Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Saaralaai Theendinaai Anbae

சாரலாய் தீண்டினாய் அன்பே-1

ஜே.கே.ஆர் ஃபேப்ரிக்ஸ் பிரைவேட் லிமிட்டெட் என்ற வெள்ளியில் மின்னிய எழுத்துகளுடன் பதினொரு மணி வெயிலில் பளபளத்தது அந்த கண்ணாடி பதித்த நான்கு மாடி கட்டிடம். தென்னிந்தியாவின் முன்னணி துணி ஏற்றுமதி நிறுவனங்களில் அதுவும் ஒன்று. அன்று அதன் கீழ்த்தளத்தில் உள்ள ஹெச்.ஆர் டிப்பார்ட்மெண்ட் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஒரே நாளில் அந்த நிறுவனத்தில் நிதி மற்றும் கணக்கியல் துறையில் இண்டர்ன்ஷிப்பிற்கான நேர்க்காணலும், நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டரின் உதவியாளருக்கான நேர்க்காணலும் நடைபெற்றதே காரணம்.

ஹெச்.ஆர் டிப்பார்ட்மெண்டின் தலைமை அலுவலர் இந்த இரண்டு பணிகளுக்கும் சல்லடை போட்டுச் சலித்து திறமையானவர்களாக தேர்வு செய்திருந்தார். ஏனென்றால் அவர்களின் சேர்மன் நாராயணனைப் போல அல்ல அவரது மகனான தற்போதையை மேனேஜிங் டைரக்டர். அவனுக்கு எல்லாமே கச்சிதமாக இருக்க வேண்டும். சிறிய தவறைக் கூட அவனால் பொறுத்துக் கொள்ள முடியாது. இதை எல்லாம் மனதில் வைத்து ஆட்களையும் தேர்வு செய்து எம்.டிக்கு அது தொடர்பான விவரங்களை அனுப்பி வைத்துவிட்டு நேர்க்காணல் அறையை விட்டு வெளியேறினார்.

ஒரு வழியாக நேர்க்காணலை முடித்த திருப்தியில் அவர் தனது அறையை நோக்கிச் செல்லும் போது “எக்ஸ்யூஸ் மீ சார்” என்ற குயிலையும் தோற்கடிக்கும் இனிய குரல் அவர் காதில் விழ இப்போது யார் என்று அலுப்புடன் திரும்பி பார்க்க அங்கே நின்று கொண்டிருந்தாள் ஐந்தரையடி உயரத்தில் ஒரு பெண். அவளை ஏறிட்டுப் பார்த்தவர் “எஸ்! சொல்லுங்க” என்றபடி அவளிடம் திரும்பினார்.

அவள் தவித்துப் போன குரலில் “சார் ஆக்சுவலி நான் அக்கவுண்ட்ஸ் செக்சன்ல இண்டர்ன்ஷிப்புக்காக தான் இங்கே வந்தேன். பட் இங்கே நடந்த சின்ன கன்ஃபியூசன்ல நான் கிரவுண்ட் ஃப்ளோர் செகண்ட் லெஃப்ட் ரூமுக்குப் பதிலா கிரவுண்ட் ஃப்ளோர் தேர்ட் லெஃப்ட் ரூமுக்குப் வந்துட்டேன். நீங்க என்னை எம்.டியோட செகரட்டரியா செலக்ட் பண்ணியிருக்கிங்க. ஆனா நான் வந்தது அக்கவுண்ட்ஸ் டிப்பார்மெண்ட் இண்டர்ன்ஷிப்புக்காக தான். சோ நீங்க கொஞ்சம் கன்சிடர் பண்ணுனிங்கன்னா…” என்று இழுக்க



