சூரியாவின் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் மனம் முழுவதும் சந்தியா ஏன் இன்னும் வரவில்லை என்ற கேள்வியே ஓடிக்கொண்டிருந்தது.
தேவராஜ் இன்று காலையில் போனிலேயே அவர்கள் குடும்பத்தவர்களின் சம்மதத்தைத் தெரிவித்த மகிழ்ச்சியில் அலுவலகத்துக்கு வந்தவனுக்கு, என்றும் தனக்கு முன்னரே அலுவலகம் வந்துவிடும் சந்தியா இன்று ஏன் இவ்வளவு நேரமாகியும் வரவில்லை என்ற கேள்வி மூளையைக் குடைய ஆரம்பித்தது.
ஒரு வேளை இன்று திடீரென்று மாறிய வானிலை காரணமாக இருக்கக்கூடும் என்று எண்ணித் தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டபடி வேலையில் கவனம் செலுத்த முனைந்தான்.
ஆனால் அவனால் மனதை ஒருமுகப்படுத்த இயலவில்லை. கையில் இருக்கும் கோப்புகளைப் பெயருக்குப் புரட்டிவைத்தவன் மூடிய பேனாவால் மேஜையில் தட்டிக்கொண்டிருக்கும் போது கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் நிமிர்ந்து பார்த்தான்.
மழையில் நனைந்ததால் கூந்தல் கலைந்து முக்கால்வாசி ஈரம் காய்ந்த உடையில் வந்து நின்றவளைக் கண்டதும் “அப்பாடா! ஒரு வழியா வந்துட்டியா பிரவுனி? உன்னைக் காணும்னதும் கொஞ்சம் டென்சன் ஆயிட்டேன்… அதுவுமில்லாம நேத்து வேற கிரானி பேசுன மாடுலேசனே சரியில்லையா? அதான் உன்னைத் திட்டிட்டாங்களோனு கொஞ்சம் கவலையா இருந்துச்சு” என்று கூறியவனைப் பார்த்தபடியே இருக்கையில் அமர்ந்தாள் சந்தியா.
வேறு எதுவும் பேசாமல் “நான் ஹேமா ஆன்ட்டியை அவங்க ஆபிஸ்ல போய் பார்த்துட்டு வந்தேன்…” என்று தலையைக் குனிந்து அமர்ந்து விரல்களைக் கோர்த்துப் பிரித்தபடி அவள் கூற
சூரியா “ஓ! வீணா டைம்பாஸ் பண்ணுறதுக்கு அவங்க ஆபீஸ்லாம் ஓபன் பண்ணிருக்காங்களா? பாரேன், அவங்க கூட ஒரே வீட்டுல இருந்தும் எனக்கோ ஆரியாவுக்கோ அவங்களுக்கு ஆபிஸ்னு ஒன்னு இருக்கிறது கூடத் தெரியலை… ஆனா உனக்குத் தெரிஞ்சுருக்கு… அங்கே எதுக்குப் போன நீ? ஆன்ட்டி ஆன்ட்டி கல்யாணத்தை எப்பிடி நிறுத்தணும்னு ஐடியா குடுங்கனு கேக்கவா?” என்று வெட்டிப் பேச சந்தியா எரிச்சலுடன் நிமிர்ந்தாள்.
[the_ad id=”6605″]
“லூசு மாதிரி பேசாதே மார்ஸ்மாலோ… கல்யாணத்தை நிறுத்தணும்னா எனக்கு அவங்க ஹெல்ப் ஒன்னும் தேவையில்லை… நானே நிறுத்திப்பேன்”
“ஓ! அப்போ உனக்கும் கல்யாணத்தை நிறுத்துற ஆசை இருக்கு… அப்பிடி தானே”
“ஆமாடா! ஆளாளுக்குக் கல்யாணம் கல்யாணம்னு சொல்லி என்னை எரிச்சல்படுத்துனா, நான் கல்யாணமும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்னு லெட்டர் எழுதி வச்சிட்டு, வீட்டை விட்டு ஓடிப்போயிருவேன்” என்று சொன்னவளை முறைத்தான் அவன்.
அவன் முறைப்பை எல்லாம் பொருட்படுத்தாதவளாய் “லுக்! வீணா என்னை அந்த எக்ஸ்ட்ரீமுக்குப் போக வச்சிடாதே! நான் பேச வந்தது கல்யாணத்தைப் பத்தி இல்லை… அதைப் பத்தி தான் அப்பா காலையிலேயே அங்கிளுக்குக் கால் பண்ணி சம்மதம்னு சொல்லிட்டாரே… நான் பேச வந்தது ஹேமா ஆன்ட்டியைப் பத்தி… அவங்களோட சோஷியல் சர்வீஸ் பத்தி” என்று பதிலளித்தவளிடம் எதுவும் பேசாமல் இருந்தான் சூரியா.
