இந்த யோசனையுடன் மனம் அலைபாய்ந்துக் கொண்டிருக்கச் சிறிது நேரத்தில் சூரியாவும் வந்துவிட்டான். வந்தவனின் கையில் ஷாப்பிங் சென்று வந்ததன் அடையாளமாக பையுடன் வந்தவன் சந்தியாவிடம் அதை நீட்ட அவள் அதை வாங்குவதா வேண்டாமா என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்த ஆரம்பித்தாள்.
சூரியா தான் நீட்டியும் அவள் வாங்காமல் நிற்பதைக் கண்டு “ஐ நோ பிரவுனி, உனக்கு என் மேல செம கோவம்…பட் நான் என்ன பண்ணுறது? சாயா ரொம்ப பிளீஸ் பண்ணி கேட்டா என்னால எதையுமே மறுக்க முடியாது… அதுவுமில்லாம இங்கே இருக்கிறப்போ தானே அவ கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியும்…” என்று தான் சாயா அழைத்தவுடன் செல்வதற்கான காரணத்தை விளக்க முயல
சந்தியா ஏற்கெனவே சாயாவின் வார்த்தைகள் மனதில் உண்டாக்கிய அதிர்வலைகள் அடங்கும் முன்னரே அதே வார்த்தைகளை சூரியாவும் உதிர்க்கவே மறு வார்த்தை எதுவும் பேசாமல் அமைதி காக்க ஆரம்பித்தாள்.
அவளின் அமைதிக்கான காரணத்தை சமாதானம் என்று எடுத்துக் கொண்டவன் “நாங்க ஒரு ஷாப்பிங் மாலுக்குப் போனோம் பிரவுனி… அங்கே இந்த ஷாரியைப் பார்த்தேன்.. உனக்கு இந்தக் கலர் சூப்பரா இருக்கும்னு வாங்குனேன்… நாளைக்கு இந்த வருசத்தோட கடைசி நாள்…சோ நம்ம இங்கே பக்கத்துல எதாவது டெம்பிளுக்குப் போயிட்டு வந்துடுவோம்” என்று சாதாரணமாகக் கூற
சந்தியா “தேவையில்லை” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்துவிட்டு தனது அறைக்குள் செல்ல முயல சூரியா வேகமாகச் சென்று அவளது கரத்தைப் பற்றி நிறுத்தினான்.
“எது தேவையில்லை?”
“உன்னோட எக்ஸ்ப்ளனேசன், இந்த ஷாரி, நாளைக்கு கோயிலுக்குப் போவோம்னு சொன்னியே இது மூனுமே தேவையில்லை…”
[the_ad id=”6605″]
“பிரவுனி……” என்றவனை இடைமறித்தவள்
“நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டிருக்க? இதை வாங்கிட்டு வந்து குடுத்துட்டா நான் சமாதானம் ஆயிடுவேனு உன்னோட் சோ கால்ட் ஃப்ரெண்ட் சொன்னாளா?” என்று வார்த்தைகளை எரிச்சலுடன் மொழிய சூரியாவால் அவளைச் சமாதானம் செய்ய இயலவில்லை.
அவன் செய்வதறியாது நிற்பது கூட சந்தியாவுக்கு இப்போது கூட தோழியை விட்டுக்கொடுக்க மனமில்லாதவனாக இருப்பதைப் போன்ற தோணவும் அங்கே நிற்கப் பிடிக்காமல் மாடிக்குச் சென்றுவிட்டாள்.
அங்கே சென்றவள் பெரிய சாளரத்தின் திண்டில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். சாயாவின் வார்த்தைகளோடு சூரியாவின் வார்த்தைகளும் ஒன்றாய்ச் சேர்ந்து மனதை வருத்த அவளால் எதையுமே தெளிவாக யோசிக்க முடியவில்லை. அவள் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி வரும் காலடிச்சத்தம் சூரியா தான் வருகிறான் என்பதை அறிவித்துவிட அவனைக் கண்டுகொள்ளாமல் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் சந்தியா.
