ஏழு வருடங்களுக்குப் பிறகு…
ஜே.கே.ஆர் ஃபேப்ரிக்ஸ் பிரைவேட் லிமிட்டெட் வழக்கமான பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. தணிக்கைக்கான வேலைகள் தொடங்கிவிட்டதால் ஊழியர்கள் தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்து கொண்டிருக்க ‘இண்டர்னல் ஆடிட்டர்’ என்ற பித்தளைத்தகடு பதிக்கப்பட்டக் கதவைத் திறந்து அதில் நாசூக்காகத் தட்டினாள் ஒரு இளம்பெண்.
“மே ஐ கம் இன் மேம்?”
“எஸ்! கம் இன்” என்ற குரல் உள்ளிருந்து கேட்கவும் அறைக்குள் பிரவேசித்தாள் அப்பெண்.
“மேம் நீங்க கேட்ட ரிப்போர்ட்ஸ், டாக்குமெண்ட்ஸ் எல்லாமே இருக்கு… ஒரு காப்பி உங்களுக்கு மெயில் பண்ணிட்டேன்”
“ஓகே! ஹியரிங் எத்தனை மணிக்கு நிஷா?” என்று அழுத்தமாகக் கேட்டபடி இவ்வளவு நேரம் கம்ப்யூட்டர் திரையில் இருந்த விழிகளைப் பிரித்தெடுத்தபடி வினவினாள் சந்தியா.
நெற்றி வகிட்டில் மின்னும் குங்குமமும், அவள் அணிந்திருந்த ஆலிவ் பச்சை டாப்பின் கழுத்தோரத்தைத் தழுவிக் கொண்டிருக்கும் தாலிச்சங்கிலியும் அவள் இப்போது சந்தியா தேவராஜ் இல்லை என்பதைச் சொல்லாமல் சொன்னது.
அந்த நிஷாவிடம் தகவல்களைக் கேட்டுவிட்டு அவள் கொண்டு வந்த ரிப்போர்ட்டுகளில் அந்த நிறுவனத்தின் இண்டர்னல் ஆடிட்டராகக் கையெழுத்திட்டவள் “இதை எம்.டிக்கு ஃபார்வேர்ட் பண்ணிடுங்க… நான் ஹியரிங் அட்டெண்ட் பண்ணப் போறேனு அவருக்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க” என்று கட்டளையிட்டவள் மெதுவாக கையை நாற்காலியின் கைப்பிடியில் ஊன்றியபடி எழுந்தாள்.
நிஷா அவளிடம் கை நீட்ட ஒரு புன்னகையுடன் அதைப் பற்றிக்கொண்டவள் மெதுவாக எழுந்து அறையை விட்டு வெளியேறுகையில் நிஷாவிடம் “சாருக்கு யாரும் கால் பண்ணுனாங்களா? ஐ மீன் யூ.எஸ் பார்ட்னர்ஸ்?” என்று கேட்க
“எஸ் மேம்! சாயா மேம் கால் பண்ணுனாங்க… இன்னும் டூ டேய்ஸ்ல இந்தியா வர்றாங்களாம்” என்று சொல்லவும் சந்தியாவுக்கு அளவுக்கு மீறி உள்ளம் களைத்துப் போனது.
நிஷாவிடம் சொல்லிவிட்டு அவள் கிளம்ப நிஷா எம்.டியின் அறையை நோக்கிச் சென்றாள். கதவைத் தட்டிவிட்டு உள்ளிருந்து குரல் வரும்வரை காத்திருந்தவள் குரல் கேட்டதும் உள்ளே நுழைந்தாள்.
அங்கே சுழல் நாற்காலியில் சாய்ந்தபடி “ஓகே சாயா… இந்தத் தடவை எந்தப் பிரச்சனையும் இருக்காது… நோ நோ… நான் எல்லாத்தையும் லீகலா ஃபினிஷ் பண்ணிடுவேன்… இப்போ ஹியரிங் நடந்திட்டிருக்கு” என்று பேசிவிட்டுப் போனை வைத்தவனின் இதழில் குறுஞ்சிரிப்பு மின்னியது.
