குளித்து முடித்து கீழே சென்றான் ஆதவன். செல்வி முகிலுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள். தம்பியைக் கண்டதும் “எந்திக்கிற நேரமா டா இது?”, என்று கேட்டாள்.
“நீயும் ஆரம்பிக்காத கா. சீக்கிரம் எந்திச்சு உன் மகன் மாதிரி கலெக்டர் வேலையா பாக்க போறேன்? அப்படித் தானே கலெக்டர் சார்?”, என்று சொல்லி முகிலின் தலையில் கொட்டினான் ஆதவன்.
“போடா, லூசு மாமா”, என்று கத்தினான் முகில்.
ஆதவன் மீண்டும் அவனை அடிக்கப் போக “டேய் குழந்தையை ஏன் டா அடிக்கிற?”, என்று கேட்ட படி அங்கே வந்த மங்கை ஆதவனுக்கு பிடித்த வகையில் தோசையை எடுத்து வந்து அவனுக்கு பரிமாறினாள்.
“அம்மான்னா அம்மா தான். தோசை சூப்பர். அப்புறம் என்ன சொன்ன? இவன் குழந்தையா? காலைல வசமா கன்னத்தை கடிச்சு வச்சிட்டான் மா”, என்று மருமகனைப் பற்றி தாயிடம் புகார் வாசித்தான்.
“டேய் முகில், மாமாவை கடிச்சியா? இது என்ன பழக்கம்? இரு சாயங்காலம் அப்பா கிட்ட சொல்றேன்”, என்று செல்வி முகிலை மிரட்ட “குழந்தையை மிரட்டாத செல்வி. அவன் முத்தம் கொடுத்திருப்பான். அதை தான் உன் தம்பி கடிச்சதா சொல்றான்”, என்று பேரனுக்கு பரிந்து கொண்டு வந்தாள் மங்கை.
“உன் பேரன் முத்தம் கொடுத்துட்டாலும்… சரி சரி நான் ஷாப்பிங் போகணும். எனக்கு துட்டு தா மா”, என்றான் ஆதவன்.
“துணி வாங்க தானே டா போற? எதுக்கு அடுத்த கடைல போய் துட்டைக் கரியாக்கணும்? நம்ம குடவுன்ல போய் எடுத்துக்கோ டா. நிறைய கலர் இருக்கும். நான் அப்பா கிட்ட சொல்றேன்”
“ஒண்ணும் வேண்டாம். அந்த பழைய மாடல் எல்லாம் எனக்கு சரி வராது. இப்ப டிரண்டே வேற? அது எங்க உன் புருசனுக்கு தெரிய போகுது? அவர் பழைய மாடலையே கட்டிக்கிட்டு இன்னும் தொழிலை நடத்திக்கிட்டு இருக்கார். நான் வேற நல்ல கடைல நல்ல துனியா எடுத்துக்குறேன். பணம் கொடு மா”
“சரி சரி, பீரோல பணம் இருக்கும். எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோ”
“விருமாண்டி பாத்துட்டா அவ்வளவு தான். ஏதோ திருடன் ரேஞ்சுக்கு லெக்சர் கொடுப்பார். அந்த மொக்கையை நம்மளால கேக்க முடியாது. நீயே எடுத்து தா மா”
“அப்பா வெளிய போய்ட்டார் டா. மில்லுக்கு போறேன்னு சொன்னார். ரங்கன் தான் விடப் போயிருக்கான். இப்போதைக்கு வர மாட்டார். அதனால நீயே போய் எடுத்துக்கோ”
“அப்படின்னா சரி தான். எனக்கு தோசை போதும் மா. மீதி தோசையை இந்த குட்டிச் சாத்தானுக்கே கொடு மா. நல்லா தின்னுட்டு அப்பா மாதிரியே பூச்சாண்டி மாதிரி வளரட்டும்”, என்றான்.
முகில் அவனைப் பார்த்து ‘வெவ்வ வெவ்வ’ என்று சைகை செய்ய “போடா”, என்று சொல்லி விட்டு அப்பாவின் அறைக்கு வந்தவன் தனக்கு தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த நோட்டில் எவ்வளவு ரூபாய் எடுத்திருக்கிறான் என்பதையும் எழுதி வைத்து விட்டு வெளியே வந்தான். அது அந்த வீட்டுப் பழக்கம். கணக்கு இடிக்காமல் இருக்க ரத்தினம் தான் அப்படிச் செய்ய வைத்தார்.
