ஆரியாவுக்குப் போன் செய்த சுமித்ரா, தான் அவனுக்காக ரெஸ்ட்ராண்டில் காத்திருப்பதாகச் சொல்லி விட்டு போனை வைத்தாள். மாலைநேரம் என்பதால் விளக்குகள் மிதமான வெளிச்சத்தை தூவிக் கொண்டிருக்க இதோடு அவளது கைவிரல் நகத்தை முன்னூறாவது முறையாகக் கடித்து டென்சனாக இருப்பதாகக் காட்டிக் கொண்டிருந்தாள்.
தான் செய்வது சரியா தவறா என்று தவிப்புடன் இருந்தவள் இவ்வளவு தூரம் வந்து அவனுக்குப் போனும் செய்துவிட்டு இப்போது யோசிக்கிறோமோ என்று எண்ணியபடி மூச்சை இழுத்துவிட்டுத் தன்னைச் சமனப்படுத்திக் கொண்டாள். இவ்வளவு தூரம் வந்துவிட்டோம், இனி என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.
அவள் இவ்வாறு தனக்குள் குழம்பிக் கொண்டிருந்த நேரம் ஆரியாவும் வந்துவிட்டான். வந்தவன் அவளுக்கு எதிரே உள்ள இருக்கையில் அமரவே சுமித்ரா தனது சிந்தனையை அந்த ரெஸ்ட்ராண்டிற்கு இழுத்துக் கொண்டு வந்தாள்.
“ஹாய்!” என்று பேச்சுவார்த்தைக்குப் பிள்ளையார்ச்சுழி போட்டுவிட்டு அவன் முகத்தைத் தயக்கத்துடன் பார்த்தவள் அவன் அமைதியாக இருக்கவே என்னவென்று புருவம் உயர்த்தி வினவினாள்.
“எங்கே போனான் அந்த வினோத்? அவன் இருக்கான்னு சொல்லித் தானே என்னை வரச் சொன்ன.. எங்கே அந்த ராஸ்கல்? அவனுக்கு அவ்ளோ அட்வைஸ் பண்ணியும் இன்னுமா உன்னைத் தொந்தரவு பண்ணுறான்?” என்று படபடவென்று வெடித்தவனிடம்
“ஆரியா! ப்ளீஸ் கோவப்படாதே! வினோத் இங்கே வரலை… நான் உன் கிட்டப் பொய் சொன்னேன்” என்று சொல்லிவிட்டு முகத்தைப் பென்சிலைத் தொலைத்துவிட்டு மாட்டிக்கொண்ட சிறுகுழந்தை போல வைத்துக் கொண்டபடி கூறவும் ஆரியா ஆயாசப்பட்டான்.
“பொய் சொன்னியா? நான் அவன் உன்னை மறுபடியும் டிஸ்டர்ப் பண்ணுறாங்கிற எரிச்சல்ல அடிச்சுப் பிடிச்சு ஓடிவந்தா நீ ரிலாக்ஸா பொய் சொன்னேனு சொல்லுற… உனக்கு என்னாச்சு சுமி? நீ ரொம்ப மெச்சூர்ட் கேர்ள்னு நினைச்சேன்… வாட் ஹேப்பண்ட்?” என்று கேள்விகளை அடுக்கத் தொடங்கினான்.
“நான் உன் கிட்ட ஒரு விஷயம் பேசணும்னு நினைச்சேன்… சும்மா கூப்பிட்டா நீ வரமாட்டேனு நினைச்சுப் பொய் சொல்லிட்டேன்” என்று தலைகுனிந்தபடி அமைதியாகச் சொன்னவளின் முகத்தில் எப்போதும் போல விளையாடும் கூந்தல் கற்றையை அவளது காதோரம் ஒதுக்கிவிட துடித்த கையை அடக்கிக் கொண்டவன்
“என்ன பேசணும்?” என்று கேட்டுவிட்டுக் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டான்.