Advertisement

அவர் தலையிலடித்தவராய் “என்னம்மா இப்போ வந்து சொன்னா என்ன அர்த்தம்? உங்களைச் சொல்லிக் குத்தம் இல்ல. ரெண்டு கேட்டகரிக்கும் ஒரே குவாலிஃபிகேசன்னு சொன்னதால தான் இந்த கன்ஃபியூசன். ஆனா இப்போ என்னால ஒன்னும் பண்ண முடியாதேமா! பிகாஸ் செலக்ட் பண்ணுன கேண்டிடேட் நேம் லிஸ்ட் எம்.டி டேபிளுக்குப் போயிடுச்சு. அவர் உங்க ஆஃபர் லெட்டர்ல கையெழுத்து போட்டதுக்கு அப்புறம் இனி அதை சேன்ஜ் பண்ண முடியாதுமா. இப்போ கன்சிடர் பண்ண வேண்டியது நான் இல்ல, நீங்க தான்! பிகாஸ் ஜே.கே.ஆர் ஃபேப்ரிக்ஸ்ல ஜாப் கிடைக்கிறது இப்போ குதுரைக்கொம்புமா! புரிஞ்சு நடந்துக்கோங்க” என்றபடி அவரது அறையை நோக்கிச் சென்றார்.

அவர் சொன்னதைக் கேட்டுவிட்டு இனி என்ன செய்வது என்று புரியாமல் விழித்தவள் உடனே நினைவு வந்தவளாய் தன் மொபைலை எடுத்து அவளுக்கு எல்லாவுமாய் இருப்பவளுக்கு அழைத்தாள்.

அவள் அழைப்பை ஏற்றதும் நடந்ததை விவரித்துவிட்டு “இப்போ நான் என்ன பண்ணுறதுக்கா? எனக்கு கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு?” என்று பதற்றத்துடன் உரைக்க

Advertisement

மறுமுனையில் பேசியவள் “நீ அந்த ஜாப்ல ஜாயின் பண்ணிடுடி! பிகாஸ் இப்போ மட்டும் இந்த ஜாபை நீ ரிஜெக்ட் பண்ணுனேனு வையேன் சித்தி கண்டிப்பா உன்னை திருநெல்வேலிக்கு மூட்டை முடிச்சைக் கட்டச் சொல்லிடுவாங்க. அப்புறம் சி.ஏ பண்ணனும்கிற உன்னோட கனவு கனவாவே போயிடும்” என்று அவளுக்கு அறிவுறுத்த

Advertisement

அந்த நேர்க்காணலுக்கு வந்தவள் “இருந்தாலும் எனக்கு அக்கவுண்ட்ஸ்ல எக்ஸ்பீரியன்ஸ் வேணும்னு தான் நான் இந்த கன்சர்ன்ல இண்டர்வியூவுக்கே வந்தேன். எனக்கு செகரட்டரினா என்ன பண்ணுவாங்கன்னு கூட தெரியாது. ஜாப் நேச்சர் தெரியாம என்னால எப்பிடி ஒர்க் பண்ண முடியும்?” என்று கையைப் பிசைந்தாள் நம்பிக்கையின்றி.

அவளுக்கு மொபைலில் மறுமொழி கூறிக் கொண்டிருந்தவளோ “அடியே நீ என்ன அக்கவுண்டெண்டாவா போகப் போற? அக்கவுண்ட்ஸ் சப்ஜெக்டை நீ சி.ஏல படிச்சிக்கோ. இப்போ உனக்கு தேவை சென்னையில நீ தங்குறதுக்கு ஒரு வேலை. அது கிடைச்சும் வேண்டானு சொல்லிட்டு வந்தா சித்தி அடுத்த மாசமே உன்னை எவன் தலையிலயாச்சும் கட்டி வைக்கப் பிளான் போட்டுருவாங்க. நல்லா யோசி” என்றுச் சொல்ல அவளும் வேலையில் சேர்ந்து கொள்வதாக தெரிவித்துவிட்டு போனை வைத்தாள்.

ஒரு பெருமூச்சை எடுத்துவிட்டபடி ஹெச்.ஆரின் அறையை நோக்கிச் சென்றவள் கதவில் நாசூக்காகத் தட்டிவிட்டு அவர் உள்ளே வரச் சொல்லவும் அவரின் முன் சென்று நின்றாள். அவரிடம் தான் எம்.டியின் உதவியாளினியாக சேரத் தயாராக இருப்பதாகச் சொல்ல அவர் எம்.டியின் அறையைக் காட்டி அவளை அங்கே அனுப்பி வைத்தார்.