பின்னர் “ஆபிஸ் ஹவர்ஸ்ல சொந்தக்கதை, சோகக்கதை பேச எனக்கு டைம் இல்லை… நீ இன்னைக்கு வந்ததே லேட்.. இதுல என் கூட உக்காந்து கதை பேசாம, உனக்குனு இருக்கிற வேலையைப் பார்த்தா அது உனக்கு, எனக்கு, நம்ம கம்பெனிக்கு மூனுக்குமே நல்லது…சோ யூ மே கோ நவ்” என்று இறுகியக்குரலில் கூறியவனுக்கு அவனது அன்னையைப் பற்றித் தெரிந்து கொள்ள துளியும் ஆர்வமில்லை என்பது தெரியவரவே அதற்கு மேல் அவனை வற்புறுத்த விரும்பாமல் அங்கிருந்து அகன்றாள் சந்தியா.
அதன் பின் அவளுக்குமே முடிக்க வேண்டிய வேலைகள் பாக்கியிருக்க மாலையில் அவனிடம் பேசிக்கொள்ளலாம் என்ற முடிவுடன் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள் சந்தியா.
மாலை வரை வேலை தொடர்பான உரையாடல்களைத் தவிர வேறு எதுவும் பேசிக்கொள்ளவில்லை இருவரும். மாலை வழக்கமாகக் கிளம்பும் நேரத்தில் சந்தியா வீட்டுக்குக் கிளம்பாமல் அலுவலகத்திலேயே இருக்கவும் சூரியாவுக்கு ஆச்சரியம்.
ஆனால் ஏழு மணிக்குப் பிறகு அவனது அறைக்கு வந்தவள் “நம்ம ரெண்டு பேரும் கொஞ்சம் வெளியே போயிட்டு வருவோமா சூரியா? எனக்கு உன் கிட்டத் தனியா பேசணும்…” என்று கூற
சூரியா காலையில் பாதியில் விட்ட உரையாடலின் நினைவில் “இல்லை பிரவுனி.. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு… நீ வீட்டுக்குக் கிளம்பு… நம்ம இன்னொரு நாள் போய்க்கலாம்” என்று மறுத்துவிட்டான்.
சந்தியா அவனது மறுப்பில் முகம் சுளித்தவள் “இதுவே அந்த நிப்பான் பெயிண்ட் கூப்பிட்டிருந்தா போட்டது போட்டபடி விட்டுட்டு ஓடியிருப்பல்ல.. நான்னா உனக்கு எப்போவுமே இளக்காரம் தான்.. இனிமே என் கிட்டப் பேசாதே” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறப் போனவளின் கரத்தை அவசரமாகப் பிடித்து நிறுத்தினான் சூரியா.
“ரிலாக்ஸ் பிரவுனி… எதுக்கு இவ்ளோ டென்சன் ஆகுற? கொஞ்சம் ஃபினிஷ் ஆகாத ஒர்க்ஸ் இருக்கேனு பார்த்தேன்… ஓகே அதை நாளைக்குக் கூடப் பார்த்துக்கலாம்… நம்ம போலாமா?” என்று வெள்ளைக்கொடியைப் பறக்கவிட்ட பின்னர் தான் சந்தியாவின் முகத்தில் போனச் சிரிப்பு திரும்பி வந்தது.
இருவரும் அவள் சொன்ன இடத்துக்குக் காரில் சென்று இறங்கியதும் சூரியாவுக்கும் தன்னவளுடன் நேரத்தைச் செலவிடும் ஆர்வம் வந்துவிட உற்சாகமாக அவளுடன் பேசிக்கொண்டே கோல்டன் கஃபே என்ற ரெஸ்ட்ராண்டுக்குள் நுழைந்தான் அவன்.
உள்ளே நுழைந்தவனின் ஆர்வம் அங்கே அவர்களுக்கு முன்னரே வந்து காத்திருந்த ஆரியாவைக் கண்டதும் முற்றிலுமாக வடிந்தது.
தன்னருகில் நடந்து வந்து கொண்டிருந்தவளிடம் “இது தான் நீங்க என் கூடத் தனியா டைம் ஸ்பெண்ட் பண்ண ஆசைப்பட்ட அழகா மேடம்?” என்று எரிச்சலுடன் கூறியபடியே நடக்க, நமட்டுச்சிரிப்புடன் வந்தவள் அவர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மேஜையில் காத்திருந்த ஆரியாவிடம் கையசைத்தபடி சென்று அமர்ந்தாள்.
