அங்கே அமைதியே நிலவ அனைவரின் முகமும் இறுக்கத்தில் இருந்தது. அதை போட்டோகிராபர் பதிவு செய்தார். பின் வேணி கோபமாக இறங்கிச் சென்று விட்டாள். அவள் பின்னே பிரியாவும் கோபமாக சென்று விட்டாள். விஸ்வம் தான் ஆதவனிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டு விட்டுச் சென்றார்.
சக்தியும் செல்வியும் என்ன சொல்ல என்று தெரியாமல் நிற்க “அம்மா அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம்”, என்று சொன்னான் ஆதவன். அவர்களும் சரி என்று சொல்லி விட்டு கிளம்பினார்கள்.
“எனக்கும் வேலை இருக்குண்ணே”, என்று சொல்லி விட்டு ரங்கனும் கிளம்பி விட்டான். ஏனோ இது வரை இருந்த உற்சாகம் வடிந்தது போல இருந்தது ஆதவனுக்கு. அவன் முகம் இறுகிப் போய் இருக்க சிந்துவுக்கு என்னவோ போல இருந்தது.
கையில் ஏகாம்பரம் தந்திருந்த பை வேறு இருக்க “இதை என்ன செய்ய?”, என்று ஆதவனிடம் காட்டிக் கேட்டாள் சிந்து.
“நீ தானே அவர் கொடுத்தார்னு வாங்கி வச்ச? இப்ப என் கிட்ட கேக்குற?”, என்று கோபமாக கேட்டான். வேணி மேல் இருந்த எரிச்சல் மனைவி மீது திரும்பி இருந்தது.
“நான் வேணும்னு இதை வாங்கலை”, என்று பயந்த படி சொன்னாள் சிந்து.
அவள் பயத்தைக் கண்டவன் தன்னுடைய கோபத்தைக் குறைத்துக் கொண்டு “அது உன் அப்பா உனக்கு கொடுத்த பணம். அதை என்ன செய்யன்னு என் கிட்ட எதுக்கு கேக்குற? உனக்கு என்ன செய்யணுமோ செய்”, என்றான்.
“கோபப் படாதீங்க. நான் இதை திருப்பி கொடுத்துறவா?”
“அதை நீ திருப்பிக் கொடுத்தாலும் சரி, வச்சிக்கிட்டாலும் சரி, அது உன் இஷ்டம். ஆனா நீ என்னைச் சார்ந்து மட்டும் தான் இருக்கணும். உங்க அப்பா சொன்ன மாதிரி உன்னை இருக்க விட மாட்டேன்”
அவன் சொன்னது புரியாமல் பயத்துடன் அவனைப் பார்த்தாள். “என்ன புரியலையா? அந்த பணத்தை நீயே வச்சிக்கோ”, என்றவன் அங்கு நின்ற ஆனந்தை அழைத்தான்.
“என்ன மச்சான் ஏதாவது வேணுமா?”, என்று கேட்ட படி வந்தான் ஆனந்த்.
“இல்லை மாமா, இதோ சிந்து கிட்ட இருக்குற பையை வாங்கி பத்திரமா வச்சிக்கோங்க”
“சரி”, என்ற படி அதை வாங்கிச் சென்று விட்டான். அவன் போன பின்பு சிந்து ஆதவனையே பார்க்க “அந்த பணம் உன் கிட்ட பொம்மை மாதிரி தான் இருக்கும். இனி உனக்கு என்ன தேவையா இருந்தாலும் நீ அதை என் கிட்ட தான் கேக்கணும். அது ஒரு கேர்பின்னா இருந்தா கூட. என்ன டா இந்த சின்ன விஷயத்தை கூட இவன் கிட்ட கேக்கணுமா? நாமளே வாங்கிக்கலாமேன்னு நினைச்சு கூட நீ அந்த பணத்தை எடுக்க கூடாது. உனக்கு என்ன வேணும்னாலும் என் கிட்ட சொல்லு. நான் உன்னை கடைக்கு கூட்டிட்டு போறேன். இல்லைன்னா என் பணத்தை எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்கோ. அதுல தான் நீ வாங்கணும். இந்த பணத்துல வாங்க கூடாது”, என்று அவன் சொல்ல முதல் முறையாக கம்பீரத்துடன் கூடிய அழகை அவனிடம் உணர்ந்தாள் சிந்து.
அவள் அவனையே பார்க்கவும் “என்ன டி ஒரு சைசா பாக்குற?”, என்று கேட்டான்.
“ஒரு கோடி கேட்டாலும் எனக்கு கொடுத்துருவீங்களா?”