Advertisement

என்ன தான் தைரியமாக இருப்பதைப் போல காட்டிக் கொண்டாலும் முன்னே பின்னே அனுபவமற்ற வேலையில் எப்படி தான் நிலைத்திருக்கப் போகிறோமோ என்ற தயக்கத்துடனே மேனேஜிங் டைரக்டரின் அறைக்கதவைத் தட்டி “மே ஐ கம் இன் சார்?” என்க உள்ளே வருமாறு பதில் வர அந்த கண்ணாடிக்கதவைத் திறந்தபடி உள்ளே வந்தாள் அவள்.

அங்கே மேனேஜிங் டைரக்டர் என்ற பெயர்ப்பலகை மேஜையின் ஒருபுறம் வீற்றிருக்க அதன் மறுபுறம் ஒரு லேப்டாப் ஜம்மென்று அமர்ந்திருந்தது. அவளது கண்ணுக்கு லேப்டாப்பின் திரை மறைத்து இருந்ததால் நாற்காலியில் அமர்ந்திருப்பவரது முகம் தெரியவில்லை. லேப்டாப்பின் கீபோர்டில் நர்த்தனமாடும் கைவிரல்களுக்குச் சொந்தகாரனின் பின்னே இருந்த சுவரில் ஜே.கே.ஆர் என்ற பெரிய பொன்னிற எழுத்துக்கள் அவளுக்குப் பிரமிப்பை உண்டு பண்ணியது என்னவோ உண்மை.

பிரமிப்பில் விரிந்த கண்களுடன் நின்றவளைப் பார்க்க லேப்டாப்பின் திரையிலிருந்து கண்ணை விலக்கினான் ஜே.கே.ஆர் நிறுவனத்தின் எம்.டியான சூரியா.

லேப்டாப்பின் திரை மறைத்த அவனது சிரம் உயரத் தொடங்கும் போதே அவளின் இதயம் பந்தயக்குதிரை போல தடதடத்துக் கொண்டிருக்க அவனோ அவளைக் கண்ட அதிர்ச்சியில் சுழல் நாற்காலியிலிருந்து எழுந்து விட்டான்.

எழுந்தவனின் இதழ்கள் புன்னகையைச் சிந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இதே புன்னகையைக் கண்டு மயங்கியவள் இப்போதும் மயங்கி தான் நின்றாள். அலையான கேசம், ஆளை வெட்டும் புருவங்கள், கூர்நாசியுடன் இப்போது இதழில் விளையாடும் சிரிப்பு அவன் கன்னத்துக்கு அளித்திருந்த பரிசாய் இரு கன்னங்களிலும் விழுந்த குழிகளுடன் கச்சிதமாக டிரிம் செய்யப்பட்டிருந்த இருநாள் தாடியில் அன்று எப்படி அவள் மனதை தன் வசப்படுத்தினானோ அதே கம்பீரம், வசீகரத்துடன் அவளை நோக்கி வந்தான் சூரியா.

தன் எதிரே நிற்கும் முட்டைக்கண்ணழகியின் விரிந்த கண்கள் அவனுக்குச் சிரிப்பை வரவழைக்க அவள் கண்ணுக்கு முன்னே கைகளை ஆட்டியபடி “ஹேய் பிரவுனி!” என்ற வார்த்தையை அவன் உச்சரித்ததும் ஒரு முறை துள்ளி அடங்கியது அவளின் இதயம்.

அவனோ அவள் பதில் பேசாமல் இருப்பதைக் கண்டு தான் பிரவுனி என்று அழைத்தது வழக்கம் போல கோபத்தை அவளுக்கு வரவழைத்து விட்டதோ என்று எண்ணியவனாய் “ஹேய் சாரிம்மா! ஓகே ஓகே! இனி பிரவுனினு கூப்பிடல. ஹாய் சந்தியா” என்றுச் சொல்லிக் கண் சிமிட்ட அந்த கண் சிமிட்டலில் பூலோகத்துக்குத் திரும்பினாள் சந்தியா. சூரியாவின் பிரவுனி. முட்டைக்கண்களுடன், கருநிறவில்லாய் புருவங்களுடன், எள்ளுப்பூவை ஒத்த நாசியுடன், குட்டி ஸ்ட்ராபெர்ரியாய் மின்னும் இதழ்களுடன் யாரையும் ஒரு முறைக்கு இரு முறை திரும்பிப் பார்க்கச் சொல்லும் மாநிறத்தில் மின்னும் பேரழகு முகத்துக்குச் சொந்தக்காரி.

