“சரிங்க சாமி”, என்று சொல்லி விட்டு மங்கை விடை பெற ஜோசியர் முகம் ஒரு மாதிரி இருக்கவும் “என்ன ஆச்சுங்க?”, என்று விசாரித்தாள் அவரது மனைவி விசாலாட்சி.
அவரும் மனைவி தானே என்று எண்ணி ஆதவன் முதலில் சாந்தி முகூர்த்தத்தை தள்ளிப் போடக் கேட்டதையும், இப்போதைய அவரது சந்தேகத்தையும் அவளிடம் சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டார்.
விசாலாட்சியும் வேணியும் நெருங்கிய தோழிகள் என்பதால் உடனே வேணியைப் பார்க்கச் சென்றாள் விசாலாட்சி.
“என்ன விசாலம் காலைலே வந்துருக்க? ஜானகி காலேஜ் போய்ட்டாளா?”, என்று அவளுடைய மகளைப் பற்றி கேட்டாள் வேணி.
“அவ போயிட்டா வேணி. நான் ஒரு முக்கியமான விஷயம் பேச தான் வந்தேன்”
“என்ன விஷயம் விசாலம்?”
“உங்க மதினி இப்ப தான் என் வீட்டுக்காரரைப் பாக்க வந்துச்சு”
“என்னது மங்கை அண்ணி வந்துட்டுப் போச்சா? என்னவாம்? அதுவும் இவ்வளவு காலையிலே”
“நேத்து நைட் உன் மருமகனுக்கு கை எலும்பு உடைஞ்சி போச்சாம்”
“ஆத்தி, என்ன சொல்ற நீ?”
“ஆமா, கட்டுப் போட்டுட்டாங்களாம். ஆனா நான் இப்ப இன்னொரு விஷயமும் சொல்ல வந்தேன்”
“என்னன்னு சீக்கிரம் சொல்லு விசாலம். ஆதவனை ஒரெட்டு போய் பாத்துட்டு வந்துறேன்”
“ஆதவன் தம்பி அந்த பொண்ணை விருப்ப பட்டு தானே கட்டிக்கிச்சி?”
“யாருக்கு தெரியும்? திடீர்னு கல்யாணம் முடிச்சிட்டு வந்து நின்னுட்டான்”
“அந்த பொண்ணை ஆதவன் தம்பிக்கு பிடிக்கலை போல வேணி?”
“எதை வச்சி இப்படி சொல்ற? அப்படி எல்லாம் தெரியலையே? அவளை எல்லாரும் நல்லா தான் தாங்குறாங்க. பொண்ணு பெரிய இடம் வேற”
“அது இல்லை வேணி. வரவேற்பு வச்ச அன்னைக்கு என் வீட்டுக்காரர் சாந்திமுகூர்த்தம் குறிக்க போனப்ப ஆதவன் தம்பி ஒரு மாசம் தள்ளிப் போடச் சொல்லுச்சாம்”
“என்னது? நீ சொல்றது உண்மையா?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் வேணி.
“ஆமா, நேத்து ஆதவனுக்கு கை உடைஞ்சதும் தன்னால நடந்துருக்காதோன்னு என் வீட்டுக்காரர் சந்தேகப் படுறார் வேணி. அதான் உன் காதுல போட்டு வைக்கலாம்னு வந்தேன். நீ தான் உன் மருமகன் மேல உயிரா இருப்பியே. என்னன்னு விசாரிச்சு ஆதவன் தம்பி பிரச்சனையை சரி பண்ணு. என் பிள்ளையை படிக்க வைக்க உதவி செய்ற பிள்ளை நல்லா இருக்கணும். சரி நான் அப்புறம் வரேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றாள்.
அவள் சென்றதும் வேணி யோசனையிலே நின்று விட்டாள். வரவேற்புக்கு பின் வேணி ரத்தினம் வீட்டுக்கு செல்லவில்லை என்பதால் அவள் ஆதவன் மற்றும் சிந்து இடையே உறவு எப்படி இருக்கிறது என்று கவனிக்க வில்லை.
