பகுதி – 28
சாதனா தலைவலி இருப்பதால்…. அங்கே தனியாக இருக்க வேண்டாம் என இங்கே வந்ததாகச் சொன்ன காரணத்தை வெற்றியும் ப்ரீதாவும் நம்பியது போலவே காட்டிக்கொண்டனர்.
வெற்றி ப்ரீதாவிடம் சாதனாவை பற்றி எதுவும் சொல்லவில்லை… ஆனால் ஜோதி சொல்லியிருந்தார். அதனால் சாதனா திடிரென்று கிளம்பி வந்ததும் ப்ரீதா உள்ளுக்குள் பயந்து கொண்டே இருந்தாள்.
வந்த அன்று சாதனா தலை வலிப்பதாகச் சொல்லி படுத்தே இருந்த போதும், வெற்றியும் ப்ரீதாவும் சென்று அடிக்கடி அவளைப் பார்த்துக்கொண்டனர். இரவில் பசியே இல்லை என அவள் சாதித்த போதும், அவள் அறைக்கே உணவை வரவழைத்து, அவள் சாப்பிட்டதும் தான் இருவரும் அங்கிருந்து சென்றனர்.
அவர்கள் சென்றதும் அறையைப் பூட்டிக்கொண்டு வந்த சாதனாவிற்கு அப்படி ஒரு அழுகை. இன்னும் ரிஷி செய்ததை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.
அங்கே ரிஷி சாதனா எப்படி இருக்கிறாள் எனத் தெரியாமல் தவித்துக்கொண்டு இருந்தான். அவளிடம் பேசலாம் என்றால்… செல்லை தான் உடைத்து விட்டாளே… வீட்டு எண்ணிற்கு அழைத்துப் பேசுவோமா என நினைத்தவன், இல்லை… அவள் யோசிக்கட்டும் என நினைத்து அழைப்பதை தள்ளிப்போட்டான்.
வெற்றியும் உறங்காமல் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். ப்ரீதா அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள். சாதனா ரிஷியை வேறு திருமணம் செய்து கொள்ளச் சொன்னது அவளுக்குத் தெரியும். ஆனால் அதை வெற்றியிடம் சொன்னால்… அவன் கவலைப்படுவான் என்று தான் சொல்லவில்லை….. அவளுக்கு ரிஷியும் வெற்றியும் பேசிக்கொண்டது தெரியாது இல்லையா….
இப்போது சாதனா வேறு எந்தக் காரணத்திற்காக வந்திருக்கிறாள் எனத் தெரியாமல்…. அவளுக்கும் உறக்கம் வரவில்லை…. ஆனால் அங்கே சாதனாவோ வெகு நேரம் அழுதவள், அப்படியே உறங்கிப்போனாள்.
மறுநாள் எழுந்த போதும், ரிஷி மீது கோபமாகத்தான் இருந்தாள். ஆனால் நேற்று போல் அழுகவில்லை…. வெற்றியும் ப்ரீதாவும் அவளைத் தாங்கும் படி வைத்துக்கொள்ளாமல், அவளே நேரத்திற்கு வந்து எதோ கொஞ்சம் சாப்பிட்டு விட்டு சென்றாள்.
இரண்டு நாட்கள் சென்ற பிறகும் அவள் வீட்டிற்குக் கிளம்பவில்லை என்றதும், வெற்றி தன் நாடகத்தைத் தொடங்கினான்.
[the_ad id=”6605″]
வேண்டும் என்றே அவள் சாப்பிட வரும் போது…. ப்ரீதாவிற்கு ஊட்டி விட்டவன், சாதனா வருவதை அப்போது தான் பார்த்தது போல் அசடு வழிந்தான்.
இன்னொரு தடவை மாடி ஹாலில் சோபாவில் ப்ரீத்தாவின் மடியில் தலைவைத்துப் படுத்துக்கொண்டு அவளிடம் வெற்றி கொஞ்சி பேசிக்கொண்டிருக்க… சாதனா அவள் அறையை விட்டு வெளியே வந்தவள், இவர்கள் இருவரையும் பார்த்து விட்டு திரும்பி சென்றாள்.
அதன்பிறகு சாதனா அவள் அறையில் இருந்து வெளியே வரவேயில்லை.. உணவை தன் அறைக்கே வரவழைத்து சாப்பிட்டாள்.
மூன்றாம் நாள் ரிஷி வெற்றியை அழைத்துக் கேட்க…. “நீ சொன்ன மாதிரி நானும் எல்லாம் செஞ்சு பார்த்துட்டேன். அதனால அவ ரூமை விட்டு வெளியவே வர மாட்டேங்கிறா… என்னை என்ன பண்ண சொல்ற?” என்றான் வெற்றி.