தன் எதிரே நிற்பவனின் கண்சிமிட்டலில் சுதாரித்தவளின் வாய் அவளை அறியாமல் “மார்ஸ்மாலோ” என்க அவன் அதை அவளது வாயசைப்பில் இருந்தே கண்டுவிட்டான். குறும்புப் புன்னகையுடன் “ம்ம்ம்…அதே தான், அதே மார்ஸ்மாலோ தான். சொல்லு இப்போ பார்க்க எப்பிடி இருக்கேன்?” என்று இலகு குரலில் கேட்டபடி பேண்ட்பாக்கெட்டுக்குள் கையை விட்டபடி நின்றவனின் தோற்றம் எப்போதும் போல அருமை தான்.

ஆனால் சந்தியாவுக்கு தான் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. மெதுவாக “நல்லா இருக்கிங்க” என்றவளின் குரலில் அவன் முகம் ஆச்சரியத்தை தத்தெடுத்தது. அவளைப் பார்த்தபடியே யோசனையுடன் தாடையைத் தடவியபடி “ம்ஹூம்! இது கண்டிப்பா சந்தியாவா இருக்க முடியாது. பிகாஸ் என்னோட பிரவுனிக்கு மூச்சுக்கு இரண்டாயிரம் வார்த்தை பேசலைனா தூக்கமே வராது. ஆனா நீ இவ்ளோ சைலண்டா நிக்கிற? இது உனக்கு அழகு இல்ல பிரவுனி” என்றபடி ஒரு பக்க புருவத்தை மட்டும் ஏற்றி இறக்கினான்.

சந்தியாவும் அவன் சொன்ன வார்த்தையில் இருந்த நூறு சதவீத உண்மையைப் புரிந்து கொண்டவள் பழைய மெதுவான குரலிலேயே “மனுசங்க காலத்துக்கு ஏத்தபடி மாறிடுவாங்க மார்ஸ்…….சூரியா! நானும் மாறிட்டேன். எவ்ளோ நாள் தான் சின்னப்பிள்ளையாவே இருக்கறது?” என்றாள் நைந்து போன குரலில். அந்தக் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவன் இதயத்தில் கிடுக்குப்பிடி போட தலையை உலுக்கி தன்னை சமனப்படுத்திக் கொண்டபடி பேச்சை மாற்றினான் சூரியா.

“லீவ் இட் பிரவுனி! உன்னை த்ரீ இயர்ஸ் கழிச்சு மீட் பண்ணுனதுல நான் எவ்ளோ ஹேப்பியா இருக்கேன் தெரியுமா? பை த வே நீ இங்கே எதுக்கு வந்த?”

“நான் இன்னைக்கு நடந்த இண்டர்வியூல இந்த கம்பெனி எம்.டிக்கு செகரட்டரியா செலக்ட் ஆயிருக்கேன் சூரியா”

“வாட்? ரியலி? ஓ மை காட். ஐ காண்ட் பிலீவ் திஸ் பிரவுனி. த்ரீ இயர்ஸ் கழிச்சு உன்னை மீட் பண்ணுன சந்தோசத்தையே இன்னும் ஃபுல்லா ஃபீல் பண்ணி முடிக்கல நானு! இதுல நீ தான் செகரட்டரினு சொன்னா நிஜமா சொல்லுறேன். இட் மஸ்ட் பீ அ டிரீம்” என்றுச் சொல்ல அவனது வார்த்தைகள் மனதிற்கு இதத்தைக்  கொடுத்தாலும் வருங்காலமற்ற அந்த உணர்வுகள் அனைத்துக்கும் தடை போட்டிருந்த அவளின் மூளை அந்த இதத்தை முழுவதுமாக அனுபவிக்கவிடவில்லை.

வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் “நீங்க நம்புனாலும் நம்பாட்டியும் இது தான் சார் உண்மை. நான் சந்தியா தேவராஜ், இந்த ஆபிஸ்ல உங்க செகரட்டரியா ஒர்க் பண்ண வந்திருக்கேன்” என்றாள் தாமரை இலை தண்ணீர் போல.