சூரியா தன்னைக் கவனிக்காதது போல நடித்தவளைக் கண்டுகொண்டவன் “எவ்ளோ அழகா நடிக்கிற பிரவுனி? இரு வர்றேன்” என்று மனதிற்குள் பேசிக் கொண்டபடி அவள் அருகில் சென்று நிற்க சந்தியா அதையும் கவனிக்காதது போலவே வெளியே தெரியும் புல்தரையை வெறிக்க வெறிக்கப் பார்க்க அப்போது கூட கோபத்தில் நெரிந்திருக்கும் அவளது புருவங்களைப் பார்த்து வாய்க்குள் புன்னகைத்துக் கொண்டான் சூரியா.
வேண்டுமென்று தன்னைக் கவனிக்காதது போல நடித்துக் கொண்டிருப்பவளின் முகம் அருகே குனிந்தவனின் மூச்சுக்காற்று சந்தியாவின் கழுத்தில் படவுமே அவளுக்கு ஏனோ அவனது ‘ஃப்ரெண்ட்ஷிப் கிஸ்’ நினைவுக்கு வர சட்டென்று திரும்பி அவனைத் தள்ளி நிறுத்தியவள் “இன்னொரு தடவை நீ ஃப்ரெண்ட்ஷிப் கிஸ் அது இதுனு எதாவது சொல்லி என் கிட்ட வந்தனு வையேன்… ஃப்ரெண்டுனு கூடப் பார்க்க மாட்டேன் மார்ஸ்மாலோ….மவனே மர் கயா தான்” என்று ஆட்காட்டிவிரலை நீட்டி மிரட்ட சூரியா அவள் பதறிய விதத்தில் சிரிக்க ஆரம்பித்தான்.
சிரித்து முடித்தவன் “இருந்தாலும் உனக்கு இவ்ளோ இமேஜினேசன் பவர் இருக்கக் கூடாது பிரவுனி… நான் ஜஸ்ட் உன்னை பயம் காட்ட டிரை பண்ணுனேன்” என்று கூற சந்தியா “போடா லூசு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்தும் செல்ல முயல அதற்குள் அவளது கையைப் பற்றி நிறுத்தினான் சூரியா.
“கொஞ்சம் அமைதியா நான் சொல்லுறதை கேளு பிரவுனி… நாளைக்கு டே ஃபுல்லா நான் உன் கூட இருக்கணும்னு ஆசைப்படுறேன்…”
“அப்போ நாளை மறுநாள் சாயா கூடவா?”
“பிரவுனி இப்பிடி எடக்கு மடக்கா கேட்டா எப்பிடி?”
“வேற எப்பிடி கேக்கணும் உன் கிட்ட? விக்கிரமாதித்தனுக்கு காடாறு மாசம் நாடாறு மாசம் மாதிரி நீ ஒரு நாள் என்னோட ஃப்ரெண்டாவும் இன்னொரு நாள் அவளோட ஃப்ரெண்டாவும் இருப்பியா?”
“நீ எதுக்கு அவளை பத்தி இவ்ளோ யோசிக்கிற பிரவுனி?”
[the_ad id=”6605″]
“ஏன்னா எனக்கு அந்தச் சாயாவை சுத்தமா பிடிக்கலை சூரியா…அதே மாதிரி அவளுக்கும் என்னைச் சுத்தமா பிடிக்காது.. இதுக்குலாம் முக்கியமான காரணம் யாரு தெரியுமா? நீ தான்….உன்னை அந்தச் சாயா லவ் பண்ணுறா சூரியா” என்று விஷயத்தைப் போட்டு உடைத்தாள் சந்தியா.
