இரவு தன்னை மறந்து அவள் தூங்குகையில் அவளை அள்ளி அணைக்க ஆசையாக தான் இருக்கும். ஆனால் அடக்கிக் கொள்வான். அவன் ஏதாவது பேசினால் கூட இப்போதெல்லாம் பதில் கொடுக்க அவ்வளவு யோசிக்கிறாள் அவள். அப்படி இருக்க அவனால் எப்படி அவளை நெருங்க முடியும். அவள் தன்னிடம் சாதாரணமாக கூட பேசாததைத் தான் அவனால் தாங்க முடிய வில்லை.
கூடவே வாழ்க்கையைப் பற்றி அவளுக்கு எப்படி சொல்லி புரிய வைக்க என்றும் மிகப் பெரிய கேள்வி எழுந்தது. ஆனால் அவளுக்கு ஏற்கனவே அனைத்தும் தெரியும் என்றும் எங்கே பேசினால் தன்னிடம் அவன் நெருங்கி விடுவான் என்ற பயத்தினால் தான் அவள் விலகி இருக்கிறாள் என்றும் அவனுக்கு தெரியவில்லை.
ஒவ்வொரு இரவும் அவனது இளமை அவளை வேண்டும் என்று கேட்க தான் செய்கிறது. நைட்டியை தவிர்த்து வேறு இரவு உடை அணிந்தாலும் சில சமயம் அவளது மேல் சட்டை விலகி அவளது வெற்றிடை தெரியும் போது அவனுக்கு மரண அவஸ்தையாக தான் இருந்தது.
எதையாவது செய் என்று அவனது உணர்வுகள் அவனைத் தூண்டிக் கொண்டிருக்க அதை நிறுத்தி வைப்பதில் போராடிக் கொண்டிருந்தான் ஆதவன்.
இப்படியே நாட்கள் நகர்ந்து ஐயர் குறித்துக் கொடுத்த நாளும் வந்தது. ஆதவனே அந்த நாளை மறந்திருக்க மங்கையோ அன்று காலையிலே பரபரப்பாக இருந்தாள்.
“என்ன மா, காலைலே புன்னகை அரசியாவே இருக்க?”, என்று கேட்டான் ஆதவன். சிந்துவும் அவன் அருகில் தான் இருந்தாள். அதனால் அவளும் ஆவலாக மங்கையைப் பார்த்தாள்.
“இன்னைக்கு ஐயர் சொன்ன நாள் டா தம்பி. அதான் பரபரப்பா இருக்கேன். நீயும் எங்கயும் வெளிய போக வேண்டாம். இன்னைக்கு சிந்து கூடவே இரு. சாயங்காலம் அவளைக் கோவிலுக்கு கூட்டிட்டு போ”, என்று சொல்லிச் செல்ல அதிர்ந்து நின்று விட்டான் ஆதவன்.
“கடவுளே இதை எப்படி மறந்தேன்?”, என்று எண்ணியவனுக்கு அடுத்து என்ன செய்ய என்று ஓடவே இல்லை. அன்னையின் எதிர்பார்ப்பு அவனுக்கு புரிந்தது. அவனுக்குமே அவளைப் பிரிந்திருப்பது கஷ்டம் தான். ஆனால் சிந்து. அவள் மன நிலை அப்படியே தான் இருக்கிறது என்று புரிந்தவனுக்கு இன்றைய இரவை எதிர்க் கொள்ள பயமாக இருந்தது. அவளைத் திரும்பிப் பார்த்தான். அவள் அங்கே இருக்க வில்லை. மங்கை சொன்னதில் அதிர்ச்சியான மனநிலையில் அறைக்குள் சென்று விட்டாள்.
விஷயம் கேள்விப் பட்டதில் இருந்து அவளுக்கு படபடப்பாக இருந்தது. ஆனாலும் அஞ்சலி சொன்ன விஷயங்களை நினைவு கூர்ந்து இயல்பாக அவனை எதிர்க் கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்த படி அமர்ந்திருந்தாள்.
அதே நேரம் குழப்பமான மனநிலையில் அறைக்குச் சென்றான் ஆதவன். கட்டிலில் அமர்ந்திருந்த சிந்து, அறைக்குள் அவன் வந்ததும் அறையை விட்டு வெளியே சென்று விட்டாள். அது வெறுப்போ கோபமோ கிடையாது. பயமும் தயக்கமும் மட்டுமே.
“நான் இருக்குற இடத்துலே இருக்க கூட மாட்டிக்கா. இதுல இவ கூட எப்படி முதலிரவு கொண்டாட?”, என்று தவறாக எண்ணினான் ஆதவன்.
அன்று மாலை மங்கையின் கட்டாயத்தால் அவனுடன் கோவிலுக்கு சென்றாள் சிந்து. கோவிலுக்கு செல்லும் போதும், வரும் போதும் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ள வில்லை. ஒரு வழியாக இருவரும் பயந்த அந்த இரவும் வந்தது. செல்வி தான் சிந்துவை அலங்கரித்து விட்டாள்.
