டு சொந்தம் முழுசா கிடைச்சுருச்சுனு புரியுது, என்னோட வெகு நாள் ஏக்கம், உன்னால தீர்ந்திடுச்சு”.
நிம்மி, “சின்னஅத்த, இப்படியே இவன புகழ்ந்துட்டு இருந்தா, எப்ப எனக்கு சீர் இறக்குவான், போதும்”.
ரூபன், “சின்னக்குட்டி, பொறாமையா, பொங்காதடா?”
நிம்மி, “என்னக்கா, ரொம்பதான், சரி, நீ மட்டும் ஏன் முன்னாடியே வந்த, மத்தங்களெல்லாம் எங்க?”
அவளின் அண்ணன், “அது அந்த மீசைக்கார மாமா இருக்காருல, அவரோட இரண்டாவது பொண்ண பார்க்க மாப்பிள்ள வீட்டுலேருந்து வராங்கனு, அவர் வந்தே ஆகனும்னு பிடிவாதம் பிடிக்கவும் எல்லாரும் அங்க போயிருக்காங்க, சீக்கிரமே வந்துருவாங்க”
நிம்மி, “யாருண்ணா, அந்த உன்னோட சைட்டோட தங்கச்சியா?”
அவளின் அண்ணன், “தங்கக்குட்டி, ஏன்டா, என் வாழ்க்கையில விளக்கேத்தல என்றாலும் பரவாயில்ல, அணைச்சுறாத, உங்க அண்ணி கேட்டா என்ன தொலைச்சு கட்டிருவா”.
அனைவரும் சிரிக்கவும், ரூபன் பீட்டரிடம், “மாம்ஸ், கொஞ்சம் உங்க பொண்டாடிய அடக்குங்க”.
பீட்டரோ, “அண்ணன்-தங்கச்சிக்கு இடையில நானெல்லாம் வர மாட்டேன்”
ரூபன், “கிரேட் எஸ்கேப், இப்பதான் நீங்க ஒரு நல்ல குடும்பஸ்தன்” என்று விட்டு அவன் அத்தையிடம், “அத்த, லெமன் ஜூஸ் ரெடி பண்ணுங்க, நம்ம வீட்டு ஆட்கள முதல்ல இங்க வர சொல்றேன், அப்பறம் பெரிய மாமா வீட்டுக்கு போகலாம்”.
ரூபன் கூறியபடியே அனைவரும் லீமா வீட்டில் ஜூஸ் குடித்து, நிம்மி வீட்டில் விருந்துண்டு, பொங்கலுக்கு வருமாறு அழைத்து விடுத்து சென்றனர். நிம்மியும் பீட்டரும் தலை பொங்கலையும் சிறப்பித்தே வந்தனர்.
நாட்கள் கடக்க, அன்று நிம்மி, பிராக்டிகல் எக்ஸ்டனலா வேற ஸ்கூல் போறேன் என்று சொல்லி சென்றவளிடம் இருந்து மாலையில் கால் வந்தது. அதை எடுத்து பேசியவன் உடனே அவள் இருக்குமிடம் சென்று காரை நிறுத்தியவன் பதற்றத்துடன் அவளிடம் விரைந்தான். அங்கு அவள் தலையில் கை வைத்து குனிந்து அமர்ந்திருந்தாள். அருகில் இருந்த மற்றொரு ஆசிரியை, “சார் நான் தான் போன் பேசினேன், அவங்களுக்கு மதியம் சாப்பிட்டதுலேருந்து வாமிட் வந்திட்டு இருக்கு, எனக்கென்னவோ அவங்க பிரக்னட்டோனு தோணுது, செக் பண்ணிருங்க” என்றவரிடம் விடைப்பெற்று கிளம்பினர்.
காரில் ஏறியவுடன் பீட்டர், “டாக்டர பார்த்துரலாம்”, நிம்மி, “இல்லத்தான் மெடிக்கல்ல கிட் வாங்கி டெஸ்ட் பண்ணிட்டு போகலாம்” சொல்லவும் கிட் வாங்கி, வீட்டை அடைந்ததும் குளியறை சென்று டெஸ்ட் செய்தவள் வெளியே வந்து, “அத்தான் பாசிட்டிவ்” என்றவுடன் அவளை அணைத்து முத்தமிட்டு, “பஞ்சு மிட்டாய், பறக்குற மாதிரி இருக்குடி, ஒருகாலத்துல கனவுகாணக் கூட பயமாயிருக்கும், நான் உன்ன கல்யாணம் செய்யாம போய்ட்டா, நீ என் பொண்டாட்டி இல்ல, அப்ப எனக்கு உரிமை கிடையாதே, கனவு காணாதேனு எனக்கு நானே சொல்லி வருத்தப்பட்டு இருக்கேன். ஆனா, இப்ப எனக்கு மட்டும் தான் நீ, எனக்கே எனக்குனு” சொல்லி கொண்டே கண்கள் சிரிக்க நின்றிருந்தவளின் இதழைக் கவ்வி கவிபாடினான். நேரம் சென்று, அவளை கைகளில் தூக்கி, பெட்டில் உட்கார வைத்தவன், அவள் மடியில் படுத்துக் கொண்டு, “இன்னும் கொஞ்ச நாள்ல எனக்கு போட்டியா உன் மடியில படுத்துக்க ஆள் வந்துரும், அதனால இப்பவே நான் நல்லா அனுபவிச்சுகிறேன்” சொல்லி வயிற்றில் முத்தமிட அவள் மெய் மறந்திருந்தாள்.