இனி அடிக்கடி போக வேண்டும் என்று எண்ணிக் கொண்டு வேலையைப் பார்க்கச் சென்றாள். விசாலம் மற்றும் வேணி பேசியதை பிரியாவும் கேட்டு விட்டாள். அவள் உதடுகள் புன்னகையால் மலர்ந்தது. இதற்கு பின்னரும் ஆதவன் தனக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று மனதில் எண்ணிக் கொண்டாள் பிரியா. அதற்கான வாய்ப்பு வரும் போது உபயோகப் படுத்த வேண்டும் என்று முடிவு எடுத்தாள்.
அதற்கடுத்து வந்த நாட்கள் எப்போதும் போல் நகர்ந்தது. அவனுக்கு கை ஒடிந்த விஷயத்தைக் கேள்விப் பட்டு அசோக்கும் அமுதவள்ளியும் அவனைக் காண வந்தார்கள்.
ஏகாம்பரம் மட்டும் “நான் அவனைப் பாக்க வர மாட்டேன்”, என்று மறுத்து விட்டார். அதையும் மீறி அவரைக் கட்டாயப் படுத்தி அழைத்து வந்தாலும் இங்கு வந்து ஏதாவது வம்பு பேசுவார் என்பதால் இவர்களும் அவரைக் கட்டாயப் படுத்த வில்லை.
அம்மாவையும் அண்ணனையும் கண்டு சிந்து முகம் மலர்ந்தது. ஆதவனும் அசோக்கை பாசமாக அனைத்துக் கொண்டான். முன்பை விட சிந்து முகம் தெளிவாக இருப்பது போல அவர்களுக்கு தெரியவும் அவளைப் பற்றிய நிம்மதியோடு கிளம்பிச் சென்றார்கள்.
கைக் கட்டு இன்னும் பிரிக்கப் படாத நிலையில் ஆதவன் ரங்கனுடைய அறையில் தான் இருக்க வேண்டியதாக இருந்தது. தானே வாயைக் கொடுத்து இப்படி தன்னறைக்கு போக முடியாமல் மாட்டிக் கொண்டோமே என்று நொந்து போனான்.
அவனுக்கு தன்னுடைய மனைவியுடன் ஒரே அறையில் இருக்க ஆசை அதிகம் வந்தது. தங்களின் அறைக்குச் செல்ல வேண்டும் என்று அவன் மங்கையிடம் சொல்ல “கை சரியாகுற வரைக்கும் ரங்கனே உன்னைப் பாத்துக்கட்டும். சிந்துவால உனக்கு உதவ முடியாது”, என்று மறுத்து விட்டாள் மங்கை.
சரி சிந்துவாது இந்த அறைக்குள் வருவாள் என்று எதிர் பார்க்க அவளும் வந்தாள் தான். ஆனால் எப்போதும் மங்கையுடன் தான் வருவாள். அப்போதெல்லாம் அவன் கண்கள் ஆவலுடன் ரகசியம் பேச அவளோ அவனை பலமாக முறைத்துக் கொண்டே தான் இருப்பாள்.
ஆதவனுக்கு கை ஒடிந்ததால் பிரியா மற்றும் வேணியின் வரவு வேறு அதிகமாக இருந்தது. அவர்களின் வருகை சிந்துவுக்கு எரிச்சலாக இருந்தது. “அத்தான் இந்தாங்க சூப்”, என்று சொல்லி பிரியா ஆதவனுக்கு ஊட்டி விட சிந்துவுக்கு பொறாமை என்ற உணர்வு பிறந்தது.