“நீ எழுந்திருச்சு கண்ணை மூடு… அப்புறம் தான் நான் சொல்லுவேன்” என்றாள் சுமித்ரா கண்களில் ஆவல் மின்ன.
இது என்ன சிறுபிள்ளைத்தனம் என்று எண்ணியவன் எழுந்து நின்று கண்களை மூடிக்கொண்டான். சில நொடிகளுக்குப் பிறகு “ஓப்பன் யுவர் அய்ஸ்” என்று சுமித்ராவின் குரல் மயிலிறகால் வருடுவது போல மிகவும் அருகாமையில் கேட்க கண்களைத் திறந்தவன் திகைத்துப் போனான்.
அவன் எதிரே புன்னகை முகமாய் நின்ற சுமித்ரா “ஐ லவ் யூ ஆரியா. வில் யூ மேரி மீ?” என்று காதலைக் கண்ணில் ஏந்தி வார்த்தையில் குழைத்துக் கேட்டுவிட்டு கையில் மோதிரம் ஏந்தியபடி நின்றிருந்தாள்.
ஆரியாவோ என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தான். மனம் என்னவோ சந்தோசத்தில் துள்ளியது தான். ஆனால் திடீரென்று சுமித்ரா இப்படி காதலைச் சொல்வாள் என்று அவன் எதிர்பார்க்காததால் எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று குழம்பியபடி நின்றான்.
சுமித்ரா தயக்கத்துடன் “நீ ஏன் எதுவுமே சொல்லலை? உனக்கு என்னைப் பிடிக்கலையா? இட்ஸ் ஓகே” என்று சொல்லிவிட்டு நீட்டிய கையை மடக்குவதற்குள் அவள் கரத்தைப் பற்றியவன்
“ஹேய்! ஏன்மா அதை உள்ளே வைக்கப் போற? எனக்குனு தானே வாங்குன? அப்போ போட்டுவிடு” என்று குறும்போடு கேட்க
“உனக்கு தான் வாங்குனேன்… ஆனா…” என்றவளை இடைவெட்டியவன்
“என்ன ஆனா, ஊனானு சொல்லிட்டிருக்க ஜெகன்மோகினி? போட்டுவிடப் போறியா இல்லையா?” என்று அதட்டவும் சுமித்ரா வேகவேகமாக அவனது மோதிரவிரலில் அந்த மோதிரத்தை மாட்டிவிட்டாள்.
ஆரியா கையை முன்னும் பின்னுமாகத் திருப்பிப் பார்த்தவன் “ரிங் சூப்பரா இருக்கு… எத்தனை பவுன் இது?” என்று சாவகாசமாக கேட்க, அவன் வேறு ஏதாவது சொல்வான் என்று எதிர்பார்த்த சுமித்ரா ஏமாற்றமடைந்தாள்.
அந்த ஏமாற்றம் ஏற்படுத்திய கடுப்பில் “ஆங்! ஐம்பது பவுன்… போடா! உன்னைய லவ் பண்ணுனதுக்கு அந்த வினோத்தையே லவ் பண்ணிருக்கலாம்… எவ்ளோ அழகா பிரபோஸ் பண்ணிருக்கேன்… அதுக்குப் பதில் சொல்லலை… உனக்கு இது மட்டும் தெரியணுமோ? பிரபோசலை வாபஸ் வாங்கிட்டேன்… நீ உன் வீட்டைப் பார்த்துப் போ… நான் எங்கே வீட்டுக்குப் போறேன்… இனிமே நமக்குள்ள எதுவும் கிடையாது” என்று படபடத்தவள் வேகமாக இடத்தைக் காலி செய்தாள்.
ஆரியா விஷயம் விபரீதமாவதை உணர்ந்தவன் “ஹேய் சுமி! நில்லுடி” என்று கத்தியவாறு அங்கிருந்துச் செல்ல முயல, அதற்குள் அவள் ஆர்டர் செய்தவற்றைக் கொண்டு வந்த பேரர்
“சார்! மேடம் ஆர்டர் பண்ணுனாங்க” என்று கூற
“இது வேறயா? எவ்ளோ பில்?” என்று கேட்டவன் அவர் பில் தொகையைச் சொல்லவும் கொடுத்துவிட்டு வேகமாக அவள் பின்னே ஓடினான்.