விஷயம் அறிந்து நிம்மியை வீடே கொண்டாடிற்று. மார்னிங் சிக்னஸ் மட்டுமில்லாம மசக்கை வாந்தியும் அவளைப் படுத்தியது. ஏழாம் மாதமே வளைக்காப்பு செய்து தாய்வீட்டினர் அழைத்து சென்றிருந்தனர். ஒன்பதாம் மாத தொடக்கத்திலே அம்மாவை படுத்தியது போதுமென்று, அவர்கள் மகன் இப்பூலகில் அவதரித்து விட்டான்.
ஏழு வருடங்களுக்கு பிறகு,
நடு ஹாலில் கபடி விளையாடி கொண்டிருந்தனர் பீட்டரும், பேட்ரிக்கும். அவர்களுடன் அவர்களின் இரு மகன்களும், மகளும் இருந்தனர். பீட்டர்-நிம்மி மகன் பிறந்ததும், அடுத்த வருடமே பேட்ரிக்-ஜென்னி மகளை பெற்று தந்தனர். மூன்று வருடம் கழித்து மகளைத் தருவாள் என நிம்மி குறித்து நினைத்திருக்க, இரண்டாவதாகவும் மகனையே பெற்றெடுத்தாள்.
சமையலறையில் இருந்து வேகமாக வந்த நிம்மி பீட்டரின் முதுகில் கை வைத்து தள்ளியவள், “எவ்வளவு நேரமா டீ, டிபன் சாப்பிட கூப்பிடறது, காதுலே வாங்காம என்னக்கென்னனு எல்லாரும் விளையாடுறீங்களா?” என்று கத்தவும், அங்கிருந்தவர்கள் தங்களை சுத்தம் செய்ய ஓடி விட, பீட்டர் மட்டும் நிற்க, “ஏன்டி, நான் தான் உனக்கு இளிச்சவாயனா, உன் பிள்ளைகள அடிக்க வேண்டியதுதான”
நிம்மி, “நாம அடிச்சா யார் தாங்குவாங்களோ அவங்கள தான் அடிக்க முடியும், இவன் எவ்வளோ அடிச்சாலும் தாங்குவான்”.
அவன், “நான் தாங்குறது இருக்கட்டும், இன்னைக்கு நீ எவ்வளவு தாங்குறன்னு பாக்குறேன், நைட் இருக்குடி கச்சேரி” எனக் கூறி ரெப்ரஷ் ஆக சென்றான்.
பேட்ரிக் பிள்ளைகளோட வரவும், அவர்களுக்கு வேண்டியதை ஜென்னி எடுத்து வைக்க, நிம்மியோ, “லாக்டவுன் போட்டதும் போதும், உங்க இரண்டு பேர் ஆட்டம் தாங்க முடியல” சொல்லி பொரியவும், அவள் கணவன் அமர்வதைக் கண்டு அவனுக்கு வேண்டியதை வைத்து கொண்டே, “வேலை வேலைனு இரண்டு பேரும் சுத்துறீங்க, பாவம்னு நெனைச்சுருக்கேன், ஆனா இப்ப நீங்க பிள்ளைகளோட சேர்ந்து செய்ற சேட்டையெல்லாம் பாத்தா, ஒரு நாள் கூட உங்களுக்கு லீவே இருக்கக் கூடாதுனு தோணுது” என்று இன்னும் பேசினாள். யாரும் எதுவும் மறுத்து பேசவில்லை. ஏனெனில் அவளை பற்றி அனைவரும் நன்கு அறிவர், அவள் தங்களுக்காக தான் அக்கறையில் பேசுகிறாள் என்று. மூத்த மருமகளாய் அவ்வீட்டின் பொறுப்பை எடுத்து கொண்டு, நாத்தானார்களுக்கு முறை தவறாது சீர் செய்து, கொழுந்தனுக்கு திருமணம் செய்து வைத்து, பிள்ளைகளின் வளர்ப்பு மற்றும் படிப்பைத் திட்டமிட்டு செயல்படுத்தி என்று அவ்வீட்டின் ஆணிவேராய் இருப்பவளின் வார்த்தைக்கு மறுபேச்சு என்பதே கிடையாது. இதற்கு மேலும் இக்குடும்பம் நிம்மியின் வழிகாட்டுதலில் சிறப்பாக இருக்கும் என்று கூறி உங்களிடமிருந்து விடைப் பெறுகிறேன்.