மற்ற நேரமாக இருந்திருந்தால் “ஆமா நீங்க கண்டீங்க?”, என்றோ “நீங்க எதுக்கு என்னைப் பெத்தீங்க?”, என்றோ ஏதாவது கேட்டு நக்கல் அடித்திருப்பான்.
ஆனால் தன்னை விட்டு மனைவி சென்று விட்டாள் என்ற வலியைத் தாங்கிக் கொண்டிருந்தவன் தந்தை அப்படிச் சொல்லவும் “நீ எப்ப தான் பா என்னை நம்புவ? முதல்ல எதுக்கு என்னை நீ பெத்துகிட்ட? வாரிசு வேணும்னா?”, என்று கேட்டான். அவன் கேள்வியில் அவர் அதிர்ந்து விழிக்க “ஆதவா? அப்பா கிட்ட என்ன பேசுற?”, என்று கேட்டாள் மங்கை.
“சும்மா இரு மா, எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. ஏதோ பொம்மை மாதிரி உக்காந்துருக்கேன். பிடிச்ச படிப்பை படிக்க விடலை. பிடிச்ச வேலையை செய்ய விடலை. ஏதாவது பிஸ்னஸ் செய்யலாம்னு நினைச்சா அதையும் தடுத்துட்டார். மனசுக்கு புடிச்ச மாதிரி ஒரு பொண்ணைக் கட்டிக்கிட்டு வந்தா அதுவும் சரியா இல்லை. மூணு மாசமாகியும் அவ கூட இன்னும் வாழவும் ஆரம்பிக்கலை. இப்ப என்னடான்னா அவ எதுக்கு போனான்னே தெரியாம மூளையைக் கசக்கிட்டு இருக்கேன். இப்பவும் வந்து என்னையே குத்தம் சொல்றார்? ஆக மொத்ததுல யாரும் என்னை புரிஞ்சிக்கலை. இத்தனை வருஷம் பெத்து வளத்த நீங்களே என்னைப் புரிஞ்சிக்கலை. நேத்து வந்தவளா என்னை புரிஞ்சிக்க போறா? ஆக மொத்தம் யாருக்கும் நான் வேண்டாம்ல? நான் போறேன்”, என்றவன் வீட்டில் இருந்து கிளம்பி விட்டான்.
“ஆதவா, டேய் தம்பி… நில்லு டா”, என்று சொன்ன மங்கை குரலை அவன் கேட்கவே இல்லை. பிரம்மை பிடித்தவன் போல அங்கிருந்து சென்றான்.
அப்படியே தளர்ந்து போய் அமர்ந்தார் ரத்தினம். இன்று மகன் பேசிய பேச்சு அவரை அசைத்திருந்தது.
கணவர் நிலையும் கவலையைத் தர “என்னங்க அவன் ஏதோ கோபத்துல பேசிட்டு போறாங்க. நீங்க பெருசா எடுக்காதீங்க”, என்று சமாதானப் படுத்தினாள் மங்கை.
“இல்லை மங்கை, அவன் விரக்தில பேசிட்டு போறான்”, என்று சொன்னவர் உடனே தன்னுடைய போனை எடுத்து ஆதவனின் நண்பன் கோபியை அழைத்தார்.
அதை எடுத்து “சொல்லுங்கப்பா”, என்றான் கோபி.
“கோபி, நம்ம ஆதவனுக்கும் எனக்கும் ஒரு சின்ன வாக்குவாதம். கோபத்துல வீட்ல இருந்து கிளம்பினான். அவனை கொஞ்சம் பாருப்பா. எங்க தோப்பு வீட்டு சாவி உங்க பெரியப்பா மகன் மணி கிட்ட தான் இருக்கு. அதை வாங்கி அவனை அங்க விட்டுரு”
“சரிங்கப்பா, நான் பாத்துக்குறேன்”, என்று சொன்ன கோபி உடனடியாக நண்பனைத் தேடிச் சென்றான். ஆதவன் தளர்ந்து போய் இருக்கவும் அவனிடம் எதையும் கேட்காமல் அவனை அழைத்துக் கொண்டு தோப்பு வீட்டில் விட்டவன் அவனுக்கு காவல் இருந்தான்.
ரத்தினமும் மங்கையும் இரவெல்லாம் தூங்கவே இல்லை. பேசிய படியே இருந்தார்கள். “அப்படி என்னங்க நடந்திருக்கும்? கோவிலுக்கு சந்தோசமா தானே நம்ம கூட சிந்து வந்தா. கண்டிப்பா அவளுக்கு நம்ம ஆதவனைப் பிடிச்சிருக்குங்க. என்னால அதை உறுதியாச் சொல்ல முடியும்”, என்று சொன்னாள்மங்கை.
“எனக்கும் ஒண்ணும் புரியலை மங்கை”
“நாம ஒரு எட்டு போய் பாத்துட்டு வருவோமா?”