தானே பார்த்துக்கொள்வதாகச் சொல்லி ரிஷி போன்னை வைத்தான். அன்று பகலில் வெற்றி வெளியே சென்றிருந்த போது…. சாதனாவிடம் ரிஷி கொடுத்துவிட்டதாகச் சொல்லி உதய் வந்து ஒரு பார்சல் கொடுத்துவிட்டுச் சென்றான்.
அவள் அறைக்கு வந்ததும், என்னவாக இருக்கும் எனச் சாதனா பயந்து கொண்டே பிரிக்க…. உள்ளே அவளுக்குப் புதுச் செல் போன் இருந்தது.
சாதனா அதை எடுத்து உயிர்பித்தாள். திரையில் ரிஷியும் சாதனாவும் இருக்கும் படத்தை வைத்திருந்தான். அது கொஞ்சம் மனதிற்குக் குளிர்ச்சியாக இருக்க… சிறிது நேரம் அதையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
பிறகு வேறு என்னென்ன இருக்கிறது எனச் செல்லை மேலும் ஆராய்ந்தாள். அவர்கள் லண்டனில் இருக்கும் போது எடுத்த புகைப்படங்களை எல்லாம் ஒரு ஆல்பம் போல் செய்திருந்தான்.
“கொஞ்சி பேசிட வேண்டாம்…
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாகப் பார்த்தா…
மழை சாரல் வீசுதடி.” என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க…. ஒவ்வொரு புகைப்படங்களாக மாறி மாறி வர…. சாதனா மெய்மறந்து பார்த்துக்கொண்டு இருந்தாள்.
ஒவ்வொன்றையும் பார்க்க பார்க்க… லண்டனில் கழித்த இனிமையான நாட்களின் நினைவில் முகம் புன்னகையில் மலர்ந்தது. அந்த ஆல்பத்தை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அன்று இரவு ரிஷி செல்லில் அழைத்த போது… சாதனா ஆவலாகவே அவனின் அழைப்பை ஏற்றாள்.
“ஹலோ மேடம் கோபம் போயிடுச்சா…”
“இல்லை…. அப்படியே தான் இருக்கு.” சாதனா சொன்னதும், அந்தப் பக்கம் சிறிது நேரம் மௌனம், பிறகு ரிஷியே “சாரி…” என்றான் ஆழ்ந்த குரலில்.
“நீங்க ஏன் அப்படிப் பண்ணீங்க? எனக்கு எவ்வளவு கஷ்ட்டமா இருந்தது தெரியுமா….” சாதனாவின் குரலில் அழுகை எட்டிப்பார்க்க…..
“எனக்கு மட்டும் இல்லையா…. எனக்கு ஒரு கஷ்ட்டம் வந்தா நீ என்னை விட்டு போவியா….சொல்றதை புரிஞ்சிக்காம சின்னக் குழந்தை மாதிரி பிடிவாதம் பிடிச்சா… நான் வேற என்ன பண்றது?”
“இதே மாதிரி ப்ரீதா வெற்றியை வேற கல்யாணம் பண்ணிக்கச் சொன்னா… நீ அவளை எப்படிப் பார்ப்ப?” ரிஷி கேட்க…. சாதனா யோசித்தாள்.
“சொல்லு சாதனா…”
“கொஞ்சம் லூசு தனமாத்தான் தெரியுது.” சாதனா இழுக்க…..
[the_ad id=”6605″]
“கொஞ்சம் இல்லை…ரொம்பவே…. இப்பவாவது உனக்கு அது புரிஞ்சுதே….”
“நீயும் நானும் கணவன் மனைவி. நமக்குள்ள பிரச்சனை வந்தா… அதை எப்படிச் சால்வ் பண்றதுன்னு தான் பார்க்கணும். அதை விட்டுட்டு பிரிஞ்சு போக நினைக்கக் கூடாது புரியுதா….”
“இனி விவாகரத்து அது இதுன்னு உளறக்கூடாது.” ரிஷி கண்டிப்பு காட்டி பேச….
“நான் உங்களுக்காகத்தான் அப்படிச் சொன்னேன். எனக்கு மட்டும் உங்களை விட்டு இருக்க முடியுமா என்ன?”
“அப்படியா… உன்னால என்னை விட்டுட்டு இருக்க முடியாதா…”
“அதுல என்ன சந்தேகம் உங்களுக்கு?”