இது வரை அவளது தந்தை அவள் கேட்டது அனைத்தையும் வாங்கிக் கொடுக்க அவள் எதையுமே எதிர் பார்த்ததில்லை. யாரைப் பார்த்தும் ஏங்கியதில்லை. ஆனால் ஆதவனும் பிரியாவும் பேசும் போது ஏதோ கைப்பொருள் களவு போகும் உணர்வில் தான் இருந்தாள். அதனால் பிரியாவுடன் பேசும் அவனை முறைத்துக் கொண்டே திரிந்தாள். கூடவே ஆதவன் தனக்கு இனி இல்லையோ என்ற கவலையும் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக அரிக்க ஆரம்பித்தது. அவள் கவலையை அவன் அறிய வில்லை. ஒரு வேளை அவள் மனதில் இருக்கும் பயத்தை அறிந்திருந்தால் அவளுக்கு தன்னுடைய மனதை இன்னும் தெளிவாக புரிய வைத்திருப்பானோ என்னவோ?
இப்படியே ஒரு மாதம் கடந்திருக்க ஒரு நாள் மங்கை கோவிலுக்குச் சென்றிருந்தாள். ரத்தினம் ரங்கனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றிருந்தார்.
அப்போது மனைவி மட்டும் வீட்டில் இருப்பதை புரிந்து கொண்ட ஆதவன் மெதுவாக தங்கள் அறைக்குச் சென்றான். அவர்கள் அறைக் கதவு திறந்திருந்ததைக் கண்டு அவனுக்கு உல்லாசமாக இருந்தது. உள்ளே சென்றவன் கதவை அடைத்து விட்டு கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டான். உள்ளே சிந்து குளித்துக் கொண்டு இருப்பது புரிந்தது.
“அன்னைக்கு மனசுல இருக்குறதை பேசினதுல இருந்து கையிலே சிக்க மாட்டிக்க. இன்னைக்கு உனக்கு இருக்கு டி. எனக்கா உன்னைப் பிடிக்கலை? உன்னைப் பக்கத்துல வச்சிட்டு தொட முடியாம தவிச்சது எனக்கு தான் தெரியும். தேவையில்லாம கையை வேற உடைச்சு உனக்காக தியாகம் பண்ணினா நீ என்ன டான்னா என் கண்ணுல சிக்காம ஒழிஞ்சிட்டு இருக்க”, என்று எண்ணிக் கொண்டான்.
சிறிது நேரம் கழித்து குளித்து முடித்து ஒரு துண்டைக் கட்டிய படி வெளியே வந்தாள் சிந்து. அவள் வந்த தோற்றத்தைக் கன்று அவன் உண்மையிலே அரண்டு தான் போனான். அவன் கண்கள் அவளையே வெறித்தது. எச்சில் விழுங்கிக் கொண்டு அவளையே பார்த்த படி இருந்தான். “இதை தான் சுபா அக்கா சொல்லிருப்பாளோ?”, என்று இப்போது எண்ணம் வந்தது.
அவனைக் கண்டு அவளுக்கும் அதிர்ச்சி தான். இத்தனை நாள் அவன் இந்த பக்கம் வந்ததே இல்லை. அதனால் “நீங்க இங்க என்ன பண்ணுறீங்க? உங்களை யாரு இங்க வரச் சொன்னா?”, என்று அவள் கேட்ட பிறகு தான் அவன் நடப்புக்கு வந்தான்.
“நான் இங்க வரது இருக்கட்டும். ஆமா நீ என்ன இப்படி இருக்க? என்ன டி கோலம் இது?”, என்று சிரிப்புடன் கேட்டான்.
“எது?”, என்று கேட்டவளுக்கு அவன் கேள்வி புரியவே இல்லை.
“இது என்ன டிரெஸ்? இப்படி தான் உங்க வீட்ல இருப்பியா? பாத்ரூம்ல டிரஸ் மாத்த மாட்டியா?”
