அஞ்சலிக்கோ முள் மேல் நிற்கும் உணர்வு தான் வந்தது. படபடப்பாக வந்தது. தன்னுடைய வீட்டில் மொட்டை மாடியில் நின்று தான் பேசிக் கொண்டிருந்தாள். யாரும் வந்து விடுவார்களோ என்று அவளுக்கு பயமாக இருந்தது. முகத்தில் வியர்வை ஆறாக வழிந்து கொண்டிருந்தது.
“என்ன ஆச்சு அஞ்சலி? என்னன்னு சொல்லு”
“அது வந்து உனக்கு… உனக்கு முத்தம்னா என்னன்னு தெரியுமா?”
“தெரியும் டி. நீ இதைக் கேட்ட அப்புறம் தான் எனக்கு ஒரு விஸயமே நினைவு வந்துச்சு. முத்தம்ன்னா அப்பா நெத்தில தானே கொடுப்பாங்க. ஆனா இங்க இவர்… இவர்”, என்று அவள் சொல்ல முடியாமல் திணற “என்ன ஆச்சு டி?”, என்று
“ஐஸ்கிரீம் சாப்பிடுறேன்னு சொல்லி…. வாய்ல… வாய்ல?”, என்று அவள் சொல்லும் போதே அஞ்சலிக்கு புரிந்தது.
“ஏய் நிஜமாவா?”, என்று அஞ்சலி வியப்புடன் கேட்ட “ஆமா அஞ்சலி, அது தப்பு தானே?”, என்று கேட்டாள் சிந்து.
“அது தப்பா சரியான்னு அப்புறம் சொல்லுறேன். அப்படி நடந்தப்ப உனக்கு என்ன தோணுச்சினு இப்ப சொல்லு”
“எனக்கு என்ன தோணனும்? புரியலையே”
“உனக்கு பிடிச்சதா சிந்து? இல்லைன்னா பிடிக்காத மாதிரி வெறுப்பா இருந்ததா?”
“எனக்கு சொல்லத் தெரியலை அஞ்சலி. ஏதோ ஒரு மாதிரி…… எனக்குள்ள எப்படியோ…..?”, என்று பதில் சொல்ல முடியாமல் திணறினாள்.
“சிந்து நான் பேச வந்ததும் இதைப் பத்தி தான். ஒரு பிரண்டா உனக்கு சில விஷயங்களை சொல்ல வேண்டியது என்னோட பொறுப்பு. கடமையும் கூட. அப்படி நடந்தது எல்லாம் தப்பு இல்லை சிந்து. அது கணவன் மனைவிக்கு இடையே நடக்க வேண்டிய இயல்பான விஷயம். அது வெறும் முத்தம் தான். அதுக்கும் மேலயும் இருக்கு”
“அதுக்கும் மேலயும்னா?”, என்று அவள் கேட்டதும் அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறினாள் அஞ்சலி.
இதைப் பற்றி பேசுவது நாகரிகத்தை தாண்டின விஷயம் என்று அவளுக்கு புரியத் தான் செய்தது. குடும்பம் தாம்பத்யம் பற்றி எல்லாம் அவ்வளவு எளிதாக பேசும் விஷயம் அல்லவே.
“என்ன ஆச்சு அஞ்சலி? என்னன்னு சொல்லு”
“நான் சொன்னா நீ பயபடக் கூடாது. எதுவும் தப்பு அர்த்தமும் எடுக்க கூடாது”
“நீ இப்படி சொல்றதைப் பாத்து தான் எனக்கு பயமா இருக்கு”
“உங்களுக்கு ஒரு மாசம் எந்த சடங்கும் கிடையாதுன்னு சொல்லிருக்காங்க. அந்த ஒரு மாசம் முடிஞ்சதும் அண்ணா….”
“என்ன ஆகும்? அவங்க என்ன பண்ணுவாங்க? அது என்ன சடங்கு?”
“அப்புறம்… அண்ணா உன் கிட்ட வருவாங்க? அப்ப நீ அவங்களை வெறுக்க கூடாது”
“அது தப்பு தானே? நாம ஸ்கூல் படிக்கும் போதே பசங்க பொண்ணு கிட்ட போகக் கூடாது. அது அப்பாவோ அண்ணனோ இருந்தா விதி விலக்கு. அது மட்டுமில்லாம குட் டச், பேட் டச் எல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க தானே?”
“அதெல்லாம் கணவன் மனைவி குள்ள கிடையாது சிந்து மா”, என்று சொன்ன அஞ்சலிக்கு அவர்களின் அந்தரங்க வாழ்க்கைக்குள் மூக்கை நுழைப்பது போலவே இருந்தது.
“நீ என்ன தான் சொல்ல வர அஞ்சலி? எனக்கு குழப்பமாவே இருக்கு”, என்றாள் சிந்து.