அதே சிரிப்புடன் நிஷாவை ஏறிட்டவன் “மிஸ் நிஷா ஃபைல்ல உங்க மேடம் சைன் பண்ணிட்டாங்களா?” என்று கேட்டபோது அந்தக் குறுஞ்சிரிப்பு சற்று குறைந்தாற்போன்று இருந்தது நிஷாவுக்கு.
“எஸ் சார்! மேம் இப்போ ஹியரிங்குக்குப் போயிருக்காங்க” என்று தகவலைத் தெரிவித்துவிட்டு நிஷா வெளியேற தன்னை மீறி வலித்த தலையைப் பிடித்துக் கொண்டபடி விழிமூடி சுழல்நாற்காலியில் சாய்ந்து கொண்டான் சூரியா.
எத்தனை முறை எடுத்துக் கூறியிருப்பாள்! எதையும் கேட்காது தான் பிடிவாதமாக இருந்ததன் பலன் இன்றைக்குத் தெரிகிறது என்று எண்ணியவனுக்கு அவள் சொன்ன விஷயங்கள் யாவுமே இப்போது அர்த்தமுள்ளதாகத் தோன்றியது.
அவளிடம் எப்படி பேசுவது என்று புரியாத குழப்பமான மனநிலை மாலை வரை தொடர்ந்தது. மாலையில் வழக்கத்தைக் காட்டிலும் முன்னதாக வீடு திரும்பியவனுக்கு வீட்டின் வெறுமை முகத்தில் அறைந்தது.
ஆனால் உள்ளே காலடி எடுத்து வைத்ததும் “இன்னைக்கு நியூவா இந்த கேக் செய்யுற விதத்தை யூடியூபில பார்த்தேங்க… கண்டிப்பா நாளைக்குச் செஞ்சாகணும்” என்ற தாயின் குரல் கேட்டது.
[the_ad id=”6605″]
அதைத் தொடர்ந்து “எது செஞ்சாலும் உன் புத்திரச்சிகாமணிக்கு மட்டும் குடு ஹேமா… இந்த வயசான காலத்துல ஃபுட் பாய்சன் ஆகி ஹாஸ்பிட்டலுக்கும் வீட்டுக்கும் என்னால அலைய முடியாது” என்ற தந்தையின் கேலியும் கேட்டது.
அதில் மனம் சற்று இலேசாக உள்ளே நுழைந்தவனை “உன் பொண்டாட்டி மதியமே வந்துட்டா… நீ ஒரு போன் கால் கூட பண்ணலையே!“ என்ற தாயாரின் குற்றம்சாட்டும் குரல் வரவேற்றது.
சூரியா எதுவும் பேசாதிருக்கவே “இங்க பாருடா அவ இருக்கிற நிலமையில நீயும் அவளைப் போட்டு படுத்தாதே… அவ வேற அடிக்கடி சொல்லிட்டிருக்கா ‘இன்னும் கொஞ்சநாள் தானே, அப்புறமா தான் நான் அம்மா வீட்டுக்குப் போயிருவேனேனு’… இப்பிடி நம்ம குடும்பத்துல இதுவரைக்கும் நடந்ததே இல்லைடா” என்றார் ஆதங்கத்துடன்.
“நான் என்னம்மா பண்ணுறது? உங்க மருமகள் தான் போறதுல பிடிவாதமா இருக்காளே! எல்லாம் என் நேரம்… நான் வாய் விட்டுட்டேனே.. குடுத்த வாக்கைக் காப்பாத்த வேண்டிய கட்டாயம்” என்றவனின் தோளில் தட்டிக்கொடுத்தனர் அவனது தாயும் தந்தையும்.
நாராயணன் அமைதியாக “நீ சொல்லி பாரு! சந்தியா புரிஞ்சுப்பா” என்று சொல்லி அவனது அறைக்கு அனுப்பி வைத்தார்.
சூரியா அவனது அறைக்கதவைத் திறந்தவன் எதிர்புறச் சுவரில் தங்கள் திருமணப்புகைப்படம் தொங்குவதைக் கண்டான். ஐந்து வருடங்கள் கண் இமைப்பதற்குள் ஓடிவிட்டதாக எண்ணியபடி ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு உடை மாற்றினான்.