சூரியாவும் வேறு வழியின்றி அமர, சந்தியா அவர்கள் மூவருக்கும் சாப்பிட ஆர்டர் செய்தவள் கையைக் கட்டிக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்துவிட, ஆரியாவும் போனை நோண்ட ஆரம்பித்தான்.
சூரியா இருவரது செய்கையிலும் எரிச்சலுற்றவன் படீரென்று மேஜையில் தட்டவும் இருவரும் தூக்கிவாரிப்போட்டுக் கொண்டு அவனைப் பார்க்க, பக்கத்து மேஜைக்காரர்கள் அனைவரின் பார்வையும் அவர்கள் மீதே…
ஆரியாவும் சந்தியாவும் ஒரே குரலில் “என்னடா இது?” என்று கேட்க
சூரியா “எக்ஸ்கியூஸ் மீ! இது நான் கேக்க வேண்டியக் கேள்வி… நீ என்னடானா கையைக் கட்டிட்டு உக்காந்திருக்க…இவன் என்னாடானா போனைப் பார்த்துட்டிருக்கான்… இதுக்குத் தான் சூரியா உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு பொய் சொல்லி என்னைக் கூட்டிட்டு வந்தியா பிரவுனி?” என்று பல்லைக் கடித்தான்.
அந்நேரம் பார்த்து சர்வர் ஆர்டர் செய்த உணவுடன் வரவும் அவர்களின் பேச்சு தடைப்பட்டது. அவர் வைத்துவிட்டுச் செல்லவும் ஆரியா தான் பேச்சை ஆரம்பித்தான்.
“என்ன விஷயம் தியா? ஏன் இவனைப் பொய் சொல்லி கூட்டிட்டு வந்த?”
“உங்க அம்மாவைப் பத்தி பேசணும்னு சொன்னா இவன் வரமாட்டான்.. அதான் பொய் சொன்னேன் பாஸ்”
“வாட்? பிரவுனி இந்த டாபிக் தான் நீ மறுபடியும் பேசப் போறேனா நான் இப்போவே கிளம்புறேன்… என்னால அவங்க சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் கேக்க முடியாது”
சூரியா பிடிவாதமாகச் சொல்லிவிட்டு எழவும்
“சரி நீ கிளம்பு… பட் நீ போனேனா, நான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு வீட்டை விட்டுப் போயிடுவேன் மார்ஸ்மாலோ” என்று அசராமல் சந்தியா கூற, வேறு வழியின்றி எரிச்சலுடன் அமர்ந்தான் அவன்.
“இப்பிடியே எவ்ளோ நாளுக்கு நீ என்னை மிரட்ட முடியும்னு நினைக்கிற?” என்றவனிடம்
“நான் சொன்னதை சீரியஸா எடுத்து நீ பயப்படுற வரைக்கும்…” என்று சொல்லி நிறுத்தியவள் “ஓயாம என்னை இப்பிடி சொல்ல வைக்காதே மார்ஸ்மாலோ… திருநெல்வேலிக்காரங்க திரும்பத் திரும்பச் சொல்லமாட்டாங்க” என்று அமர்த்தலாகக் கூறினாள் சந்தியா.
அதற்கு சூரியா பதிலளிக்கும் முன்னரே முந்திக் கொண்ட ஆரியா “இன்னும் எத்தனை நாளுக்கு நீ திருநெல்வேலினு சொல்லி எங்களை ஏமாத்தப் போறே? நீங்கலாம் தென்காசிக்காரங்கமா…” என்று கூற
[the_ad id=”6605″]
சூரியா உச்சுக்கொட்டியபடி “இப்போ இவ ஊரு என்னங்கிறதை டிஸ்கஸ் பண்ண தான் ரெஸ்ட்ராண்டுக்கு வந்திங்களா நீங்க ரெண்டு பேரும்? ஒழுங்கா சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லு பிரவுனி… இல்லைனா நான் கிளம்பிப் போயிடுவேன்” என்று உறுதியாகக் கூறிவிடவே சந்தியாவும் காலையில் தளிர் அலுவலகத்தில் நடந்த அனைத்தையும் ஒரு வார்த்தை விடாமல் இரு சகோதரர்களிடமும் கூறிமுடித்தாள்.