சுமித்ரா ரெஸ்ட்ராண்டை விட்டு வெளியேறியிருக்க பார்க்கிங்கில் நின்ற காரை எடுத்தவன் மெதுவாக ஓட்டிச் செல்ல ரெஸ்ட்ராண்டை விட்டு சில அடிகள் தொலைவில் அவள் நடந்து செல்வது ஆரியாவின் கண்ணில் பட்டுவிட்டது.
மிதமான வேகத்தில் காரை நகர்த்தியவன் அவளை நெருங்கிவிட காரிலிருந்தபடி “ஹலோ மேடம்! நீ பாட்டுக்கு காபி ஆர்டர் பண்ணிட்டு வெளியே ஓடி வந்துட்ட… பில் யாரு உங்க அப்பாவா பே பண்ணுவாரு?” என்று கேலி செய்ய
[the_ad id=”6605″]
சுமித்ரா இன்னும் கடுப்பு மாறாமலிருந்தவள் “எங்கப்பா ஏன்டா பே பண்ணனும்? உனக்குப் பிரபோஸ் பண்ணத் தானே நான் வந்தேன்… அதனால தானே காபி ஆர்டர் பண்ணுனேன்… சோ நீயே பே பண்ணு.. போ” என்றாள் சட்டென்று.
“அதெல்லாம் பே பண்ணியாச்சு.. நீ கார்ல வந்து உக்காரு.. பேசிட்டே போவோம்” என்று அவன் சாதாரணமாகச் சொல்ல
“இனிமே பேச எதுவும் இல்லை… நான் தான் பிரபோசலை வாபஸ் வாங்கிட்டேனே” என்று சொல்லிவிட்டு முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டவள் நடந்த பாதையின் குறுக்கே காரை நிறுத்தியவன் அவள் கடந்து செல்லும் முன் இறங்கி அவளது கரத்தைப் பற்றி நிறுத்தினான்.
“ஸ்டாப்! குழந்தை மாதிரி பிஹேவ் பண்ணாம நான் சொல்லுறதைக் கேளு” என்றவனை ஏறிட்டவள் முகத்தை இன்னும் ஒரு மீட்டருக்குத் தூக்கி வைத்துக்கொள்ளவே, ஆரியா
“லிசன்! எனக்கு உன்னை ரொம்பவே பிடிக்கும் சுமி… அதுல எந்த டவுட்டும் இல்லை… உன்னை மாதிரி ஒருத்தி என்னோட லைஃப் பார்ட்னரா வந்தா நல்லா இருக்கும்னு என் மனசு சொல்லுது… பட் நீ இப்போ ஃபீல் பண்ணுற அதே லவ்வை நானும் ஃபீல் பண்ணனும்ல… சோ குட்கேர்ளா எனக்குக் கொஞ்சம் டைம் குடு… அதுக்குள்ள என் மனசுலயும் உன் மேல லவ் வந்துடும்” என்று அவளுக்குத் தன் நிலையை விளக்கினான்.
சுமித்ராவுக்கும் அது சரியென்றே பட்டது. இருந்தாலும் “சப்போஸ் அந்த டைமை தாண்டியும் உனக்கு என் மேலே லவ் வரலைனா என்ன பண்ணுறது?” என்று கேட்க
ஆரியா அவளைத் தோளோடு அணைத்தவன் “அந்த டைமை தாண்டியும் லவ் வரலைனா கல்யாணம் பண்ணிட்டு லவ் பண்ணுவோம்… டீல் ஓகேவா?” என்று பெருவிரலை உயர்த்திக் கேட்டவனிடம் ஆர்வத்துடன் தலையாட்டினாள் சுமித்ரா.