முன்பு போல் இல்லாமல் அவளது குரலில் இருந்த விலகல் அவனை ஏதோ செய்ய அதை மறைத்துக் கொண்ட சூரியா “ஓகே! நீ இப்பிடியே இருந்துக்கோ. ஐ டோண்ட் கேர். பட் எனக்கு என்னோட பழைய பிரவுனியை தான் பிடிக்கும். இந்த உம்மணாமூஞ்சியை சுத்தமா பிடிக்கல” என்றான் கேலியாக.

அவனது உம்மணாமூஞ்சி என்ற வார்த்தை பிரயோகத்தில் திகைத்தவளாய் அவள் விழி விரிக்க அவனோ காலரைத் தூக்கி விட்டபடி பெருமையாக “எல்லாம் உன் கிட்ட இருந்து கத்துக்கிட்ட வார்த்தை தான் பிரவுனி” என்றான். அவன் சொன்ன விதத்தில் அவள் சிரித்துவிட “தேங்க் காட்! இப்போவாச்சும் சிரிச்சியே நீ” என்றான் சூரியா அவளைச் சிரிக்க வைத்துவிட்ட நிம்மதியுடன்.

சந்தியா அதே புன்னகையுடன் “உங்க அரட்டை கச்சேரி முடிஞ்சுச்சுனா கொஞ்சம் ஆபிஸ் ஒர்க்கையும் பார்க்கலாமா சார்?” என்றாள் நாசூக்காக. அதைப் புரிந்து கொண்டவன் அவளை இருக்கையில் அமரச் சொல்லிவிட்டு அவள் செய்ய வேண்டிய பணிகளின் இயல்பை விளக்கினான்.

பெரிதாக ஒன்றும் இல்லை. அவனது மீட்டிங்குகளுக்கான அட்டவணையை சரி பார்ப்பது, மீட்டிங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வது, மேனேஜிங் டைரக்டருக்கான தொலைபேசி அழைப்புகளை கவனிப்பது, இன்னும் சிற்சில பணிகளை அவளுக்கு விவரித்தவன் மறக்காமல் அவளுக்கு இது எல்லாம் சம்மதமா என்றும் கேட்க தவறவில்லை.

அப்போது கூட அவளது மனது “சந்தியா நீ அக்கவுண்ட்ஸ் செக்சனுக்கு தானே போகணும்னு ஆசைப்பட்ட. பேசாம அதை இவன் கிட்ட சொல்லிட்டு டிப்பார்ட்மெண்ட் மாறிக்கோ” என்று நச்சரிக்க அவளால் அதைக் கேட்க முடியவில்லை. ஏனோ அவனிடம் வாய் விட்டு எதையும் கேட்க அவளுக்கு இஷ்டமில்லை. தனக்கு இந்தப் பணி தான் என்று விதித்திருக்கிறது என்ற பெருமூச்சுடன் சம்மதம் என்று தலையாட்டினாள் சந்தியா.

சூரியாவோ தான் பேசிய இத்தனை வார்த்தைகளுக்கு அவள் எண்ணி எண்ணி பேசியதைக் கண்டவன் அவள் மிகவும் மாறிவிட்டாள் போலும் என்று நினைத்தபடியே அவளது அலுவலக அறையைக் காட்டினான்.

அவனது அறையில் இருக்கும் அனைத்து வசதிகளும் நிறைந்த அலுவலக அறை தான் அவளுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. அழகான நீண்ட மேஜையும், அதன் மீது ஒரு கம்ப்யூட்டரும், பக்கத்தில் துணையாக ஒரு பென்ஸ்டாண்ட் என்று பக்காவாக இருந்தது. அவளுக்குப் பிடித்திருக்கிறதா என்பதைக் கேட்டு உறுதி செய்தவன் அவளுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு “நீ டுமாரோல இருந்து ஜாயின் பண்ணிக்கோ பிரவுனி. இப்போ நீ எங்கே தங்கியிருக்க? நான் வேணும்னா உன்னை டிராப் பண்ணவா?” என்று மூச்சுவிடாமல் கேள்வி கேட்க அவளுக்கே அயர்ச்சியாக இருந்தது.