சூரியா அனைத்தையும் கேட்டு முடித்துவிட்டு “சோ வாட்?” என்று என்ற ஒரே கேள்வியில் சந்தியாவை அங்கலாய்க்க வைத்தான். ஆனால் ஆரியா சிந்தனையுடன் புருவம் சுழித்தபடி அமர்ந்திருந்தான்.
சந்தியா “எல்லாரும் எல்லா விஷயத்திலும் பெர்ஃபெக்டா இருக்க முடியாது… ஹேமா ஆன்ட்டி அவங்க அப்பாவோட டிரீமுக்கு முன்னாடி மத்த எதையும் சீரியஸா எடுத்துக்கலை… இன்னைக்கு அவங்க டிரஸ்ட் மூலமா எத்தனை பேர் வாழ்க்கை மாறிருக்குனு நீயே போய் பார்த்து தெரிஞ்சுக்கோ சூரியா…” என்று பொறுமையுடன் எடுத்துக் கூறினாள்.
சூரியா அவளைக் கேலியாகப் பார்த்தவன் “அடேங்கப்பா பேசாம அவங்களுக்குக் கோயில் கட்டிருவோமா? கோயில் கொஞ்சம் ஹெவி பட்ஜெட்.. சோ சிலை வைக்கிறது கொஞ்சம் சீப் அண்ட் பெஸ்டா இருக்கும்னு நினைக்கிறேன்…” என்று அவளுக்கு யோசனை வேறு சொல்ல ஆரம்பிக்க
தான் அவரது நிலையை எடுத்துக் கூறியும் எப்படி இவனால் பெற்ற அன்னையைப் புரிந்து கொள்ளாமல் எகத்தாளமாகப் பேசமுடிகிறது என்று எண்ணி வருந்தியவள் அவனும் சராசரி இந்திய ஆண்மகன் தானே என்று கசப்புணர்வுடன் யோசிக்க ஆரம்பித்தாள்.
இவர்களைப் பொறுத்தவரை பெண் என்பவள் அன்னையாக, சகோதரியாக, தோழியாக, மனைவியாக இவர்களுக்கு தொண்டு செய்வதற்கே பிறந்தவர்கள்; அவர்களுக்கென எந்தக் கனவும், இலட்சியமும் இருக்கக் கூடாது..
சந்தியா அதே யோசனையுடன் “ஷட் அப் சூரியா… சீரியஸா பேசிட்டிருக்கப்போ உன்னோட கேவலமான ஹியூமர் சென்ஸைக் காட்டாதே…” என்று முகத்தைச் சுருக்கிக் கொள்ள
சூரியா “பின்ன என்னாவாம்? நீ ஏதோ உனக்குத் தான் இந்த உலகத்துலயே மாமியார் பக்தி இருக்கிற மாதிரி சீன் போடாதே ஓகே!” என்று சொல்லிவிட்டு சாவகாசமாக நாற்காலியில் சாய்ந்து கொண்டான்.
ஆரியா கிட்டத்தட்டக் குழம்பிய மனநிலையுடன் தான் இருந்தான். ஆனால் சூரியாவோ சந்தியா சொல்வதைக் காதில் போட்டுக்கொள்ளக் கூடாதென்ற முடிவுடன் இருந்தான்.
இருவரையும் வருத்தத்துடன் பார்த்தவள் சூரியாவிடம் கடுகடுப்புடன் “இவ்ளோ பேசுறியே, உன் கிட்ட குறைனு எதுவும் இல்லையா? என் கிட்ட எதுவும் இல்லையா? இப்போ வரைக்கும் நீ கல்யாணம் பண்ணிக்கிறதுக்காகச் சொல்லுற காரணத்தை நான் காது குடுத்து கேட்டேனா? என்னோட பிடிவாதக்குணத்தைப் பார்த்துட்டு நீ என்னை விட்டு விலகியா போயிட்ட? இல்லை என்னை வெறுத்திட்டியா?” என்று அவனைக் கேள்விகளால் துளைத்தெடுக்கச்
சூரியா அவளது கைகளைப் பற்றிக்கொண்டவன் “உன்னை என்னால எப்போவும் வெறுக்க முடியாது பிரவுனி.. பிகாஸ் நான் அந்தளவுக்கு உன்னை லவ் பண்ணுறேன்” என்று உணர்ச்சிப்பூர்வமாகக் கூற
சந்தியா தன் மீதான அவனது காதலின் ஆழம் குறித்து மகிழ்ந்தாலும் ஹேமாவின் நிலையைப் புரிந்துகொள்ள மறுக்கிறானே என்ற ஆதங்கத்துடன் “இஸின்ட்? உன்னோட லவ்வுக்கு என்ன வயசு சூரியா? பத்து நாள், இல்லைனா பதினைஞ்சு நாள்… ஆஃப்டர் ஆல் இப்பிடிபட்ட லவ்வுக்காக நீ இவ்ளோ மெனக்கெடுற… ஆனா உன்னைப் பத்துமாசம் சுமந்து பெத்தவங்களைப் பத்தி நீ யோசிக்க மாட்ட.. அப்பிடித் தானே” என்று வெகுண்டெழுந்து விட்டாள்.