சூரியா சந்தியாவின் பேச்சை நம்ப இயலாதவனாய் விழிக்க “உன் கிட்ட பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை… உன்னை அந்தப் பொண்ணு ரொம்பவே லவ் பண்ணுறா… எங்கே நான் உங்க ரெண்டு பேருக்கும் இடையில வந்துடுவேனோனு அவ பயப்படுறா.. அதனால தான் என்னை ஃபர்ஸ்ட் டைம் பார்த்ததுல இருந்தே அவளுக்கு என்னைப் பிடிக்கலை… என்னை விட அவ தான் உனக்கு குளோஸ்னு எனக்குப் புரியவைக்கிறதுக்கு தான் அவ முயற்சி பண்ணுறா..
கூடிய சீக்கிரமே அவ உன் கிட்ட பிரபோஸ் பண்ணவும் போறா.. இன்னைக்கு ஈவினிங் இங்கே வந்தப்போ அவளே இதை என் கிட்ட சொன்னா.. இப்போ நீ தான் முடிவு பண்ணனும் சூரியா… சாயா உன்னோட லைஃப் பார்ட்னரா வர்றது உனக்கு சரினு பட்டுச்சுனா நீ என்னையும் என்னோட ஃப்ரெண்ட்ஷிப்பையும், உன்னோட பாஷையில இன்ஃபாக்சுவேசனு சொன்னியே என்னோட காதல், அதையும் விட்டுத் தூரமா போயிடு ” என்று இவ்வளவு நேரம் மனதை அழுத்திய விஷயத்தை அவனிடம் கொட்டிவிட்டாள் சந்தியா.
சூரியாவுக்கு சந்தியா கூறிய விஷயங்கள் அதிர்ச்சியைக் கொடுக்க மூன்றாண்டுகளுக்கு முன்னர் பதின்வயதில் தன்னிடம் காதலை வெளிப்படுத்தியவளிடம் சுலபமாக வெறும் இனக்கவர்ச்சி என்று மறுக்க முயன்ற தன்னால் இளம்பிராயத்தோழியின் காதலை மறுக்க முடியுமா என்ற கேள்வி அவனை ஆட்டுவிக்கத் தொடங்கியது.
அவன் யோசனையுடன் அங்கேயே இருக்கையில் அமர்ந்துவிட சந்தியா அவன் யோசிக்கட்டும் என்று தனியாக விட்டுவிட்டு தனது அறைக்குள் சரணடைந்தாள். சூரியாவிடம் சுலபமாகச் சொல்லிவிட்டாள் சாயாவின் காதலை ஏற்றால் என்னை விட்டு விலகிவிடு என்று… ஆனால் உள்ளுக்குள் அவன் எங்கே சாயாவின் காதலுக்காகத் தன்னை விட்டு விலகிவிடுவானோ என்று பயந்தவள் மெத்தையில் சரிந்து தலையணையிடம் தன் கண்ணீர்த்துளிகளைத் தாரை வார்க்கத் தொடங்கினாள்.
அதே நேரம் சூரியாவின் மனம் அவனை அறியாமல் சந்தியாவையும் சாயாவையும் ஒப்பிட்டுப் பார்த்து அவனுக்குப் புத்தி சொல்ல ஆரம்பித்தது. சிறுவயதில் பெற்றோரின் அன்புக்காக ஏங்கியவன் அந்த அன்பு கிடைக்காத விரக்தியில் அவர்களை விட்டு மனதளவில் எப்போதோ விலகிவிட்டிருக்கையில் சாயாவின் அறிவுரை எப்போதுமே அந்த விலகலை அதிகரிக்கும் விதத்திலேயே அமைந்திருக்கும். உன்னிடத்தில் அன்பு காட்டாதவர்களிடம் நீ ஏன் முகம் கொடுத்துப் பேச வேண்டும் என்பதே பெரும்பாலான நேரங்களில் அவளது அறிவுரையாக இருக்கும்.
ஆனால் சந்தியாவோ இந்த உலகில் மோசமான கணவன் மனைவி இருக்கலாம்; ஆனால் மோசமான அப்பா அம்மா இருக்கவே முடியாது என்றுச் சொல்லி அவனை நாரயணனிடம் பேச வைத்தவள்.