“சந்தேகம் இல்லை…. எனக்குத் தெரியலை… நம்ம ரெண்டு பேரும் மனசு விட்டு பேசிக்கலை அதுதான் நமக்குள்ள பிரச்சனை. நீ என்னைப் பத்தி என்ன நினைக்கிற? நான் உன்னை மனசுல எந்த இடத்தில வச்ச்சிருக்கேன். இதெல்லாம் நாம பேசினாத்தான் தெரியும்.”
“ம்ம்… ஆமாம்.”
“ஒருத்தரை ஒருத்தர் பேசி புரிஞ்சிக்காம, நேரா நம்ம வாழ்க்கையைத் தொடங்கினது தான், இத்தனை சிக்கலுக்கும் காரணம். இனியாவது புரிஞ்சிக்க முயற்சி பண்ணுவோம். சரியா சாதனா…”
“ம்ம்… ஓகே.”
“அதுக்கு முதல்ல நாம லவ் பண்ணனும்.”
“நமக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு ரிஷி.” சாதனா அறிவிப்பு போல் சொல்ல….
“அதைக் கொஞ்ச நாள் மறந்திடலாம். இப்பத்தான் நம்ம ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சிருக்கு. அப்படி நினைச்சிக்கோ…. இன்னும் நம்ம கல்யாணத்துக்கு மூன்னு மாசம் இருக்குன்னு வச்சிக்கலாம்.”
“அப்ப நான் நம்ம வீட்டுக்கு வர வேண்டாமா…”
“இப்ப வேண்டாம். நீ பக்கத்தில இருந்தா…. நான் வேற விஷயத்துல இறங்கிடுவேன். அப்புறம் நாம எங்க பேசி புரிஞ்சிகிறது. அதனால கொஞ்ச நாள் போன்ல மட்டும் பேசலாம்.” ரிஷியின் குரல் மாற்றத்தில் இருந்தே… அவன் எதைச் சொல்கிறான் எனப் புரிய… சாதனா முகம் சிவந்தாள்.
“சரி முதல்ல இருந்து ஆரம்பிப்போம். உனக்கு என்ன கலர் பிடிக்கும்.” ரிஷி கேட்க…. சாதனா யோசித்து “எனக்கு எல்லாக் கலருமே பிடிக்கும். ஆனா கிரீன் கொஞ்சம் அதிகமா பிடிக்கும்.” என்றாள்.
“எனக்கு…” என ரிஷி ஆரம்பிக்க…. சாதனா அவனை முந்திக்கொண்டு “எனக்குத் தெரியும், உங்களுக்கு ப்ளூ கலர் தான பிடிக்கும். நீங்க காலேஜ் படிக்கும் போது… நிறைய ப்ளூ கலர் ஷர்ட்ஸ் தான் போடுவீங்க.” என்றதும் ரிஷிக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“ஹாஹாஹா…. நல்லா சைட் அடிச்சிருக்க டி… என்னைப் பத்தியே கனவு கண்டுட்டு இருப்பியா… நான் உன் கனவுல வந்து என்ன பண்ணுவேன் சாதனா…. கிஸ் பண்ணுவேனா…”
“அதெல்லாம் உங்ககிட்ட சொல்ல முடியாது.”
“அப்ப ரொம்ப ரொமாண்டிக்கா எதோ பண்ணி இருக்கேன். அதுதான் சொல்ல மாட்டேங்கிற….” ரிஷி சாதனாவை வம்பிழுக்க….
“பெரிய ரொமான்ஸ் மன்னன் இவரு…. சரியான சிடுமூஞ்சியா இருப்பீங்க அப்ப… உங்களைப் பார்த்தாவே எனக்குப் பயமா தான் இருக்கும்.”
“நம்பிட்டேன் சாதனா….” இப்படிப் பேச்சை ஆரம்பித்து… அது எங்கெங்கோ போக…. நள்ளிரவு வரை பேசியவர்கள் அதன்பிறகே உறங்கினர். மறுநாள் காலையே ரிஷி சாதனாவை அழைத்து விட்டான். இருவரும் இப்படி அடிக்கடி பேசிக்கொண்டே இருந்தனர்.
இதைக் கவனித்த வெற்றிக்கு ஒன்றுமே புரியவில்லை… முதல்நாள் வரை அழுது வடிந்தவள், திடிரென்று உற்சாகத்துடன் வளைய வருவதன் காரணம் தெரியவில்லை…. அதோடு அவள் காதில் வேறு எப்போதும் செல் போன் இருந்தது.
யாரோடு அப்படி ரகசியமாகப் பேசுகிறாள் என நினைத்தவன், சாதனாவின் செல்லை அவள் அறியாமல் எடுத்து பார்க்க…. அத்தனையும் ரிஷியிடம் இருந்து வந்த அழைப்புகள் தான்.