“சொல்ல தான் டி டிரை பண்ணுறேன். ஆனா சத்தியமா முடியலை. ஒரு பத்து நிமிசத்துல உனக்கு ஒரு வீடியோ அனுப்புறேன். வாழ்க்கைன்னா என்ன? கணவன் மனைவி எப்படி இருக்கணும்? எது தப்பு எது சரின்னு நீயே தெரிஞ்சிக்கோ”, என்று சொன்ன அஞ்சலி போனை வைத்து விட்டாள். சிந்து குழப்பத்திலே இருக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகியும் அஞ்சலியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
இங்கே அஞ்சலியோ சிந்துவுக்கு அனுப்ப விடீயோ தேடுகிறேன் என்று கண்டதைத் தேடிப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தாள். ஒரு வழியாக சிந்துவுக்கு புரிவது போல ஒரு வீடியோவை அனுப்பி விட்டு போனைத் தூக்கி போட்டு விட்டு அப்படியே அமர்ந்து விட்டாள். ஏதோ மிகப் பெரிய தவறு செய்தது போல அவளது உள்ளம் நடுங்கியது. கை கால் வெடவெடக்க அமர்ந்திருந்தாள். கூடவே அவளுக்குள்ளும் சில உணர்வுகள் உதயமானது. அதில் நாயகனாக ரங்கன் முகம் மனக் கண்ணில் வர தான் நினைப்பது நடக்குமா நடக்காதா என்று எண்ணி அவள் கண்களில் கண்ணீர் வந்தது.
அப்படி அது என்ன வீடியோ என்று எண்ணி அதை ஓப்பன் செய்த சிந்துவோ அதைப் பார்த்து உள்ளம் நடுங்க அமர்ந்திருந்தாள். அவள் கை கால்கள் எல்லாம் ஜில்லிட்டுப் போனது.
முழுமையாக அதைப் பார்க்க முடியாமல் ஓட விட்டு ஓட விட்டு பார்த்து முடித்தவள் அதை நம்ப முடியாமல் போனை கட்டிலில் வைத்து விட்டாள். அஞ்சலி சொன்ன வாழ்க்கை இது தானா என்று குழம்பிப் போனாள்.
சிறிது நேரத்தில் நடப்புக்கு வந்த அஞ்சலி தன்னுடைய தலையிலே அடித்துக் கொண்டாள். தன்னுடைய நிலையே இப்படி இருக்கிறது என்றால் சிந்துவின் மனநிலை என்ன ஆகும் என்று அவளுக்கு அப்போது தான் கவலை பிறந்தது.
அவசரமாக தன்னுடைய போனை எடுத்தவள் “நீ பாத்தது தான் நிஜ வாழ்க்கை. உண்மையான கணவன் மனைவி இப்படி தான் இருப்பாங்க. இதுல பயப்படவோ தப்பா நினைக்கவோ எதுவுமே இல்லை சிந்து. இது இயல்பான விஷயம். உன்னோட வாழ்க்கையில் இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும் போது நீ அதை எதிர்க்கொள்ளணும்னு தான் இதை அனுப்புனேன். உன் அம்மாவும் உன் கிட்ட இதைச் சொல்லச் சொன்னாங்க. ஆனா என்னால சொல்ல முடியலை. இதைப் பாத்துட்டு தேவையில்லாம யோசிச்சு மிரண்டு போகக் கூடாது. என் சிந்து எப்பவும் தைரியமா இருக்கணும். ஒரு மாசம் கழிச்சு உனக்கான நாள் வரும் போது நீ இயல்பா இருக்கணும். உன் அத்தை பையன் உனக்கு இந்த விஷயம் தெரியாதுன்னு தான் உன்னை வேண்டாம்னு சொல்லிட்டுப் போயிருக்கான். ஆனா அண்ணா அப்படி இல்லை. இருந்தாலும் நீயும் அண்ணனோட உணர்வுகளை புரிஞ்சிக்கணும். ரிலாக்சா இரு. இதையெல்லாம் தெரிஞ்ச மாதிரி அவங்க கிட்ட காட்டிக்காத. திருப்பியும் சொல்றேன், நீ நீயா இயல்பா இருக்கணும். நான் அப்புறம் பேசுறேன்”, என்று ஒரு பெரிய மெஸ்ஸேஜ் அனுப்பி வைத்தாள். அதை படித்த பிறகும் சிந்து இயல்புக்கு திரும்ப வில்லை.
அன்று இரவு ஆதவன் அறைக்கு வரும் போது சிந்து தூங்காமல் படுத்திருந்தாள். ஆனால் அவனை எதிர்க் கொள்ளத் தான் அவளுக்கு தைரியம் இல்லை. கண்ணால் கண்ட காட்சியே அவளுடைய மனக் கண்ணில் வலம் வந்தது.
“சிந்து”, என்று அழைத்தான் ஆதவன். அவளிடம் இருந்து எந்த பதிலும் இருக்க வில்லை. அவனும் அமைதியாக படுத்து விட்டான். அறையில் ஒலித்த கடிகாரத்தின் டிக் டிக் ஒலி மட்டுமே கேட்டது அங்கு. சிறிது நேரத்தில் அவன் உறங்கி விட்டாலும் அவளுக்கு உறக்கம் என்பதே வர வில்லை.