ஒரு முறை பணம் எடுத்த ஆதவன் அதில் எழுத மறந்திருக்க ரத்தினம் ஆடித் தீர்த்து விட்டார். அதில் இருந்து ஆதவனும் சரியாக எழுதி விடுவான்.
தன்னுடைய போனை எடுத்து ரங்கனுக்கு அழைத்தான் ஆதவன். அதை எடுத்த ரங்கன் “சொல்லுண்ணே”, என்றான்.
“எங்க டா இருக்க?”
“வேற எங்க? நம்ம மில்லுல தான்”
“நான் வெளிய போகணும். உன்னால வர முடியுமா? இல்லை நான் பெரிய கார் எடுத்துட்டு போகவா? அந்த விருமாண்டி கிட்ட கேட்டுச் சொல்லு. அவர் கிட்ட கேக்காம உன்னை கூட்டிட்டு போனா பேசியே சாகடிப்பார் டா”
“இரு ஐயா கிட்ட கேட்டுட்டு வரேன்”, என்று சொன்ன ரங்கன் உள்ளே சென்று “ஐயா”, என்று அழைத்தான்.
“என்ன டா?”, என்று கேட்டார் ரத்தினம்.
“அண்ணே கூப்பிட்டுச்சு. நான் போகட்டுமா இருக்கட்டுமா?”
“எனக்கு இங்க கணக்கு வழக்கு பாக்க நேரம் ஆகும் டா. நீ அவன் கூடவே போ. நீ இருந்தா சரியான நேரத்துக்கு வீட்டுக்கு வருவான். இல்லைனா அவன் இஷ்டத்துக்கு ஊர் சுத்துவான். நீ காரை எடுத்துட்டு கிளம்பு. மதிய சாப்பாடுக்கு கூப்பிட வந்தா போதும்”, என்று ரத்தினம் சொன்னதும் “சரிங்க ஐயா”, என்று சொல்லி விட்டு வெளியே வந்து ஆதவனை அழைத்தான்.
“என்ன டா, விருமாண்டி உன்னை ரிலீஸ் பண்ணிட்டாரா?”, என்று நக்கலாக கேட்டான் ஆதவன்.
“ஆமாண்ணே, சரி நீ கிளம்பி இரு. நான் இப்ப வரேன்”
“நீ சாப்பிட்டியா இல்லையா டா?”
“ஐயா சாப்பிடும் போதே சாப்பிட்டுட்டேன்”
“அப்படின்னா சரி, நீ பஸ் ஸ்டாண்ட் கிட்ட வந்து நில்லு. நான் வரேன்”
“சரிண்ணே”, என்று சொல்லி போனை வைத்த ரங்கனுக்கு தனக்கு கிடைத்த இந்த பாசமான குடும்பத்தை எண்ணி நெகிழ்வாக இருந்தது.
“அம்மா நான் கிளம்புறேன். ரங்கன் பஸ் ஸ்டாண்ட்ல நிப்பான். மதிய சாப்பாடுக்கு வீட்டுக்கு வந்துருவோம்”, என்று வெளியே இருந்து குரல் கொடுத்தான் ஆதவன்.
“சரி டா, பாத்து போயிட்டு வா. பசிச்சா ஏதாவது சாப்பிடுங்க. ரங்கன் பசி தாங்க மாட்டான். அவனுக்கு ஏதாவது வாங்கிக் கொடு”, என்று குரல் கொடுத்தாள் மங்கை.
அப்போது செல்வியும் முகிலை அழைத்துக் கொண்டு வெளியே வர “வீட்டுக்கு கிளம்பிட்டியாக்கா?”, என்று கேட்டான்.
“ஆமா டா, வா பேசிட்டே போகலாம்”, என்று சொல்லி செருப்பை போட்டாள்.
“மாமா தூக்கு”, என்று முகில் அவனிடம் கையை நீட்ட அது வரை இருந்த சின்ன சின்ன பகையை எல்லாம் மறந்து அவனைத் தூக்கிக் கொண்டான் ஆதவன். “இவனுங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லை”, என்று எண்ணிக் கொண்டாள் செல்வி.