“நம்ம ரங்கன் முதல்ல வரட்டும் டி. அவன் என்ன சொல்றான்னு விசாரிச்சிட்டு போவோம். உன் மகனை சந்தேகப் பட்டு விசாரிக்க நினைக்கலை. ரங்கனுக்கு ஏதாவது நடந்தது தெரிஞ்சிருக்குமோனு தான் விசாரிக்கலாம்னு பாக்குறேன்”, என்றார் ரத்தினம்.
தோப்பு வீட்டுக்குச் சென்ற ஆதவனுக்கு மனம் முழுக்க வெறுமையாக இருந்தது. அவனால் சிந்து போனதை தாங்க முடியவில்லை. அவளுடைய பிரிவு அவனுக்கு கஷ்டமாக இருந்தது. தந்தை பேச்சு கூட இப்போது அவன் மனதில் இல்லை. அவள் மட்டுமே இருந்தாள்.
அதே நேரம் சிந்துவும் அவன் நினைவில் தான் இருந்தாள். அவனுடைய முத்தத்தை எண்ணி கரைந்து கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து அவனுக்கு தன்னைப் பிடிக்க வில்லை என்று ஏங்கி ஏங்கி அழுதாள்.
அவள் அழுகையைக் கண்ட ரங்கன் “என்ன நடந்துச்சுன்னு சொல்லு மா, இப்படி அழுதா என்ன அர்த்தம்?”, என்று கேட்டான்.
“ஒண்ணும் இல்லைண்ணா”
“இந்த அண்ணன் கிட்ட கூட சொல்ல மாட்டியா? அப்ப நீ என்னை வேலைக்காரனா தானே பாக்குற?”
“இல்லைண்ணே, நீங்க எனக்கு அண்ணன் தான்”
“அப்படினா என் கிட்ட சொல்லு மா. உன் பிரச்சனையை நான் சரி பண்ணுவேன்னு வாக்கு கொடுக்க முடியாது. ஆனா என் கிட்ட சொன்னா உன் பாரம் குறையும்ல?”
“சரி சொல்றேன். ஆனா நீங்க என் மேல சத்தியமா இதை யார்க் கிட்டயும் சொல்லக் கூடாது”
“சரி சொல்லலை, சொல்லு மா”
“சத்தியம் பண்ணுங்க”
“சரி சத்தியமா சொல்ல மாட்டேன்”
“அவங்களுக்கு என்னைப் பிடிக்கவே இல்லைண்ணா”
“என்ன மா இப்படிச் சொல்ற? அண்ணனுக்கு நீ தான் மா உயிரு”
“இல்லைண்ணா, அதெல்லாம் பொய். அவங்களுக்கு என்னைப் பிடிக்கவே இல்லை. அவங்களுக்கு என் கூட வாழவே பிடிக்கலை. அதனால தான் ஜோசியர் கிட்ட சொல்லி முதல் ஒரு மாசம் தள்ளி வச்சாங்க”
“என்னது அண்ணனா? அப்படி எல்லாம் இருக்காது மா”
“உண்மை தான் அண்ணா. பிரியாவும் அவங்க அம்மாவும் சொன்னாங்க”, என்று அவள் சொன்னதும் அவனுக்கு திக்கென்று இருந்தது. பிரச்சனைக்கு ஆணி வேர் அவர்கள் தான் என்று புரிந்து கொண்டான்.
“அவங்க பொய் சொல்லிருப்பாங்க மா. அண்ணனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்”, என்று சொல்லி அவள் மனதில் பதிய வைக்க முயன்றான்.
“சரி அது பொய்ன்னாலும் கை உடைஞ்சது உண்மை தானேண்ணா?”
“கை உடைஞ்சா அண்ணன் என்ன மா பண்ணும்?”
“அந்த கையை வேணுக்குன்னு உடைச்சதே அவங்க தான் அண்ணா”
“இதையும் அந்த பிரியாவும் அவங்க அம்மாவும் தான் சொன்னாங்களா? அதையும் நம்பிட்டியா நீ? யாராவது வேணுக்குன்னு கையை உடைப்பாங்களா?”
“இல்லைண்ணா,. என் கண்ணால பாத்தேன். வேணுக்குன்னு தான் கையை உடைச்சாங்க”
“என்ன மா சொல்ற?”
“ஆமா அன்னைக்கு அப்படித் தான் பண்ணினாங்க. அவங்களுக்கு என்னைப் பிடிக்கலை. நான் இங்க இருந்தா நாளைக்கு அவங்க உயிரைக் கூட விட்டுருவாங்க”
“அண்ணே ஏன் அப்படி பண்ணுச்சுன்னு தெரியலை. அதுக்கு ஏதாவது காரணம் இருக்குமோ என்னவோ? ஆனா நீ தப்பா புரிஞ்சிருக்கேன்னு மட்டும் எனக்கு தெரியுது மா. அண்ணனுக்கு நீன்னா ரொம்ப பிடிக்கும். உன் கல்யாண போஸ்டர் பாத்தே உன்னை விரும்பினாங்க”, என்று அவன் உண்மையைச் சொல்ல அவளால் அதை ஏற்க தான் முடியவில்லை.