அடுத்த நாள் காலை எப்போதும் போல முதலில் கண் விழித்தது ஆதவன் தான். அருகில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்தான். அவள் அவனிடம் இருந்து சற்று தள்ளிப் படுத்திருந்தாலும் அவளது வலது கை அவனது தலையணையில் இருந்தது.
வெண்மையாக இருந்த அவளது கரத்தைப் பார்த்தவனுக்கு “கையே இவ்வளவு வெள்ளையா இருக்கு… அப்படின்னா மத்தது எல்லாம்….”, என்ற எண்ணம் தான் வந்தது.
எண்ணம் போகும் திசையை எண்ணி தலையில் அடித்துக் கொண்டவன் பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டான். குளித்து முடித்தவன் “சிந்து எந்திரி, டைம் ஆச்சு பாரு”, என்று எழுப்பினான்.
ஆனால் அவளோ அசையாமல் இருக்க அவளது கையைத் தொட்டு அசைத்தான். அப்போது தான் அவளது கரத்தின் சூடு அவனுக்கு புரிந்தது.
அவசரமாக நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். “ஐயோ இவ்வளவு காச்சல் அடிக்குது”, என்று அதிர்ந்து போனவன் ஏ. சி யை அணைத்து விட்டு மின் விசிறியைச் சுழல விட்டான். பின் போர்வையை அவளுக்கு சரியாக மூடி விட்டவன் கீழே வந்து மங்கையிடம் தகவல் சொன்னான். மங்கைக்கும் பதட்டம் தான் வந்தது.
விஷயம் கேள்விப் பட்ட ரத்தினம் ரங்கனை அனுப்பி மருத்துவரை அழைத்து வரச் சொன்னார். டாக்டர் வந்து பார்த்து விட்டு “சாதாரண ஜுரம் தான். ரெண்டு நாள்ல சரியாகிரும்”, என்று சொன்னார்.
அன்று முழுவதும் கண் விழிக்காமல் கிடந்தாள் சிந்து. ஆதவனும் மங்கையும் அவளை நன்கு பார்த்துக் கொண்டார்கள். மங்கை மூலம் விஷயம் கேள்விப் பட்ட ரங்கநாயகி பேத்தியைக் காண ஓடி வந்து விட்டார்.
“பிள்ளையைப் பாத்து ஊரே கண்ணு போட்டுருக்கும். அதான் இப்படி ஆச்சு”, என்று புலம்பிக் கொண்டே அவளுக்கு விபூதி பூசி விட்டாள்.
அவளுக்கு காச்சல் பூரணமாக குணமாக மூன்று நாட்கள் ஆனது. இந்த மூன்று நாட்களில் சிந்துவிடம் தெரிந்த மாற்றம் ஆதவனை வெகுவாக பாதித்தது. முதல் இரண்டு நாட்கள் பயம் இருந்தாலும் அவன் முகம் பார்த்து பேசியவள் காச்சல் வந்ததில் இருந்து அவன் முகத்தைப் பார்ப்பதையே தவிர்த்தாள்.
“இவளுக்கு திடீர்னு என்ன ஆச்சு?”, என்று அவன் குழம்ப அவள் பார்த்த வீடியோவின் தாக்கம் தான் இது என்பதை அவனுக்கு யார் சொல்வது?
அவள் தன்னை ஒதுக்குகையில் அவனால் மட்டும் எப்படி அவளை நெருங்க முடியும்? அதனால் சிறு குழப்பத்துடனே நாட்களைக் கடத்தினான்.
சிந்துவும் மனதில் எழுந்த குழப்பங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டிருந்தாள். ஆனாலும் அவளால் ஆதவனை இயல்பாக பார்க்க முடியவில்லை. மங்கையிடம் ரங்கனிடம் சாதாரணமாக பேசினாள். ரத்தினத்திடமும் பயத்துடன் என்றாலும் சிறிது பேசினாள். வீட்டினருக்கும் அடிக்கடி போன் செய்து பேசினாள். அஞ்சலியிடம் கூட அதைப் பற்றி பேசாமல் பொதுவான விசயங்களைப் பேசினாள். ஆனால் ஆதவனைக் கண்ட உடன் அமைதியாக இருந்து கொண்டாள். அவளை எப்படி மாற்ற என்று தெரியாமல் குழப்பத்தில் அவனும் விலகியே இருந்தான்.
என்ன தான் அவளுக்காக விலகி இருக்க நினைத்தாலும் ஆதவனுக்கு தான் அவளுடன் ஒரே அறையில் இருப்பது சத்திய சோதனை போல இருந்தது. வேலை வெட்டி ஒண்ணும் இல்லாததால் முழு நேரமும் அவளுடன் இருக்க வேண்டிய நிலை என்பதால் கொஞ்சம் திணறித் தான் போனான். அவள் இப்படியே ஒடுங்கிப் போனால் தன்னுடைய தவிப்பு இன்னும் எத்தனை நாளைக்கு என்று அவனுக்கு கவலையாக இருந்தது.