செல்வி இருப்பது அடுத்த தெரு என்பதால் இருவரும் பேசிய படியே சென்றார்கள். “சுபாக்கா கால் பண்ணினாளா? பிள்ளைங்க, பெரிய மாமா எல்லாரும் எப்படி இருக்காங்க?”, என்று கேட்டான் ஆதவன்.
“நேத்து பண்ணினா டா. எல்லாரும் நல்லா இருக்காங்களாம். உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்றா. அப்பா கிட்ட சொன்னா கண்டுக்க மாட்டிக்கார். நான் உன் மாமாவை விட்டு அப்பா கிட்ட பேச வைக்கட்டா டா? பெரிய மாமாவையும் பேசச் சொல்வோம்”
“அட போக்கா, அதுல எல்லாம் இப்போதைக்கு விருப்பம் இல்லை. என்னை இப்போதைக்கு பிரியா விடு. கொஞ்ச நாள் சந்தோஷமா இருந்துக்குறேன்”, என்று அக்காவிடம் சொன்ன ஆதவன் தன்னுடைய கையில் இருந்த முகிலிடம் கதை பேசிய படியே வர மாமனும் மருமகனும் பேசுவதை ரசித்த படி வந்தாள் செல்வி.
அவர்கள் வீடு வந்ததும் “உள்ள வந்துட்டு போ டா”, என்றாள் செல்வி.
“வரேன் வரேன், இல்லைன்னா அத்தை அழுதுடும்”, என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தான்.
“டேய் கண்ணா வா வா”, என்று பாசமாக அழைத்தாள் ஆதவனின் அத்தை வேணி.
“பெரிய மாமா எங்க அத்தை? சக்தி மாமா வேலைக்கு போய்ட்டாங்களா?”, என்று கேட்ட படி அமர்ந்தவன் முகிலையும் மடியில் அமர்த்திக் கொண்டான். அவர்களைப் பேச விட்டுவிட்டு செல்வி உள்ளே சென்று விட்டாள்.
“சக்தி வேலைக்கு போய்ட்டான் டா. உன் மாமா வயல் வரைக்கும் போயிருக்கார்”, என்று வேணி சொல்லும் போதே “அம்மா காப்பி தா”, என்று கண்ணைக் கசக்கிய படி வந்தாள் பிரியா.
“ஏய் பிரியா நீ எப்ப வந்த? பரீட்சை முடிஞ்சிருச்சா?”, என்று கேட்டான் ஆதவன்.
அவனைக் கண்டதும் அவள் தூக்கமெல்லாம் பறக்க “அத்தான் எப்படி இருக்கீங்க? பரீட்சை எல்லாம் நேத்தே முடிஞ்சிருச்சு”, என்று சந்தோஷமாக சொன்னாள்.
அதற்கு ஆதவன் எதுவோ சொல்ல “ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க. நான் காபி எடுத்துட்டு வரேன்”, என்றாள் வேணி.
“வேண்டாம் அத்தை, இப்ப தான் சாப்பிட்டு வரேன். ரங்கன் பஸ் ஸ்டாண்ட் கிட்ட வெயிட் பண்ணிட்டு இருக்கான். நான் கிளம்புறேன். மாமா வந்தா சொல்லிருங்க. படிச்சு படிச்சு களைச்சுப் போய் வந்துருக்க பிரியாவுக்கு ருசியா செஞ்சி போடுங்க அத்தை. நான் வரேன் பிரியா. அக்கா நான் கிளம்புறேன். முகில் பாய்”, என்று அனைவரிடமும் சொல்லி விட்டுக் கிளம்பினான்.
“பாய் மாமா”, என்று சொன்ன முகில் டிவியில் ஆழ்ந்து போக, போகும் ஆதவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் பிரியா. மருமகனையே பார்த்துக் கொண்டிருக்கும் மகளை ஒரு பார்வை பார்த்து விட்டு வேணி உள்ளே சென்று விட்டாள்.
பிரியாவுக்கு ஆதவன் என்றால் மிகவும் பிடிக்கும். அவனைப் பார்ப்பதற்காக தான் அவனுடைய வீட்டுக்கே அதிகம் செல்வாள். எப்படியும் அவன் தனக்கு தான் என்ற கனவில் தான் அவளும் இருந்தாள். எப்போதடா அவனுடன் திருமணம் செய்து வைப்பார்கள் என்று ஏங்கிக் கொண்டு இருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அவளுக்கு அவன் மீது பைத்தியம்.