“பாத்ரூம்லயா டிரஸ் பண்ண முடியும்? எனக்கு அங்க மாத்த தெரியாது. டிரஸ் மாத்த இவ்வளவு பெரிய ரூம் இருக்குறப்ப எதுக்கு அங்க மாத்தணும்? எங்க வீட்லயும் நான் இப்படி தான். ஆமா இப்ப எதுக்கு இப்படி கேக்குறீங்க? நான் இங்க வந்ததுல இருந்து இப்படி தான் மாத்திட்டு இருக்கேன்”
“என்னது இங்க வந்ததுல இருந்தா? இது தெரிஞ்சிருந்தா தினமும் சீக்கிரம் எந்திரிச்சு வெளிய போயிருக்க மாட்டேனே?”, என்று மனதுக்குள் புலம்பியவன் “இப்ப இங்க தான் டிரஸ் மாத்தப் போறியா? சரியான டைம்ல வந்துருக்கேன் போல?”, என்று சிரித்தான்.
“நான் மாத்திக்கிறேன். நீங்க முதல்ல வெளிய போங்க”, என்று சொன்னவளுக்கு கொஞ்சம் குரல் உள்ளே சென்று விட்டது.
கண்களில் சிறு சுவாரசியம் வர “நான் இங்க இருந்து போக மாட்டேன். வேணும்னா இங்கயே மாத்து. இல்லைன்னா பாத்ரூம்க்கு போ”, என்று பிடிவாதம் பிடித்தான்.
“அங்க எல்லாம் போக முடியாது. நான் இங்க தான் மாத்துவேன்”
“அப்படின்னா நானும் இங்க தான் இருப்பேன்”
“எனக்கென்ன? நீங்க எங்க வேணும்னாலும் இருங்க”, என்று சொல்லி அவள் உடையை எடுக்க ஆரம்பிக்கவும் அவள் மனம் தன்னை அன்னியமாக நினைக்க வில்லை என்று அவன் மனம் உவகை கொண்டது. ஆனால் அவனை அன்னியமாக ஒதுக்கி வைத்து விட்டு அவனை விட்டு அவள் விலகிச் செல்லும் காலம் வரும் என்று அவன் கனவா கண்டான்?
“ஏய் நடக்குறது நிஜமா டி? உண்மையிலே இங்க தான் மாத்தப் போறியா?”, என்று கண்களில் ஆர்வம் மின்னக் கேட்டான் ஆதவன். அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் முதுகு காட்டி நின்று அவள் உடை மாற்ற ஆரம்பிக்க அவனுக்கு தான் மூச்சடைக்கும் உணர்வு.
ஈரத் தலையை துண்டில் அடக்கி இருந்ததால் அவளது முதுகு பளிச்சென்று அவன் கண்ணில் பட்டது. அதில் ஆங்காங்கே ஒட்டி இருந்த நீர்த் துளியைச் கண்டவனுக்கு மூச்சு விடவே சிரமமாக இருந்தது. அந்த நீர்த்துளியை உதட்டால் வருட ஆவல் எழுந்தது. அதை அடக்க முடியாமல் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டவனுக்கு அவளிடம் இருந்து பார்வையைத் திருப்பத் தான் முடியவில்லை.,
அவள் உடை மாற்றும் போது கண்களுக்கு எதுவும் வெளிப்படையாக தெரிய வில்லை என்றாலும் இப்போது இருக்கும் இந்த உணர்வே அவனைப் பொறுத்த வரைக்கும் புதியது தான். அவனுடைய இளமை உணர்வுகளை அவள் ஒருத்தியால் தான் தட்டி எழுப்ப முடியும் என்று அவன் உணர்ந்த தருணம் இது.
ஒரு சுடிதாரை எடுத்து அணிந்து முடித்தவள் கடைசியாக துப்பட்டாவை மேலே எடுத்து போட்ட பிறகு தான் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் அவளையே பார்த்த படி இருக்கவும் அவளுக்கு என்னவோ போல இருந்தது.