புருஷனோட எதுக்கு இவ ரகசியமா பேசிட்டு இருக்கா… அவ வீட்டுக்கு போய் நல்லா உட்கார்ந்து போ வேண்டியது தான… எதுக்கு ரெண்டு பேரும் சேர்ந்து வீணா போன் பில்லை ஏத்துதுங்க என நினைத்தவன், வெளியில் ஒன்றும் கேட்கவில்லை.
இரண்டு நாட்கள் சென்று “சாதனா, இன்னைக்கு நைட் நாம டின்னருக்கு வெளிய போகலாம். திரும்ப வரும் போது… நான் உன்னை உங்க வீட்ல விட்டுடுறேன்.” ரிஷி அழைக்க… அவனைச் சந்திக்கப் போகும் ஆவலில் சாதனா உற்சாகமாகச் சம்மதித்தாள்.
எட்டு மணி போல் ரிஷி சாதனாவை அழைக்க வந்திருந்தான். அப்போது வெற்றியும் வீட்டில் தான் இருந்தான். ஆனால் இருவரும் எப்போதும் போல் ஆளுக்கு ஒருபுறம் முறைத்துக்கொண்டு இருந்தனர்.
ப்ரீதா ஆவலாக வந்து ரிஷியை வரவேற்றாள். அவளுக்கு ரிஷி வருவது பற்றித் தெரியாது. சாதனா ரிஷி வந்ததும் தான் மேலிருந்து இறங்கி வந்தாள்.
[the_ad id=”6605″]
ரிஷிக்காகப் பார்த்து பார்த்து உடை அணிந்து இருந்தாள். அவளுக்காகச் சுமி டிசைன் செய்திருந்த சுடிதார். அதற்குப் பொருத்தமான அணிகலன் அணிந்து, மிதமான ஒப்பனையில் வந்தவளுக்கு, ரிஷியை பார்க்கவே அவ்வளவு தயக்கம்.
அவர்கள் இருவருக்கும் இடைவெளி வந்து மீண்டும் இணைந்ததால் வந்த தயக்கமோ… அல்லது இப்போது புதிதாகச் செய்து கொண்ட ஒப்பந்தமோ…. எதோ கொஞ்சம் தயக்கம் என்பதை விட வெட்கமாகக் கூட இருக்கலாம்.
“வாங்க ரிஷி….” அதைச் சொல்லி முடிப்பதற்குள் சாதனாவிற்கு வியர்க்க… ரிஷியும் இயல்பாக இல்லை. சாதனா ரிஷியின் எதிரில் அமர்ந்தாள்.
வெற்றியும் ப்ரீதாவும் அவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தனர். ஆனால் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை….எதோ புரியாத மொழியில் படம் பார்ப்பது போலவே இருந்தது.
“அண்ணா உங்களுக்குச் சாப்பாடு ரெடி பண்ண சொல்றேன்.” என ப்ரீதா எழுந்திருக்க….
“இல்லை வேண்டாம்.” என ரிஷி அவளைத் தடுத்தான்.
“நீங்க சொல்லுங்க…” என ப்ரீதா வெற்றியை இடிக்க….
“என்ன சொல்லணும்?” என வெற்றி கேட்க, ப்ரீதாவிற்கு க் கோபம் வந்துவிட்டது.
“வீட்டுக்கு வந்தவங்களைச் சாப்பிடுன்னு சொன்னா… உங்க வாயில இருக்கிற முத்து உதிர்ந்திடுமா…..” அவள் கடுப்பாகக் கேட்க….
“ஏன் நீ சொன்னா பத்தாதா?” என அவன் பதில் கேள்வி கேட்க…. ப்ரீதா நொந்தே விட்டாள்.
“ரெண்டு பேரும் இன்னும் எவ்வளவு நாள் இப்படிப் பேசாம விரோதி மாதிரி இருப்பீங்க.” ப்ரீதா கேட்க… ரிஷியும், வெற்றியும் அலட்சியமாகத் தோலை குலுக்கினர்.
சாதனா இருவரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு இருந்தாள். ரிஷியின் முகத்தில் கோபமே இல்லை… சொல்லப்போனால் அவன் சிரிப்பை இதழ்களுக்குள் அடக்கி கொண்டு இருக்கிறான் என நன்றாகவே தெரிந்தது. வெற்றியும் கோபமாக இல்லை.
அப்போது தான் அன்று ரிஷி சொன்னது சாதனாவிற்கு நினைவு வந்தது. வெற்றிகிட்ட உளறினது போல… வேற யார்கிட்டயும் உளறி வைக்காத… என அவன் சொன்னான்.