“இப்போ மட்டும் தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையாட்டு… கொஞ்சநேரத்துக்கு முன்னாடி என்ன சொன்ன? பிரபோசலை வாபஸ் வாங்கிறியா? அது என்ன எலக்சன் நாமினேசனா? உன் இஷ்டத்துக்கு வாபஸ் வாங்குறதுக்கு” என்று கிண்டல் செய்தபடி அவளைக் காரில் அமர்த்தியவன் பதிலுக்கு அவள் பேசுவதைக் கேட்டபடி காரை அவளது வீட்டை நோக்கிச் செலுத்தினான்.
வீடு வந்ததும் சுமித்ரா இறங்கிக் கொண்டவள் “குட் நைட்” என்று சொல்ல, ஆரியா பெருமூச்சுடன் “குட் நைட்! நீ பாட்டுக்கு பிரபோஸ் பண்ணிட்டே.. இன்னைக்கு நைட் ஃபுல்லா எனக்குத் தூக்கமே வராது போ” என்று சொல்ல
சுமித்ரா “அஹான்! பரவால்ல, லவ் தான் வரலை… அட்லீஸ்ட் கனவாச்சும் வரட்டும்” என்றாள் அமர்த்தலாக.
ஆரியா “நல்லக் கனவு வந்தா பரவால்லையே! உன்னைப் பார்த்த நாள்ல இருந்து பேய்க்கனவு மட்டும் தானே வருது ஜெகன்மோகினி” என்று சொல்லிக் கண்ணைச் சிமிட்ட, சுமித்ரா கடுப்புடன் அவன் புஜத்தில் கிள்ளிவிட்டு “போடா” என்று சொன்னவள் வீட்டுக்குள் ஓடி மறையவே ஆரியா அவள் அளித்த மோதிரத்தை கண்கள் மின்னப் பார்த்தவன் காரை ஸ்டார்ட் செய்ய, அது அவனது வீட்டை நோக்கி விரைந்தது.
*****************
தனது காதலில் இருந்த பிரச்சனைகள் யாவும் அகன்றதால் சந்தியா நிம்மதியாக அவளது ஆர்டிக்கிள்ஷிப்பில் கவனத்தைச் செலுத்தினாள். கூடிய விரைவில் இறுதித்தேர்வில் ஒரே இரு குரூப்பை மட்டும் கிளியர் செய்யத் தயாராகிக் கொண்டிருந்தாள். அவளது குடும்பத்தினரும், சூரியாவின் குடும்பத்தினரும் அவளுக்குக் கொடுத்த அவகாசம் இரண்டு ஆண்டுகள். அதற்குள் இறுதித்தேர்வில் இரண்டு குரூப்களையும் அவள் முடித்தாக வேண்டும்.
கடந்த முறை போல இது எளிதல்ல என்று அவள் நன்கு அறிவாள். அவளுடன் படித்த ரெஜி இறுதிதேர்வுக்கு தான் இப்போதைக்கு தயாராகவில்லை என்றவள் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நிதித்துறையில் பணியிலமர்ந்துவிட்டாள்.
“சந்து! நீ பிராக்டிஸ் பண்ணுறதுனு முடிவே பண்ணிட்டியா? கம் ஆன்! பீ பிராக்டிக்கல்… நம்மளால ஆஃப்டர் மேரேஜ் புரபசனையும் ஃபேமிலியையும் மேனேஜ் பண்ண முடியாதுடி… ஒரு நல்ல கம்பெனியில நல்ல பொசிசனுக்குப் போனோமா, மாசம் ஆனா சேலரி வாங்குனோமானு இல்லாம ஏன்டி பிராக்டிஸ் பண்ணியே தீருவேனு அடம்பிடிக்கிற?” என்றவளிடம்
“இது என்னோட கனவுடி… டென்த் முடிச்சுட்டு என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே பயாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ்னு போனப்போ நான் மட்டும் காமர்ஸை செலக்ட் பண்ணுனேன்… எல்லாரும் என்னைப் பைத்தியக்காரி மாதிரி பார்த்தாங்க… இங்கெல்லாம் எப்பிடினு தெரியலை… பட் அப்போலாம் பாளையங்கோட்டையைப் பொறுத்தவரைக்கும் சயின்ஸ் க்ரூப்பில படிக்கேனு சொன்னா கெத்து… ஆர்ட்ஸ் எடுத்தா மக்குப்பொண்ணுனு நினைப்பாங்க… அதெல்லாம் தாண்டி என் கையெழுத்தை எல்லாரும் மதிக்கிற நிலைக்கு நான் வரணும்னா அதுக்கு நான் பிராக்டிஸ் பண்ணுறது மட்டும் தான் ஒரே வழி… எனக்கு என்னோட ஃபேமிலி மேலே நம்பிக்கை இருக்கு… அவங்க எனக்குச் சப்போர்ட் பண்ணுவாங்க” என்று நம்பிக்கையோடு சொல்லிவிட்டாள் அவளிடம்.
