வேணி ஆதவன் வீட்டுக்கு வரவில்லை என்று சொன்னதும் “காலைலே ஆரம்பிக்காதீங்க மா. மதியம் சாப்பாடு சாப்பிட்டுட்டு வரப் போறோம். கிளம்புங்க”, என்று சக்தி உறுதியாக சொன்னதால் வேறு வழியில்லாமல் அனைவரும் கிளம்பினார்கள்.
ஆனால் செல்விக்கு மட்டும் எதுவும் நடந்து விடுமோ என்று திக்கு திக்கு என்று இருந்தது.
சக்தி வீட்டினர் வந்த போது ஆண்களெல்லாம் கிடாவை வெட்டுவதில் பிஸியாக இருந்தனர். பெண்கள் எல்லாம் வெங்காயம் உரிப்பது, இஞ்சி பூண்டு உரிப்பது என செய்து கொண்டிருந்தனர்.
சுபாவும் சிந்துவும் பூண்டு உரித்துக் கொண்டிருக்க செல்வி மங்கை அருகில் அமர்ந்து வெங்காயம் உரிக்க ஆரம்பித்தாள். அப்போது அங்கே வந்தார்கள் வேணியும் பிரியாவும். பிரியாவைப் பார்த்ததும் சிந்துவுக்கு என்னவோ போல இருந்தது. ஏதோ குழப்பம் அவளை அரித்தது. ஒருவரை பார்த்த உடனே பிடிக்க வில்லை என்று சொல்வோமே? அப்படி ஒரு உணர்வு அவளுக்கு பிரியாவைப் பார்த்ததும் எழுந்தது.
அப்போது “சுபா அவந்தி அழுறா பாரு. தூங்கி எந்திச்சிட்டான்னு நினைக்கிறேன்”, என்று மங்கை சொல்ல சுபா எழுந்து சென்றாள்.
“பிரியா சிந்து கூட உக்காந்து பூண்டு உரிச்சு கொடு மா. அவ தனியா கஷ்டப் படுறா பாரு”, என்று சொன்ன மங்கை தன்னுடைய வேலையைத் தொடர்ந்தாள். வேண்டா வெறுப்பாக பிரியா சென்று சிந்து அருகில் அமர சிந்துவுக்கு எரிச்சலாக வந்தது.
அதைக் கண்ட வேணி யாருக்கும் கேட்காத வகையில் “பிரியா இங்க என்ன பண்ணுற? கண்டவங்களுக்கு நடக்குற விருந்துக்கு நீ பூண்டு உரிக்கணும்னு உனக்கு தலையெழுத்தா? அவளே செய்யட்டும். நீ எழுந்து வா”, என்று சொல்ல சிந்து காதில் அவள் பேச்சு தெளிவாக விழுந்தது.
சிந்து அதிர்ந்து விழிக்க வேணியோ அவளை கண்டு கொள்ளவே இல்லை. பிரியா அங்கிருந்து எழுந்து செல்ல “அவ எங்க போறா வேணி?”, என்று கேட்டாள் மங்கை.
“அவங்க அப்பாவுக்கு ஏதோ மெயில் அனுப்பனுமாம். அதான் கூப்பிட்டார்”, என்று சிரித்தே சமாளித்தாள் வேணி.
“இவ்வளவு பூண்டையும் நான் எப்படி உரிப்பேன்?”, என்று மலைத்துப் பார்த்தாள் சிந்து. சிறிது நேரத்தில் அவள் நகக் கண் எல்லாம் வலிக்க ஆரம்பித்தது. மற்ற பெண்களையும் குறை சொல்ல முடியாது. ஆளுக்கு ஒரு வேலை பார்த்தனர்.
சிந்து நிலைமையை முதலில் கண்டது ரத்தினம் தான். “பாவம் பிள்ளை, இந்த வேலை எல்லாம் செஞ்சிருக்காது”, என்று எண்ணிக் கொண்டு வெளியே சென்றார். ஆண்கள் எல்லாம் வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அவர்களின் பண்ணையாள் ஒருவர் ஆட்டை வெட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
“கிடாய் வெட்டுறது ஒருத்தன், அதை பாக்குறதுக்கு இம்புட்டு பேரா டா? எல்லாரும் உள்ள வாங்க. ரெண்டு மாப்பிள்ளைங்களா நீங்களும் வாங்க. ரங்கா உன் அண்ணனைக் கூட்டிட்டு நீயும் வா. இன்னைக்கு புதுசா ஒரு வேலை செய்யப் போறோம்”, என்றார் ரத்தினம்.
