ஹாஸ்பிட்டல் போனதும் அவனுக்கு சிகிச்சை ஆரம்பித்தது. கை புஸ்ஸென்று வீங்கிப் போனது. எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் கை எலும்பு உடைந்திருக்கிறது என்று தெரிய வந்தது.
அதற்காக கட்டுப் போட்டு அவர்கள் வீட்டுக்கு வரும் போது காலை மூன்று மணியாகி இருந்தது. அவனை மாடிக்கு அழைத்துச் செல்ல ரங்கன் முயல “நான் உன்னோட ரூம்லே இருந்துக்குறேன் டா கை சரியாகுற வரை”, என்றான் ஆதவன்.
தன்னை தவிர்க்கும் அவனை வெறித்துப் பார்த்தாள் சிந்து. சரி என்று சொல்லி அவனை தன்னறைக்கு அழைத்துச் சென்றான் ரங்கன். ரத்தினமும் மங்கையும் அவனை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு தங்கள் அறைக்குச் செல்ல சிந்துவும் ரங்கனின் அறைக்குள் வந்தாள். அவளைக் கண்ட ரங்கன் “அண்ணன் கிட்ட பேசிட்டு இரு மா. நான் காரை சரியா நிப்பாட்டிட்டு கதவைப் பூட்டிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றான். அவர்களுக்கு தனிமை கொடுக்க தான் அவன் இப்படிச் சொல்லிவிட்டுச் செல்கிறான் என்று புரிந்தது.
சிந்து தயக்கத்துடன் அவன் அருகே வர “இப்ப சந்தோஸமா? இனி என் கூட நீ இருக்க வேண்டாம். அந்த ரூம்ல நீ பிரியா இருக்கலாம். என்னோட தொல்லை உனக்கு இருக்காது. இதை தானே நீ எதிர் பார்த்த? சந்தோஷமா இரு”, என்று சொன்னான் ஆதவன்.
“எனக்கு என்ன சந்தோஷம்? உங்களுக்கு தான் இங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம் போல?”, என்று முதல் முறையாக நீளமாக பேசினாள் சிந்து.
அவள் பேசியதைக் கேட்டு அவன் அவளைத் திகைப்பாக பார்க்க “என்ன நான் சொல்றது சரி தானே? என்னைப் பிரிஞ்சதுல உங்களுக்கு தான் சந்தோஷம். உங்களுக்கு தான் என்னைப் பிடிக்கலை. எனக்கு எதுவும் தெரியாதுன்னு தான் என்னை நீங்க வெறுத்துட்டீங்க. அதனால தான் உங்களுக்கு என் கூட வாழப் பிடிக்கலை”, என்றாள்.
“ஏய் என்ன டி சொல்ற?”, என்று அதிர்வாக கேட்டான் ஆதவன். அவனுக்கு அவள் பேசியதும், பேசிய விஷயமும் குழப்பத்தைக் கொடுத்தது.
“ஆமா என்னைப் பிடிச்சிருந்தா இப்படி வேணுக்குன்னு கையை உடைச்சிட்டு இப்படி இங்க வந்து படுத்துருப்பீங்களா?”, என்று சிந்து கேட்க ஒரு நொடி வாயடைத்துப் போனான் என்று தான் சொல்ல வேண்டும்.
“சிந்து, நீ என்ன சொல்ற? நீ பேசுறது எனக்கு புரியவே இல்லை. அப்படின்னா உனக்கு என்னைப் பிடிக்குமா?”, என்று குழப்பமாக கேட்டான்.
“அது கூட மறந்து போச்சா? என்னைப் பிடிச்சிருந்தா தானே என் பேச்சும் நினைவுக்கு வரும்?”, என்று அவள் கோபமாக கேட்க “கடவுளே நிஜமாவே மறந்துட்டு டி. சரி அதை விடு. என்னைப் பிடிக்கும்னா அப்புறம் ஏன் டி என் கிட்ட இத்தனை நாள் சரியாப் பேசலை? என்னை விட்டு ஒதுங்கி ஒதுங்கிப் போன?”, என்று கேட்டான்.
“அது… அது வந்து..”, என்று அவள் திணற “சரி அதை விடு. கண்டிப்பா பயமா தான் இருக்கும். நேத்து நைட் ரொம்ப பயந்துட்டியா?”, என்று கேட்டான்.
“நான் பயந்தேன்னு உங்க கிட்ட சொன்னேனா? நடக்கப் போறதை நினைச்சு அமைதியா இருந்தேன். நீங்களா பேச ஆரம்பிச்சீங்க. நீங்களா கையை உடைச்சிக்கிட்டீங்க. என் கிட்ட எங்க கேட்டீங்க? என் கிட்ட நீங்க கேட்டு நான் உங்களை பிடிக்கலைன்னு சொன்னேனா? நான் பிடிக்கலைன்னு சொன்னதுக்கு முன்னாடியே நீங்க ஏன் கையை உடைச்சிக்கிட்டீங்க?”