தான் வெற்றியிடம் பேசியது இவனுக்கு எப்படித் தெரியும் என யோசித்தவளுக்கு, வெற்றி இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்துகொண்டதும் சேர்த்து நினைவுக்கு வர… எல்லாம் விளங்கி விட்டது.
“அண்ணி இவங்க ரெண்டு பேரும் நடிக்கிறாங்க. இவங்களை நம்பாதீங்க. இவங்க ரெண்டு பேரும் நமக்குத் தெரியாம பேசுறாங்க.” சாதனா உறுதியாகச் சொல்ல… ப்ரீத்தா அவளை நம்பாமல் பார்த்தாள்.
“எனக்கு நல்லாத் தெரியும்.” என்றவள், ரிஷியை பார்த்து “நான் சொல்றது உண்மை தான… இனிமே நமக்குள்ள எந்த ஒளிவுமறைவும் இல்லைன்னு சொல்லி இருக்கீங்க.” சாதனா சொல்ல….
“எஸ்… நாங்க பேசுவோம் தான்.” என ரிஷி உடனே ஒத்துக்கொள்ள… இன்னும் ப்ரீதாவால் நம்ப முடியவில்லை.
தன் அண்ணனின் எதிரில் சென்று மண்டியிட்டு அமர்ந்தவள் “நிஜமாவா அண்ணா…. நீங்க ரெண்டு பேரும் பேசுவீங்களா… நீங்க ரெண்டு பேரும் பேசவே மாட்டீங்கலோன்னு…. நான் எத்தனை நாள் கவலைபட்டிருக்கேன் தெரியுமா… உனக்கு அவரைப் பிடிக்காதுன்னு நினைச்சேன்.” என்றாள்.
“பிடிக்காம எப்படி இருக்கும் ப்ரீதா… அதுவும் உன்னோட கணவரை…. நாங்க எதோ முன்னாடி நடந்த சண்டையை வச்சு முறைச்சிட்டு இருந்தோம் அவ்வளவு தான்.” என்ற ரிஷ வெற்றியை பார்க்க… அவனும் புன்னகைத்தான்.
“எப்ப நீங்க ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சீங்க?” ப்ரீதா ஆர்வமாக இருவரையும் பார்க்க….
“மலை ஏறினாலும் மச்சான் தயவு வேணும்னு சொல்வாங்க இல்லையா…. நான் தான் ஒரு வேதாளத்தைக் கட்டி இருக்கேனே… அது அடிக்கடி முருங்கை மரம் எறிடுதா… அதை இறங்க வைக்கத்தான் தான் ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சோம். அதனால நீ அந்த வேதாளத்துக்குத் தான் நன்றி சொல்லணும்.” என ரிஷி சாதானவை பார்த்துக்கொண்டே சொல்லி முடிக்க…. அவள் அவன் மேல் கொலை வெறியில் இருந்தாள்.
ரிஷி சொன்னதைக் கேட்டு வெற்றிக்கும் ப்ரீதாவிற்கு ம் அப்படி ஒரு சிரிப்பு. “உங்களை அந்த டிரஸ்ல கற்பனை பண்ணா சூப்பரா இருக்கீங்க அண்ணி.” என்றாள் ப்ரீதா.
“உங்களுக்கு என்னைப் பார்த்தா எப்படி இருக்கு?” சாதனா இடுப்பில் கைவைத்து ரிஷியை முறைக்க….
“இப்ப தான சொன்னான் உனக்குக் கேட்கலை…” என வெற்றியும் அவளை வார……. சாதனா திரும்பி தன் அண்ணனை முறைத்தாள்.
“நீ பேசாத…. அப்புறம் நீ ரிஷியை திட்டினதை எல்லாம் சொல்லிடுவேன்.” எனச் சாதனா மிரட்ட….
“அண்ணி என்ன என் புருஷனை மிரட்டுறீங்க? உங்க புருஷனும் தான் அவரைத் திட்டி இருக்கான். அதை நான் சொல்லட்டுமா….” என ப்ரீதா சண்டைக்கு வரிந்து கெட்ட….
“போதும் தாயே ! நீங்க வேற ஆரம்பிக்காதீங்க.” என வெற்றி கையெடுத்து கும்பிட…..
“இதுக்கு மேல இவங்களைப் பேச விட்டா நமக்கு ஆபத்து. நானும் சாதனாவும் டின்னருக்கு வெளிய போறோம்.” என்ற ரிஷி சாதனாவோடு கிளம்பி சென்றான்.