அவர் பின்னே அனைவரும் வீட்டுக்கு வந்தார்கள். “உங்க ஐயா எதுக்கு டா நம்மளைக் கூட்டிட்டு போறார்?”, என்று கேட்டான் ஆதவன்.
எனக்கு தெரியாது என்னும் விதமாக ரங்கன் உதடு பிதுக்க சக்தி மற்றும் ஆனந்த் கூட என்ன என்று தெரியாமல் குழப்பத்துடன் சென்றார்கள். உள்ளே வந்த ரத்தினம் “சிந்து கொஞ்சம் நகந்து உக்காரு மா”, என்றார்.
திடீரென்று அவர் குரல் கேட்டதில் அவள் பதறி கொஞ்சம் தள்ளி அமர்ந்தாள். பின் அவர் ஆதவனைப் பார்க்க அவர் பார்வையை புரிந்து சிந்து அருகில் அமர்ந்தான். அதன் பின் ரங்கன் அமர மற்றவர்களும் வந்தார்கள்.
“மாமா இங்க எதுக்கு உக்கார வைக்கீங்க?”, என்று கேட்டான் சக்தி.
“பொண்ணுங்க மட்டும் தான் பூண்டு வெங்காயம் உரிக்கணுமா? இன்னைக்கு நாமளும் உரிப்போம்”, என்று சொன்னவர் சிந்து கையிலிருந்த பூண்டு பாத்திரத்தில் இருந்து மற்றவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்க அவளோ நிம்மதியாக அவரைப் பார்த்தாள் .
தன்னுடைய மனைவிக்காக தான் அப்பா இப்படி செய்கிறார் என்று உணர்ந்து கொண்ட ஆதவன் “தேங்க்ஸ் பா”, என்றான்.
“யாரும் என் கிட்ட பேச வேண்டாம். அவ நம்ம வீட்டுப் பொண்ணு. அவ என்னைக்கும் கஷ்டப் படக் கூடாது. சரி சரி இப்ப கதை பேசிட்டே உரிங்க பாப்போம்”, என்று சொன்ன ரத்தினமும் அவர்களுடன் அமர்ந்து பூண்டு உரித்தார். இந்த காட்சியை எல்லாம் மங்கை, செல்வி, ரங்கநாயகி மூவரும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரத்தில் அந்த பக்கம் வந்த வேணி சிந்துவுக்கு துணைக்காக இருக்கும் அனைத்து ஆண்களையும் கண்டு திகைத்து போனாள். அவள் முகம் கர்ண கொடூரமாக மாறியது. அது வேறு யார் கண்ணிலும் விழ வில்லை என்றாலும் ரங்கன் கண்ணில் விழுந்தது. ஆனால் இதை வெளியில் சொல்ல முடியாது என்பதால் அமைதியாகி விட்டான். இதற்கெல்லாம் காரணமாக இருந்த சிந்துவை முறைத்துப் பார்த்தாள் வேணி. அது சிந்து கண்ணிலும் விழுந்து அவளுக்கு மேலும் பயத்தைக் கொடுத்தது.
“அண்ணே என்ன இதெல்லாம்? எதுக்கு நீங்க இதை எல்லாம் செய்றீங்க? நீங்க எப்பேர் பட்ட ஆள். நீங்க போய் இதெல்லாம் செய்யலாமா? இதுல ஆனந்த் மாப்பிள்ளையை வேற உக்கார வச்சிருக்கீங்க? அது மட்டுமில்லாம ஆதவன் சக்தி கூட இங்க உக்காந்து பூண்டு உரிக்கிறாங்க?”, என்று கேட்டாள் வேணி.