தயக்கம், படபடப்பு, பயம் என கலவையான உணர்வுகளுடன் அவர்களின் அறைக்குள் நுழைந்தாள் சிந்து. அவள் அரவம் உணர்ந்து அவன் திரும்பிப் பார்க்க அவளோ நிலம் நோக்கியவள் தான். அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. அவளுக்கு இதயம் எம்பிக் குதித்தது.
அவள் வாசல் அருகேயே நிற்கவும் ”வா சிந்து, ஏன் அங்கயே நிக்குற? இங்க வந்து உக்கார்”, என்றான் ஆதவன்.
அவளோ அசையாமல் நிற்க அவனுக்கு எரிச்சல் வந்தது. “இவளை நான் என்ன செஞ்சிட்டேன்? என்னமோ எதிரி கிட்ட இருந்து விலகி போற மாதிரி விலகி விலகி போறா? இவளுக்காக தானே ஐயர் கிட்ட எல்லாம் பேசினேன்?”, என்று எண்ணி “என்ன கூப்பிட்டா வர மாட்டியா? வெத்தலை பாக்கு வச்சு அழைக்கணுமா?”, என்று கோபமாக கேட்டான்.
அவன் கோபத்துடன் அப்படிக் கேட்டது தான் தாமதம் பயத்துடன் அவன் அருகில் சென்று அமர்ந்தாள். அவள் முகத்தில் துளிர்த்திருந்த வியர்வையே சொன்னது அவளது பயத்தை.
அவள் பயத்தைக் கண்டு “சிந்து”, என்று மென்மையாக அழைத்தான். அவன் பேசியது காதில் விழுந்தாலும் அவளுக்கு வீடியோவில் பார்த்த விஷயமே நினைவுக்கு வர அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.
“சிந்து உன்னைத் தான் கூப்பிடுறேன். நான் பேசுறது உன் காதுல விழுதா இல்லையா?”, என்று கேட்டான். அவன் மிரட்டலில் அரண்டு போய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“எதுக்கு டி இப்படி பயப்படுற? நான் என்ன பேயா பிசாசா?”, என்று சலிப்புடன் கேட்டான்.
“இல்லை”, என்னும் விதமாய் தலையசைத்தாள்.
“அப்புறம் ஏன் இவ்வளவு பயம்? உன்னை மாதிரி நானும் ரெண்டு கால் ரெண்டு கை உள்ள மனுஷன் தான். என்னைப் பாத்து எல்லாம் பயப்படணும்னு அவசியம் இல்லை. என்னை மட்டும் இல்லை வேற யாரைப் பாத்தும் பயப்படக் கூடாது. எங்க வீட்ல இருக்குற எல்லாரும் அதிகம் பேசுவாங்க. உன்னை மாதிரி அமைதி கிடையாது. ஆனால் ரொம்ப நல்லவங்க. உன்னால இந்த வீட்டுக்கு எந்த பிரச்சனையும் வரக் கூடாது. நமக்குள்ள ஏதாவது பிரச்சனை வந்தா கூட அது இந்த நாலு சுவத்துக்குள்ள தான் இருக்கணும். மத்தவங்க நம்மளை வேடிக்கை பாக்குற மாதிரி வச்சிக்க கூடாது. இது உன்னோட குடும்பம். உன் அன்பை கடமையா செய்யாம உரிமையா செய். அதே மாதிரி நீ எனக்கு முக்கியம். உன்னை யாராவது ஏதாவது சொன்னா பிரச்சனை வருமோன்னு பயந்து அதை என் கிட்ட சொல்லாம இருக்க கூடாது. எதையும் என் கிட்ட இருந்து மறைக்க கூடாது. அதே நேரம் உன் கோபத்தை மத்தவங்க கிட்ட காட்டக் கூடாது. இதெல்லாம் நான் நம்ம கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கு உன் கிட்ட சொல்லணும்னு யோசிச்சு வச்சது”, என்று சொல்லி அவளைப் பார்த்தான்.
அவன் பேச்சு புரியாமல் அவள் குழப்பமாக அவனைப் பார்க்க “இந்த பேச்செல்லாம் உன் விசயத்துல அவசியமே இல்லை சிந்து. ஏன்னா நீ எல்லார்க் கிட்டயும் நல்லா பேசுற. அம்மா கூடவே சுத்துற. அப்பா என்ன கேட்டாலும் பதில் சொல்ற. ரங்கன் கிட்ட கூட அண்ணான்னு உரிமையா பேசுற? ஆனா எதுக்கு என்னை மட்டும் தள்ளி வைக்கிற? அப்படி நான் உன்னை என்ன செஞ்சிருவேன்? எனக்கு இந்த ஒரு மாசமும் வெறுத்துப் போச்சு. உன்னை எப்படியாவது மாத்திறலாம்னு நினைச்சேன். ஆனா உனக்கு என்னைப் பிடிக்கலைல? அதானே என்னை விலக்கி வைக்கிற? கவலைப்படாதே. இனி சாந்தி முகூர்த்தம் அது இதுன்னு சொல்லி யாரும் உன்னைக் கஷ்டப் படுத்த மாட்டாங்க. இனி நீ எப்பவும் என் கிட்ட இருந்து இதே மாதிரி விலகியே இரு. எங்க அம்மாவோட நம்பிக்கையை நான் பொய்யாக்க விரும்பலை”, என்று முடித்தான்.