இவனைக் கண்டா அந்த ஹெச்.ஆர் இவ்வளவு பயப்படுகிறார் என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை. இந்த மூன்று வருடம் தன்னை மட்டுமல்ல அவனையும் தான் மாற்றிவிட்டது. மவுனமாக தலையசைத்து மறுத்தவள் “நானே போயிக்கிறேன் சூரியா. உங்களுக்கு எதுக்கு சிரமம்? டுமாரோ பார்க்கலாம்” என்றபடி அவனிடம் இருந்து விடைபெற அவளது கையைப் பற்றிக் குலுக்கினான் சூரியா. எப்போதும் போல அவன் கரத்திலிருந்து விடுபடும் எண்ணம் அவளது கரத்துக்கு இல்லை போலும்.

கையை மெதுவாக உருவிக் கொண்டவள் “நான் கிளம்புறேன்” என்று ஒரு புன்னகையோடு விடைபெற சூரியா மறக்காமல் அவளது மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டு அவளை வழியனுப்பி வைத்தான்.

சந்தியா எவ்வளவு வேகமாக அந்த கட்டிடத்திலிருந்து வெளியேற முடியுமோ அவ்வளவு வேகமாக வெளியேறினாள். கண்ணை மறைத்த கண்ணீர் இமை தாண்டி கன்னத்தை தீண்டும் முன் தட்டு தடுமாறி ஒரு ஆட்டோவைப் பிடித்தவள் அதில் அமர்ந்து அவர்கள் வீட்டு முகவரியைச் சீராகச் சொல்லிவிட்டு மூச்சு வாங்கினாள்.

அடுத்த அரைமணிநேரத்தில் வீட்டின் முன் இறங்கியவளின் மனதில் இரும்புக்குண்டை தூக்கி வைத்தது போல பாரமாக இருக்கவே வீட்டினுள் நுழைந்தவள் அவளின் வார்ட்ரோபில் உடைகளுக்கு நடுவில் மறைத்து வைத்திருந்த அந்த புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள்.

அதை கையில் ஏந்தியபடியே தரையில் அமர்ந்தவளுக்கு அந்த நாள் இன்னும் நினைவு இருக்கிறது. அதன் நியாபகார்த்தமாக இருக்கும் இந்த புகைப்படம் அவளுக்கு என்றுமே பொக்கிஷம் தான். அதில் சந்தியாவின் பெற்றோரும், அவளது பெரியம்மா பெரியப்பாவும் இரு புறமும் அமர்ந்திருக்க அதன் நடுநாயகமாக அமர்ந்திருந்தார் அவளது பாட்டி கோமதி. அவளது பெரியப்பா மகளான சுமித்ரா தரையில் பாட்டியின் காலடியில் அமர்ந்திருக்க, அவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கையின் பின்புறம் நின்றிருந்தனர் சூரியாவும் சந்தியாவும். சூரியாவின் முகத்தில் அந்த அழகிய குடும்பத்தில் தானும் ஒரு அங்கமாகிவிட்ட மகிழ்ச்சி மின்ன, சந்தியாவோ தனது மனதிற்கினியவனை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்தவளின் விழிகள் நீரை இறைக்க தயாராக மனமோ அந்த அழகிய நாட்களை நோக்கிப் பயணித்தது. அது அவளது வாழ்வின் வசந்தகாலம். மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய அந்த வசந்தகாலத்தை நோக்கிச் சென்றது அவளது மனம்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்….

மேலகரம், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பசிய வயல்களுக்கும், கண்ணையும் மனதையும் குளிர்விக்கும் இயற்கைக்காட்சிகளுக்கும் பெயர் போன பெரிய கிராமம். திருக்குற்றாலக் குறவஞ்சியை எழுதிய திரிகூடராசப்பக் கவிராயர் பிறந்த அந்த மண் இன்னும் பழமை மாறாத அழகிய வீடுகள், வெள்ளைமனம் படைத்த மனிதர்கள், அதே சமயம் இக்கால ஓட்டத்துக்கு ஏற்ற சிற்சில வசதிகளையும் தன்னகத்தே கொண்டு குற்றாலத்துக்கும் செங்கோட்டைக்கும் இடையே அமைந்துள்ள அழகிய இடம்.