அவளது சூரியா அவள் கனவுக்கு என்றுமே உறுதுணையாக இருப்பான் என்று அவள் ஆணித்தரமாக நம்பினாள். சூரியாவும் அவளிடம் கண்ணியமான காதலனாகவும் உற்ற நண்பனாகவும் நடந்து கொண்டான். சந்தியா ஒரேயடியாகத் தன்னை மறந்து வேலையே கதியென்று இருந்துவிட்டால் அவனுக்கு இருக்கவே இருக்கிறாள் சாயா.
சாயா என்ற பெயரை அவன் உச்சரித்தால் அடுத்த நிமிடம் சந்தியா அவன் முன்னர் பிரசன்னமாகி விடுவாள். அதே காளிரூபத்துடன் தான்.
“ஏன்டா எவ்ளோ தைரியம் இருந்தா நீ அந்த நிப்பான் பெயிண்ட் கூடப் பேசிட்டிருந்தேனு இவ்ளோ கூலா என் கிட்டவே சொல்லிட்டு என் காலை கட் பண்ணுவ?” என்று அவனிடம் முறைத்துக் கொண்டு நிற்பவளிடம்
“நான் என்ன பண்ணுறது? நீ தான் ரொம்ப பிஸியா இருக்கியே… அதான் கொஞ்சநேரம் அவ கூட ஜாலியா பேசிட்டிருந்தேன்… நீ கால் பண்ணுனதைக் கவனிக்கலை” என்று சொல்லிக் கண்ணைச் சிமிட்டுவான்.
சந்தியா ஆங்காரத்துடன் பேச வரும் முன்னர் “நான் கேள்விப்பட்டேன், லார்ட் சூரியாவுக்கு ரெண்டு ஒய்ஃபாமே! அவங்க நேம் கூட சந்தியா அண்ட் சாயா தான்னு அம்மா சொன்னாங்க பிரவுனி” என்று சொல்லிவிட்டுக் குறும்பு மின்னச் சிரிப்பவனை என்ன செய்வது என்று புரியாமல் அவள் தனது கைகளை கோபத்துடன் குத்திக் கொள்வாள்.
[the_ad id=”6605″]
ஆனால் சில நொடிகளிலேயே அந்த கோபத்தை மாயமாய் மறையச் செய்துவிடுவான் சூரியா. அவன் தோளில் சாய்ந்து கொண்டிருக்கும் சமயங்களில் எந்தச் சாயாவாலும் அவளது சூரியாவைச் சாய்த்துவிடமுடியாது என்று கர்வத்துடன் சொல்லிக்கொள்வாள் சந்தியா. இருந்தாலும் தன்னவனை பேச்சளவில் கூட இன்னொருத்தியிடம் இணைத்துப் பேச அவள் மனம் அனுமதிக்காது.
இவ்வாறு நாட்கள் இனிமையாக நகர்ந்து கொண்டிருக்க, சதாசிவமும் தேவராஜும் கைலாஷ் படேலின் மகனான ஜித்தேஷின் திருமணப்பத்திரிக்கையை நாராயணன் குடும்பத்தினருக்குக் கொடுப்பதற்காக கைலாஷ் படேலுடன் சென்னைக்கு வந்திருந்தனர்.