“என் மனசை மாத்த நீங்களும் பொய் சொல்லாதீங்க அண்ணா”
“நான் உண்மையைத் தான் மா சொல்றேன். அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னா….”
“இந்த இனி பேச்சு வேண்டாம். எனக்கு தலை வலிக்குது. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன். நீங்க சத்தியம் பண்ணிருக்கீங்க. இனி இந்த விஷயத்தை வெளிய சொல்லக் கூடாது அண்ணா”, என்றவள் அதன் பின் அவனைப் பேச விட வில்லை.
ரங்கனுக்கு பிரியா மற்றும் வேணியை நினைத்து ஆத்திரமாக வந்தது. ஒரு சிறு பெண்ணின் மனதை இப்படி குழப்பி விட்டுருக்கிறார்கள் என்று கவலையாக இருந்தது. உண்மையை ஆதவனிடம் சொல்ல முடியாத படி அவள் சத்தியம் வாங்கியதை நினைத்து அவனுக்கு எரிச்சலாகவும் வந்தது.
தான் உண்மையைச் சொல்லப் போனால் கூட ரத்தினம் நம்ப மாட்டார். ஏனென்றால் அவருக்கு வேணி என்றால் உயிர். ஆதவன் கூட அதை நம்புவது கடினமே. “கடவுளே, நீ தான் இந்த விஷயத்தை சரி செய்யணும்”, என்று வேண்டிக் கொண்டான்.
அடுத்த நாள் காலை பத்து மணிக்கு தான் வீட்டுக்கு சென்றார்கள். சிந்துவை சந்தோஷமாக வரவேற்ற அமுதவள்ளி ரங்கனையும் வரவேற்றாள். சிந்து முகம் சரியில்லாததைக் கண்டு திகைத்துப் போனவள் “என்ன டா ஆச்சி?”, என்று கேட்டாள்.
“ஒண்ணும் இல்லை மா, கொஞ்ச நாள் இங்க இருக்க வந்தேன். எனக்கு தூக்கம் வருது”, என்றவள் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.
இந்த நிலைமையிலும் ஆதவனை விட்டுக் கொடுக்காத சிந்துவின் செய்கையை மனதுக்குள் மெச்சினான் ரங்கன்.
டீ கொடுத்து உபசரித்த அமுதவள்ளி ரங்கனிடம் “என்ன ஆச்சு தம்பி? அங்க ஏதாவது பிரச்சனையா?”, என்று கேட்டாள்.
“எனக்கும் ஒண்ணும் தெரியாது மா. திடீர்னு வீட்டுக்கு போகணும்னு தங்கச்சி சொல்லுச்சி. அண்ணன் கூட எவ்வளவோ தடுத்தாங்க. ஆனா கேக்கலை. கொஞ்ச நாள் இருக்கட்டும் மா. எல்லாம் சரியாகிரும்”
“இப்ப தான் இவ தெளிவா நல்லா இருக்கான்னு நினைச்சேன். அது அந்த கடவுளுக்கே பொறுக்கலை போல? சரி தம்பி நீங்க குளிங்க. நான் சாப்பாடு ரெடி பண்ணுறேன்”
“அதெல்லாம் வேண்டாம் மா, நான் கிளம்புறேன்”, என்றவன் அப்படியே கிளம்பி விட்டான். சிந்துவிடம் சொல்லக் கூட இல்லை. அவள் தான் வெளியவே வர வில்லையே.
மாலையில் வீட்டுக்கு வந்ததும் சிந்து வீட்டுக்கு வந்ததைக் கேள்விப் பட்டு “நினைச்சேன், இப்படி தான் நடக்கும்னு. யாராவது என் பேச்சைக் கேட்டீங்களா? இப்படி என் பொண்ணை விரட்டி விட்டுட்டானே? அவன் குணமே அது தான். அதனால தான் அவனுக்கு கட்டிக் கொடுக்க வேண்டாம்னு சொன்னேன்”, என்று குதித்தார் ஏகாம்பரம்.
“கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. யாரும் அவளை விரட்டி விடலை. அவளா தான் கோச்சிக்கிட்டு வந்துருக்கா. உங்க மகளுக்கு புதுசா கோபமெல்லாம் வருதுன்னு சந்தோஷப் படவா? இல்லை, நல்ல வாழ்க்கையை விட்டுட்டு வந்துருக்காளேன்னு வருத்தப் படவா?”, என்று கேட்டாள் அமுதவள்ளி.
“எது டி நல்ல வாழ்க்கை? அவன் கூட வாழ்றது நல்ல வாழ்க்கையா?”
“பின்ன உங்க அக்கா மகன் கூட வாழ்றது மட்டும் நல்ல வாழ்க்கையா? ஆமா கேக்கணும்னு நினைச்சேன், உங்க அக்காவுக்கு வாங்கிக் கொடுத்த வீட்டை திருப்பி வாங்கிட்டீங்களாமே?”, என்று அவள் கேட்டதும் திகைத்துப் போனார் ஏகாம்பரம்.