“இதுல என்ன மா இருக்கு? ஊருக்கு பெரிய ஆள்னாலும் வீட்ல உங்க எல்லாருக்கும் உரிமை பட்டவன் தானே? என் மருமக தனியா உக்காந்து கஷ்டப் படுறதைப் பாத்தேன். அதான் எல்லாரையும் இங்க வர வச்சேன். வேணும்னா உன் மகனை வேணும்னா கூட்டிட்டு போ. என் மகன் இங்க தான் இருப்பான். ஆனந்த் மாப்பிள்ளையும் எனக்கு இன்னொரு மகன் தான். அவரும் நான் சொன்னதைச் செய்வார். சக்தி நீ வெங்காயம் உரிக்கிறது உன் அம்மாவுக்கு பிடிக்கலை போல? எழுந்து போ பா”, என்று சாதாரணமாக ரத்தினம் சொல்ல “நான் இங்க தான் இருப்பேன் மாமா. நானும் உங்களுக்கு மகன் மாதிரி தான். எப்பவும் அதை மறக்க கூடாது”, என்றான் சக்தி.
“சரி மாப்பிள்ளை”, என்று ரத்தினம் சிரிக்க மற்ற பெண்கள் முகத்திலும் புன்னகை மலர்ந்தது. கருத்த முகத்துடன் வேணி அங்கிருந்து சென்றாள்.
வேணி முகம் ஒரு மாதிரி இருக்கவும் “என்ன மா ஒரு மாதிரி இருக்குற?”, என்று கேட்டாள் பிரியா.
“எல்லாரும் அந்த சிந்துவை தாங்கு தாங்குன்னு தாங்குறாங்க. சரி வா. நாம மட்டும் இங்க இருந்தா உங்க அப்பா ஏதாவது சொல்லப் போறார்?”, என்று சொல்லி மகளை அங்கே அழைத்துச் சென்றாள்.
அவர்கள் சென்ற போது பூண்டு உரிக்கிறேன் என்று பெயர் பண்ணிக் கொண்டு ஆதவன் மென்மையான குரலில் சிந்துவை சீண்டிக் கொண்டிருக்க அவளோ சிறு வெட்கத்துடன் அவனுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள். அனைவரும் பாராதது போல அதை பார்த்து ரசித்தனர். பிரியாவுக்கு உள்ளுக்குள் புகைந்தது.
சமையல் வேலை ஆரம்பித்ததும் சிந்து ரங்கநாயகி அருகில் சென்று அமர்ந்து கொண்டாள். அவர் இந்த வீட்டு வழக்கம், ஊர் வழக்கம், ஆதவன் பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருக்க சிந்துவுக்கு நன்கு நேரம் போனது.
விருந்து ஆரம்பமாகும் போது வைதேகி வேறு குடும்பத்துடன் வந்து விட அதன் பின் சிந்துவும் வைதேகியும் ஒன்றாக சுற்றிக் கொண்டிருந்தனர்.
விருந்து முடிந்ததும் வேணி பிரியாவை அழைத்துக் கொண்டு முதல் ஆளாக வீட்டுக்கு சென்று விட்டாள். அவர்கள் சென்றது விஸ்வம், சக்தி, மற்றும் செல்விக்கு நிம்மதியாக இருந்தது. இங்கேயே இருந்தால் ஏதாவது பிரச்சனை ஆகி விடுமோ என்று உள்ளுக்குள் பதறிக் கொண்டு தான் இருந்தார்கள்.
செல்வி முகம் ஒரு மாதிரி இருப்பதை வைத்து ஏற்கனவே சுபா காரணம் கேட்டு விட்டாள். ஏதோ தலைவலி என்று சொல்லி சமாளிப்பதற்குள் வெகுவாக திணறிப் போனாள் செல்வி. சிறிது நேரத்தில் அவளும் சக்தியுடன் வீட்டுக்கு கிளம்பி விட்டாள்.
சுபா குடும்பமும் மணமக்களை விருந்துக்கு அழைத்து விட்டு கிளம்பி சென்று விட்டது.
வைதேகி குடும்பம் கிளம்பும் போது ரங்கநாயகியும் மகன் வீட்டுக்கு கிளம்பி விட்டார். அதன் பின் வீட்டு ஆட்கள் மட்டும் தான் இருந்தார்கள்.