ஐந்து வருடத் திருமண வாழ்க்கையில் இதுவரையிலும் எந்த மனஸ்தாபங்களும், கருத்துவேறுபாடுகளும் அவர்களுக்குள் வந்ததில்லை. ஆனால் அதற்கு திருஷ்டிப்பரிகாரமாய் இப்போது ஒன்றுக்கு இரண்டாய் வந்துவிட்டது போல என்று எண்ணியவன் சந்தியா எங்கே என்று தேடினான்.
அவனது அலுவலக அறையில் நிழலாடுவதைக் கண்டவன் மனைவி அங்கே தான் இருக்கிறாள் போல என்று எண்ணியபடி அங்கே சென்றான். சந்தியா அவன் வந்ததைக் கூட அறியாமல் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தவள் அவன் முகத்தைக் கண்டதும் இணைப்பைத் துண்டித்தாள்.
அவளது முகம் இறுக்கமாகவே, சூரியா “ஹியரிங் எப்பிடி போச்சு?” என்று கேட்டான் மொட்டையாக.
“ஒரு வழியா பெரிய பிரச்சனை எதுவுமில்லாம முடிஞ்சுது.. ஐ.டி.ஓ(ITO) கிட்ட விஷயத்தை விளக்கியாச்சு… அவர் நமக்கு ஆக்ட்ல மென்சன் பண்ணிருக்கிற மாதிரி டைம் குடுத்திருக்காரு… சோ பெண்டிங் டி.டி.எஸ்(TDS) அமவுண்டை சீக்கிரமா கலெக்ட் பண்ணி டெப்பாசிட் பண்ணச் சொல்லிட்டாரு.. அதோட சேர்த்து ரிட்டர்னும் ஃபைல் பண்ணிட்டா ப்ராப்ளம் ஓவர்” என்றாள் ஒப்பிப்பது போல.
அதைக் கேட்டு அவன் எதுவும் பேசாமல் கையைக் கட்டிக்கொண்டு நிற்கவே “எத்தனை தடவை சொன்னேன்? டி.டி.எஸ் விஷயத்துல கேர்லெஸ்ஸா இருக்காதிங்கனு? நோகியாவோட ஸ்ரீபெரும்புதூர் பிளாண்ட் குளோஸ் ஆனதுக்கே இந்த இஸ்யூ தான் காரணம்… இவ்ளோ பெரிய இண்டஸ்டிரியலிஸ்டா இருக்கிற உனக்கு இதோட சீரியஸ்னெஸ் ஏன் புரியலை?” என்று வெகுண்டெழுந்துவிட்டாள் சந்தியா.
அந்த டி.டி.எஸ் வரி சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலுவலகத்தில் முறைகேடுகள் நடப்பதாக அவள் சந்தேகித்து அதற்கு ரிப்போர்ட்டும் சமர்ப்பித்தாள். ஆனால் அந்தப் பொறுப்பை மேற்கொண்டிருந்தவர் கம்பெனியின் நீண்டநாள் ஊழியர் என்பதால் சூரியா அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டான்.
இது தொடர்பாக வருமானவரித்துறையிலிருந்து நோட்டிஷ் வரவும் தான் அனைவருக்கும் பிரச்சனையின் தீவிரத்தன்மை புரிந்தது. சில ஆயிரங்களில் முடிய வேண்டிய வரித்தொகை காலக்கெடு முடிந்ததன் காரணமாக வட்டி, அபராதத்துடன் சேர்ந்து இலட்சமாக உயர்ந்துவிட்டிருந்தது. பணம் இங்கு பிரச்சனை இல்லை. ஜே.கே.ஆர் குழுமத்தின் வரி ஏய்ப்பு என்று தலைப்புச்செய்தியில் இடம்பிடித்துவிடும் நிலை வந்துவிடுமோ என்ற பயம் அப்போது தான் குழுமத்தின் இயக்குனர் குழுவுக்கு வந்தது.