சந்தியாவும் சுமித்ராவும் நீண்டநாட்களுக்குப் பிறகு தந்தையரைக் கண்ட மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயினர்.
இருவருக்குமே பொங்கலுக்குப் பெண்கள் ஊருக்கு வராத சோகம் இன்னும் நெஞ்சுக்குள் இருக்க தேவராஜ் “சந்து சின்னப்பிள்ளைத்தனமா இருக்கிறது கூடப் பரவால்ல… சுமியும் இந்தத் தடவை பிடிவாதமா வராம இருந்தது தான் ஆச்சரியம்” என்றார் மனத்தாங்கலுடன்.
சுமித்ரா “அவ வராம நான் மட்டும் எப்பிடி சித்தப்பா வருவேன்? அவ தான் சபதம் போட்டிருக்காளே” என்றாள் சிறுகுழந்தை போல.
சந்தியா இல்லாதக் காலரைத் தூக்கிவிட்டுப் பெருமைப்பட்டுக் கொண்டவள் “எஸ்…இன்னும் ரெண்டு வருசத்துக்கு நான் ஊர்ப்பக்கம் வர்றதா இல்லை” என்று சொல்லி மூவரையும் மீண்டும் அதிர வைத்தாள்.
சதாசிவம் “பாப்பா! இங்க பாருடா, பெத்தவங்க கிட்ட சபதம் போட்டு என்ன பண்ணப் போற? ரேணு பேசுனது தப்பு தான்… ஆனா அதைத் தான் அவ புரிஞ்சுகிட்டாளே… அப்பிடியே பார்த்தாலும் உனக்கு என்னை, உங்கப்பாவை நினைச்சா பாவமா இல்லையாடா?” என்று கேட்டதில் சந்தியா கொஞ்சமே கொஞ்சம் உருகிப் போனாள்.
ஆனால் ஊருக்கு வருவேன், வர மாட்டேன் என்று தீர்மானமாக உரைக்காமல் “இன்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் நானே என் கையாலச் சமைக்கப் போறேனே” என்று உற்சாகக் குரலில் சொல்லிவிட்டுச் சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.
ஆனால் இரவு சாப்பாட்டு நேரத்தின் போது தேவராஜ் மீண்டும் ஊர்ப்பேச்சை எடுத்த போது மீண்டும் மறுப்பு தெரிவிக்க அவளால் இயலவில்லை.
“சரிப்பா! நான் ஜித்து அண்ணாவோட கல்யாணத்துக்கு கண்டிப்பா ஊருக்கு வருவேன்… சுமிக்காவும் தான்… நீங்க ஒரி பண்ணிக்காதிங்க” என்று சொன்ன மகளின் கரத்தைப் பற்றிக் கொண்டார் அந்தப் பாசக்காரத்தந்தை.
பின்னர் அம்மா, சித்தி, பாட்டியுடன் வீடியோ காலில் பேசத் தொடங்கியச் சுமித்ரா தானும் சந்தியாவும் ஜித்தேஷின் திருமணத்துக்காக ஊருக்கு வரப் போவதை தெரிவித்துவிட்டாள். அவர்களுக்காக மூவரும் பொங்கலிலிருந்தே காத்திருப்பதாகக் கூற சந்தியாவுக்கும் சுமித்ராவுக்கும் அவர்களை வருத்திவிட்டோமோ என்ற வருத்தம். அதையும் பெரியவர்கள் பேசி சரிசெய்துவிட இரவுப்பொழுது நிம்மதியான நித்திரையுடன் கடந்தது
மறுநாள் கைலாஷ் படேலுடன் சேர்ந்து நால்வருமே சூரியாவின் வீட்டுக்குப் பத்திரிக்கை வைப்பதற்காகச் சென்றனர். அன்று ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக நாராயணன், ஹேமா, சூரியா மற்றும் ஆரியா என அனைவருமே வீட்டிலிருக்க ஹேமா கைலாஷ் படேலுடன் சேர்ந்து வருகை தந்த சதாசிவம் மற்றும் தேவராஜையும் அவரது மகள்களையும் இன்முகத்துடனே இம்முறை வரவேற்று உபசரித்தார்.