ரத்தினம் வேலை விஷயமாக வெளியே சென்று விட ரங்கன் மற்றும் மங்கை இருவரும் அதிகப் படியான களைப்பால் அவரவர் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்று விட்டார்கள்.
வீட்டை சுத்திக் காட்டுவதிலும், சிந்துவின் உடைகளை அடுக்குவதிலும் ஆதவன் மற்றும் சிந்துவுக்கு நேரம் கடந்தது. பின் ஆதவனும் அவளை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு வெளியே சென்று விட்டான்.
அப்போது தான் வீட்டின் நினைவு வர ஏகாம்பரத்துக்கு முதலில் அழைத்தாள் சிந்து. அவள் போனை பாய்ந்து எடுத்த அவர் “குட்டிமா எப்படி இருக்க டா?”, என்று கேட்க அவர் பாசத்தில் சிந்து நெகிழ்ந்து போனாள்.
“நல்லா இருக்கேன் பா”, என்று சொல்லும் போதே அவர் அன்பில் அவள் கண்கள் கலங்கியது.
“அங்க வேற எதுவும் பிரச்சனை இல்லை தானே? அவன் உன்னை ஒண்ணும் சொல்லலைல்ல?”, என்று அவர் பரிதவிப்பாய்க் கேட்க “இல்லைப்பா”, என்று அவருக்கு பதில் சொன்னாலும் அவர் ஆதவனை அவன் இவன் என்று அழைத்தது அவளை பாதித்தது.
இந்த வயதிலும் வீட்டு மாப்பிள்ளையான விஸ்வத்துக்கு ரத்தினம் மரியாதை கொடுக்கிறார். அது போல தங்கையை திருமணம் செய்து வைத்ததற்காக பரமசிவம் ரத்தினத்தை மரியாதையாக அழைக்கிறார். அப்படி என்றால் ஆதவனுக்கும் அவர் மரியாதை கொடுக்க வேண்டுமே என்று அவள் மனது சிந்தித்தது.
ஆனால் அவள் அதை கேட்பதற்குள் ஏகாம்பரம் வேறு பேச ஆரம்பித்தார். அவரிடம் பேசி விட்டு அமுதவள்ளி மற்றும் அசோக்கிடமும் பேசினாள். கடைசியாக அஞ்சலிக்கு அழைத்தாள்.
“சிந்து, சொல்லு டி எப்படி இருக்க? அங்க எல்லாம் ஓகே தானே?”, என்று உண்மையான அக்கறையில் கேட்டாள் அஞ்சலி.
“நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?”
“எனக்கென்ன? நான் நல்லா இருக்கேன். அங்க அண்ணன் எப்படி இருக்காங்க? அவங்க அப்பா அம்மா எல்லாரும் நல்லா இருக்காங்களா?”
“எல்லாரும் நல்லா இருக்காங்க அஞ்சலி”
“அவங்க எப்படி இருக்காங்க?”
“அவங்கன்னா யாரு அஞ்சலி?”
“அதான் அண்ணனோட தம்பி“
“ஓ ரங்கன் அண்ணனைச் சொல்றியா?”, என்று சாதாரணமாக கேட்டாள்.
“ஆமா”
“நல்லா இருக்காங்க. இப்ப தான் தூங்கப் போனாங்க”, என்று சொன்ன சிந்துவுக்கு அஞ்சலி மனது புரியவே இல்லை.
“சரி, அப்புறம் சிந்து உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”, என்று ஆரம்பித்தாள் அஞ்சலி.
“என்ன அஞ்சலி?”
“அது வந்து எப்படி ஆரம்பிக்கன்னு தெரியலை. நாம இது வரைக்கும் அப்படி எல்லாம் பேசினதில்லை”
“நாம இது வரை பேசாத விஷயமா? என்ன அது?”
“உனக்கு காதல்னா என்னன்னு தெரியுமா?”
“காதல்னா… காதல் இருந்தா ஒருத்தங்களை ரொம்ப பிடிக்கும்னு அர்த்தம்”
“குட். அப்புறம்… வந்து…“
“இவ எதுக்கு இப்படி தயங்குறா?”, என்று வியப்பாக இருந்தது சிந்துவுக்கு.