அதே போல சாயாவிடம் அவனது செய்கைகள் எதையும் இதுவரை ஆட்சேபித்தது இல்லை.. அவனைக் கடிந்து கொண்டதும் இல்லை. நீ செய்வது எல்லாம் சரியாகத் தான் இருக்கும் என்று நண்பனுக்கு நம்பிக்கை கொடுக்க மட்டுமே அவளுக்குத் தெரியும்.
ஆனால் சந்தியாவோ அவன் அணியும் மெரூன் வண்ண டையில் ஆரம்பித்து அவன் அடிக்கடி குடிக்கும் காபி வரை அவனது செய்கைகள் எதுவும் அவனது தோற்றத்துக்கோ உடல்நலத்துக்கோ ஒத்துவராது என்றால் அதை அவனிடம் தயக்கமின்றி சொல்லிவிடுவதோடு அதை அவன் கேட்கச் சுணங்கினால் அதட்டவும் அவள் தயங்கியதில்லை. அவன் மீதான அக்கறையோடு கலந்தது சந்தியாவின் அன்பு.
இளம்வயதிலிருந்து அவன் ஏங்குவது இத்தகைய அக்கறைக்காக தானே…அதை அளவின்றி அவன் மீது பொழிபவளை அவனை விட்டு விலக்கி வைக்க சூரியா ஒன்றும் முட்டாள் இல்லையே…சந்தியாவின் அன்பு, அவளின் நேசம், பதின்பருவத்தைக் காரணம் காட்டி அவன் ஏற்க மறுக்க அவளின் முதல் காதல் என்று அனைத்துமே அவனுக்கு வேண்டும் என அவனது மனம் கூக்குரலிட ஆரம்பித்தது…
மனதின் கூக்குரலை ஏற்ற சூரியா சந்தியாவின் முதலும் கடைசியுமானக் காதல் தானாக மட்டுமே இருக்க வேண்டும் என்று எண்ணியவன் இதை எதற்காகவும் இழக்கத் தயாராக இல்லை…சாயாவுக்காகவும் கூட தான்…
இந்த உணர்வுக்கு என்ன பெயர் என்றெல்லாம் அவன் ஆராயவில்லை… ஆனால் சந்தியாவுடனான தனது உறவு இனி வாழ்க்கை முழுவதற்கும் நீடிக்கும் என்பதை அவன் தீர்மானித்துவிட்டான். இதை உடனே சந்தியாவிடம் சொல்லுடா இடியட் என்ற மனதின் குரலுக்கு ஆனந்தமாகக் கட்டுப்பட்டவன் அவளின் அறைக்குச் செல்ல கீழே இறங்கினான்.
“வெறுங்கையை வீசிட்டு வந்து தான் இந்த விஷயத்தைச் சொல்லுவியா மார்ஸ்மாலோ?” என்று புருவம் உயர்த்தி கையைக் கட்டிக்கொண்டு சந்தியா கூறுவது போலத் தோற்றம் அவன் மனக்கண்ணில் வந்துச் செல்ல வேகமாக தனது அறைக்குச் சென்றவன் அவளுக்காக வாங்கிவந்த புடவையை எடுத்துக் கொண்டு சந்தியாவின் அறைக்கதவைத் தட்ட அங்கே பதில் எதுவும் வரவில்லை.
[the_ad id=”6605″]
கதவில் கைவைக்கவும் அது திறந்து கொள்ள உள்ளே சென்றவன் அவள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டதும் காலையில் பேசிக் கொள்ளலாம் என்று எண்ணி புடவை அடங்கிய பையை மட்டும் அவள் கண் விழித்ததும் பார்க்கும் படி பக்கவாட்டு டேபிளில் வைத்துவிட்டு நகர்ந்தான். சந்தியாவோ அவன் வந்ததை அறியாதவளாய் உறங்கிக் கொண்டிருந்தாள். நாளை அவளுக்குத் தரப்போகிற அதிர்ச்சிகளை அறியாமல் கனவிலும் மார்ஸ்மாலோவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள் அவனது பிரவுனி.
சாரல் வீசும்…..