மகன்கள் மற்றும் கணவரின் மனமாற்றம் அப்பெண்மணியின் மனதையும் இளகச் செய்திருந்தது. தனது கௌரவம், அந்தஸ்தை விட மகனின் வாழ்க்கை இப்போது அவருக்கு முக்கியமாகத் தெரிய ஆரம்பித்திருக்கவே, வருங்கால மருமகள் என்ற இடத்தைச் சந்தியா ஏற்கெனவே முன்பதிவு செய்துவிட்டதால் அவளது குடும்பத்தினரை மரியாதையுடன் நடத்துவது அவசியம் என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொண்டார்.
கைலாஷ் படேல் நாராயணன் ஹேமா இருவரையும் சேர்த்து நிறுத்தி பத்திரிக்கையைக் கொடுத்தவர் திருமணத்தில் தம்பதி சமேதராய் கலந்து கொண்டு தனது மகனை வாழ்த்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொண்டார்.
அவர்களும் தாங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்வதாக வாக்களித்தவர்கள் வந்தவர்கள் வெறும் வயிற்றுடன் செல்லக் கூடாதென்று ஹேமா குடும்பத்தலைவியாய் வற்புறுத்தவும் மதியவுணவை அங்கே சாப்பிட ஒத்துக்கொண்டனர்.
[the_ad id=”6605″]
பெரியவர்கள் ஹாலில் அமர்ந்து கதை பேச, சமையலறையில் லெட்சுமிம்மாவின் கைவண்ணத்தில் தடபுடலாக விருந்து தயாராகிக் கொண்டிருந்தது.
சந்தியா எப்போதும் அந்த வீட்டுக்கு வந்தால் சூரியாவின் அறை இருக்கும் மாடித்தளத்தில் உள்ள பால்கனியில் ஒரு மூங்கில் கூடை ஊஞ்சல் இருக்கும். அதில் தான் அமர்ந்திருப்பாள். அன்றும் அதிலமர்ந்து வெளியே தெரிந்த காட்சிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
திடீரென்று அவளை யாரோ பின்னிருந்து அணைக்கவும் அவனது ஸ்பரிசத்திலேயே யாரென்று தெரிந்து கொண்டவள் “மார்ஸ்மாலோ! நீ போன ஜென்மத்துல பூனைக்குட்டியா பிறந்திருப்ப போல… என்னை உரசிக்கிட்டே இருக்கியே… அதான் சொன்னேன்” என்றாள் கேலியாக.
சூரியா அவள் தலையில் செல்லமாகக் குட்டியவன் அவளை ஊஞ்சலிலிருந்து எழும்பச் சொல்ல அவளும் எழுந்து நின்றாள். சூரியா அதில் அமர்ந்து கொண்டவன் சந்தியாவை மடியில் அமர்த்திக் கொண்டான்.
சந்தியா பதறிப் போய் விலக முயல அவளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டவன் “பிரவுனி! கொஞ்சநேரம் அமைதியா இரேன்” என்றவனை முறைத்தவள்
“ஏன் சொல்ல மாட்டே? கீழே உன்னோட ஃபேமிலி, என்னோட ஃபேமிலினு எல்லாரும் இருக்காங்க.. நீ கொஞ்சம் கூட பயம் இல்லாம இருக்க பாரு” என்று இன்னும் பதற்றத்துடன் கூறினாள்.