அதோடு வருமான வரித்துறையில் சார்பில் வந்த நோட்டிசில் வரிசெலுத்தாமைக்கான காரணத்தை கம்பெனி நிர்வாகத்தின் சார்பில் ஒருவர் ஆஜாராகி விளக்கவேண்டும் என்று சொல்லிவிட கம்பெனியின் ஆடிட்டருடன் சேர்ந்து இண்டர்னெல் ஆடிட்டர் என்ற முறையில் சந்தியாவும் அதில் கலந்துகொள்ளவேண்டியதாயிற்று.
[the_ad id=”6605″]
ஒருவழியாக அந்தப் பிரச்சனையும் முடிவுக்கு வர இப்போது தான் சந்தியாவால் மூச்சு விட முடிந்தது. இருந்தாலும் ஆரம்பத்திலேயே தன் பேச்சைச் சூரியா கேட்கவில்லையே என்ற ஆதங்கம் அவளுக்குள்.
“இருந்தாலும் நீ நான் சொல்லுறப்போவே சுதாரிச்சிருக்கணும்” என்று மனத்தாங்கலுடன் சொன்னவளைப் பார்த்தபடி தானும் ஒரு நாற்காலியில் சாய்ந்தவன் “நீ நான் சொல்லுறதை எல்லாமே தட்டாம கேக்கிறியே! அந்த மாதிரியா?” என்று ஏளனத்துடன் கேட்டுவிட்டு அவளை நோக்கினான்.
ஓ! இந்தப் பிரச்சனை இன்னும் முடியவில்லையே என்று நினைவுப்படுத்திக் கொண்டவள் “நீ சொல்லுறதைப் பத்தி நீயே கொஞ்சம் யோசி சூரியா… அப்பாவும் அம்மாவும் நான் அங்கே வரணும்னு ஆசைப்படுறாங்க… இந்தத் தடவை என்னைக் கூடவே வச்சுப் பார்த்துக்கணும்னு அவங்களுக்கு ஆசை” என்று ஒரு மகளாகப் பெற்றோரின் நியாயமான ஆசையைக் கணவனிடம் விளக்கினாள் அவள்.
“ஏன்? எனக்குப் பிறக்கப்போற குழந்தைக்கு டெலிவரி செலவை ஏத்துக்க முடியாதளவுக்கு என்னோட ஃபினான்ஷியல் கண்டிசன் இன்னும் மோசமாகலை சந்தியா” என்று வெடுக்கென்று சொன்ன சூரியாவைக் கெஞ்சுவது போல பார்த்தாள் அவனது மனைவி.
“இதே டயலாக்கை நீ அனு என் வயித்துல இருக்கிறப்போவும் சொன்னதா நியாபகம்” என்ற சந்தியா
“என் அப்பா அம்மா மகளோட பிரசவத்தையாவது அவங்க செலவுல பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க! இது ஒன்னும் தப்பில்லையே” என்று பரிதாபமான முகத்துடன் கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
சூரியா நாற்காலியிலிருந்து எழுந்தவன் “ஐ பிராமிஸ்.. நெக்ஸ்ட் டெலிவரியை அவங்க பார்க்கட்டும்… நான் ஒன்னுமே சொல்ல மாட்டேன்.. பட் இந்தத் தடவை நீ இங்கே தான் இருக்கணும்” என்று அவளைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டான்.
அவனது ‘அடுத்த டெலிவரி’ என்ற வார்த்தையில் திகைத்த சந்தியா “டேய் இது உனக்கே ஓவரா தெரியாலையா? நீ சீனா கூடப் போட்டிக்கு நிக்கிறியா என்ன? ரெண்டு பேபி போதும்னு நம்ம முன்னாடியே பேசி டிசைட் பண்ணியாச்சு… அடுத்த டெலிவரியாம்ல அடுத்த டெலிவரி” என்று அவள் பொங்கியெழவும்
“இப்போவாச்சும் கோவம் போச்சா?” என்று கேட்டவனிடம்
“இன்னும் கொஞ்சநேரத்துல உன் மாமியார் வீடியோ கால்ல வரும்… அது கிட்ட பேசி சம்மதம் வாங்குறது உன்னோட திறமை” என்று சந்தியா சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாட்சப்பில் வீடியோ கால் வர சூரியாவே எடுத்துப் பேசினான்.