“என்னது நடக்க போறதை நினைச்சியா? என்ன நினைச்ச? சிந்து உனக்கு கல்யாண வாழ்க்கைன்னா என்னன்னு தெரியுமா? என்ன நடக்கும்னு தெரியுமா?”, என்று தயக்கத்துடன் கேட்டான். ஒரு எதிர்பார்ப்பு அவனுக்குள் துளிர்விட்டது.
அவன் முகம் பார்க்காமல் “ம்ம்”, என்று முணுமுணுத்தாள்.
“என்னது தெரியுமா?”, என்று அவன் அதிர்ச்சியாக கேட்க “ஆமா. தெரியும்”, என்றாள் சிந்து.
“எப்ப தெரியும்? எப்படித் தெரியும்?”
“எப்படியோ தெரியும். தெரிஞ்சதுல இருந்து ஒரு மாதிரி இருந்துச்சு. அதான் விலகி இருந்தேன். கொஞ்சம் பயமா இருந்துச்சு. ஆனா உங்களுக்கு என்னைப் பிடிக்கலைல?”
“அப்படி எல்லாம் இல்லை டி.”
“இல்லை, அது தான் உண்மை. உங்களுக்கு என்னைப் பிடிக்கலை. எங்க அண்ணன் உங்க கிட்ட கெஞ்சினதுனால தான் என்னைக் கல்யாணம் பண்ணுனீங்க. அதான் உண்மை. போங்க என் கூட பேசாதீங்க”
“கடவுளே, அப்படி எல்லாம் இல்லை. நான் தான் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சிக்கிட்டு சொதப்பி வச்சிருக்கேன்னு இப்ப புரியுது. நீ இவ்வளவு பேசுறது கூட எனக்கு கனவா நினைவான்னு தெரியலை. இப்ப பேசினதை ஏன் டி நேத்தே பேசலை?”
“நானே பயத்துல இருந்தேன். அது மட்டுமில்லாம நீங்க எங்க என்னை பேச விட்டீங்க? நீங்களா ஏதோ பேசுனீங்க? கையை உடைச்சிக்கிட்டீங்க. நேத்து எனக்கு பயமா தான் இருக்கு. ஆனா நான் எல்லாத்துக்கும்…. தயாரா தான் இருந்தேன். ஆனா நீங்க தான்…”
“உங்களுக்கு என்னைப் பிடிக்கலை. என் கூட வாழப் பிடிக்கலை. எங்க அண்ணனுக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. உங்களுக்கு வேற ஒரு ஆளைப் பிடிச்சிருக்கு. அதான்”
“கடவுளே உங்க அண்ணன் உன்னை சின்னக் குழந்தை அளவுக்கு பேசினான். நீ என்னடான்னா இப்படி எல்லாம் பேசுற? நீ இவ்வளவு யோசிப்பியா டி?”
“எனக்கே இது அதிசயம் தான். உங்க விசயத்துல தான் நான் இவ்வளவு யோசிக்கிறேன். ஏன்னு தெரியலை. ஆனா நான் சொன்னது உண்மை தான். உங்களுக்கு அவளைத் தான் பிடிச்சிருக்கு”
“பாத்தீங்களா, உண்மை வெளிய வந்துருச்சு. அவளுக்காக தானே நீங்க இப்படி பண்ணுனீங்க? அவளை மனசுல வச்சிட்டு தானே நீங்க என் கிட்ட இருந்து விலகி போனீங்க?”, என்று அவள் கேட்க அரண்டு போனான்.
“ஐயோ, அப்படி எல்லாம் இல்லை மா. அது வேற”
“போங்க, என் கூட இனி பேசாதீங்க. ஆச்சி கூட அந்த பிரியாவைப் பத்தி சொன்னாங்க. இப்ப உங்களுக்கு நிம்மதி வேணும்னு தானே அண்ணன் ரூம்ல வந்து தங்கிக்கிட்டீங்க. இனி நீங்க யாரோ, நான் யாரோ. நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன். சந்தோஷமா இருங்க”, என்றவள் அறையை விட்டே சென்று விட்டாள். தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் ஆதவன். அவனால் சிந்துவின் இந்த மாற்றத்தை நம்ப முடியவில்லை.
“கிழவி கடைசில நீ தான் எனக்கு வில்லி வேலை பாத்துட்டு போயிருக்கியா? பிரியாவை எதுக்கு கிழவி என் கூட கோத்து வச்சி இவ கிட்ட பேசிருக்க?”, என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே அங்கே ரங்கன் வந்து விட அவனிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக படுத்து விட்டான் ஆதவன்.
அடுத்த நாள் ஆதவன் சிந்துவின் முகம் பார்க்க தவம் இருக்க அவளோ அவன் கண்ணில் படவே இல்லை. ரத்தினமும் ரங்கனை ஆதவனுக்கு உதவியாக வைத்து விட்டதால் சிந்துவுக்கு அவனைப் பார்க்கும் சந்தர்ப்பம் வரவே இல்லை.