சூரியா அதைக் கண்டுகொள்ளாமல் அவளது முகத்தைப் பார்த்தபடி இருக்க “உனக்கு உன் பிடிவாதம் தான் முக்கியம்” என்று செல்லமாகச் சொன்னவள் அவனைக் குறும்புடன் பார்த்தபடி
“சப்போஸ் நீ சொன்ன வார்த்தையைக் காப்பாத்தலைனா என்ன பண்ணுறது? ஐ மீன் நீ ஆப்டர் மேரேஜ் என்னோட புரபசனுக்குச் சப்போர்ட் பண்ணலைனா நான் என்ன பண்ணுறதுனு கேட்டேன்”
சூரியா அவளை ஆழ்ந்து நோக்கியவன் “சிம்பிள்… நீ என்னை டிவோர்ஸ் பண்ணிடு” என்று சட்டென்று சொல்லிவிட சந்தியாவுக்கு நெஞ்சையடைத்தது.
சூரியா தொடர்ந்தவன் “நான் உன்னை இழக்க விரும்ப மாட்டேன்னு உனக்கு நல்லாவே தெரியும்… அப்பிடி இருக்கையில நான் எப்பிடி உனக்குச் சப்போர்ட் பண்ணாம இருப்பேன் பிரவுனி? அந்தத் தைரியத்துல தான் நான் இவ்ளோ கான்பிடெண்டா சொல்லுறேன்… சப்போஸ் கல்யாணத்துக்கு அப்புறம் நான் மாறிப்போயிட்டேன்னா நீ என்னைத் தாராளமா டிவோர்ஸ் பண்ணிடலாம்” என்று சொல்லவும் சந்தியாவுக்குக் கண்கள் கலங்கிவிட்டது.
அவனை அணைத்துக் கொண்டவள் “அப்பிடி ஒரு சூழ்நிலை நம்ம வாழ்க்கையில நமக்கு வராது மார்ஸ்மாலோ” என்று கூற
சூரியாவும் “நான் வரவிட மாட்டேன் பிரவுனி” என்று சொன்னபடி விழி மூடி அவளது அணைப்பில் ஆழ்ந்துவிட்டான்.
அப்போது யாரோ வரும் அரவம் கேட்டு இருவரும் விலகிக் கொள்ள அங்கே சுமித்ராவுடன் பேசியபடி வந்திருந்த ஆரியா “என்ன கண்ணும் கண்ணும் நோகியா பாடி முடிச்சாச்சா?” என்று இருவரையும் கேலி செய்தான்.
சுமித்ரா “நீ அதைப் பத்தி பேசாதே! இப்போ வரைக்கும் என் பிரபோசலை பெண்டிங்ல வச்சிருக்கிற நல்லவன் தானே நீ” என்று சொல்லி அழகு காட்ட
“நம்ம கல்யாணம் பண்ணிக்கிட்டு லவ் பண்ணுவோம் ஜெகன்மோகினி… இவனுக்கு இன்னும் ரெண்டு வருசத்துக்கு நோ மேரேஜ்.. நம்ம அந்த கேப்ல கல்யாணம் பண்ணிப்போம்… இதுங்க டேரக்டா அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கட்டும்” என்று சொல்ல
சந்தியா சூரியாவிடம் “கிரேட் இன்சல்ட் மார்ஸ்மாலோ! வா இப்போவே போய் எதாவது கோயில்ல கல்யாணம் பண்ணிப்போம்… இந்த பாஸ் நம்மளை ஓவரா கலாய்க்கிறாரு” என்று கோபத்துடன் கூற
ஊஞ்சலிலிருந்து எழுந்த சூரியா “பிரவுனி! வயிறு ரொம்ப பசிக்குது… நம்ம வேணும்னா சாப்பிட்டிட்டுச் சாயங்காலமா போய் கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேலி செய்ய அங்கே ஆரியாவும் சுமித்ராவும் சிரிக்கும் சத்தமும் அதைத் தொடர்ந்து சந்தியாவின் “போடா நான் ரெண்டு வருசம் கழிச்சே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்ற சந்தியாவின் கோபம் கலந்தக் குரலும் கேட்டது.
நால்வரும் இன்னும் சில காலங்களுக்குப் பிறகு இதே வீட்டில் வாழப்போகும் இனிய இல்லறத்தின் முகவுரை அன்று அவ்வீட்டில் எழுதப்பட்டது.
சாரல் வீசும்….