இப்போதும் அவன் பேசுவது பாதி புரிந்தும் புரியாத நிலை தான் அவளுக்கு. அவள் குழப்பமாக அவனையே பார்க்கவும் “இனி கடைசி வரை நாம இப்படி தான் இருக்க போறோம். உனக்கு சந்தோஷம் தானே? இனி என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும்”, என்றவன் வேகமாக கதவு அருகில் சென்றான்.
அவள் அவனையே குழப்பமாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே வேகமாக தன்னுடைய கையை நீட்டியவன் கதவைத் திறந்து தன்னுடைய கையை கதவுக்கும் சுவருக்கும் இடையில் வைத்தவன் கண்களை இறுக மூடிக் கொண்டு வேகமாக கதவை ஓங்கி அடித்தான்.
கதவு மோதியதால் வலி உயிர் போனது. “ஆ”, என்று அலறியவன் அப்படியே அமர்ந்து விட்டான். அவன் செய்கையில் பிரம்மைப் பிடித்தது போல நின்ற சிந்து அவன் வலியில் கத்தவும் “ஐயோ, ஏன் இப்படி பண்ணுனீங்க?”, என்ற படி அவனை நெருங்கினாள்.
கண்களில் கண்ணீர் வழிய அவளைப் பார்த்தவன் “இந்த கை சரியாக இன்னும் மூணு மாசம் ஆகும். அது வரைக்கும் நீ நிம்மதியா இருக்கலாம்”, என்றான்.
அவனை அதிர்ந்து பார்த்தவள் அவனுடைய கரம் பற்ற வர “என்னைத் தொடாதே. போய் யாரையாவது வரச் சொல்லு. அப்புறம், நான் கையை சுவத்துல இடிச்சிக்கிட்டதை நீ யார்க் கிட்டயும் சொல்லக் கூடாது. கை வலிக்குன்னு அழுறேன்னு மட்டும் சொல்லு”, என்றதும் தயக்கத்துடன் அங்கிருந்து சென்றாள்.
முதலில் மங்கையின் அறைக் கதவைத் தான் தட்டினாள். “என்ன மா இந்த நேரத்துல?”, என்று கேட்டாள் மங்கை.
“அத்தை அவங்க கை வலிக்குதுன்னு அழுறாங்க”, என்று சொல்லும் போதே அவளுக்கும் அழுகை வந்தது.
“கை வலிக்குனு அழுறானா? இரு நான் பாக்குறேன். என்னங்க வாங்க. நீ அழாத. வா”, என்று சொல்லி மங்கை அவளை அழைத்துக் கொண்டு அறைக்குச் செல்ல அவர்கள் பின்னே ரத்தினமும் சென்றார்.
அங்கே கை வலியில் அவன் துடித்துக் கொண்டிருக்க பெற்றவர்கள் அரண்டு போனார்கள்.
“ரங்கனைக் காரை எடுக்கச் சொல்லு மங்கை, எலும்பு உடைஞ்சிருக்கும் போல”, என்று சொன்ன ரத்தினம் மகனை கைத்தாங்களாக கீழே அழைத்துச் சென்றார்.
மங்கை வந்து சொன்னதும் அதிர்ந்து போன ரங்கன் வேகமாக காரை எடுத்து தயாராக வைக்க “மங்கை நீ வீட்ல இரு. சிந்து நீ கார்ல ஏறு மா”, என்று சொன்ன ரத்தினம் மகனை காரில் ஏற வைத்தார்.
காரில் ஏறியதும் ரங்கன் ஹாஸ்பிட்டலுக்கு காரை விரட்டினான். போகும் போது “என்ன நடந்துச்சு மா? எதனால இப்படி ஆச்சு?”, என்று மருமகளிடம் கேட்டார் ரத்தினம்.,
நடந்து முடிந்த நிகழ்வில் அவள் பயந்து போய் பதில் சொல்லாமல் வர “உன்னை தான் மா கேக்குறேன். இப்படி எதுக்கு எடுத்தாலும் பயந்து பேசாம இருந்தா என்ன அர்த்தம்? என்ன நடந்துச்சுன்னு சொல்லு”, என்று அதட்டலாக சொன்னார்.
அவர் அரட்டலில் அவளுடைய கண்ணீர் இன்னும் அதிகரிக்க “அப்பா இப்ப எதுக்கு அவளை அதட்டுறீங்க? கையை தெரியாம கீழ அழுத்தி ஊனிட்டேன் போல. அதான் சுளுக்கு வந்திருக்கும். வேற ஒண்ணும் இல்லை. அவளே பயந்து போய் இருக்கா. நீங்களும் மிரட்டுறீங்க”, என்றான் ஆதவன்.
இந்த நேரத்திலும் தனக்காக பொய் சொல்லும் அவனையே இமைக்காமல் பார்த்தாள் சிந்து.