“கண்டிப்பா. இதுல என்ன சந்தேகம்? உனக்கு இல்லாததுன்னு என் கிட்ட எதுவும் இல்லை. நீ கேட்டா ஒரு கோடி கூட குடுப்பேன். ஏன் என்னால முடியாதுன்னு நினைக்கிறியா?”
“இல்லை, உங்களால முடியும். ஆனா ஏன்னு புரியலை”
“என்ன புரியலை?”
“நேத்து தான் என்னைப் பாத்தீங்க?”
“ஆமா அதுக்கென்ன?”
“அதுக்குள்ள எனக்காக எதுக்கு இவ்வளவு செய்யனும்?”
“ஏன்னா நீ என்னோட மனைவி. உனக்கு வேணும்னா பழகி பாத்த பிறகு என்னை புருசனா ஏத்துக்குற எண்ணம் இருக்கலாம். ஆனா உனக்கு தாலி கட்டின நிமிசத்துல இருந்து நீ என்னோட சரி பாதி தான்”, என்று சொல்ல அவனை ரசித்தாள் சிந்து. ஆனால் அவன் சொன்னதை அவள் மனதில் ஏற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அவன் சொன்னதை எல்லாம் மனதில் வைக்காமல் அவனை வியப்பாக பார்த்தாள். அவளிடம் இல்லாத தைரியம், தெனாவெட்டு அவனிடம் இருந்ததில் அவள் கண்கள் சொந்தத்துடன் அவனைப் பார்த்தது. அவனைப் பார்த்து அவளுக்கு பிரம்மிப்பாகவும் இருந்தது. மனைவியின் பார்வையில் லேசான ரசிப்புத் தன்மை தெரிய இதுவரை அவன் முகத்தில் இருந்த இறுக்கம் அவனை விட்டுச் சென்றது.
அப்போது “தேங்க்ஸ் டி சிந்து”, என்றான் ஆதவன்.
“ஏன்?”, என்னும் விதமாய் அவள் குழப்பமாக அவனைப் பார்க்க “நீ வைதேகியை ஃபேமிலி போட்டோக்கு வர வச்சதும் அம்மாவுக்கு அவ்வளவு சந்தோஷம். எங்க அம்மா முகத்துல ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் அதிக சந்தோசத்தைப் பாக்குறேன். அம்மா முகத்தைப் பார்த்து ஆச்சி கண்ணுல ஆனந்த கண்ணீரே வந்துட்டு”, என்றான்.
“இதுல என்ன இருக்கு? வைதேகி என்னோட ஃபிரண்ட். அதான்”
“ஹிம், ரொம்ப நல்ல பொண்ணு”
“உங்களுக்கு அவளைப் பிடிக்குமா?”, என்று தயக்கத்துடன் கேட்டு விட்டாள்.
“ஓ பிடிக்குமே? அவளை எனக்கு மட்டும் இல்லை. இன்னொரு ஆளுக்கும் ரொம்ப பிடிக்கும். அது யாருன்னு அப்புறம் சொல்றேன்”, என்றதும் சிந்து அவனைக் குழப்பமாக பார்த்தாள்.
அதைக் கண்ட ஆதவன் “உன்னை விட கம்மியா தான் டி அவளைப் பிடிக்கும். இந்த உலகத்துலே உன்னைத் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்”, என்று அவளுடைய கண்களை ஊடுருவிய படி சொல்ல அவள் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.
அதற்கு பின்னரும் அவள் முகம் யோசனையிலே இருக்கவும் “பெரிய சஸ்பென்ஸ் எல்லாம் இல்லை டி. வைதேகிக்கு என் ஃபிரண்ட் ஒருத்தனை மாப்பிள்ளை பாக்கலாம்னு நினைச்சேன். அவன் இப்ப பாரின்ல இருக்கான். காலேஜ் படிக்கும் போது ஒரு போட்டோல அவளைப் பாத்துட்டு இப்ப வரை அவளை விரும்புறான். இது வைதேகிக்கு தெரியாது. அவன் அடுத்த வருஷம் தான் இந்தியா வரான். அவன் வந்த அப்புறம் தான் அப்பா அம்மா கிட்ட பேசி மாமா அத்தை கிட்ட பேசச் சொல்லணும். அவன் பேர் வைகுந்த். பேர் கூட பொருத்தமா இருக்குல்ல?”, என்று கேட்டதும் சிந்து முகம் மலர்ந்தது. அதை ரசனையாகப் பார்த்தான்.