அங்கிருந்த பெரும்பாலான வீடுகளின் கூரையை நாழி ஓடுகள் அலங்கரிக்க அதன் கருநிறமே அந்த வீடுகள் எத்தனை தலைமுறை கடந்து நிற்கின்றன என்பதை பார்ப்பவர்களுக்குப் புரியவைக்கும். எங்கும் தெரியும் பச்சை நிறமே இயற்கை அன்னை அந்த ஊருக்கு அளித்திருந்த  கொடையை விளக்க அங்கே கம்பீரமாக நின்றது ஒரு பழங்கால நாழி ஓடு பதித்த பெரிய வீடு. வீட்டின் முன்னே நடராஜபவனம் என்ற பெயருடன் வீட்டைச் சுற்றிலும் செம்பருத்தி, கொய்யா, தென்னை மரங்கள் சூழ்ந்திருக்க கிட்டத்தட்ட ஒரு சிறிய வனத்துக்குள் இருப்பது போல தோற்றமளித்தது அந்த வீடு.

வீட்டின் கலகலப்புக்கு காரணம் அந்த வீட்டின் சொந்தக்காரரான காலஞ்சென்ற நடராஜனின் தங்கையும் அதன் கூடத்தில் அமர்ந்திருந்த அந்த இரு நடுத்தர வயது ஆண்களின் மாமியாருமான கோமதி. அதில் மூத்தவர் சதாசிவம் கோமதியின் மூத்தமகளான ரேவதியை மணந்து அவர்களுக்கு பிறந்தவள் தான் சுமித்ரா. இளையரான தேவராஜுக்கு தனது இளையமகள் ரேணுகாவை மணமுடித்திருந்தார் அந்த பெண்மணி. அவர்களின் வாரிசாக அவதரித்தவள் தான் சந்தியா. அந்த குடும்பத்தின் செல்ல பேத்தி.

அவளுக்கும் சுமித்ராவுக்கும் வெறும் இரண்டு மாத இடைவெளி தான். ஆனால் சுமித்ராவின் பொறுப்பில் பாதி கூட இல்லை என்று சந்தியாவை நினைத்து வருந்திக் கொண்டிருந்தார் அவளின் தாயான ரேணுகா.

“இங்க பாருங்கம்மா! எங்க வேலையால இவ படிப்பு கெட்டுப் போயிடக் கூடாதுனு தான் பாளையங்கோட்டையில ஹாஸ்டல்ல சேர்த்து படிக்க வச்சோம். இவ இவ்ளோ சேட்டை பண்ணுற பொண்ணா மாறுவானு நான் என்ன கனவா கண்டேன்? இப்போ கூட பாருங்க, சுமி கண்ணம்மா நமக்காக கிச்சன்ல டீ போட்டுட்டிருக்கா! இது குழந்தை மாதிரி உங்க மடியில படுத்திருக்கு” என்று நொடித்தவர் “சந்தியா வீடான வீட்டுல பொம்பளைப்பிள்ளை இப்பிடி பகல்ல படுத்திருந்தா விளங்குமா? இதுல உன் பாட்டி உனக்கு செல்லம் வேற! எழுந்திருச்சு உக்காரு” என்று அதட்ட இவ்வளவு நேரம் அந்த உரையாடலைக் கவனித்துவிட்டு யாருக்கோ சொல்கிறார்கள் என்று எண்ணியவாறு படுத்திருந்தவள் வெகுண்டு எழுந்தாள்.

தன்னைத் திட்டும் அன்னையைப் பார்க்காமல் பாட்டியிடம் திரும்பியவள் “இங்க பாரு கோம்ஸ்! உன் பொண்ணு எப்போ பாரு என்னை திட்டிட்டே இருக்கு. நானே எப்போவாச்சும் தான் இவங்களைப் பார்க்கிறேன். அப்போவும் என்னை திட்டுனா நான் என்ன பண்ணுறது? அன்னைக்கு ஹாஸ்டல் வெகேட் பண்ணிட்டு வர்றச்ச அந்த மதர் நான் ரொம்ப சேட்டை பண்ணுறேனு அம்மா கிட்ட சொல்லிட்டாங்க. அதை வச்சே என்னை இப்பிடி திட்டி தீர்க்கிறாங்க. மத்த நாள்ல கூட பரவாயில்ல. பிறந்தநாள் அதுவுமா ஒரு குழந்தையை மனசாட்சி இல்லாம திட்டுற அநியாயம் எங்கேயாச்சும் நீ கேள்விப்பட்டிருக்கியா கோம்ஸ்?” என்றுக் கேட்டு விட்டு அன்னையைப் பார்க்க அவரோ தேவராஜை முறைத்தார்.