அவளுடன் ஆதவன் இயல்பாக தான் பழகுவான். அத்தை பெண் தானே என்று அதிக உரிமை கூட எடுக்க மாட்டான். அவனுடன் படித்த பெண் தோழிகளுடன் எப்படி பழகுவானோ அது போல தான் பிரியாவிடமும் பழகுவான். அவளுடைய காதலோ, அவள் மனதில் இருக்கும் ஆசையோ எதுவுமே அவனுக்கு தெரியாது. தெரியும் படி பிரியா நடந்து கொண்டதும் இல்லை. அவளும் மனதில் இருப்பதை வெளிப்படையாக அவனிடம் காட்டிக் கொள்ள மாட்டாள். அவனிடம் அவளுடைய மனதைச் சொல்ல அவளுக்கு இது வரை தைரியம் வந்ததில்லை.
பிரியாவின் ஆசை வேறு யாருக்கும் தெரியாமல் போனாலும் அவளுடைய அன்னை வேணி அறிந்தது தான். மகளின் மனதை அறிந்த வேணிக்கும் மகளை அண்ணன் மகனுக்கு கொடுக்க தான் ஆசை. ரத்தினம் எப்போது ஆதவனின் திருமணம் பற்றி பேசுவார் என்று தான் அவள் காத்திருந்தாள்.
அது அவளது கணவன் விஸ்வத்துக்கு எல்லாம் தெரியாது. தெரிந்தாலும் அவரும் சரி என்று தான் சொல்லுவார். விஸ்வத்துக்கும் மச்சான் ரத்தினம் மேல் அதிக அன்பு உண்டு. அப்படி இருக்க அந்த வீட்டில் மகளைக் கட்டிக் கொடுக்க மாட்டாரா என்ன? இவர்கள் இங்கே கற்பனையில் இருக்க எல்லாமே விதிப் படி தானே நிகழும்?
பஸ் ஸ்டாண்ட் சென்ற ஆதவனைக் கண்ட ரங்கன் டிரைவர் சீட்டில் ஏறி காரை எடுத்தான். அவன் அருகில் ஏறி அமர்ந்த ஆதவன் “சிட்டி குள்ள போனதும் நாம எப்பவும் போற டீக் கடைல வண்டியை நிறுத்து டா”, என்று சொல்லி விட்டு பாடல்களை செலக்ட் செய்து போடத் துவங்கினான்.
“அண்ணே, உனக்கு ஒரு பார்வர்ட் மெஸ்ஸேஜ் அனுப்பினேன் பாத்தியா?”, என்று கேட்டான் ரங்கன்.
“பாத்தேன் பாத்தேன், நீயும் உன் மெஸ்ஸேஜும்… ஒரு வீடியோ பாத்தேன். அடுத்ததை பாக்கலை. அவ்வளவு கேவலமா இருந்துச்சு”
“உன்னை யாரு அந்த சீனைப் பாக்கச் சொன்னா? அதுல இருக்குற ஹீரோயின் அழகா இருந்தால்ல?”, என்று கண்கள் மின்னக் கேட்டான் ரங்கன். ரங்கன் ஒரு சினிமா பைத்தியம். அதுவும் ஒரு நடிகையின் தீவிர விசிறி. ஆதவன் அவனை வெறுப்பேற்ற வேண்டும் என்றால் அந்த நடிகையைத் தான் கலாய்ப்பான். அதைக் கேட்டு ரங்கன் முகத்தில் ஏறும் கோபத்தையும் அதை தன்னிடம் காட்ட முடியாமல் அவன் தவிப்பதையும் காண அவனுக்கு ஆனந்தமாக இருக்கும்.
“எனக்கு அப்படி எல்லாம் தோணலை. அவளும் அவ மூஞ்சியும்”, என்று ஆதவன் சொல்ல “உன் கிட்ட போய்க் கேட்டேன் பாரு. போண்ணே”, என்று சொல்லி முகத்தைத் திருப்பிக் கொண்டான் ரங்கன்.
“சரி விடு டா, சும்மா தான் சொன்னேன். உடனே முகத்தை தூக்கி வச்சிக்குவியே?”, என்று அவனை சமாதானப் படுத்தினான்.