எடுத்ததும் பூமுகம் ஒன்று அதில் சிரிக்க “அனுகுட்டி! என்ன பண்ணுறிங்க?” என்று தனது நான்கு வயது மகள் அனுராதாவிடம் கொஞ்சத் தொடங்கினான் சூரியா.
“அப்பா நான் ஆச்சி கூட சேர்ந்து கூழ்வத்தல் பிரிப்பேர் பண்ணுறேன்” என்று மழலை சிறிது மிச்சமிருக்கும் குரலில் பேசினாள் அனு, அவனும் சந்தியாவும் வாழ்ந்த ஐந்துவருடக் காதல் வாழ்வின் பரிசு அவள்.
அன்றைக்குத் தாத்தாவுடன் எங்கேயெல்லாம் சென்றாள் என்பதைக் கதை கதையாக அவள் சொன்ன அழகில் சந்தியாவும் சூரியாவும் போனின் திரையை விட்டு கண்ணை அகற்றவில்லை.
அவளை மடியில் வைத்துக் கொண்டிருந்த சுமித்ராவின் முகமும் திரையில் விழ “பொண்ணைப் பார்த்துட்டா போதுமே! உங்க ரெண்டு பேருக்கும் நான் கண்ணுக்குத் தெரிய மாட்டேன்.. அடியே சந்து! நானும் ஆரியாவும் பதினஞ்சு நாளா ஊருல இல்லையே! கொஞ்சநேரம் போன் பண்ணி எப்பிடி இருக்கேனு கேட்டியா நீ?” என்று குற்றப்பத்திரிக்கை வாசிக்க ஆரம்பித்தாள் அவள்.
சந்தியா “சுமிக்கா! கம்பெனி பிரச்சனை இன்னைக்கு தான் முடிஞ்சுது… அதனால தான் அனு கிட்ட கூட என்னால பேச முடியலை… ஆமா அச்சு எங்கே போனான்? வழக்கம் போல பாஸ் கூட ரன்னிங் ரேஸா?” என்று கேலி செய்யும் போதே அந்த அறைக்குள் ஓடி வந்தச் சிறுவன் சுமித்ராவின் முதுகில் பசை போட்டது போல ஒட்டிக் கொள்ள அவனைத் துரத்தியபடி அறைக்குள் ஓடிவந்த ஆரியா மூச்சு வாங்கியபடி நின்றான்.
திரையில் தெரிந்த அவனது தோற்றம் சந்தியாவுக்கும் சூரியாவுக்கும் சிரிப்பை மூட்டியது. ஆரியா மற்றும் சுமித்ராவின் ஆறு வயது புதல்வன் அஸ்வின் தான் ஆரியாவுக்கு ஓட்டம் காண்பித்துக் கொண்டிருந்தான். அஸ்வினுக்கு பால் என்றால் சுத்தமாக ஆகாது. ஆனால் அவனுக்குக் கால்சியம் சத்து குறைவு என்பதால் தினமும் பால் குடிப்பதைக் கட்டாயம் ஆக்கவேண்டுமென்பது மருத்துவரின் அறிவுரை.
அதற்காக தினமும் காலையும் மாலையும் அவனைப் பெற்றவனைத் தன் பின்னே ஓடவைத்துப் பார்ப்பான் அஸ்வின். இந்த இருவரின் ஓட்டப்பந்தயமும் இரு குடும்பத்தாரிடையேயும் பிரசித்தி பெற்றது. இப்போது அஸ்வினுக்குக் கோடை விடுமுறை என்பதால் சுமித்ரா அஸ்வினையும், அனுராதாவையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு மேலகரம் வந்துவிட ஆரியாவும் அவளுடன் கிளம்பிவிட்டான்.
அவர்களுக்குத் திருமணமான இந்த ஆறுவருடத்தில் அவன் சுமித்ராவை விட்டு விலகியிருந்ததாகச் சரித்திரமே இல்லை. சூரியா கூட அவனைக் கிண்டல் செய்வான் “டேய் லவ் பண்ணலை லவ் பண்ணலைனு சொல்லிட்டு சுமியைப் பிரிஞ்சிருக்க முடியாம எனக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிக்கிட்டவன் தானேடா நீ!” என்று. இன்று வரை அவன் சுமித்ராவைக் காதலிப்பதாகப் பக்கம் பக்கமாக வசனம் எதுவும் பேசியதில்லை. ஆனால் அவனது காதல் அவனது செய்கையில் தெரியும்.