“உனக்கும், பொண்டாட்டி வந்ததும் அப்பா அம்மா தேவையில்லனு முதியோர் இல்லம் அனுப்புறவனுக்கும் என்னடா வித்தியாசம் இருக்கு? ஹேமா ஆன்ட்டியோட கர்வமான பேச்சு, நடவடிக்கையெல்லாமே அவங்களோட மேனரிசம்.. அதுக்கு அவங்க என்ன பண்ண முடியும்? இதைச் சாக்கா வச்சு நீ அவங்களை ஒரேயடியா வெறுக்கிறது எனக்குச் சுத்தமா பிடிக்கலை…
உன்னோட அம்மா சோஷியல் சர்வீஸ் பண்ணுறதால எத்தனை பேருக்கு படிப்பைக் குடுத்திருக்காங்கனு உனக்குத் தெரியுமா? நான் அங்கே பார்த்துட்டு வந்து தான் பேசுறேன்… ஆனா அதைக் கண்டுக்காம பேசுனா என்ன அர்த்தம் சூரியா? உன்னால பெத்த அம்மாவோட மனசையே புரிஞ்சுக்க முடியலை…
நீயா என்னோட புரஃபசனை பத்தி கவலைப்படுவ? உனக்கு உன்னோட பிடிவாதம் தான் முக்கியம் சூரியா… அதுக்காகத் தான் நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்க அவசரப்படுற.. நாளைக்கு நான் உன்னோட ஒய்ஃபா, உன் பசங்களுக்கு அம்மாவா என் புரஃபசனை மேனேஜ் பண்ணக் கஷ்டப்படுறப்போ, நீ கண்டிப்பா எனக்கு சப்போர்ட் பண்ண மாட்டே… உன்னோட இந்த பிஹேவியரே அதுக்குச் சாட்சி… சோ லவ், நம்ம கல்யாணப்பேச்சையெல்லாம் இதோட மறந்துடு… எங்க வீட்டுல என்ன சொல்லி சமாளிக்கணும்னு எனக்குத் தெரியும்”
அவள் ஆணித்தரமாகப் பேசிக்கொண்டே செல்ல, அவளது ஒவ்வொரு வார்த்தைகளும் சூரியாவின் நெஞ்சைச் சல்லடையாக்குவதை அவன் கண்களே உணர்த்த அவனது பார்வையைத் தவிர்த்துவிட்டு தனது ஹேண்ட்பேகை மாட்டிக் கொண்டாள்.
[the_ad id=”6605″]
பின்னர் ஆரியாவிடம் “இவன் கூட சேர்ந்து நீங்களும் ஆன்ட்டியைக் கஷ்டப்படுத்தாதிங்க பாஸ்… அவன் அவனோட கோணத்துல மட்டும் தான் யோசிக்கிறான்… நீங்க அந்தத் தப்பைப் பண்ணாதிங்க” என்று தெளிவாக உரைத்துவிட்டு அங்கிருந்து ஹேண்ட்பேகுடன் விறுவிறுவென்று நடையைக் கட்டினாள்.
சந்தியாவின் பேச்சு கொடுத்த அதிர்ச்சியில் சூரியா இறுகிப் போய் அமர்ந்துவிட, ஆரியா சந்தியா கூறியபடி தான் ஏன் ஹேமாவின் கோணத்திலிருந்து அவரது உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கக் கூடாது என்று எண்ணத் தொடங்கிவிட்டான்.
அதோடு தன்னருகில் இறுகிப் போய் அமர்ந்திருந்தவனைத் தோளில் தட்டி சுயநினைவுக்குக் கொண்டுவந்தவன் “டைம் ஆச்சுடா… வீட்டுக்குப் போலாம்டா அண்ணா!” என்று கூற, சூரியா கல் போன்ற முகபாவத்துடன் எழுந்தவன் தம்பியுடன் சேர்ந்து அந்த ரெஸ்ட்ராண்டை விட்டு வெளியேற ஆரம்பித்தான்.
சாரல் வீசும்….