காலையிலே எங்கேயோ கிளம்பிக் கொண்டிருந்த மங்கை சிந்து அருகில் அமர்ந்து “சிந்து நீ உக்காந்து டிவி பாத்துட்டு இரு டா. நான் போய் நம்ம ஜோசியரை பாத்துட்டு வரேன். ஏதோ ரெண்டு பேருக்கும் நேரம் சரியில்லை போல? அதான் இப்படி தடங்கல் வந்துருச்சு”, என்று சொல்லிச் செல்ல “உங்க பையன் வேணுக்குன்னு தான் கையை உடைச்சிக்கிட்டார்”, என்று மங்கையிடம் உரக்கச் சொல்ல வேண்டும் போல இருந்தது அவளுக்கு. ஆனால் அதைப் பற்றி பேச மனதில்லாமல் தலையாட்டி வைத்தாள்.
மங்கை கிளம்பிச் செல்ல, ரத்தினம் மில்லுக்கு சென்று விட்டார். ரங்கனும் ஆதவனும் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க சிந்து மட்டும் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது சிந்துவின் போன் அடித்தது.
யாரென்று எடுத்து பார்த்தாள். அஞ்சலி தான் அழைத்திருந்தாள். “சொல்லு அஞ்சலி”, என்றாள் சிந்து.
“சிந்து, அங்க எல்லாம் ஓகே தானே? எதுவும் பிரச்சனை இல்லையே? நீ ஏதாவது சொதப்பி வச்சிட்டியா? காலைல இருந்து உனக்கு பேசச் சொல்லி உங்க அம்மா வேற கால் பண்ணிட்டே இருக்காங்க. ஏதாவது பேசு டி”, என்று படபடப்பாக பேசினாள்.
“என்னது அண்ணனா? என்ன ஆச்சு?”, என்று கேட்டதும் நடந்ததை அனைத்தையும் சொன்ன சிந்து, பிரியாவைப் பற்றி சொல்லவே இல்லை. பிரியாவையும் ஆதவனையும் சேர்த்து வைத்து பேச அவளுக்கு மனதில்லை.
“போச்சா? சரி விடு. நீ மாறினதே எனக்கு போதும். அப்புறம் அண்ணன் உனக்காக தான் அப்படி பண்ணிருக்காங்க போல. அதனால நீ ரொம்ப லக்கி டி. உனக்கு எல்லாம் புரிஞ்சிருச்சுல்ல? அது போதும்”, என்று சொல்லி போனை வைத்தாள் அஞ்சலி.
அவள் பேசி விட்டு வைத்ததும் சிந்து டிவியில் ஆழ்ந்து விட்டாள். ஆதவனோ எப்போது அவள் தன்னைக் காண வருவாள் என்று காத்திருந்தான். அதே நேரம் ஜோசியர் முன்பு அமர்ந்திருந்தாள் மங்கை.
“வாங்க மா, நல்லா இருக்கீங்களா?”, என்று கேட்டார் அவர்.
“ஏதோ இருக்கேன் சாமி. நேத்து ஆதவனுக்கு நாள் குறிச்சு கொடுத்தீங்கல்ல?”
“ஆமா, என்ன ஆச்சு?”
“எல்லாம் போச்சு. அவனுக்கு கை எலும்பு உடைஞ்சிருச்சு. நைட் ஆஸ்பத்திரில கட்டுப் போட்டுட்டு வந்து படுத்துருக்கான். முதல்லயும் நாள் தள்ளிப் போச்சு. இப்பவும் அவன் கை சரியாக எப்படியும் நாள் ஆகும். ஏதாவது தோஷம் இருக்கா சாமி? சரி பண்ணிறலாமா?”, என்றதும் ஜோசியர் திகைத்துப் போனார்.
சாந்தி முகூர்த்தத்தை தள்ளிப் போட ஆதவன் தான் இப்படி செய்திருப்பானோ என்று சரியாக கணித்தார். மங்கை அவருடைய முகத்தையே பார்த்த படி இருக்கவும் “பெருசா ஒண்ணும் இருக்காது மா. ஏதாவது பரிகாரம் இருக்குதான்னு பாக்குறேன்”, என்று சொன்னவர் சிறிது நேரம் ஆழ்ந்து சிந்தித்தார்.
“ஒண்ணும் கவலைப்படாதீங்க மா. இன்னும் ரெண்டு மாசத்துல நம்ம அம்மன் கோவில் திருவிழா வருது. இரவு பூஜைக்கு எல்லா சாமிக்கும் நம்ம தம்பி கையால மாலை வாங்கிப் போடச் சொல்லுங்க. திருவிழா முடிஞ்ச அடுத்த நாளே நல்ல நாள் தான். அன்னைக்கே சாந்தி முகூர்த்தத்தை வச்சிக்கலாம். அதுக்குள்ள தம்பி கையும் சரியாப் போகும்”, என்றார்.