தேவராஜை பார்த்து நமட்டுச்சிரிப்பு சிரித்த சந்தியா “மா! ஒரு ஸ்டிரிக்ட் அண்ட் ஹானஸ்டான கவர்மெண்ட் ஆபிஸரை கண்ணாலயே மிரட்டுறிங்களே. வாட் அ டேலண்ட்?” என்று தந்தையை வம்பிக்கிழுத்தாள்,. அதற்குள் சுமித்ரா டீயுடன் வந்துவிட அந்த குறைசொல்லும் படலம் சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சந்தியாவை எவ்வளவு தான் திட்டினாலும் ரேணுகாவுக்கு அவள் என்றால் உயிர். அவரும் கணவரும் அரசு அதிகாரிகளாகப் பணிபுரிவதால் அடிக்கடி இடமாற்றம் நிகழ்வது சகஜம். அதிலும் அவர்கள் நேர்மையானவர்கள் என்பதால் அடிக்கடி தூக்கியடிக்கப்பட்டனர். அவர்களின் நேர்மை எங்கே சந்தியாவின் உயிருக்கு ஆபத்தாகப் போய் விடுமோ என்று பயந்தவர்கள் அவளது பன்னிரெண்டு வயதில் பாளையங்கோட்டையில் விடுதியுடன் கூடிய கான்வென்ட் ஒன்றில் அவளைச் சேர்த்துவிட்டு நிம்மதியுடன் சென்றனர்.

ரேவதி மனம் பொறுக்காமல் தானே சந்தியாவை பார்த்துக் கொள்வதாகக் கூறினாலும் அச்சமயம் தான் அவருக்கு கர்ப்பப்பையை நீக்கும் அறுவை சிகிச்சை நடைபெற்றிருந்ததால் அவரையே சுமித்ரா தான் கவனித்துக் கொள்ள வேண்டிய நிலமை. எனவே ரேணுகா அது சரி வராது என்று மறுத்தவர் அவள் விடுதியிலேயே இருக்கட்டும், வேண்டுமென்றால் விடுமுறைக்கு மட்டும் இங்கே வந்து போகட்டும் என்று உறுதியாய் கூறிவிட்டார்.

சந்தியா பெற்றோரின் அரவணைப்புக்காக தவித்தவள் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மறைக்க தன்னை குறும்புக்காரியாக மாற்றிக் கொண்டாள். பள்ளியில் அவள் செய்யாத குறும்பே இல்லை என்று கூறலாம். ஆனால் படிப்பிலும் படு சூட்டிகை. விடுமுறை நாட்களில் அவள் வந்துவிட்டால் சுமித்ராவுக்கு கொண்டாட்டம் தான். சந்தியாவுக்கும் அவளது ‘சுமிக்கா’ மீது கொள்ளைப்பிரியம்.

இதோ பள்ளிப்படிப்பும் முடிந்துவிட்டது. இனி அவளை தனியே விடுதியில் தங்கவிட்டால் அவளது சேட்டைகள் எல்லை மீறிவிடும் என்று பயந்தவர் சுமித்ராவுடன் இருந்தால் அவளைப் பார்த்தாவது மகளுக்கு பொறுப்பு வந்தவிடாதா என்ற நப்பாசையில் அக்காவின் வீட்டில் மகளை விட வந்திருந்தார்.

சந்தியாவும் இனி அவளது சுமிக்காவுடனே இருபத்து நான்கு மணிநேரமும் இருக்கலாம் என்ற ஆவலில் பெரியப்பா வீட்டிலேயே தங்கி கல்லூரிப் படிப்பைத் தொடர ஒத்துக் கொண்டாள். அந்த மண் அவளுக்கு தரப் போகும் காயத்தை அறியாமல் துள்ளலுடன் வலம் வந்தாள் அந்த பூங்குயில்.

 

சாரல் வீசும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!