அதனால் தான் எவ்வித யோசனையுமின்றி மனைவி மக்களுடன் சேர்ந்து கோடை விடுமுறைக்காக மாமியார் வீட்டுக்கு வந்திருந்தான்.
சந்தியாவின் அலுவலகவேலை காரணமாக அனுராதாவைக் கவனிக்கும் பொறுப்பை அவள் பிறந்ததிலிருந்தே ஹேமாவும் சுமித்ராவும் ஏற்றுக்கொண்டிருந்தனர். அனு சந்தியாவின் மகளாக இருந்த போதிலும் சுமித்ரா அஸ்வினுக்கும் அவளுக்கும் எந்தப் பாகுபாடும் பார்த்ததில்லை.
இப்போதும் அவளுக்குச் சாப்பாடு ஊட்டும் போது தான் வீடியோ காலில் அழைத்திருந்தாள் சுமித்ரா.
அவள் பின்னே மூச்சு வாங்க நின்றிருந்த ஆரியாவைக் கண்டவர்கள் “ரேஸ் இன்னும் முடியலையா?” என்று கேட்க
ஆரியா சுமித்ராவின் முதுகில் அட்டையைப் போல ஒட்டிக்கொண்டிருக்கும் மகனைத் தன் வசம் இழுத்தவன் “சிரிக்காதிங்க லவ் பேர்ட்ஸ்! இதோ இவன் பிறந்ததுக்கு அப்புறம் எனக்கு வெயிட்டே போடலை தெரியுமா? இப்பிடியே ஓடி ஓடியே என்னை இளைக்க வச்சிட்டான் என் செல்லக்குட்டி” என்று செல்லமாகக் கோபித்துக்கொண்டே அஸ்வினைத் தூக்கி முத்தமிட்டவன்
“ஹியரிங் முடிஞ்சுதுனு கேள்விப்பட்டேன்… நீ தியா சொன்னதை முன்னாடியே கேட்டிருக்கலாம்டா அண்ணா… இப்போ பாரு! ஆறு மாசம் வேஸ்டா போயிடுச்சு” என்று சொல்லவும் பேச்சு அலுவலகம் பக்கம் திரும்பியது. அதற்குள் சுமித்ரா அனுராதாவுக்குச் சாப்பாட்டை ஊட்டியும் முடித்துவிட்டாள்.
மூவருமாக அலுவலகப் பேச்சுவார்த்தையை முடிக்கும் தருவாயில் சூரியா பெரியவர்களிடம் பேசவேண்டுமென்று கூறவே ஆரியா போனை ஹாலுக்கு எடுத்துச் சென்று தேவராஜிடம் கொடுக்க அதன் பின்னர் சந்தியாவின் மொத்தக்குடும்பமும் அங்கே ஆஜர்.
சந்தியாவின் தலைப்பிரசவம் சென்னையில் தான் நடக்குமென்று சூரியா சொன்னதால் வேறுவழியின்றி சந்தியாவின் குடும்பத்தினர் அதற்கு சம்மதித்து வைத்தனர். தான் ஒரு புறம் அவள் ஒரு புறம் இருப்பதில் தனக்குச் சம்மதமில்லை என்று சூரியா சொல்லிவிட்டான்.
ஆனால் சந்தியா இரண்டாம் முறை கருவுறும் போதே ரேணுகா இந்த முறை தாங்கள் தான் பிரசவத்தைப் பார்ப்போம் என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டிருந்தார். மற்றொரு பக்கம் ஹேமாவோ அது தங்கள் குடும்பத்தில் வழக்கமில்லை என்று மகனிடம் கூறிவிட்டார்.
இது குறித்து சந்தியாவும் சூரியாவும் அடிக்கடி பேசியதில் சில பேச்சுவார்த்தைகள் வாக்குவாதங்களாக முடிந்திருந்தன. சந்தியாவுக்குத் தன் பெற்றோரின் கோரிக்கை நியாயம் தானே என்ற எண்ணம். சூரியாவுக்கோ மனைவியை விட்டுப் பிரியமுடியாத நிலை.