அப்போது பரமசிவம் சுப்பு இருவரும் மேடைக்கு வந்தார்கள். அம்மா அப்பாவைக் கண்டு வைதேகியும் ஓடி வந்தாள். “மாமா”, என்று ஆதவன் தாய்மாமாவை பாசமாக அழைக்க அவனை அணைத்துக் கொண்டவர் அவன் கழுத்தில் ஒரு செயினைப் போட்டு விட்டார்.
சிந்துவுக்கும் அவர் ஒரு செயினைப் போட இந்த காட்சியை அனைவரும் வியந்து பார்த்தார்கள். ஏனென்றால் மாப்பிள்ளை பக்க உறவுகள் மாப்பிள்ளைக்கு மட்டும் தான் பரிசு கொடுப்பார்கள். ஆனால் இவர் பெண்ணுக்கும் செய்யவும் அனைவருக்குமே வியப்பு தான்.
“எதுக்கு பா இதெல்லாம்?”, என்று சிந்து கேட்க “நீயும் எனக்கு பொண்ணு தான் டா”, என்று சொல்லி அவள் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் வழங்கினார் பரமசிவம். சுப்பு அவள் கன்னத்தை பாசமாக வருடினாள்.
அந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஏகாம்பரம் அமுதவள்ளி ஆகட்டும் ரத்தினம் மங்கை ஆகட்டும் நெகிழ்ந்து போனார்கள்.
அவர்கள் மேடையில் இருந்து இறங்கியதும் தன்னுடைய மகனுடன் சேர்த்து மருமகளையும் கௌரவப் படுத்திய பரமசிவத்தை அணைத்துக் கொண்டார் ரத்தினம். கணவனும் அண்ணனும் கட்டிக் கொண்டு இருப்பதைக் கண்டு மங்கை நெகிழ்ந்து போய் ரங்கநாயகியைப் பார்த்தாள். மகனும் மருமகனும் கட்டி அனைத்திருப்பதைக் கண்டு பாட்டியின் கண்களிலும் குளம் கட்டியது.
இந்த காட்சியைக் கண்டதும் வேணிக்கு தான் எரிச்சலாக இருந்தது. “பாத்தீங்களா இந்த அண்ணனை? திடீர்னு மச்சினன் கிட்ட அப்படி உருகி உருகிப் பேசுறார்? எப்படி கட்டிப் பிடிச்சிட்டு நிக்குறாங்க பாருங்க?”, என்று விஸ்வத்திடம் பொருமினாள்.
“வாயை மூடு வேணி, நானே எரிச்சல்ல இருக்கேன். நானும் சிந்துவுக்கு ரெண்டு வளையலைப் போடுவோம்னு சொன்னேன் தானே? நீ தான் ஒண்ணும் வேண்டாம்னு சொல்லிட்ட? இப்ப பாரு. ஏதோ எனக்கு தான் தலை இறக்கம் மாதிரி இருக்கு. இனி ஊர்ல எல்லாரும் பரமுவை புகழ்ந்து பேசுவாங்க. அந்த பொண்ணு நமக்கும் பொண்ணு மாதிரி தானே? எதுக்கு அந்த பொண்ணுக்கு எடுக்க வேண்டாம்னு சொன்ன? உன்னால வெறும் ரெண்டு பவுன்ல என் மானம் போச்சு. நீ சரியே இல்லை. பிரியா முகமும் சரி இல்லை. நீங்க ரெண்டு பேரும் முதல்ல வீட்டுக்கு கிளம்புங்க. இங்க இருந்தா ஏதாவது பிரச்சனை கிளப்பிருவீங்களோன்னு பயமா இருக்கு. வீட்டுக்கு நான் சாப்பாடு அனுப்பி வைக்கிறேன்”, என்று சொல்லி அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார் விஸ்வம்.
அதன் பின் மற்ற சொந்தங்கள் அனைவரும் மேடையேறி மணமக்களுக்கு பரிசுகள் கொடுக்க கடைசியாக ஆதவனின் நண்பர்கள் கூட்டம் மேடை ஏறியது. அதன் பின் பாட்டு டேன்ஸ் என்று களை கட்ட சிந்து தான் மிரண்டு போய் நின்றாள். அவளுக்கு இரு புறமும் அசோக்கும் ஆதவனும் அரணாக நின்றார்கள்.
அவர்களும் சென்றதும் போட்டோகிராபர் அவர்களை விதவிதமாக போஸ் கொடுக்க வைத்து புகைப்படம் எடுத்தார். சிந்து வெகுவாக சோர்ந்து போனாள்.