தன் பிரச்சனையை சந்தியாவின் குடும்பத்தினரிடம் விளக்கிய சூரியா இம்முறையும் சந்தியாவின் பிரசவம் சென்னையில் தான் நடக்கும் என்று சொல்லிவிட்டு மிகவும் சிரமப்பட்டு அவள் குடும்பத்தினரைச் சமாதானம் செய்தான்.
[the_ad id=”6605″]
ரேணுகா கூட “தலைப்பிரசவம் நாங்க பார்க்கலையேனு எங்களுக்கு உறுத்தலாக இருக்கு… இதையும் நீங்களே பார்க்கிறதா பிடிவாதம் பிடிக்கிறிங்களே?” என்ற குறையுடன் தான் மருமகனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.
சூரியா இது ஹேமாவின் விருப்பம் என்ற ஒற்றைவார்த்தையில் முடித்துவிட அதன் பின் ரேவதியோ, கோமதியம்மாளோ, ரேணுகாவோ மறுபேச்சு பேசவில்லை. சந்தியாவின் முதல் பிரசவத்தின் போது ஹேமா உடனிருந்து அக்கறையுடன் பார்த்துக் கொண்ட காட்சி கண் முன் வந்தது அவர்களுக்கு.
பெண்களே ஒத்துக்கொண்ட பிறகு எங்களுக்கு ஒரு பிரச்சனையுமில்லை என்று சதாசிவமும், தேவராஜும் வெள்ளைக்கொடி காட்டிவிட்டனர். அதன் பின்னர் சிறிதுநேரம் தமக்கையுடன் பேசிய சந்தியா மகளிடம் சித்திக்கு எந்தச் சிரமமும் கொடுக்கக் கூடாது என்று அறிவுரை நால்வருக்கும் இரவு வணக்கத்தைச் சொல்லிவிட்டு வீடியோ காலைத் துண்டித்தாள்.
சூரியாவிடம் திரும்பியவள் “இப்போ திருப்தியா?” என்று கேட்க அவன் “டபிள் திருப்தி” என்று சொல்லி மனைவியைப் பால்கனிக்கு அழைத்துச் சென்றான்.
“கொஞ்சநேரம் காத்தாட இருப்போம்” என்று சொல்லி அங்கே அமர்ந்தவனிடம், சந்தியா திடுமென்று
“அந்த நிப்பான் பெயிண்ட் உனக்குப் போன் பண்ணுனாளா?” என்று கேட்டச் சந்தியாவை நமட்டுச்சிரிப்புடன் நோக்கியவன்
“மிசஸ் மார்க்கை இப்பிடி கிண்டல் பண்ணுறது மிஸ்டர் மார்க்குக்குத் தெரிஞ்சா என்னாகும் தெரியுமா?” என்று கேலி செய்ய
“அதெல்லாம் ஒன்னும் ஆகாதுடா… வில் ஸ்மித்துக்கு நான்னா தனிப்பிரியம்… என்னை ஒன்னுமே சொல்லுமாட்டாரு தெரியுமா!” என்று மார்க்கை விட்டுக்கொடுக்காமல் பேசினாள் சந்தியா.
சூரியா கேலியாக “அதே மாதிரி தான் எனக்கும் சாயான்னா தனிப்பிரியம்” என்று சொல்லிக் கண்ணைச் சிமிட்ட சந்தியா அவனது மார்பில் செல்லக்கோபத்துடன் அடிக்கத் தொடங்கினாள்.
அந்தப் பூவிழிப்பாவையின் பூங்கரங்களால் அடிக்கும் அடிகள் கூட மலர்ச்செண்டால் அடிப்பது போலத் தான் இருந்தது. பொய்க்கோபத்துடன் தன்னை முறைத்தவளைத் தன்னோடு சேர்த்துக் காதலுடன் அணைத்துக் கொண்டான் அவளது மார்ஸ்மாலோ. சாரலாய் தீண்டிய அவனது அணைப்பில் கண் மூடி தன்னை மறந்தாள் அவனது பிரவுனி.
இனிதே நிறைவுற்றது!